Saturday, November 5, 2016

கடோத்கஜனின் குதூகலம்!

தம்பி மகன் நம்மைப் புகழ்ந்து பேசுகிறானே என்பதில் யுதிஷ்டிரன் மகிழ்ந்தான். கடோத்கஜன் மேலும் தொடர்ந்தான். “ஆம், இதோ இந்தச் சிற்றப்பா தான் என்னை இந்தக் கிரீடத்தை அணிந்து வரும்படி வற்புறுத்தினார். ஏனெனில் உங்களுக்கெல்லாம் தலை நிறைய மயிர் இருக்கிறது. எனக்கோ வழுக்கையாக அன்றோ உள்ளது. ஒருவேளை இதையே என்னுடைய கிரீடமாக நீங்கள் அனைவரும் எண்ணிக் கொண்டு நான் இந்தக் கிரீடத்தோடு பிறந்ததாகவும் நினைத்துக் கொண்டீர்களானால்?” என்று சொன்னவன் தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே சிரித்துக் கொண்டான். பீமன் அதை அப்படியே ஆரியர்களின் மொழியில் மொழி பெயர்க்க அனைவரும் உண்மையிலேயே சிரித்தனர். அப்போது வேத வியாசர் கடோத்கஜனிடம் அவனுடைய தாய்மொழியிலேயே பேசத் துவங்கினார். கடோத்கஜனுக்கு ஆச்சரியம் மேலிட்டது.

“குழந்தாய், நீ இங்கே இப்போது வந்திருப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்! நான் உன்னைக் கடைசியாகப் பார்த்தபோது நீ சிறு குழந்தையாக இருந்தாய். என் மடியில் படுத்துக் கொண்டு தேன் கலந்த பாலை அருந்திக் கொண்டிருந்தாய். உனக்கு என்னுடைய ஆசிகள்!” என்று ஆரீவதித்தார். அவன் முதுகில் தன் கைகளால் தட்டிக் கொடுத்துத் தன் மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டார். கடோத்கஜன் தன்னுடைய கிரீடத்தைத் தகப்பன் பீமனிடம் கொடுத்துவிட்டு ஆசாரியரை நமஸ்கரித்தான். பீமன் இப்போது அவன் நமஸ்கரிப்பதற்கும், பின் மீண்டும் எழுவதற்கும் அருகில் இருந்து உதவினான். “அது சரி குழந்தாய்! நீ கடல் தாண்டி ராக்ஷஸர்களின் நாட்டூக்குச் சென்று அவர்களை உன்னுடைய நட்பினால் வெல்லப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாய் அல்லவா? அங்கே எல்லாம் வெற்றிகரமாக முடிந்ததா? நீ எவ்வாறு உன் வேலைகளை முடித்துக் கொண்டாய்?” என்று வியாசர் அவனிடம் கேட்டார்.

கடோத்கஜனுக்கு இந்த முனிவரை மிகவும் பிடித்தது. “ஓ, அதுவா, இதோ இந்தச் சிற்றப்பா!” என்று சஹாதேவனைச் சுட்டிக் காட்டிய வண்ணம் ஆரம்பித்தான். “இவர் என்னை இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள ராக்ஷசர்களோடு நட்புப் பாராட்டச் சொன்னார். நானும் போனேன்; அவர்களிடம் என்னுடைய தந்தை எவ்வளவு பலவான், சக்தி வாய்ந்தவர் என்றெல்லாம் எடுத்துச் சொன்னேன். என் பெரியப்பா மிகவும் சாத்விகமான முறையில் இந்திரப் பிரஸ்தத்தையும் சுற்றி உள்ள நாடுகளையும் ஆண்டு வருவதையும் சொன்னேன்.” பின்னர் சஹாதேவனை விசித்திரமான ஒரு பார்வை பார்த்தான். “இந்தச் சிற்றப்பா எனக்கு நன்கு பாடங்கள் கற்றுக் கொடுத்திருந்தார். அதன்படியே நானும் நடந்து கொண்டேன். அந்த அரசனும் எனக்குப் பரிசுகள் பல வழங்கினான். அவற்றில் குட்டி யானைகள். தந்தங்கள், இன்னும் என்னென்னவோ! எனக்குப் பலவற்றின் பெயரே நினைவில் இல்லை! மறந்து விட்டேன்.” என்றான்.

