Monday, August 22, 2016

பிரமிஷ்டர் காட்டிய வழியும், ராணியின் குழப்பமும்!

அங்கிருந்த அனைவருக்குமே பிரமிஷ்டர் குறிப்பிடுவது யாரை என்று புரிந்து விட்டது. அனைவருமே மறுப்பாகத் தலை அசைத்தனர். காங்கேயரைத் தவிர! ஆம்! காங்கேயர் மட்டுமே இந்தப் புதிய வழியினால் தனக்கு ஓர் நிம்மதி கிடைக்குமா என்ற ஆவலுடன் மேற்கொண்டு பிரமிஷ்டர் பேசுவதற்குக் காத்திருந்தார். இந்தப் புதிய வழியைக் குறித்துக் கலந்து ஆலோசிக்கவும் விரும்பினார். பிரமிஷ்டர் தன் பேச்சைத் தொடர்ந்தார்! “குரு வம்சத்துத் தலைவர்களே! உங்கள் பதிலைச் சிறிதும் ஐயத்துக்கு இடமின்றிக் கூறுங்கள்! இங்குள்ள குரு வம்சத்தின் அனைத்துப் பிரிவினரும் குரு வம்சத்து இளவரசனை மணந்து விதவையாகி இருக்கும் இளவரசிகள் மூலம் வாரிசுகளைப் பெற விருப்பம் தெரிவிக்கிறீர்களா? அதுவும் ஒரு தாய்வழிச் சகோதரன் மூலம்? ஷாந்தனுவின் நிகரற்ற சாம்ராஜ்யத்தையும் அதன் அரியணையிலும் அமர்ந்து ஆட்சி புரியச் சம்மதிக்கிறீர்களா? பிறப்பினால் குரு வம்சத்தின் வாரிசாக இல்லாமல் திருமணத்தின் மூலம் குரு வம்சத்தைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் பிறந்த பிள்ளை மூலம் அப்படி ஓர் வாரிசு உருவாகச் சம்மதிக்கிறீர்களா?” என்று கேட்டார் பிரமிஷ்டர்.

ஆசாரிய விபூதி குரு வம்சத்தலைவர்களை நோக்கித் திரும்பினார். “அவர் சொல்வதன் உண்மையான தாத்பரியத்தைப் புரிந்து கொண்டீர்களா? தலைவர்களே! இப்படி ஒன்று நடந்தால் ஹஸ்தினாபுரத்தை ஆள்வது, ஆளப் போவது குரு வம்சத்தின் ரத்தத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். பிறப்பினால் குரு வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாமல், திருமண பந்தத்தின் மூலம் குரு வம்சமாகிய ஒருத்தியின் மகனாக இருக்கும். ஷாந்தனு மஹாராஜாவின் நேரடி வாரிசு நமக்குக் கிடைக்க மாட்டார்கள். நீங்கள் அனைவரும் இதற்கு ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் ஆசாரியர். “எப்படிச் சொல்வது? என்ன சொல்வது! என்றே புரியவில்லை! இது சொல்வதற்கு மிகவும் கடினமான ஒன்று!” என்றார் மஹாபஹூ!

“பிடிவாதம் பிடிக்கும் முட்டாள்களிடம் வாதம் செய்ய முடியாது! அவர்களுக்கு நான் உதவவும் மாட்டேன். காங்கேயன் அவன் செய்த சபதத்தை நிறைவேற்றட்டும்! ராஜமாதா ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறட்டும். இங்கே ஹஸ்தினாபுரத்தில் குரு வம்சத்தவர் ஒருவருக்கொருவர் தாயாதிச் சண்டையில் முற்றிலும் அழிந்து நாசமாகட்டும்!” பிரமிஷ்டர் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். “விபூதி, உன் கையைக் கொடு! நான் எழுந்திருக்க வேண்டும். என்னுடைய ஆலோசனைகளை ஏற்காதவர்களிடம் நான் பேசிப் பிரயோசனம் இல்லை! எப்படியோ போகட்டும்!” என்ற வண்ணம் பிரமிஷ்டர் மெல்ல ஆசாரிய விபூதியின் கைகளைப் பிடித்த வண்ணம் எழுந்து நின்றார். வெளியேறத் தயார் ஆனார்! ஆனால் காங்கேயர் அவரைத் தடுத்தார். “போகாதீர்கள், ஆசாரியரே! இருங்கள்!” என்று தன் கைகளால் அவரைத் தடுத்தார். “நான் அனைத்து மட்டத் தலைவர்களிடமும் தனித்தனியாகப் பேசுகிறேன். இப்போதுள்ள சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது! ஏதேனும் செய்தாக வேண்டும்!” என்றார்.

