Thursday, September 22, 2016

ஷார்மியின் வெற்றியும், வாடிகாவின் தோல்வியும்!

“இப்போது தான் நீ கொஞ்சம் புத்தியுடன் பேசுகிறாய், கிருஷ்ணா!” என்று இடைமறித்தாள் ஷார்மி. பின்னர் முகம் முழுவதும் சிரிப்புடன், வாடிகா பக்கம் திரும்பி ஓர் வெற்றிப் பார்வை பார்த்தாள். “பார்த்தாயா? அவன் என் மகன்! அதனால் எனக்கு ஏற்றவாறு பேசுகிறான்.” என்றாள். “நான் சிறுவனாக இருந்தபோது, “ என்று ஆரம்பித்த த்வைபாயனர் கொஞ்சம் நிறுத்தி அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டுத் தொடர்ந்தார். “நான் சிறுவனாக இருந்தபோது இந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க நினைத்துள்ளேன்; அதற்காக ஆசைப்பட்டிருக்கிறேன். அதோடு இல்லாமல் சாம்பல் பிரதேசத்தையும் மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என்று உறுதி கொண்டேன்.”

“ஆமாம், ஆமாம், இப்போது நீ மிகவும் மன முதிர்ச்சி பெற்று விட்டாய் அல்லவா? அதனால் தான் இந்த ஆசிரமப் பொறுப்பை ஏற்று நடத்த மறுக்கிறாய்! அல்லவா?” என்று ஏளனமாய்க் கேட்டாள் ஷார்மி. “இல்லை அம்மா, அப்படி எல்லாம் இல்லை. நான் என்னுடைய ஆன்மிகத் தந்தைக்கு உரிய மரியாதைகளைத் தக்கபடி செய்து அவருக்கு நான் பட்டிருக்கும் நன்றிக்கடனைத் தீர்த்தாகவேண்டும். ஆகவே ஒவ்வொரு வருடமும் குறைந்தது இரண்டு மாதங்கள் இந்த ஆசிரமத்தில் நான் கழிக்கிறேன். இங்குள்ள பிரச்னைகளுக்குத் தீர்வும் காண முயல்கிறேன். ஆனால் தொடர்ந்து இங்கேயே இருந்து ஆசாரியனாக முழுப் பொறுப்பு ஏற்க இயலாத நிலையில் இருக்கிறேன்.” என்றார் த்வைபாயனர்.

பின்னர் கொஞ்சம் நிறுத்தித் தன்னை ஆசுவாசம் செய்து கொண்ட த்வைபாயனர் மேலும் பேசலானார். “நீங்கள் அனைவரும் சொல்வது சரியே! சுகதேவன் தனக்கென ஓர் இல்லறத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அது மிக முக்கியம். அதன் பின்னர் அவன் இந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தலாம்.” என்றார். அதைக் கேட்ட சுகதேவரின் நிலை பரிதாபத்துக்குரியதாக இருந்தது. அவர்  மனம் வருந்தினார். தந்தையின் முடிவு அவருடைய விருப்பத்துக்கு முற்றிலும் மாறாக அன்றோ இருந்தது! ஆனால் அதைச் சற்றும் கவனிக்காத த்வைபாயனர் தொடர்ந்து, “இனி இந்த ஆசிரமம் சிறப்பாக நடைபெறுவதற்கு சுகதேவன் தான் பொறுப்பாவான். அவன் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இந்த ஆசிரமம் நடைபெறும். அதற்காக அவன் இல்லறத்தை ஏற்றாக வேண்டும். தன் கடமைகளைச் செய்வதற்குத் தக்க துணையாக ஒரு சஹதர்மசாரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவளைத் திருமணம் செய்வதன் மூலம் நல்லதொரு இல்லறத்தை அவன் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு ஸ்ரோத்திரியனாக இருந்து கொண்டு இல்லறத்தைத் தேர்ந்தெடுத்து இல்லறம் நடத்துவதில் இருந்து அவனால் ஒதுங்க முடியாது! என்ன சொல்கிறாய் சுகதேவா?” என்று கேட்டார் த்வைபாயனர்.

சுகதேவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவன் உடலும் மனமும் அங்கில்லை. அவர் தன் தந்தை தன்னை நன்றாகப் புரிந்து கொண்டு தன் பக்கம் பேசித் தான் சந்நியாசியாக ஆதரவு கொடுப்பார் என்றே இதுவரை நினைத்திருந்தார். தன்னை மிகவும் பாராட்டுவார் என்றும் எதிர்பார்த்திருந்தார். இப்போதைய இந்த முடிவு அவர் சற்றும் எதிர்பாராதது. ஆனாலும் தந்தையைப் பார்த்துத் தன் கூப்பிய கரங்களுடன், “தந்தையே, தங்கள் முடிவுக்கும் ஆணைக்கும் நான் கட்டுப்படுகிறேன்.” என்று வணக்கத்துடன் தெரிவித்தார். ஆனாலும் இதைச் சொல்கையில் அவர் தொண்டை அடைத்துக் கொண்டு வார்த்தைகள் சிரமப்பட்டே வெளியேறின.

