Saturday, December 3, 2016

வல்லுறு சூதெனும் போர் தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி!

ஆசாரியர் தௌமியரும், ஆசாரியர் சோமதத்தரும் இருவருக்கும் மரபு ரீதியான முறையில் வரவேற்பு அளித்துத் தக்க மந்திர கோஷங்களால் பெருமைப் படுத்தினார்கள்.  யுதிஷ்டிரன் தன் சகோதரர்களுடனும், துரியோதனன் தன் குழுவினருடனும் நுழைவாயிலுக்கருகே பெரியோர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். துரியோதனாதியரும் மற்றக் கௌரவர்களும் தாங்கள் விரித்த பொறியில் பாண்டவர்கள் மாட்டிக் கொண்டதை எண்ணி இறுமாப்புடன் இருந்தனர். மிகவும் வெற்றிகரமாக அமைந்து விட்டது எனக்  குதூகலித்தனர். அதைக் கண்ட யுதிஷ்டிரனுக்குத் தனக்குள்ளாகச் சிரிப்பு வந்தது. அவர்கள் தன்னை மாட்டுவதற்கு விரித்த வலையே தனக்கு ஓர் சந்தர்ப்பமாகப் பயன்படப் போவதை அவர்கள் அறிய மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டான். தற்செயலாக அவன் துரியோதனன் அருகே நிற்க நேரிட்டது. உடனே அவன் மனம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு துரியோதனன் மனதை வெல்ல வேண்டும். இந்த சூதாட்டமே தேவையில்லை என்றெல்லாம் எண்ணியது. அதன் மூலம் சமாதானம் பிறக்கட்டுமே! “சகோதரா! இந்தச் சூதாட்டத்தை நாம் ஆடுவது அவ்வளவு முக்கியமா?” என்று துரியோதனனிடம் கேட்டான். அவனை ஈர்க்கும் குரலில், “நாம் இந்தச் சூதாட்டம் இல்லாமலே சமாதானமாக இருக்கலாம்!” என்றும் சொன்னான்.

“இந்த ஆட்டத்தில் என்ன தப்பைக் கண்டாய்? இதை ஆடுவதில் என்ன தவறு?” என்று கேட்டான் துரியோதனன். அதற்கு யுதிஷ்டிரன், “சூழ்ச்சிகளால் நிறைந்த ஓர் சூதாட்டத்தை ஆடுவதை விடப் போர் புரிவது மிகவும் உத்தமமான ஒன்று! இந்தச் சூதாட்டத்தினால் நம் நட்புத் தான் சிதையப் போகிறது!” என்றான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷகுனி தன்னையும் அந்தப் பேச்சில் இணைத்துக் கொண்ட வண்ணம், “மூத்தவனே, ஏன் பயப்படுகிறாய்? சூதாட்டத்திலிருந்து தப்புவதற்கு ஏன் முயல்கிறாய்?” என்று கேட்டான் யுதிஷ்டிரனிடம். அவனைப் பார்த்துக் கருணையுடன் சிரித்தான் யுதிஷ்டிரன். “மாட்சிமை பொருந்திய காந்தார இளவரசர், ஷகுனி அவர்களே, வணக்கம். இந்தச் சூதாட்டத்தின் பாய்ச்சிக்காய்களை எடுத்து ஆடும் ஓர் மனிதன் எவ்வளவு விவேகமுள்ளவனாக இருந்தாலும் விரைவில் ஓர் முட்டாளாகவோ அல்லது தந்திரங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தவனாகவோ ஆகி விடுகிறான் ஆகவே இந்த ஆட்டத்தை நாம் ஆடவே வேண்டாம்!!” என்றான்.

ஷகுனி ஒரு சீறலுடன் மற்ற அரசர்களையும் அரசகுடும்பத்தினரையும் நோக்கித் திரும்பினான். ஓர் தேர்ந்த வில்லாளியைப் போல் அவன் மற்றவர்களைப் பார்த்து, “ உங்களுக்கெல்லாம் இந்த யுதிஷ்டிரன் ஏன் சூதாட்டத்தை அதுவும் அரசர்கள் ஆடும் இந்த ஆட்டத்தை ஆட மறுக்கிறான் என்பது எளிதாகப் புரிந்திருக்கும். அவன் வாழ்க்கையில் முதல் முதலாக ராஜசூய யாகத்தை நடத்தி அதன் மூலம் ஏராளமான செல்வங்களைச் சம்பாதித்து விட்டான். அதை விட்டுப் பிரிய அவனுக்கு மனமில்லை!” என்றான். அங்கே பரிகாசமும் ஏளனமும் நிறைந்த சிரிப்புக் கிளம்பியது. அதன் பின்னர் ஷகுனி யுதிஷ்டிரன் பக்கம் திரும்பி, “மூத்தவனே! உன் செல்வங்களை நீயே வைத்துக் கொள். இந்தச் சவாலை ஏற்று ஆட்டத்தை ஆட நீ மறுத்தால் விளையாட வேண்டாம்! விட்டு விடலாம்!” என்று தூண்டும் குரலில் கூறினான்.