“இதோ பார்! காங்கேயா! கவனித்துக்கொள்!” என்ற பிரமிஷ்டர் மேலும் தொடர்ந்து, “ஒரு விஷயம் நினைவில் இருக்கட்டும்! நீ ஹஸ்தினாபுரத்தின் அதிகாரங்களையும், நிர்வாகத்தையும் உன் கைகளில் தொடர்ந்து வைத்துக் கொண்டு இங்கே தர்ம சாம்ராஜ்யம் நிலைத்து நிற்கவேண்டும் என்று விரும்பினாயானால், என்னுடைய இந்த யோசனையைக் கட்டாயமாய் நீ ஏற்றே ஆக வேண்டும். அப்படி இல்லை எனில், உன்னால் முடியவில்லை எனில், உனக்கு நரகத்தின் வாயில்கள் திறந்தே இருக்கும். நேரடியாக நரகத்துக்குச் சென்று விடலாம்!” என்றார். “நாங்கள் அதை ஒப்புக் கொள்வோம், ஆசாரியரே! நிச்சயமாக ஒப்புக் கொள்வோம்!” என்றார் காங்கேயர்.

“சரி, அப்பா! உன் ராஜமாதா ஒப்புக் கொள்வாளா? தாய்வழிச் சகோதரன்? அவன் ஒப்புக் கொள்வானா? இதை எல்லாம் நீ தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும். நாங்கள் இல்லை!” என்றார் பிரமிஷ்டர் தொடர்ந்து! அப்போது த்வைபாயனர் அந்த அறைக்குத் திரும்பி வந்தார். அங்கிருந்த மற்றவர்கள் அனைவரும் அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று காத்திருந்தனர். த்வைபாயனர் சொன்னார்.” மாட்சிமை பொருந்திய மஹாராணி, ராஜமாதா அவர்கள், கௌண்டின்யரிடம் நாளை மதியம் கோதுலிக்குக் கிளம்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்கள்.” என்றார், அதற்கு மஹாபஹூ, “அவர் தன் மனதை மாற்றிக்கொள்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?” என்று கேட்டார். “இல்லை!” என்றார் த்வைபாயனர்! “பாலமுனி, நீங்கள் தயவு செய்து அவர் மனதை மாற்றிக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளக் கூடாதா?” என்று காங்கேயர் கேட்டார்.

“என்னை விட உங்களுக்கு ராஜமாதாவைக் குறித்து நன்கு தெரியும், இல்லையா இளவரசே! அவர் ஒரு முறை ஒரு முடிவெடுத்து விட்டாரெனில் எளிதில் அவரை மாற்றிக்கொள்ள வைக்க இயலாது! அவர் மாற்றிக்கொள்ளவே மாட்டார். அதோடு இல்லை. இதோ அவர் ஒரு செய்தியையும் என் மூலம் அனுப்பி இருக்கிறார். “ என்னை என் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டாம். அதற்கான முயற்சிகளையும் யாரும் செய்ய வேண்டாம். நான் ஹஸ்தினாபுரம் வந்ததே ஆரிய புத்திரர் மஹாராஜா ஷாந்தனுவையும் குரு வம்சத்தினரையும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ வைப்பதற்கே! இப்போது நான் இங்கே இருந்து கொண்டு அவர்கள் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதைப் பார்க்க விரும்பவில்லை!” என்று கூறியுள்ளார்.” என்றார் த்வைபாயனர்.

