Monday, October 10, 2016

கண்ணன் வருவான் ஏழாம் பாகம்! யுதிஷ்டிரன்!

அன்பொழுக சகோதரர்கள் ஐவரையும் பார்த்தான் கிருஷ்ணன். ரதத்தில் ஏறி பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான். யுதிஷ்டிரன் குதிரைகளின் முகக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு ரத சாரதியின் இடத்தில் துள்ளி ஏறி அமர, குதிரைகள் பிய்த்துக் கொண்டு கிளம்பின. கூட்டம் முழுவதும், “ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!” என்று கோஷமிட்டது. கிருஷ்ணன் தன் கைகளைக் கூப்பியவண்ணம் எழுந்து நின்று தலை குனிந்த அந்த வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டான். ரதம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ரதம் அந்த நகரின் வெளிப்புறத்தை அடைந்தது. யுதிஷ்டிரன் தன் கைகளில் இருந்த  முகக்கயிற்றை ரத சாரதி தாருகனிடம் கொடுத்தான். ரதத்திலிருந்து கீழே குதித்தான். பீமனும், அர்ஜுனனும் மற்ற சகோதரர்களும் யுதிஷ்டிரனைப் பின் தொடர்ந்தனர். கிருஷ்ணனும் ரதத்திலிருந்து கீழிறங்கி யுதிஷ்டிரனின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். யுதிஷ்டிரன் அவனை அன்போடு அணைத்துக் கொண்டு ஆசிகளைக் கூறினான். “என்றென்றும் விஜயலக்ஷ்மி உன் பக்கம் இருக்கட்டும்!” என்று தன் ஆசிகளை யுதிஷ்டிரன் தெரிவித்தான்.

பின்னர் பீமனையும் வணங்கினான் கிருஷ்ணன். பீமன் அவனை அணைத்துக் கொண்டு அப்படியே தரையிலிருந்து கிருஷ்ணனை மேலே தூக்கினான். முகம் முழுவதும் புன்னகையுடன் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் கிருஷ்ணனைத் தூக்கிக் கொண்ட பீமன் பின்னர் மெல்லக் கிருஷ்ணனைக் கீழிறக்கினான். மற்ற சகோதரர்களான அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கிருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். சாத்யகியும் வந்து கிருஷ்ணனை வணங்கினான். கிருஷ்ணன் அனைவரையும் தனித்தனியே அணைத்துக் கொண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். பின்னர், “ஏன் என்னை ஓர் சக்கரவர்த்தியைப் போல் நடத்துகிறீர்கள்?” என்று கேட்டான். “இம்மாதிரி சம்பிரதாயமான மரியாதைகளெல்லாம் எனக்குத் தேவையில்லை. இவை ஓர் மாபெரும் சக்கரவர்த்திக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளாகும். நான் எவரையும் வெற்றி கொள்ளவும் இல்லை, நான் ஓர் சக்கரவர்த்தியும் இல்லை!” என்றான் கிருஷ்ணன்.

“நீ ஓர் அரசனே, சக்கரவர்த்தியே! யார் சொன்னது நீ சக்கரவர்த்தி இல்லை என்று!” என்று கேட்டான் பீமன். “அப்படி யாரேனும் சொன்னதாகத் தெரிந்தால் அவர்கள் மண்டையை உடைத்து விட்டுத் தான் மறுவேலை!” என்றான் பீமன். யுதிஷ்டிரன் சிரித்த வண்ணம், “கிருஷ்ணா, நீ தான் எங்களுக்கு இப்போது சக்கரவர்த்தி! அது போதும் எங்களுக்கு!” என்றான். கிருஷ்ணன் அன்புடன் அனைவரையும் பார்த்துப் பிரியாவிடை பெற்று மீண்டும் ரதத்தில் ஏறிக் கொண்டான். தாருகன் குதிரைகளை விரட்டக் குதிரைகள் துவாரகை செல்லும் ராஜபாட்டையில் பீடு நடை போட்டுச் சென்றன. சகோதரர்கள் ஐவரும் ரதம் கண்களிலிருந்து மறையும் வரையிலும் அங்கேயே பார்த்தவண்ணம் நின்றிருந்தார்கள்.