“சரி, இப்போது உன் திருமணத்திற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து ஆலோசிப்போம்.” என்றார் த்வைபாயனர். ஆனால் சுகதேவரோ மீண்டும் நம்பிக்கையுடன், “தந்தையே, தயவு செய்து எனக்காக ஓர் பெண்ணை மணமகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டாம். இந்த விஷயத்தைக் குறித்து நான் மீண்டும் ஆலோசிக்க வேண்டும். எனக்கு யோசிக்க நேரம் கொடுங்கள்.” என்று வேண்டினார். வாடிகாவுக்குத் தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தைக் குறித்து வருத்தம் ஏற்பட்டது. தன் தலையில் கையை வைத்துக் கொண்டாள். செய்வதறியாமல் த்வைபாயனர் பக்கம் திரும்பி அவள், “ஆர்ய புத்திரரே, தயவு செய்து, தயவு செய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். உங்கள் முடிவைக் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். எனக்காக! உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என் ஒரே மகன் ஒரு பழங்குடிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதை என்னால் ஏற்க முடியவில்லை. அதில் எனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கப் போவதில்லை. அதோடு அல்லாமல் மஹா அதர்வரான என் தந்தை ஜாபாலி முனி இப்படி ஒரு கல்யாணம் மட்டும் நடந்து விட்டால் பின்னர் நம்மை எப்படி மதிப்பார்? இந்தத் திருமணத்தை அவர் ஏற்பாரா?” என்று கேட்டாள்.

வழக்கமான தன் சிறுபிள்ளைத் தனமான சிரிப்பால் இதை எதிர்கொண்டார் த்வைபாயனர். சிரித்துக் கொண்டே “ஷார்மி அன்னையாரும் ஒரு பழங்குடி இனத்துப் பெண் தான் வாடிகா. ஆசாரிய கௌதமரை மணந்து கொண்டு அவருக்கும், இந்த ஆசிரமத்திற்குமாகச் சேவைகள் பல செய்து தன்னை முழுக்க அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறாள். ஜாபாலியா, இந்த விஷயத்தை இனிமேலும் தள்ளிப் போடுவதில் எவ்விதப் பலனும் இல்லை. தள்ளிப் போடுவதால் மேலும் மேலும் துயரம் தான் நேரும். நன்மை நேரப் போவதில்லை.”

“சரி, சரி, ஆனால் இதற்கு அவசரம் ஏன்? எதற்காக?” என்றாள் வாடிகா. “ஜாபாலியா, பல விஷயங்களும் இடைநிலையில் நிற்கின்றன. பாதியில் இருக்கின்றன. நாம் இப்போது முதலில் செய்ய வேண்டியது பழங்குடி இனத்தவரை நம்மோடு ஐக்கியம் அடையச் செய்வது தான். இந்த கௌதம முனிவரின் ஆசிரமத்தை மீண்டும் புனர் நிர்மாணம் செய்து அக்கம்பக்கம் உள்ள ஆசிரமங்களுக்கெல்லாம் ஓர் முன்மாதிரியாகச் செய்ய வேண்டும். பராசர முனிவரின் பெயரால் விளங்கும் தீர்த்தத்தின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்..” என்றார் த்வைபாயனர்.  பின்னர் கொஞ்சம் நிறுத்திவிட்டு மேலும் தொடர்ந்தார். “ அதோடு மட்டும் இல்லை வாடிகா. நாகர்கள், பழங்குடியினர், ஆரியர்கள் ஆகியோருக்கு நாம் செய்திருக்கும் வேலைகளிலிருந்து எவ்விதமான தாக்கம் ஏற்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சூரியன் எனக்கு தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆணை இட்டிருக்கிறான்.
“இந்த மொத்த உலகையும் ஆரியர்கள் மயமாக்கு! சுத்தமானதாகவும், புனிதமானதாகவும், சர்வ வல்லமை பொருந்தியதாகவும், மாட்சிமை பெற்றதாகவும், மகத்தான அபிலாஷைகளை ஒருங்கிணைக்கும் வல்லமை கொண்டதாகவும் மாற்றச் சொல்லி ஆணை கிடைத்துள்ளது!”
அதற்காக நான் பாடுபடவேண்டும்.” என்றார். வாடிகாவின் தொண்டை அடைத்துக் கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

