Sunday, October 30, 2016

இந்திரப் பிரஸ்தத்தை நோக்கி!

மகதச் சக்கரவர்த்தி சகாதேவனும், அவன் மகன்களும் ராஜசூய யாகத்திற்குக் கட்டாயமாய் வருவதாக வாக்களித்தார்கள். மேகசந்தி தன் தந்தை சகாதேவன் யுதிஷ்டிரனுக்கு அளித்த விலை மதிக்க முடியாத பரிசுகளுடன் கிருஷ்ண வாசுதேவன், பீமன், அர்ஜுனன் ஆக்யோருடன் இந்திரப் பிரஸ்தம் கிளம்பினான். உத்தவனும் மற்ற அதிரதிகளும், மஹாரதிகளும் பின் தொடர விடுவிக்கப்பட்ட அரசர்களும் மகிழ்வுடன் இந்திரப் பிரஸ்தம் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார்கள். அவரவருக்குக் கிடைத்த ரதங்களிலும் மாட்டு வண்டிகளிலும் பயணத்தைத் தொடர்ந்தனர். மல்லர்களில் பலரும் மிகவும் மகிழ்வோடு இந்திரப் பிரஸ்தம் நோக்கிக் கால்நடையாகவே வந்தார்கள். மொத்தத்தில் போரில் வெற்றியடைந்த படை வீரர்கள் மகிழ்ச்சியுடன் தாய் நாடு திரும்பும் கோலத்தை நினைவூட்டியது அது.

ஜராசந்தன் மரணத்தை வென்றவன் என அனைவராலும் நம்பப் பட்டிருக்க இப்போது அவன் கொல்லப்பட்ட செய்தியும் எவ்விதமான போரோ முற்றுகையோ இல்லாமல் ஜராசந்தனால் அடைக்கப்பட்டிருந்த அரசர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதும் மகத நாட்டு கிரிவ்ரஜத்திலிருந்து வாய் வழிச் செய்தியாகவே அண்டை நாடுகளுக்கெல்லாம் பரவியது. இந்த விஷயத்தைக் கேள்விப் பட்ட பலரும் இத்தகைய அரிய செயலைச் செய்த வெற்றி வீரர்களை தரிசிக்க வேண்டி சாலையோரத்தில் கூடினார்கள். சாலையின் இருமருங்கும் மக்கள் கூடி நின்று ஆர்ப்பரித்து வெற்றி வீரர்களுக்கு வாழ்த்துகள் சொன்னார்கள். கிருஷ்ண வாசுதேவனின் தரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்கள் பிறவிப் பயன் பூர்த்தி அடைந்ததாகவே நினைத்துக் கொண்டனர். செல்லும் வழியில் காசி ராஜ்யத்தின் அரசனும், பீமனின் மைத்துனனும் ஆன சுஷர்மா அவர்களை வரவேற்றுப் பெரும் விருந்தளித்துப் பெருமைப் படுத்தினான். அதே போல் திரௌபதியின் தந்தை துருபதனும் இந்த வீர தீர சாகசங்களை நிகழ்த்திய வீரர்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பு அளித்து கௌரவம் செய்தார். பாஞ்சாலத்தின் பட்டத்து இளவரசனும், திரௌபதியின் சகோதரனும் ஆன திருஷ்டத்யும்னன் கிருஷ்ணன் முதலானோருடன் சேர்ந்து கொண்டு அவனும் ராஜசூய யாகத்தில் கலந்து கொள்வதற்காக இந்திரப் பிரஸ்தம் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினான்.

