Wednesday, July 20, 2016

யாகம் நிறைவு பெற்றது!

வாடிகாவைப் பார்த்து த்வைபாயனர் மேலும் சொன்னார். “வாடிகா, நீ மட்டும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்ட பின்னர் பார்! அவள் எவ்வளவு நல்லவள் எனவும், பெருந்தன்மையானவள் என்பதும், எவ்வளவு அருமையானவள், உன்னதமானவள் என்பது புரியும். இப்போது அவளுக்கு ஏதோ கண்ணுக்குத் தெரியாத எதிரியின் மூலம் ஆபத்து காத்திருக்கிறது. நீ தான் அவளைப் பாதுகாக்கவேண்டும். அது உன் கடமை! அவளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிட்டால் அது மிகவும் முக்கியமானதொரு பாவம் ஆகிவிடும். பெரிய பாவம். “ என்றார் த்வைபாயானர். “அவள் என் தாய்! நான் அவளுக்கு மூத்த மகன். ஒரு தாய் தன் மூத்த மகன் பால் எவ்வளவு அன்பு செலுத்துவாளோ அதே அன்பைத் தான் என்னிடமும் அவள் காட்டி வருகிறாள். இதை விட அதிகமாக எந்தத் தாயாலும் அன்பு செலுத்த முடியாது. உன்னிலும் அவள் ஓர் மகளையே காண்கிறாள். மருமகளை அல்ல!” என்றார்.

வாடிகா மனதில் குழப்பம் சூழ்ந்தது. கண்கள் கண்ணீரைப் பெருக்கின. “ஓஹோ, என் முன்னோர்களான ஆங்கிரஸ ரிஷியும், பிருகு முனிவரும் என்னுடைய இந்தக் காரியத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்! என்ன செய்துவிட்டேன் நான்!” என்று மனதிற்குள்ளாக வருந்தினாள். இந்த நினைப்புத் தாங்க முடியாமல் விம்மி விம்மி அழவே ஆரம்பித்தாள் வாடிகா. த்வைபாயனர் ஏதும் பேசாமல் எழுந்து ஒரு சொம்பில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்துக் குடிக்கச் செய்தார். “இந்த நீரை அருந்து வாடிகா. இப்போது உன் அறைக்குப் போய்த் தூங்கு! நாளை அதிகாலையில் நாம் மஹாராணியைச் சந்திக்கலாம். மஹாராணிக்கு அவள் மகனும், அவன் மனைவியும் தன்னைப் பாதுகாக்க இருப்பதைக் கண்டால் சந்தோஷமாக இருக்கும்.” என்றார்.

வாடிகா தன் அறைக்குத் திரும்பினாள். ஆனால் அதன் பின்னர் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. மஹாராணியின் மேல் சூனியம் வைத்து ஏவல் செய்ய இருந்த தன் முட்டாள் தனத்தை நினைத்து நினைத்து தன்னைத் தானே நொந்து கொண்டாள். இதைச் செய்ததின் மூலம் அவள் கணவனின் நற்குணத்தையும் சேர்த்து அல்லவோ அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள்! இது எத்தகைய அநீதி! அவள் கணவனின் படுக்கையில் அவள் வைத்திருந்த பதா இலைகளை அவர் கண்டெடுத்தாரா இல்லையா என்பதைக் குறித்து அவளுக்கு நிச்சயமாக ஏதும் தெரியவில்லை. ஆனால் இப்படிப் பட்டதொரு தர்மசங்கடமான சூழ்நிலையிலிருந்து மிகவும் கண்ணியமாகத் தன்னை விடுவித்த தன் கணவனை நினைத்துப் பெருமிதப் பட்டாள். ஆறுதலும் அடைந்தாள். கணவன் மேல் நன்றியும் கொண்டாள். மறுநாள் வாஜ்பேய யாகத்தின் உச்சகட்டமான “சொர்க்கத்தின் படிகளில் ஏறுதல்” என்னும் நிகழ்வு நடக்க இருந்தது.

