Friday, February 17, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், பிரத்யும்னனும் பிரபாவதியும்

“நான் உன்னிடம் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும், பிரபாவதி! நீ என்னைப் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். என்னுடைய வாழ்க்கைப் பாதையில் நீ அறியாத பல விஷயங்கள் உண்டு. அவற்றை நீ ஏற்க விரும்புவாயா மாட்டாயா என்பதும் கேள்விக்குறியே! ஆனால் நான் எப்போதும் சொல்லுவது போல் நான் கடவுளரின் விருப்பத்திற்கேற்ப நடக்கும், நடத்தி வைக்கப்படும் ஒரு பொம்மை. அவன் ஆட்டி வைக்கும் பொம்மலாட்டத்துக்கு ஏற்ப ஆடுபவன். என்னுடைய இந்த வாழ்க்கைப்பாதையில் நான் இந்த “அம்மா”வால் ஆட்கொள்ளப்பட்டேன். நான் இன்று என்ன நிலைமையில் இருக்கிறேனோ அப்படி என்னை உருவாக்கியதில் பெரும்பங்கு அவளுக்குத் தான்!” என்றான் பிரத்யும்னன்.

“இன்னும் சொல், உன்னுடைய அந்த அம்மாவைப் பற்றி! எனக்குப் பொறாமையாகத் தான் இருக்கிறது. அவள் எப்படி உன் வாழ்க்கையில் வந்தாள்?”என்று கேட்டாள் பிரபாவதி.

“தானவர்களின் தலைவன் ஷாம்பர் பற்றி நீ கேள்விப் பட்டிருக்கிறாயா பிரபாவதி? தானவர்களின் உலகத்தையே அவன் ஒருவன் அடக்கி ஆள்கிறான். அவன் ஒரு முறை ஓர் அநாதைப் பெண்ணைப் பார்த்தான். அவள் எவரிடமிருந்தும் எந்த உதவியும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவளைத் தன் இடத்திற்குக் கொண்டு வந்தான் இந்த தானவர் தலைவன். பின்னர் அந்தப் பெண்ணைத் தன் மனைவியாகவே நடத்தவும் ஆரம்பித்தான். அவர்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தனர்.”

சற்று நிறுத்திய பிரத்யும்னன் தன் தொண்டையைக் கனைத்துச் சரி செய்து கொண்டு மீண்டும் ஆரம்பித்தான்.” அவளுடைய ஆரம்ப நாட்களில் தானவத் தலைவர்கள் அவளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தினார்கள் என்கின்றனர்.  ஆனால் அவள் வெகு நாட்களுக்குச் சிறுபெண்ணாகவே இருக்கவில்லை. விரைவில் வல்லமையும் சக்தியும் வாய்ந்ததொரு பெண்ணாக மாறிவிட்டாள். அவளுக்கென்று சொந்த வீடு ஏதும் இல்லை. அவளை ஆதரிப்பாரும் யாரும் இல்லை. ஆனால் தானவத் தலைவர்களை நன்கு கவனித்துக் கொண்டாள். ஆகவே விரைவில் அவர்களை அடக்கி ஆளும் சக்தி படைத்தவளாக மாறிப் போனாள்!”

“அப்படியா? அவளைக் குறித்து இன்னமும் சொல்லுங்கள்!” என்றாள் பிரபாவதி! தொடர்ந்த பிரத்யும்னன், “எந்த அளவுக்கு அவள் வல்லமை படைத்தவள் எனில் அவள் வாழ்க்கையில் குறுக்கிடும் எவரும் விரைவில் அவளால் ஆட்கொள்ளப்படுவார்கள். அவர்களையும் சேர்த்து அவள் அடக்கி ஆள ஆரம்பிப்பாள். அவள் ஒரு நாள் ஒரு சின்னஞ்சிறு சிறுவனைப் பார்த்தாள். அவன் கடலோரத்தில் ஒதுங்கி இருந்தான். அவனைத் தன்னுடைய இருப்பிடமாக இருந்த குகைக்கு எடுத்து வந்தாள் அந்தப் பெண்.”

“நீங்கள் தானா அந்தக் குழந்தை?” என்று கேட்டாள் பிரபாவதி!

