Saturday, October 22, 2016

மகதத்தை நோக்கிப் பயணம்!

“என்னால் இதை சிறிதும் நம்பவே முடியவில்லை!” என்ற த்வைபாயனருக்கு உடல் நடுங்கியது. “இது நம் போன்ற ஆரியர்களுக்கு உகந்ததே அல்ல! பாவம் செய்கிறான். விஷமக்காரன்! விஷம் தோய்ந்த மனதுள்ளவன். கொடியவன், வெறுக்கத் தக்கவன். இத்தனை வருடங்களாக நாம் கட்டிக் காத்து வந்த தர்மம் இப்போது முற்றிலும் அழிந்து விடும். இதை நாம் எப்படியேனும் தடுக்க வேண்டும்!” என்றார். அப்போது கிருஷ்ணன், “ஆசாரியரே, உங்களுக்குத் தெரிந்து வேறு எந்த ஆரிய அரசரேனும் இப்படி உயிர்ப்பலி கொடுத்து யாகங்கள் செய்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? நீங்கள் பார்த்தது உண்டா?” என்று கேட்டான் கிருஷ்ணன்!

“இல்லை, கிருஷ்ணா! பல்லாண்டுகளுக்கு முன்னர் ராஜா ஹரிசந்திரன் என்பவன் ஷுனசேபா என்பவனைப் புனித அக்னிக்கு இரையாக்கவும் யாகம் செய்யவும் முனைந்தான். ஆனால் அது அப்போது வருணனால் தடுக்கப்பட்டது. வருணன் அவனை விடுவித்துவிட்டான். அதன் பின்னர் எந்த ஆரிய அரசனும் மனிதரைப் பலி கொடுத்து யாகம் செய்ததில்லை!” என்றார் த்வைபாயனர். அளவுக்கடங்காத கோபத்தில் இருந்த அவர் குரல் நடுங்கியது. “உயிர்ப்பலி என்பதும் அதுவும் ஓர் அரசன் கொடுப்பதும் சற்றும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை! இதை நாம் எப்படியேனும் தடுத்தே ஆகவேண்டும்.” என்றார் த்வைபாயனர்.

“நம் படைகளை அவ்வளவு தூரம் மகதம் வரைக்கும் கூட்டிச் சென்று ஜராசந்தனை அழிப்பது என்றால் நடக்கிற காரியமா? அது எவ்வாறு இயலும்?” என்று கேட்டான் யுதிஷ்டிரன்! பீமன் தன் கைகளைத் தட்டினான். சொடுக்குப் போட்டுக் காட்டினான். “இதோ, இப்படித்தான்! நிமிடத்தில் முடிக்கலாம். நம்முடைய மஹாரதிகள் ஜராசந்தனை எப்போது முடிப்போம் என்று காத்திருக்கின்றனர்.  மற்றவர்களில் துருபதன் நமது மாமனார் மேலும் நண்பர். காசி தேசத்து அரசனும் அப்படித் தான்!”

“அவர்கள் ஆரம்பத்தில் உங்களுடன் சேர்ந்து கொள்வார்களா என்பதும் மும்முரமாக இதில் ஈடுபடுவார்களா என்பதும் சந்தேகமே! அதில் எனக்குச் சந்தேகம் உள்ளது!” என்றான் கிருஷ்ணன். “நீ வெற்றி பெறுவாய் என்பது உறுதியாகத் தெரிந்தால் தான் அவர்கள் உன் உதவிக்கே வருவார்கள் என நினைக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன் மேலும். “ம்ம்ம்ம்ம், மகத நாட்டை ஊடுருவுவதும் முற்றுகையிடுவது சாதாரணமான விஷயமே அல்ல! கடினமான ஒன்று!” என்றான் யுதிஷ்டிரன். அவன் எப்படியேனும் இதை நிறுத்த வேண்டும் என்று விரும்பினான். “அப்படியானால் நாம் என்ன செய்யலாம்?” கிருஷ்ணனிடம் பீமன் கேட்டான்.