யுதிஷ்டிரனைப் பார்த்து அவமதிப்பும் அலட்சியமும் துலங்கும்படி சிரிக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றிச் சிரித்தார்கள். ஆனால் யுதிஷ்டிரன் ஷகுனி சொன்ன மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளின் தாக்கத்தை அலட்சியம் செய்துவிட்டுச் சாதாரணமான குரலில், “அப்படி எல்லாம் இல்லை மாட்சிமை பொருந்திய ஷகுனி அவர்களே! நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். எனக்கு எதிலும் பயமோ அச்சமோ இல்லை. ஒன்றே ஒன்றைத் தவிர! அது தான் அதர்மப் பாதையில் செல்வது! அதர்மமாய் நடப்பது! அதோடு எனக்கு செல்வங்களைக் குறித்துக் கவலையும் இல்லை. இவை எல்லாம் சற்றும் முக்கியமில்லாத விஷயங்கள், நான் இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை! மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து அரசர் எனக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார். இந்தச் சூதாட்டத்தை நான் ஆடியே ஆகவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே நான் இந்த ஆட்டத்தை ஆடத் தான் போகிறேன். அல்லது நாங்கள் இருவருமாகச் சேர்ந்தே இந்த ஆட்டத்தை வேண்டாம் என்று சவாலைத் திரும்ப பெற்றாக வேண்டும்.” என்றான்.

துரியோதனன் சொன்னான்:”மூத்தவனே! நான் உன்னிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கலாமா? நான் ஓர் வித்தியாசமான ஆட்டக்காரன். ஆகவே எனக்குப் பதிலாக ஷகுனி மாமாதான் உன்னுடன் ஆடப் போகிறார்.” என்றான். யுதிஷ்டிரன் ஷகுனியையும் அவன் ஆட்டத்தையும் குறித்து நன்கு அறிவான். ஷகுனி ஓர் மந்திரவாதியைப் போல் ஆடி துரியோதனன் பக்கம் வெற்றியைத் தேடித் தருவான். இவன் எனக்கு எதிராக விளையாடினான் எனில் நான் வெல்வது எப்படி? சற்றும் இயலாத ஒன்று! ஹூம்! இந்திரப் பிரஸ்தம் என் கைகளை விட்டுப் போகவேண்டுமெனில் அது விரைவில் நடந்து முடிந்து விடும்!” என்று நினைத்துக் கொண்டான். ஆனாலும் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலே சொன்னான்:” துரியோதனா, சகோதரா! இன்று வரை இந்த ஆட்டம் உரியவரால் மட்டுமே விளையாடப் பட்டதாக அறிந்திருக்கிறேன். பிரதிநிதிகளால் மற்றவருக்காக ஆடப்பட்டதை அறியவில்லை. ஆகவே இந்த ஆட்டத்தை நீயே ஆட வேண்டும், பந்தயம் என்ன என்பதையும் பிணையத் தொகையையும் அறிவிக்க வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான்.

ஷகுனி துரியோதனனின் உதவிக்கு வந்தான். “இதோ பார், யுதிஷ்டிரா! இந்த ஏற்பாட்டில் எந்தவிதமான தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று சொன்னவன் மீண்டும் ஓர் சீறலுடன், “மூத்தவனே, நீ தான் ஏதேதோ சாக்குப் போக்குகள் சொல்லித் தப்பிக்க நினைக்கிறாய்! இந்த ஆட்டத்தை ஆடாமல் தப்பித்து உன் செல்வங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறாய்! எப்படியேனும் போகட்டும்! உனக்கு இந்த ஆட்டத்தை ஆடுவதில் விருப்பமில்லை எனில் வெளிப்படையாகச் சொல்லி விடு! ஏன் ஏதேதோ கூறி தப்பப் பார்க்கிறாய்?” என்று கேட்டான். பின்னர் ஷகுனி கேலியாகச் சிரித்தான். துரியோதனனும் துஷ்சாசனும் கூட அதைக் கண்டு அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டு யுதிஷ்டிரனை அவமதித்தனர்

2 comments:

ஸ்ரீராம். said...

கண்ணன் பின்னர் சொன்னது போல, துரி ஷகுனியை விளையாட விட்டது போல யுதிஷ்டிரனுக்குக் கண்ணனின் நினைவு வராமல் போனதுதான் விதியா?

sambasivam6geetha said...

அதுவ்ம் தான். அதோடு கண்ணன் தான் அப்போது தன் தந்தையைக் காப்பாற்றவும் சௌராஷ்டிரத்தைக் காக்கவும் வேண்டி துவாரகை சென்று விட்டானே! :)