Sunday, March 12, 2017

பிரத்யும்னன் எதிர்காலம்!

“உன்னால் முடியாது, பிரபாவதி!” என்றான் பிரத்யும்னன். “எனக்குத் தெரியும்! உன்னால் முடியாதென்று!” என்று மீண்டும் சொன்னவன் அவள் மடியிலிருந்து எழுந்தான். பிரபாவதி ஒரு சிறு குழந்தையைப் போல் தனக்குள் தான் மன்னனின் ஆணையை மீறியதால் தன் கணவன் பிரத்யும்னன் தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விடுவானோ என்று கலங்கினாள்.  அவள் மடியிலிருந்து எழுந்த பிரத்யும்னன் அவளைப் பார்த்தான். அவள் அழுது கொண்டே இருந்தாள். தன்னிரு கரங்களால் கண்களையும் முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டு தூங்கினாள். பிரத்யும்னன் அந்த மெல்லிய கத்திய ஒரு கையில் எடுத்துக் கொண்டு இன்னொரு கையால் பிரபாவதியை அள்ளி அணைத்தான்.

“பிரபாவதி, எனக்கு நன்றாகத் தெரியும். நீ மிகவும் அன்பு செலுத்தும் ஒருவனுக்குத் தீங்கிழைக்க உன்னால் இயலாது என்பதை நான் நன்கறிவேன்.” என்றான். மனம் கலங்கிய நிலையில் குழப்பமாகக் காட்சி தந்த பிரபாவதி அவனிடம் சொன்னாள். “பிரபுவே, நான் வாழக் கூடாது! உயிருடனே வாழவே கூடாது!” என்று கூறும்போதே அவள் தொண்டை அடைத்துக் கொண்டு விம்மல்கள் பெருகின. “எல்லோருக்கும் என் ஒருத்தியால் தான் எத்தனை துன்பங்கள்!” என்று மேலும் கூறினாள்.

“அழாதே, பிரபாவதி! அப்படி ஒரு வேளை நாம் இறக்க நேர்ந்தால் இருவரும் சேர்ந்தே இறப்போம்.” என்றான் பிரத்யும்னன். பிரபாவதி கடுமையான விரக்தியில் வெறுத்துப் போயிருந்தாள். அதைப் பார்த்த பிரத்யும்னன் சிரித்துக் கொண்டே அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான். “பிரபாவதி, உங்கள் தானவ குலத்து மன்னாதி மன்னரின் பரம்பரை வழக்கத்தை மீறுவதில் உனக்குள்ள மனோபலத்தையும் தைரியத்தையும் நான் பாராட்டுகிறேன்.  இனிமேல் என்ன நடக்குமோ என்று சிந்திப்பதை நிறுத்திக் கொள். அதைக் குறித்துக் கவலைப்படாதே!” பின்னர் தொடர்ந்து கூறினான். “இப்போதிலிருந்து காலைக்குள்ளாக நாம் இதிலிருந்து தப்புவதற்கு ஓர் வழியைக் கண்டு பிடிப்போம்.”

“என்ன செய்ய முடியும் நம்மால்? என்ன செய்யப் போகிறோம்? எந்த வழியும் கண்களில் படவில்லையே!” என்ற பிரபாவதி துயரம் தாங்காமல் அழுதாள். “நடு இரவு ஆகிறதல்லவா இப்போது! ஏதேனும் ஒரு வழி, தீர்வு கிடைக்கும்.  நடு இரவைக் குறிக்கும் பேரிகை சப்தம் எழுப்பும்போது இங்கிருந்து கிளம்பத் தயாராக இரு!” என்றான் பிரத்யும்னன். அவனை ஏளனமாகப் பார்த்த பிரபாவதி, “உங்கள் “தாய்” உங்களை எந்த நிலையிலும் கைவிட மாட்டாள் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள்!” என்றாள் கிண்டலாக. இந்தக் கஷ்டமான நேரத்தில் கூட அவளால் ஏளனம் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை.

“எனக்குத் தெரியும்! ஒரு மனிதன் என்ன செய்வான் என்பதைப் பற்றி! உடனே இங்கே மனித வேட்டை ஆரம்பிக்கும். நாம் தப்பி விட்டோம் என்பதை மன்னர் மன்னர் அறிந்து கொண்டாரெனில் சும்மா விட மாட்டார். இந்தக் கோட்டையையே அலசித் தேடுவார்!” என்றாள் பிரபாவதி! அப்போது பிரத்யும்னன்   “என் தந்தையிடம் நான் வைத்திருக்கிறதைப் போன்ற நம்பிக்கையை வை!. அவர் நம்முடைய உதவிக்கு வரவேண்டும் என்றும் நம்மை இங்கிருந்து தப்ப வைக்க வேண்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான்.