த்வைபாயனர் மேலும் தொடர்ந்தார். “ஜாபாலியா, கடவுளரால் சொல்லப்பட்டபடியான இல்வாழ்க்கையை நாம் வாழ்ந்து விட்டோம். இது கடவுளின் கருணையினால் தவிர நம் போன்ற சாமானியர்களின் முயற்சிகளால் இல்லை! இவை கடவுளின் ஆணை!” என்றார்.
பின்னர் க்ருபாவிடம் திரும்பினார். இவ்வளவு நேரமும் வாய் திறக்காமல் அனைத்தையும் பார்த்த வண்ணம் சிலையைப் போல் அமர்ந்திருந்தான் க்ருபா. “வல்லமை பொருந்திய க்ருபா, தலைவனே, புனிதமான மஹிஷனின் ராஜ்யத்தின் தலைவா, மோசாவின் இளைய சகோதரி, பிவாரியை என் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க நீ சம்மதிக்கிறாயா? மற்ற இளம்பெண்கள் இங்குள்ள மற்ற பிரமசாரிகளை மணந்து கொள்ளட்டும்!” என்று கேட்டார். க்ருபா அதற்கு, “ஆசாரியரே, வணக்கம், இதைக்குறித்து எங்கள் பழங்குடியினரின் மூத்தோரிடமும் மற்றோரிடமும் நான் கலந்து பேசிவிட்டேன். ஷார்மி அன்னை சொல்வதை அனைத்தையும் நான் முழு மனதோடு ஆமோதிக்கிறேன். எங்களால் இனியும் ஓர் தனித்து விடப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழ இயலாது. அனைவரோடும் கூடி வாழ்வதையே விரும்புகிறோம்.” என்றான்.

“சரி, அப்போது நாம் எல்லோரும் பிவாரி சுகதேவனை மணந்து கொள்வதற்குச் சம்மதிக்கிறோம். அதற்கு முன்னால் அவள் சந்திராயன விரதம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் ஓர் ஸ்ரோத்திரியனை மணந்து கொள்ளும் அதிகாரமும் சுத்தமும் அவளுக்குக் கிட்டும். இந்தப் புனிதமான சடங்குகளைச் செய்து அனைத்து இளம்பெண்களும் தங்களைத் திருமணத்துக்கு உகந்தவர்களாக ஆக்கிக் கொள்ளட்டும்!” என்றார் த்வைபாயனர். ஏமாற்றமும் வெறுப்பும் மீதூற சுகதேவர் தன் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார். அதைப் பார்த்த த்வைபாயனர் சொன்னார்.

“சுகதேவா! வருந்தாதே! நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை நான் முழு மனதுடன் பாராட்டத்தான் செய்கிறேன். சூரிய பகவான் எனக்களித்திருக்கும் இந்த மாபெரும் பணியை நீயும் என்னுடன் சேர்ந்து வலிமைப்படுத்தத் தான் முயற்சிக்கிறாய். மரபுகளைக் காக்க வேண்டும் என்றே எண்ணுகிறாய்! இப்போது நாம் ஓர் முடிவுக்கு வருவோம். உனக்கு நான்கு மகன்களாவது பிறக்க வேண்டும். ஒவ்வொருவரும் வேதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பாகத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அப்படி ஆன பின்னர் நீ ஒரு சந்நியாசியாக ஆக நான் தடை ஏதும் சொல்லப் போவதில்லை. அதோடு இல்லை, பிவாரி சம்மதித்தாளெனில் நீ அவளைத் தலைவியாகக் கொண்டு ஒரு சந்நியாசினிகளின் வம்சாவளியையும் ஆரம்பித்து நம்முடைய மரபுகளை அவர்கள் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லலாம்.”

தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்ட சுகதேவர் அவற்றை அப்புறப்படுத்தவே இல்லை. மிகவும் வருத்தத்துடனேயே அமர்ந்திருந்தார். அவர் விம்மி விம்மி அழுதார். அவர் தான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சந்நியாசி வாழ்க்கையைக் குறித்துக் கற்பனைகள் செய்து வைத்திருந்தாரோ அனைத்தும் மண்ணோடு மண்ணாகப்போய் விட்டது. ஆனால் ஷார்மி அன்னையோ அழுகையும் சிரிப்பும் கலந்த வண்ணம் காட்சி அளித்தாள். தன் கையை நீட்டி சுகதேவரின் காதுகளைப் பற்றி இழுத்தாள். “இதோ பார், என் குழந்தாய், என்னைப் பார். என்னிடம் வா!” என்ற வண்ணம் அவர் முகத்தை மூடி இருந்த கைகளை நீக்க முயன்றாள். மிக முயற்சி செய்து சுகதேவரைக் கொஞ்சம் தன் பக்கம் இழுத்தாள் ஷார்மி. “உன் பாடத்தை நீ ஒழுங்காகக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் மகனே! தெரியுமா!” என்ற வண்ணம் சிரித்தாள். அவளுடன் சேர்ந்து சந்தோஷத்தில் அவள் கண்களும் நாட்டியமாடின. மீண்டும் சுகதேவரின் காதுகளை முறுக்கிய வண்ணம், “என்னை யாரென நினைத்தாய், குழந்தாய்! ஷார்மி அன்னையின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதோரும் உண்டோ!” என்றாள்.