“ஆம். நான் தான். அவள் என்னை ஒரு தாயைப் போலவே வளர்த்து வந்தாள் முதலில். நாங்கள் இருவரும் ஒரே குகையில் தான் தங்கினோம். உண்டோம். உறங்கினோம். அவள் என்னுடனும் நான் அவளுடனும் வாழ்ந்தோம். பின்னர் என்னில் அவளும், அவளில் நானும் அடைக்கலமானோம். என்னை அவள் சமயோசிதமுள்ள, நம்பிக்கைக்குரிய, அவளின் அன்புக்குரியவனாகப் பார்த்தாள். என்னில் அவள் மகிழ்ச்சியையும் கண்டு கொண்டாள்.”

“கேட்கவே ருசிகரமாக இருக்கிறது!” என்றாள் பிரபாவதி!”நானும் உங்களை என் நம்பிக்கைக்குரியவராக, சமயோசிதமுள்ளவராக, அன்புக்குரியவராகவே பார்க்கிறேன். “ என்ற பிரபாவதி, “தொடர்ந்து சொல்லுங்கள். உங்களைக் குறித்த அனைத்தையும் நான் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.” என்றாள்.

அவன் பிரபாவதி பக்கம்திரும்பி உட்கார்ந்து தொடர்ந்து பேச ஆரம்பித்தான். “அவள் பலரிடமும் பேசியதிலிருந்தும் பழகியதிலிருந்தும் நான் கிருஷ்ண வாசுதேவனின் மகன் என்பதைப் புரிந்து கொண்டாள். ஆகவே என்னை அவள் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பவனாக ஒரு வீரனாக, நல்ல க்ஷத்திரியனாக வளர்க்க எண்ணம் கொண்டாள். இதற்கு தானவத் தலைவர்களிடமிருந்து பயங்கர எதிர்ப்பு வந்தது. ஏனெனில் அந்தச் சிறுவனை அவர்கள் தானவர்களின் தலைவனாக ஆக்க நினைத்தனர். “

சற்று நேரம் நிறுத்தினான் பிரத்யும்னன். பின்னர் தொடர்ந்து, “என் சித்தப்பா உத்தவர் அடிக்கடி என் “தாயை”ப் பார்க்க வருவார். அவருக்குத் தெரிந்தது நான் அங்கே தான் வளர்ந்து வருகிறேன் என்பது. நான் வாசுதேவக் கிருஷ்ணனின் மகன் தான் என்பதையும் ஊர்ஜிதம் செய்ததோடு என்னைப் பெற்றெடுத்த என் உண்மைத் தாய்  விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மினி என்றும் சொன்னார். பின்னர் என் சித்தப்பாவும் என்னை வளர்த்த “தாயும்” சேர்ந்து என்னை துவாரகைக்கு இப்போது அனுப்ப வேண்டாம் என்றும் நான் முழுமையாகப் போர் புரிவதிலும் அதே சமயம் சமாதானங்களுக்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் அவற்றில் சிறந்து விளங்கும்வரை துவாரகைக்கு என்னை அழைத்துச் செல்வதில்லை என்றும் முடிவு செய்தார்கள். என் சித்தப்பா உத்தவருக்கு நான் ஓர் சிறந்த மாணவனாக இருந்தேன். “என் தாயும்” என்னை ஊக்கப்படுத்தினாள். விரைவில் நானும் தாய் மாயாவதியும் எங்கள் உறவில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டோம். கணவன், மனைவியாக வாழ ஆரம்பித்தோம்.”