இந்திரப் பிரஸ்தமும் வந்தது. நகரின் மக்கள் அனைவரும் நகருக்கு வெளியே உள்ள புற வாயிலில் கூடி இருந்தனர். மொத்த நகரமும் அங்கே பெயர்த்து எடுக்கப்பட்டு வந்தது போல் இருந்தது. தங்கள் அபிமானத்துக்கும் பாசத்துக்கும் உரிய இளவரசர்களும், கிருஷ்ண வாசுதேவனும் செய்த வீர தீர சாகசங்கள் அவர்களையும் வந்து எட்டி இருந்ததால் ஆரவாரமாக மிகப் பெரிய முறையில் வரவேற்பு அளிக்க வேண்டி அங்கே குழுமினார்கள். யுதிஷ்டிரன் கண்களில் கண்ணீருடன் அனைவரையும் வரவேற்றான். கிருஷ்ண வாசுதேவன் அவன் கால்களில் விழுந்து வணங்கினான். எப்படி ஒரு மகா துஷ்டனும், கொடுமைக்காரனும் ஆன சக்கரவர்த்தியை எவ்விதமானப் போர் முற்றுகையோ, மோதல்களோ இல்லாமல் கொன்றதன் மூலம் தன்னுடைய சக்கரவர்த்தி பதவிக்கு மாபெரும் அங்கீகாரத்தைக் கிருஷ்ணன் பெற்றுக்கொடுத்து விட்டதாக யுதிஷ்டிரன் நினைத்தான். யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ண வாசுதேவன் வெற்றியுடன் திரும்பி வரும் செய்தி கிட்டியதுமே த்வைபாயனருக்குச் செய்தி சொல்லி அவரையும் வரவழைத்திருந்தான். ஆகவே அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி வீரர்களுக்கு ஆசிகள் வழங்கவென த்வைபாயனரும் வந்திருந்தார்.

விழா இனிதே முடிந்ததும் த்வைபாயனர் தௌம்யரின் ஆசிரமம் திரும்பினார். ஆனால் அவர் ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்ததை அவர் முகம் காட்டியது. அவரைப் போன்ற முனிவர்கள், ரிஷிகளுக்கு ஜராசந்தன் செய்யவிருந்த உயிர்ப்பலி போன்ற விஷயங்கள் மிகவும் பாவம் என்பதோடு அது கண்டிக்கத்தக்க மாபெரும் குற்றமும் ஆகும். அதிலும் ஜராசந்தன் நூறு அரசர்களைத் திரட்டி அவர்களை யாகம் என்னும் பெயரில் பலி கொடுக்கப் போகிறான் என்னும் செய்தி அவரை எட்டியதிலிருந்தே அவர் இரவும், பகலும் தூங்கவில்லை. ஒவ்வொரு சமயம் அவருக்குத் தாமே நேரில் சென்று ஜராசந்தனைச் சந்தித்து இந்த விஷயத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்ளலாம் என்றும் அப்படித் தம்மை அவன் கொல்ல நேர்ந்தால் இதற்காகத் தாம் உயிர் துறக்கலாம் என்றும் நினைத்திருந்தார். ஆனால் அவர் கடவுளரிடம் இதைக் குறித்துப் பேசியதில் அவருக்கு ஜராசந்தனைச் சென்று பார்க்க அனுமதி கிட்டவில்லை. அதிலும் சூரிய பகவான் இதற்கெனத் தகுந்த மனிதன் இருக்கிறான் என்றும் அவனைப் போய்த் தேடிப்பார்க்குமாறும் அந்த மனிதனால் மட்டுமே உயிர்ப்பலியைத் தடுக்க இயலும் என்றும் அவருக்குச் சில அடையாளங்கள் மூலம் காட்டி இருந்தான். ஆகவே சூரிய பகவானின் உத்தரவை அவரால் மீற முடியவில்லை!

கடந்த இரு வருடங்களாகவே குரு வம்சத்தில் நல்ல திடமான வலுவான சாம்ராஜ்யத்தை அளிக்கும் அளவுக்கு மனோபலமுள்ள அரசன் யாரும் பட்டம் ஏறவில்லை. இது அவருக்குக் கவலையை அளித்தது. அவர் நியோக முறையில் குழந்தைகளைப் பெற்றதே இப்போது வீணாகிவிடுமோ என்னும் அளவுக்குக் கவலை கொண்டிருந்தார். ஆகவே அவர் திரும்பத் திரும்ப சூரியனிடம் வேண்டிக் கொண்டார். ஆத்மபலத்தை அதிகரிக்கச் செய்யும் காயத்ரி மந்திரத்தை நாள் முழுவதும் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்து வந்தார். அதன் மூலம் ஓர் நிரந்தரமான தர்மத்தின் பாதுகாவலனைத் தனக்குக் கிடைக்கச் செய்யுமாறு வேண்டி வந்தார். அந்த மனிதனே பின்னாட்களில் சாஸ்வதமான தர்ம குப்தாவாக இருக்க வேண்டும் என்றும் எண்ணினார். எல்லையற்ற, அழிவற்ற தர்மத்தை அவன் ஒருவனால் மட்டுமே பாதுகாக்க முடியும். த்வைபாயனரால் அஸ்திவாரம் போட்டு எழுப்பப் பட்ட தர்மத்தின் கோட்டையை அவன் தூக்கி நிறுத்த வேண்டும். அத்தகையதொரு மனிதனே அவருக்குத் தேவை.