“நாங்கள் ஓர் முடிவுக்கு வந்து விட்டோம்!” என்றார் ஆசாரிய விபூதி! “காங்கேயரும் தன் சபதத்தை உடைக்க வேண்டாம். ராஜமாதாவும் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற வேண்டாம்.” என்றார். அதற்கு த்வைபாயனர் கொஞ்சம் ஏளனம் கலந்த சிரிப்புடனும், “அற்புதம்! அதிசயம்! ஆச்சரியம்!” என்றார். ஆனால் ஆசாரிய விபூதியோ, “ஆம் நாங்கள் ஓர் எளிய வழியைக் கண்டு பிடித்து விட்டொம். தயவு செய்து ராஜமாதாவை சபைக்கு வரச் சொல்லுங்கள்! இந்தப் பிரச்னைக்கான தீர்வைக் குறித்து அவர் முன்னிலையில் தான் பேச வேண்டும். அது தான் சரியானது!” என்றார். த்வைபாயனர் மீண்டும் வெளியேறினார். சிறிது நேரத்துக்கெல்லாம் வாடிகாவும், தாவியும் பின் தொடர த்வைபாயனர் சத்யவதியை அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார்.

அவளிடம் காங்கேயர், “தாயே, நாங்கள் ஓர் வழியைக் கண்டு பிடித்துவிட்டோம்!” என்றார் குதூகலமாக. “நான் ஏற்கெனவே எனக்கென ஓர் வழியைத் தேர்ந்தெடுத்து விட்டேனே!” என்றாள் ராணி சத்யவதி! “தாயே, தயவு செய்யுங்கள்! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்!” என்று கைகளைக் கூப்பிய வண்ணம் வேண்டினார் காங்கேயர். மேலும் தொடர்ந்து, “நான் சொல்லும் தீர்வு உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால், நானும் என் சபதத்தை உடைக்க வேண்டாம். குரு வம்சத்திற்கு வாரிசுகளும் கிடைப்பார்கள். நீங்களும் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற வேண்டாம்.” என்றார் காங்கேயர். காங்கேயரின் நம்பிக்கை கலந்த பேச்சும் நடவடிக்கையும் சத்யவதிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. புதிராகவும் இருந்தது. “இப்படி ஓர் அதிசயத்தை எப்படி நிறைவேற்றப் போகிறாய்? எப்படி அதைச் சாதித்தாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் சத்யவதி!

“சக்கரவர்த்தி ஷாந்தனுவின் வம்சம் அவருடன் முடிவடையாது, தாயே! நியோக முறையில் அதைத்  தொடரலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.” என்றார் காங்கேயர். சத்யவதியோ, “நீ தான் அதற்கு மறுத்துவிட்டாயே, மகனே!” என்றாள். அப்போது ஆசாரிய விபூதி தொடர்ந்தார். “மஹாராணி, காசி தேசத்து இளவரசிகள் நியோக முறையில் குழந்தைகளைப் பெறலாம். ஆனால் காங்கேயர் மூலமாக அந்த நியோகம் நடைபெறாது.” கொஞ்சம் நிறுத்திய விபூதி தொடர்ந்து, “நியோகம் செய்யப் போவது பாலமுனி த்வைபாயனர் தான். விசித்திர வீரியனின் தாய்வழிச் சகோதரர் ஆன அவர் நியோகம் செய்வது சாலப் பொருந்தும். அதனால் நீங்களும் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற வேண்டாம். இங்கேயே இருந்து எங்கள் குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் எங்களைப் பாதுகாத்து வரலாம்.” என்று முடித்தார்.


1 comment:

ஸ்ரீராம். said...

டன்டடாய்ங்... வாடிகா.. நீ என்ன சொல்கிறாய்? உன் கருத்து என்ன?