யுதிஷ்டிரனுக்கு அவன் இதயத்தில் ஓர் வெற்றிடம் உருவாகி விட்டாற்போல் தோன்றியது. கிருஷ்ணன் துவாரகைக்குச் சென்று விட்டது அவனுக்கு எவருமே தன்னுடன் இல்லை போன்ற ஓர் எண்ணம் தோன்றியது. அவர்களுக்காகக் கிருஷ்ணன் என்னவெல்லாம் செய்து விட்டான்! அவர்கள் ஐவருமே கிருஷ்ணனுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை: தற்போதைய நிலைமை; தற்போது அவர்களுக்குக் கிட்டியுள்ள அந்தஸ்து! திரௌபதியுடன் அவர்களுக்கு மணம் முடித்தது. அது மட்டுமா! அவர்களை முற்றிலும் வெறுத்து வந்த அவர்கள் தாயாதிகளான கௌரவர்களிடமிருந்து அவர்களுக்கு என உரிய ராஜ்யத்தைப் பெற்றுக் கொடுத்தது. அதில் எவ்விதமான சச்சரவும் மனக்கசப்பும் வராமல் பார்த்துக் கொண்டது. இங்கே வந்ததும் காண்டவ வனத்தை எரித்துப் புதிய நகரை நிர்மாணிக்க உதவியது. இந்திரப் பிரஸ்தத்தைக் கட்டிய பின்னர் அங்கே மக்கள் தங்கும்படியான ஏற்பாடுகளைச் செய்து தந்தது. யாதவர்களும் பாஞ்சால நாட்டு வீரர்களும் இல்லை எனில் இவை எதுவும் சாத்தியப்பட்டிருக்காது. விரைவாகவும் அழகாகவும் எல்லாவற்றையும் செய்து முடித்தனர் அவர்கள் அனைவரும்.

எரிந்து கொண்டிருந்த காண்டவ வனத்திலிருந்து அசுரன் மயனைக் காப்பாற்றியது கிருஷ்ணன் தான். அவனைக் காப்பாற்றியதோடு அல்லாமல் அவர்களுக்கென ஓர் தனித்துவம் வாய்ந்த அரச சபாமண்டபத்தை நிர்மாணித்துக் கொடுக்கவும் அரசமாளிகையை நிர்மாணித்துக் கொடுக்கவும் அவனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டு அதன்படியே செய்து முடித்தான் கிருஷ்ணன். இம்மாதிரியான சித்திர, விசித்திரமான மாளிகையை இன்று வரை எவரும் பார்த்ததில்லை என்னும்படி அதிசயங்கள் நிறைந்தது அது! கிருஷ்ணன் தலையிடவில்லை எனில் தாயாதிச் சண்டை கட்டாயம் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள் பலரும் போரில் கலந்து கொண்டு எந்தப்பக்கம் போரிடுவது என்று திகைத்து மயங்கி இருப்பார்கள். துரியோதனன் மட்டும் அவர்களுக்கு என உள்ள உரிமைகளைக் கொடுக்க மறுத்திருந்தால் யுதிஷ்டிரன் நீங்கலான சகோதரர்கள் நால்வரும் துரியோதனனிடம் போரிடத் தயங்கி இருக்க மாட்டார்கள்.