ஏற்கெனவே ஓரிரு முறைகள் கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்ததில் இருந்து த்வைபாயனருக்கு அவன் மேல் தனியானதொரு ஈடுபாடு இருந்து வந்தது. அவனுடைய குண நலன்களால் அவர் வசீகரிக்கப்பட்டார். அவனுடைய மெல்லிய ஆனால் அதே சமயம் வலுவுள்ள உடல், எப்போதும் சிரிக்கும் கண்களோடும் புன்னகையுடன் கூடிய உதடுகளோடும் கூடிய வசீகரமான முகம், அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டால் கூட அந்த முகத்தில் விகாரம் என்பதையே பார்க்க முடியவில்லை. அவன் பேசுகையில் கண்ட அவன் சொல் வன்மை, அந்த வன்மையினால் அனைவரையும் தன் பக்கம் கட்டிப் போடும் அவன் திறமை! அவன் திறமையால் கண்டுகொள்ளும் மனிதர்களையும், சூழ்நிலைகளையும் குறித்த அவன் தீர்க்கமான முடிவுகள், தீர்ப்புகள், எவ்விதமான பிரச்னைகளையும், சங்கடமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் சமயோசிதமான செயல்கள் எல்லாவற்றுக்கும் மேல் தர்மத்தைப் பாதுகாக்கவேண்டும் என்னும் அவனுடைய துடிப்பு, அதற்கான அவன் ஈர்ப்பு, உணர்வுகள். அனைத்துமே அவரைக் கவர்ந்திருந்தன.

ஜராசந்தன் இறந்துவிட்டான் என்னும் செய்தியும், ஆரிய வம்சத்து  அரசர்கள் 98 பேர்களும் விடுவிக்கப் பட்டனர் என்னும் செய்தியும் ஆசாரியர் வியாசரை வந்தடைந்தபோது அவர் இது கிருஷ்ணன் செயல் தான் என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். ஆரியர்களிடையே புதியதொரு சகாப்தம் உருவாகப் போகிறது என்பதையும் அதன் காரணகர்த்தாவாக இந்தக் கிருஷ்ண வாசுதேவன் விளங்குவான் என்றும் புரிந்து கொண்டார். அவர் கண்களுக்குமே அவன் ஓர் கடவுளாகவே தெரிந்தான். எல்லையற்ற ஆற்றல் படைத்த கடவுள்! ஜராசந்தனை முறியடித்ததன் மூலம் அவன் 98 அரசர்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறான். எப்போது என்று சொல்ல முடியாததொரு கால கட்டத்தில் வருண பகவான், கடவுளரில் மிகவும் பெரியவனாக இருப்பவன், ராஜா ஹரிசந்திரன் பலி கொடுக்கவிருந்த ஷுனக்ஷேபனைக் காப்பாற்றி அருளியது போல் இப்போது கிருஷ்ணன் செய்திருக்கிறான்.
கிருஷ்ண வாசுதேவன் ஆசாரியர் வியாசர் கால்களிலும் விழுந்து வணங்கினான். ஆசாரியரோ அவனை ஆசீர்வதிக்கும் முன்னர் அவனைத் தூக்கி நிறுத்தித் தன்னோடு அணைத்துக் கொண்டார். அவன் தனக்குக் கிடைத்ததே சூரிய பகவானின் அருள் என்னும்படியாக மிகவும் நன்றியுடனும், அன்புடனும் அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். த்வைபாயனர் இத்தனை வருடங்களாகத் தேடிக் கொண்டிருந்தவனைக் கண்டு பிடித்து விட்டார். ஆம்! அவர் தேடியது நிரந்தரமாக தர்மத்தின் பாதுகாவலன் ஒருவனை! அந்த ஒருவன் இதோ! இங்கே இருக்கிறான்! இவனை விட யார் அதற்குத் தகுதி வாய்ந்தவர். அவர் தேடல் முடிந்து விட்டது! வரவேண்டியவன் வந்து விட்டான்!