“அது எப்படி உங்களால் முடிந்தது?” என்று பிரபாவதி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“எங்கள் அவல நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பார் பிரபாவதி!  இங்கே ஓர் இளம்பெண் திருடர்களாலும் கொள்ளைக்காரர்களாலும் இழுத்து வரப்பட்டு அங்கே வாழ்ந்து வருகிறாள். அவள் ஒருத்தியே எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து தாயும், தந்தையுமாக இருந்து வருகிறாள்.  அவள் இந்த உலகத்திலேயே மிகவும் விரும்பி அன்பு செலுத்துவது, செலுத்தியது என்னை மட்டுமே! என் வாழ்க்கைக்கு அவள் பொறுப்பு எடுத்துக் கொண்டாள். நாங்கள் எங்களுக்கிடையே சந்தோஷமாகவே வாழ்நாளைக் கழித்து வந்திருக்கிறோம். இந்த விஷயம் தலைவன் ஷாம்பருக்குத் தெரிந்ததும் அவன் என்னைக் கொல்ல நினைத்தான்.  ஆகவே நாங்கள் ஓர் மல்யுத்தப் போட்டியில் ஈடுபட்டோம். அந்தப் போட்டியில் நான் அவனைக் கொன்று விட்டேன்.  இத்தனைக்கும் எனக்கு அப்போது பதினாறு வயது தான் ஆகி இருந்தது.  நீ எப்போதேனும் அவளைச் சந்திக்க நேர்ந்தால் அவள் ஓர் சாதாரணப் பெண்மணி அல்ல என்பதைப் புரிந்து கொள்வாய். அவள் ஓர் பெண் தெய்வம், விதியால் கடுமையாக ஆகிவிட்டப் பெண் தெய்வம்.  அவள் இவ்வுலகிலேயே மிகவும் விரும்புவது என்னை மட்டுமே!” என்றான் பிரத்யும்னன்.

“அவள் இப்போது எங்கே இருப்பாள்? எங்கே இருக்கக் கூடும்?” என்று பிரபாவதி கேட்டாள்.

“எனக்குத் தெரியாது! ஆனால் தேவை இருக்கையில் அவள் எங்கிருந்தேனும் வந்து விடுவாள். அவளை என் தந்தை கிரிநகருக்குப் போகச் சொன்னார். அங்கே யாதவ குலப் பெண்மணிகள் அனைவரும் இருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து இருக்கச் சொன்னார். ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.  அவள் என் தந்தையிடம், பிரத்யும்னன் எங்கே இருக்கிறானோ அங்கேயே நானும் இருப்பேன். வாழ்வானாலும் சரி, சாவென்றாலும் சரி நான் அவனுடனேயே இருப்பேன். என்று சொல்லிவிட்டாள்.” என்றான் பிரத்யும்னன்.

பிரபாவதி கேட்டாள். “அவள் இங்கே எப்படி வருவாள்? அது அவ்வளவு எளிதல்ல. கோட்டைக்குள் நுழைந்து  இந்தப் பகுதிக்கு வந்து உள்ளே நுழைய விரும்புபவர்களை எல்லாம் இங்குள்ள காவல் வீரர்கள் கொன்று விடுவார்கள். “

“அவள் இங்கே வருவாள் என்றே நான் எதிர்பார்க்கிறேன். எனக்கு அவளிடம் அளவற்ற நம்பிக்கை இருக்கிறது. விரைவில் விடிவெள்ளி உதயம் ஆகப் போகிறது. நீ உன் வீட்டிற்குச் சென்று விடு.” என்றான் பிரத்யும்னன். தொடர்ந்து, “உன் தந்தை வந்ததும் சொல். நான் அவருடன் பேச விரும்புகிறேன்.” என்றான்.

“நாம் இன்றைய பொழுதுக்கான கவலையை மட்டும் படுவோம். நாளைய கவலை நாளைக்கு!” என்ற பிரபாவதி பிரத்யும்னனை அணைத்துக் கொண்டாள்.  அப்போது எங்கிருந்தோ ஒரு மயில் அகவும் சப்தம் கேட்டது.  இதை ஒரு நல்ல சகுனமாக எடுத்துக் கொண்ட பிரபாவதி மகிழ்ச்சியில் துள்ளினாள்.  ஆனால் பிரத்யும்னனுக்கு முகம் வெளுத்தது. பிரபாவதியை அணைத்திருந்த கைகளை மெல்ல விலக்கினான். பிரத்யும்னன் அந்த மயிலின் அகவல் குரலுக்கு ஒரு பறவையைப் போல் பதிலுக்குக் குரல் கொடுத்துவிட்டுப் பிரபாவதியைப் பார்த்து, “இது அம்மா!” என்றான்.

1 comment:

ஸ்ரீராம். said...

ஜீரணிக்க முடியாத பகுதி!