சற்று நேரத்தில் அங்கிருந்த மூத்தோர் அனைவரும் வெளியேறினார்கள். பீமன் மட்டும் இருந்தான். கடோத்கஜன் மட்டுமே அனைவரின் கவனத்துக்குப் பாத்திரமாக இருந்தான். அங்குள்ள இளைஞர்களிடையே இந்த இளைய ராக்ஷசன் ஓர் ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தி இருந்தான். அதிலும் பாண்டவர்களின் புத்திரர்களான உப பாண்டவர்கள் கடோத்கஜனைச் சுற்றிக் கொண்டனர். பீமனையும் சூழ்ந்து கொண்டனர். “இந்த சகோதரனைக் குறித்துத் தான் நீங்கள் சொல்வீர்களா?” என்று கேட்டனர். “ஆம், ஆம், இவனே தான்!” என்றான் பீமன். கடோத்கஜனைப் பார்த்து ராக்ஷசர்களின் மொழியில், “இவர்கள் ஐவரும் உன் சகோதரர்கள்!” என்றான். “எல்லோருமேவா?” என்று வியந்தான் கடோத்கஜன். “என்ன இவ்வளவு சிறுவர்களாகச் சின்ன உடலோடு இருக்கின்றனரே!” என்றவண்ணம் நாக்கைச் சொடுக்கிக் கொண்டு அவர்களைப் பார்த்தான். அவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் ஐவரும் சிறிய பொம்மைகளைப் போல் தோற்றம் காட்டினார்கள். இந்த ஐந்து பொம்மைகளும் என் சகோதரர்களா என்று வியந்த கடோத்கஜன் சிரிக்க ஆரம்பித்தான்.

பீமன் அவனை அந்தப்புரத்திற்குள் அழைத்துச் சென்றான். திரௌபதிக்கும், ஜாலந்திராவுக்கும் அவனை அறிமுகப்படுத்தி கடோத்கஜனிடம், “இவர்கள் இருவரும் உன் தாய்மார்!” என்றும் கூறினான். “என்ன? என்னுடைய தாய்மாரா? ஹாஹாஹா, எவ்வளவு சிறிய தாய்மார்கள்? குட்டியான தாய்மார்கள். எனக்கு என்னுடைய தாய் ஒருத்தி ஏற்கெனவே உண்டு. “ என்று தன் விரல்களால் எண்ணியவன், “அவள் முதல் தாய்! இதோ இந்தத் தாய் இரண்டாவது. அதோ அந்தத் தாய் மூன்றாவது. மற்றும் இங்கிருக்கும் பெண்கள் அனைவருமே எனக்குத் தாய்மார்கள் தானா?” என்று கேட்டுக் கொண்டே பெருங்குரலில் சிரித்தான். அவனுக்கு இன்று எதைப் பார்த்தாலும் நகைப்பாக இருந்தது. “ரொம்பச் சிரிக்காதே, மகனே! எங்காவது வெடித்து விடப் போகிறாய்!” என்ற வண்ணம் அவன் முதுகில் தட்டினான் பீமன்.

“ஆஹா, தந்தையே, இங்கிருக்கும் நேரம் முழுவதும் நான் சிரித்துக் கொண்டே தான் இருப்பேன்; அப்படித் தான் இருக்கவேண்டும் போல் இருக்கிறது!” என்றான் கடோத்கஜன். “அது சரி, இப்போதைக்கு உனக்கு மூன்று தாய்மார்கள் போதும் என நினைக்கிறேன்.” என்று பீமனும் கடோத்கஜனுடைய சிரிப்பில் கலந்து கொண்டே சொன்னான். பின்னர் அவனை அரண்மனையின் மற்றொரு பாகத்துக்கு அழைத்துச் சென்றான் பீமன். அங்கே தான் இளவரசர்கள் ஐவரும் படுத்து உறங்குவார்கள். அப்போது அவர்கள் அங்கே படுக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். கடோத்கஜனைப் பார்த்ததும், “இவனும் எங்களுடன் தூங்கப் போகிறானா? நாங்கள் அயர்ந்து தூங்குகையில் இவனுக்குப் பசி எடுத்து எங்களைச் சாப்பிட்டு விடப் போகிறான்!” என்று சுத்ரசோமா என்னும் மகன் கூறினான்.

அதைக் கேட்ட பீமன், “கடோத்கஜா! இவர்கள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா? அவர்கள் தூங்குகையில் உனக்குப் பசி வந்துவிட்டால் இவர்களைத் தின்று விடுவாயா என்று கேட்கின்றனர்!” என்றான். கடோத்கஜன் சிரித்தான். “அம்மா சொல்லி அனுப்பி இருக்கிறாள். மனிதர்களைத் தின்னாதே என்று! நானும் அதற்குக் கீழ்ப்படிந்தேன். தந்தையும் சொல்கிறார். மனிதர்களைத் தின்னாதே என! அதையும் அப்படியே கீழ்ப்படிந்து கேட்கிறேன். ஆனால் நான் இங்கே என் சகோதரர்களுடன் இந்தப் படுக்கையில் படுத்து  உறங்க விரும்பவில்லை. என் வழக்கம்போல் நான் மரத்தின் மேலேறியே தூங்குகிறேன்.” என்றான்.