“நமக்கிருக்கும் ஒரே வழி நான் சொன்னது மட்டுமே!” என்றான் கிருஷ்ணன். “தோல்வியே இல்லாத ஓர் சுமுகமான சூழ்நிலைக்கு அனைவரையும் கொண்டு வர வேண்டும். அப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஜராசந்தனை நாம் முற்றிலும் ஒதுக்கிவிட்டால் இது சாத்தியம். இல்லை எனில் கஷ்டம் தான்!” என்றான் கிருஷ்ணன். “எல்லாப் போர்களிலும் தோல்வி என்னும் ஆபத்து இருக்கத் தான் செய்கிறது!” என்றான் யுதிஷ்டிரன். “நாம் ராஜசூய யாகத்தைத் தொடங்கும் முன்னர் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அனைத்தையும் அகற்றிவிட வேண்டும்!” என்றான் கிருஷ்ணன். யாரும் வாயே திறக்கவில்லை. பின்னர் மெல்ல த்வைபாயனர் பேச ஆரம்பித்தார்.

“ம்ம்ம்ம். வாசுதேவக் கிருஷ்ணா, நான் உடனே என்னை குருவாக ஏற்று என் சொற்படி கேட்டு ராஜ்ய நிர்வாகத்தை நடத்தி வரும் அரசர்களுக்குச் செய்தியை அனுப்புகிறேன். மகத நாட்டு அரசனுடன் போர் துவக்கவேண்டும் என்று சொல்லி விடுகிறேன். ஆனால் இதில் ஆபத்து இருப்பதால் அனைவரும் நம்முடன் சேர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமே!” என்றார். அவர் முகம் அளப்பரிய வேதனையைக் காட்டியது. வேறு வழியில்லை என்பதை அறிந்தே இதைச் சொல்ல நேர்ந்தது என்பது புலப்பட்டது. மேலும் கூறினார். “இது ஓர் தவிர்க்க இயலாத போராக இருக்கும். துரதிர்ஷ்டவசமானது. அதிலும் ஆரிய அரசர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் என்ன செய்வது! வேறு வழியில்லையே! இந்த உயிர்ப்பலியைக் கட்டாயமாய்த் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். இல்லை எனில் தர்மம் அழிந்து விடும். மனிதரை மனிதரே மதிக்காமல் போய்விடுவார்கள். நாமும் அதன் பின்னர் ஆரியர்களாக இருக்க மாட்டோம்! ராக்ஷசர்களாக ஆகிவிடுவோம்.” என்றார் த்வைபாயனர்.  அனைவரும் அவரவர் யோசனையில் ஆழ்ந்தனர்.

த்வைபாயனர், கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவா, நீ என்ன சொல்கிறாய்? உன் கருத்து என்ன?” என்று கிருஷ்ணனிடம் கேட்டார். கிருஷ்ணனும் யோசனையில் இருந்ததால் மெதுவாகப் பேச ஆரம்பித்தான். ஆனால் பேசப் பேச வார்த்தைகள் திடமாக விழுந்தன. “எனக்குக் கிடைத்த செய்தி தெளிவாகச் சொல்கிறது. இளவரசன் மேகசந்தி இந்த அக்கிரமமான செயலைச் செய்ய விடாமல் தடுப்பதற்கு என் உதவியை நாடி இருக்கிறான்.”

“என்னை அழைக்க நகுலன் துவாரகைக்கு வரும் முன்னர் நான் ஏற்கெனவே மேசந்திக்கும் அவன் தகப்பனும் பட்டத்து இளவரசனும் ஆன சகாதேவனுக்கும் செய்தி அனுப்பி விட்டேன். ராஜநியாஸைக் காப்பாற்றுவதற்கு நான் கட்டாயம் வருவதாகச் செய்தி அனுப்பி விட்டேன்.”