யுதிஷ்டிரன் மட்டும் சம்மதிக்கவில்லை எனில் பீமனோ அர்ஜுனனோ ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்குவதற்கோ இந்திரப் பிரஸ்தத்தில் புதிய நகரை நிர்மாணித்துக் கொண்டு அரசாட்சி புரியவோ சம்மதமே கொடுத்திருக்க மாட்டார்கள். யுதிஷ்டிரன் சம்மதித்ததோடு அல்லாமல் கிருஷ்ணன் விடவில்லை. அவர்களிடமும் பேசிச் சம்மதிக்க வைத்தான். இப்போது கவலை ஏதும் இல்லை. எல்லா விஷயங்களும் நன்றாகவே முடிந்து விட்டன. இந்திரப்பிரஸ்தம் அரச தர்மத்திற்கும் அரச நீதிக்கும் ஓர் சாட்சியாக அனைவரையும் கவரும் வண்ணம் பெருமை பெற்றுச் சிறக்கப் போகிறது. ஏற்கெனவே இதன் சிறப்பு வெளியே பரவி வருகிறது. ஹஸ்தினாபுரத்து மக்கள் கூட இந்திரப் பிரஸ்தத்தின் சிறப்புக் குறித்து அறிந்து கொண்டு அங்கிருந்து வந்து இங்கே குடியேறி வருகின்றனர்.

கிருஷ்ணன் இங்கிருந்து சென்றதுடன் தங்கள் தனிப்பட்ட உறவுகளிடம் கூட மாற்றங்களை எதிர்பார்த்தான் யுதிஷ்டிரன். ஏனெனில் கிருஷ்ணன் இங்கிருந்தவரையில் அவனுடைய கருத்துகளின் தாக்கமே அதிகமாக இருந்தது. கிருஷ்ணனின் ஆளுமையை அனைவரும் உணர்ந்திருந்தனர். ஆகவே அவன் இங்கிருந்தவரை மனித உறவுகள் நடந்து கொண்ட முறைக்கும் கிருஷ்ணன் இல்லாதபோது நடந்து கொள்ளப் போகும் முறைக்கும் நிச்சயமாக மாற்றங்கள் தெரியும். தெளிவான கண்ணோட்டம் தேவைப்படும். சூழ்நிலைகளில் அபிலாஷைகளின் தாக்கம் அதிகரிக்கலாம். இப்போது கிருஷ்ணன் இல்லை என்பதால் அதில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதைக் கண்காணிக்க வேண்டும்.

யுதிஷ்டிரன் மேலும் யோசித்தான். எத்தகைய விசித்திரமான சூழ்நிலைகளிலும், சந்தர்ப்பங்களிலும் ஐவரும் எதிர்கொண்டு ஜெயித்து வந்திருக்கிறார்கள் என்பதை நினைவு கூர்ந்தான். அவர்கள் பக்கம் எவ்வித முயற்சிகளும் சரியாக எடுக்கப்படாவிட்டாலும் கூட கடவுளின் கருணையால் ஒவ்வொன்றிலிருந்தும் தப்பி வந்திருக்கின்றனர். அவர்களிடையே உள்ள ஒற்றுமை ஒன்றே அவர்கள் ஐவரையும் ஒருசேரப் பிணைத்திருந்தது. அதனாலேயே அவர்களால் அனைத்தையும் எதிர்கொள்ள மனோ பலமும் கிடைக்கப் பெற்றிருந்தனர். இது குந்தி தேவியின் சமயோசிதமான புத்தியால் ஏற்பட்ட ஒற்றுமை.  அவர்கள் அனைவரும் குழந்தைப்பருவத்திலேயே ஹஸ்தினாபுரம் அழைத்து வரப்பட்டபோது அவள் அவர்கள் ஐவரிடமும் ஓர் உறுதிமொழி வாங்கிக் கொண்டிருந்தாள். அது தான் அவர்கள் ஐவரும் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதோடு அனைத்தையும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுவும். அதோடு இல்லாமல் யுதிஷ்டிரன் அனைவரையும் விடப் பெரியவன் என்பதால் அவன் மற்ற சகோதரர்களுக்குத் தந்தைக்குச் சமமானவன். அவனும் மற்ற சகோதரர்களைத் தன் சொந்தக் குழந்தைகளைப் போலவே பார்க்க வேண்டும்; நடத்த வேண்டும். யுதிஷ்டிரனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் மற்ற சகோதரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது அவனைக் காப்பாற்ற வேண்டும்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.