“அது சரி, உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அப்படியே செய்!” என்றான் பீமன். பின்னர் மற்ற சகோதர்களைப் பார்த்து, “கடோத்கஜன் மிகவும் இரக்க குணம் உள்ள பிள்ளை. அன்பானவன். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய ஆரியப் பழக்க வழக்கங்கள் ஏதும் அவனுக்குத் தெரியாது!” என்றான். சற்று நேரத்தில் பீமன் வந்து கடோத்கஜனுக்கு எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா என்று பார்க்க வந்தான். தந்தையைப் பார்த்த கடோத்கஜன் மரத்திலிருந்து கீழே குதித்தான். “தந்தையே, அம்மா நான் உங்களைத் தனியே சந்திக்கையில் சொல்வதற்கென ஓர் முக்கியமான செய்தியை அனுப்பி இருக்கிறாள்.” என்றான். “சரி, வா, நாம் இருவரும் கொஞ்சம் தனியே சென்று பேசுவோம்.” என்று பீமன் கடோத்கஜனை அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் இப்போது மற்றவர்களிடமிருந்து தனியே வந்துவிட்டார்கள். தந்தையின் காதுகளில் கிசுகிசுத்தான் கடோத்கஜன்.

“தந்தையே, உங்களுக்கு எதிரிகள் யாரானும் உண்டா?” இப்போது பீமன் கட்டுக்கடங்காமல் சிரித்தவண்ணம், “எனக்கு எங்கே பார்த்தாலும் எதிரிகள் தான்!” என்றான். “அவர்கள் யாரென எனக்குக் காட்டுங்கள்!” என்றான் கடோத்கஜன். “ஹா, என் எதிரிகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் மகனே! உனக்கு ஏன் அவர்களைக் குறித்து அறிய வேண்டும்? என் நண்பர்களைக் குறித்து அறிந்து கொள்!” என்றான் பீமன். “ம்ஹூம், அதெல்லாம் இல்லை தந்தையே! அம்மா உங்கள் எதிரிகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு என்னை அவர்கள் அனைவரையும் கொல்லச் சொல்லி இருக்கிறாள். தாய் சொல்லை நான் தட்ட முடியாது அல்லவா? ஆகவே உங்கள் எதிரிகளைக் காட்டுங்கள்.” என்றான் கடோத்கஜன்.

“அடக் கடவுளே!” என்றுகூவினான் பீமன். ம்ம்ம்ம் இது ஒரு சோகமயமானதாக இருக்கும். இந்த இளைய ராக்ஷசன் மட்டும் என்னுடைய அனைத்து எதிரிகளையும் ஒவ்வொருவரையும் மிச்சம் மீதி வைக்காமல் கொன்றுவிட்டான் எனில்! தன் மகனைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான் பீமன். “மகனே, என் எதிரிகளைக் குறித்துக் கவலைப்படாதே! பிரதிவிந்தியனும் சுத்ரசோமனும் எப்போதும் உனக்கு உதவுவதற்குக் காத்திருப்பார்கள். ஆகவே நீ எதற்கும் கவலைப்படாதே!”

“ஆனால் தந்தையே, அம்மா சொல்லி விட்டாள். நான் அதைக் கேட்டே ஆகவேண்டும். உங்கள் எதிரிகளை ஒழிக்கும்படி சொல்லி அனுப்பி இருக்கிறாள் அம்மா! அவர்களை நான் கொல்ல வேண்டும்!”

“ஆஹா, நீ சற்று நேரத்துக்கு முன்னர் என்ன சொன்னாய்? இங்கே இருக்கும்வரை தந்தையின் பேச்சைத் தான் கேட்க வேண்டும் என்றாய் அல்லவா? ஆகவே நீ இப்போது நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்!” என்றான் பீமன். “நீங்கள் அப்படிச் சொன்னால் சரி தந்தையே! உங்கள் சொற்படியே நடந்து கொள்கிறேன். இப்போது நான் மரத்தின் மேலேறிக் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்.” என்ற வண்ணம் மரத்தின் மேல் ஏறினான்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.....