ஆனால் யுதிஷ்டிரன் விடாமல் கூறினான். “கிருஷ்ணா, மகதத்துக்குப் படைகளை அனுப்புவது என்பது சாதாரணமான விஷயமே அல்ல!” என்றான். “அப்படியா? அப்படி எனில் நாம் மோதல்களோ சச்சரவுகளோ இல்லாமல் ஜராசந்தனை அழிக்க ஒரு வழி கண்டு பிடித்தாகவேண்டும்!” என்ற கிருஷ்ணன் யுதிஷ்டிரனைப் பார்த்துச் சிரித்தான். “அது எப்படி முடியும் கிருஷ்ணா?” என்று கேட்டான் யுதிஷ்டிரன். “யுதிஷ்டிரா, இந்தத் துணிகரமான முயற்சியில் ஈடுபடுவதோ, ஈடுபடாமல் இருப்பதோ உன் விருப்பம். அது உன் கைகளில் உள்ளது. ஆனால் நான் அப்படி இருக்க முடியாது. எனக்கு வேறு வழியில்லை. ஜராசந்தன் என்னை அழிக்கவென்றே அலைகிறான். மேகசந்தியோ என்னிடம் விண்ணப்பம் செய்திருக்கிறான். ஏனெனில் இது அநியாயச் செயல் என்றும் இப்படி ஒன்று நடப்பதையும் தர்மத்திற்குப் புறம்பாக இருப்பதையும் நான் விரும்ப மாட்டேன் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அதோடு இல்லை! இயன்றால் ஜராசந்தன் பேரனான மேகசந்தியையும், அவன் தகப்பன் சகாதேவனையும் கூட யாக அக்னியில் போடுவதற்குத் தயங்க மாட்டான். இதை நினைத்துத் தான் மேகசந்தியும் அஞ்சுகிறான்.”

“ஹூம், அவனுக்கு என்ன பைத்தியமா? முட்டாள்!” என்று சீறினான் பீமன்.

“மூத்தவரே, உங்கள் விருப்பம் போல் நடவுங்கள். நான் இங்கிருந்து நேரே மகதம் தான் செல்லப் போகிறேன். உங்களால் இயன்றால் பீமனையும் அர்ஜுனனையும் என்னோடு அனுப்பி வையுங்கள். அவர்கள் எனக்கு உதவியாக இருப்பார்கள். நீங்கள் ராஜசூய யாகம் செய்வதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும் என்னும் எண்ணமும் நிறைவேறும். ஆகவே நீங்கள் இங்கேயே இருந்து ஏற்பாடுகளைக் கவனிக்கலாம்!” என்றான் கிருஷ்ணன். இதைக் கேட்ட குந்தி அதிர்ச்சியும் திகிலும் அடைந்தாள்.”கிருஷ்ணா, கிருஷ்ணா, உனக்கோ அல்லது பீமன், அர்ஜுனன் ஆகியோருக்கோ ஏதேனும் ஆகிவிட்டால்? என்ன செய்வது? எப்படி உங்களைக் காப்பாற்றிக் கொள்வீர்கள்?” என்று கேட்டாள்.

கிருஷ்ணன் புன்னகைத்தான்.”அத்தை, ஒரு உண்மையான க்ஷத்திரியன் தன் தலையை உள்ளங்கைகளில் தான் தாங்கிக் கொண்டு இருக்கிறான், எப்போதுமே! ஆகையால் கவலைப் படாதீர்கள். மூவாயிரம் அதிரதிகளால் முடியாத காரியத்தை நாங்கள் மூவரும் நடத்திக் காட்டலாம். சொல்ல முடியாது. நாங்கள் உங்கள் ஆசிகளையும், ஆசாரியரின் ஆசிகளையும் வேண்டுகிறோம். ஜராசந்தனுடன் போரிடுவதற்கு எனக்குத் தனிப்பட்ட காரணங்களும் இருக்கின்றனவே! என் வாழ்க்கை முழுவதும் அவன் என்னைப் பின் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறான். பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன அவனைக் கொல்வதற்கு. ஆனால் நான் தான் அவனைத் தப்பிச் செல்ல அனுமதித்தேன். ஏனெனில் தனிப்பட்ட விரோதத்துக்காக நான் அவனைக் கொல்ல விரும்பவில்லை. ஆனால் இம்முறை எனக்குத் தயக்கமே இல்லை. ஏனெனில் அவன் ஆரிய தர்மத்தையே பூண்டோடு அழிக்க விரும்புகிறான். மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொள்ளப் பார்க்கிறான். மனித வாழ்க்கையின் புனிதத்தையும் அழிக்க நினைக்கிறான்.”