“உங்கள் தந்தை! நம்முடைய உதவிக்கு வருவாரா? நம்மைத் தப்புவிப்பாரா? நடக்கவே முடியாதது! அவர் எங்கேயோ தூரத்தில் அல்லவா இருக்கிறார்! பிரபுவே, அவர் எவ்விதம் துவாரகையிலிருந்து வர முடியும்? மேலும் துவாரகை இப்போது இருக்கும் ஒழுங்கற்ற நிலையில் அவரால் அங்கிருந்து கிளம்பவே முடியாதே! நம்முடைய உதவிக்கும் நம்மைத் தப்புவிக்கவும் அவரால் எப்படி வர முடியும்?”

“பிரபாவதி! அவரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்றெல்லாம் பேசிக் கொண்டு நாம் நேரத்தைக் கடத்த வேண்டாம்!” என்றான் பிரத்யும்னன். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!” என்றாள் பிரபாவதி!

“பிரபாவதி, கஷ்டத்தில் இருக்கும் மக்கள் தங்கள் உதவிக்காக என் தந்தையை நினைத்துப் பிரார்த்திப்பது இது முதல் முறை அல்ல! பல முறைகள் நடந்துள்ளன. அவரும் அவர்கள் உதவிக்குச் சென்றிருக்கிறார். ஆனால் ஒன்று! நமக்கு அவரிடம் அவர் சக்தியிடம் அளவிடமுடியாத அளவுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போது தான் அவர் வருவார்! நமக்கும் உதவி கிடைக்கும்!”

“என்னிடம் அவ்வளவு நம்பிக்கை எல்லாம் அவரிடம் இல்லை!” என்றாள் பிரபாவதி! “ ஒரு வேளை என் நம்பிக்கை பிசகினால், என்ன் பிரபு, நீங்கள் இறந்து விடுவீர்கள். அப்புறம் இங்கிருந்து தப்புவதற்கு எந்த வழியும் இல்லாமல் போய் விடும்! அப்படியே உங்கள் தந்தை வந்தாலும் அவர் எனக்கு ஏன் உதவி செய்யப்போகிறார்! அவர் மகனான உங்களுக்குத் தான் உதவி செய்வார்!” என்றாள் பிரபாவதி!  அளவிடமுடியாத துயரத்தில் ஆழ்ந்த பிரபாவதி வாய் விட்டு அழுதாள். கண்களில் கண்ணீருடன் வேறு வழி தெரியாமல், அவள் பிரத்யும்னன் அவன் தந்தைக்குச் செய்து கொண்டிருந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டாள்.  அப்போது திடீரென அங்கே வஜ்ரநப் வந்தான். அவன் கைகளில் பெரிய வாள் ஒன்று இருந்தது. “பிரபாவதி, நீ எங்கே இருக்கிறாயோ அங்கேயே இரு!  உன்னுடன் பிரத்யும்னன் இருந்தால் அவனையும் அவன் எங்கே இருக்கிறானோ அங்கேயே இருக்கச் சொல்! அவனுடைய நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.” பிரத்யும்னன் செய்வதறியாமல் திகைத்தான்.  வஜ்ரநபிடம் இருக்கும் பெரிய வாளைப் போன்ற ஆயுதங்கள் ஏதும் பிரத்யும்னனிடம் இல்லை. ஒரே ஒரு சின்னக் கத்தி தான் இருந்தது. அதை வைத்து வஜ்ரநபிடம் இருக்கும் ஆயுதத்தை அவனால் எதிர்த்துப் போராட முடியாது. அதோடு இரண்டு வலிமை வாய்ந்த  அடிமைகள் அவன் மேல் பாயத் தயாரான கோலத்தில் அங்கே வஜ்ரநபுக்கு அருகே நின்று கொண்டிருந்தனர்.

2 comments:

ஸ்ரீராம். said...

அந்த நாட்டில் இது என்ன மாதிரியான அணுகுமுறையோ... தொடர்கிறேன்.

பித்தனின் வாக்கு said...

தொடருங்கள், ஆவலுடன் காத்து இருக்கின்றோம். எங்களுக்கு ஆன்மீகம் சிறக்கவும் தொடர்ந்து எழுதுங்கள்