“ஆனால் நீயும், உன் வாழ்க்கையும் கூட விலை மதிப்பற்ற ஒன்று கிருஷ்ணா! அதை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட்டு வீணடித்துக் கொள்ளாதே!” என்றாள் குந்தி மீண்டும்.

“அத்தை, நான் இதில் ஈடுபடவில்லை எனில், ஜராசந்தன் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் கொடுத்துக் கொண்டே இருப்பான். ஆரிய தர்மம் மட்டுமில்லாமல் மனிதாபிமானமும் செத்துவிடும். ஆரியர்களின் வாழ்க்கையில் இருக்கும் கட்டுக்கோப்பே சிதைந்துவிடும். மேக சந்தி முயற்சிகள் பல எடுத்து இதில் கலந்து கொள்ளும் அரசர்களின் எண்ணிக்கையை நூறுக்கும் குறைவாகச் செய்து வருகிறான். நடு நடுவில் பல அரசர்களை இதிலிருந்து தப்பிக்கவும் ஏற்பாடு செய்து தருகிறான். இதற்கு மேல் அவனால் என்ன செய்ய முடியும்?” கிருஷ்ணன் த்வைபாயனரைப் பார்த்துத் திரும்பினான். “ஆசாரியரே, நாங்கள் திரும்பி வருவோம். அப்படி ஒருக்கால் வராவிட்டால், நீங்கள் ஆரிய வர்த்தத்தின் மற்ற அரசர்களை மகதத்தை முற்றுகையிடச் சொல்லுங்கள். ஆனால் நாங்கள் தோல்வி அடைய மாட்டோம்! வெற்றி பெறுவோம்!” என்றான் கிருஷ்ணன். த்வைபாயனர் கிருஷ்ணன் சொல்வதன் முழுப் பொருளும் உணர்ந்து கொண்டார். அவன் முகத்தோற்றமும், அவனுடைய நிச்சயமான தொனியும் அவன் கட்டாயம் வெற்றி பெறுவான் என்று அவருக்கு உணர்த்தியது.

தலை குனிந்து கிருஷ்ணன் வணங்க த்வைபாயனர் அவனை ஆசீர்வதித்தார். “சர்வ வல்லமை பொருந்திய வாசுதேவ கிருஷ்ணா! இந்த சர்வ நாசத்தை மட்டும் உன்னால் தடுக்க முடியுமானால் நல்லது. அப்படி நீ தடுத்துவிட்டாயெனில் நீ தான் இவ்வுலகின் இந்த யுகத்தின் சாஸ்வத தர்ம குப்தன் என்று ஆணையிட்டு நான் சொல்கிறேன். இப்படி ஒருவனைத் தான் நான் என் வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டிருந்தேன்!” என்றார்.  கிருஷ்ணனும், பீமனும் அங்கிருந்து வெளியேறினார்கள். திரௌபதி அவர்களைத் தொடர்ந்தாள். கிருஷ்ணனிடம் அவள், “பிரபுவே, இரு சகோதரர்களையும் மிகவும் பத்திரமாக என்னிடம் ஒப்படைத்துவிடு! எனக்கு அந்த உறுதிமொழியைக் கொடு கிருஷ்ணா! அவர்கள் இல்லாமல் நீ மட்டும் திரும்பி வராதே! அப்படி வருவதில்லை என்று வாக்குக் கொடு!” என்று கேட்டாள். பீமன் உச்சஸ்தாயியில் சிரித்தான். “ஆஹா, திரௌபதி, உன் கணவன்மாரிடம் உனக்கு நம்பிக்கையே இல்லையா? ஏன் என்னிடம் கிருஷ்ணன் இல்லாமல் நீங்கள் இருவரும் திரும்பக் கூடாது என்று கேட்டிருக்கலாம் அல்லவா?” என்று சொல்லிவிட்டு மீண்டும் உரக்கச் சிரித்தான்.