ஆகவே காலை எழுந்ததுமே த்வைபாயனரும் வாடிகாவும் அரசனும், அரசியும் தங்கி இருந்த முகாமுக்குச் சென்றனர். அவர்கள் வந்திருப்பதை அறிந்த மஹாராணி அவர்களைத் தன் அறைக்கு வரவழைத்தாள். அப்போது மஹாராணிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. த்வைபாயனர் வாடிகாவுடன் சென்று மஹாராணியின் பாதங்களைத் தொட்டு வணங்க மஹாராணி ஓர் அன்பான புன்னகையுடன் இருவருக்கும் ஆசிகளை வழங்கினாள். வாடிகாவுக்கு மஹாராணியின் இந்த அன்புப் பிரவாகத்தைக் கண்டு அதிலேயே தான் மூழ்கிவிட்டாற்போல் இருந்தது. தன்னைத் தானே கடிந்து கொண்டாள். தன் முட்டாள் தனத்தை நினைத்து நினைத்து நொந்து கொண்டாள். மஹாராணி அங்கிருந்த சேடிப் பெண்களை எல்லாம் தன் ஒரே சைகையால் அப்புறம் போகச் சொன்னாள். தார்வி மட்டும் அங்கே இருந்தாள்.

“க்ருஷ்ணா, இந்த சூனிய மந்திரத்தை என் மேல் ஏவியவர் யாரெனக் கண்டு பிடித்து விட்டாயா?” என்று ரகசியமாக த்வைபாயனரிடம் வினவினாள். “இல்லை, அம்மா. அதை நான் ஜாபாலியின் புத்திரியான உங்கள் மருமகளிடம் விட்டு விட்டேன். அவளுக்கு அவள் தந்தை ஏவும் மந்திரங்கள், அதற்கான மாற்று மந்திரங்கள் என அனைத்தும் நன்கு தெரியும். அவளும் ஓர் அதர்வ ஸ்ரோத்திரியர் தானே, அதை நீங்களே அறிவீர்கள் அல்லவா? அவள் இனிமேல் உங்களுடனேயே நாள் முழுவதும் இருக்கப் போகிறாள். உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேராமல் பாதுகாப்பாள்!” என்றார் த்வைபாயனர். வாடிகாவைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்த மஹாராணி, “அப்படியா, வாடிகா, என்னுடன் இருப்பாயா?” என்று ஆவலுடனும் அன்புடனும் அவளைக் கேட்டாள். வாடிகா தலை அசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

‘ஆஹா, என்னுடன் நீ நாள் முழுவதும் இருப்பாய் என்னும் எண்ணமே என்னைச் சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. அத்தனை கூட்டத்தினரின் கண்களும் என்னையே மொய்க்கின்றன. எனக்கு எங்கேயானும் காணாமல் போய்விடமாட்டோமா என்று  தோன்றுகிறது. எனக்கு எதிராகச் சதி செய்பவர்கள் யார் என்பதைக் கண்டுபிடி!” என்றாள் மஹாராணி. பின்னர் தொடர்ந்து, “அது மட்டும் யாரெனத் தெரியட்டும். நான் அந்த மனிதனிடம் கேட்பேன். எப்படி நீ என்ன காரணத்துக்காக என் மேல் சூனியத்தை ஏவினாய் என்று கேட்பேன். அப்படியே நான் அவனுக்கு ஏதேனும் தவறு செய்திருந்தாலோ, தீமை இழைத்திருந்தாலோ அதைச் சரி செய்வேன். அவனிடம் மன்னிப்புக் கேட்பேன். இதுவரை நான் அறிந்து எவருக்கும் தீங்கு செய்ததில்லை. செய்ய நினைத்ததும் இல்லை!” என்றாள். வாடிகாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

“வாடிகா, ஜாபாலியின் மகளே,” என்ற வண்ணம் அவள் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தாள் சத்யவதி. பின்னர் த்வைபாயனர் பக்கம் திரும்பி, “கிருஷ்ணா!” என்று ஆரம்பித்தவள், பின்னர் பரிகசிக்கும் தோரணையில், “இல்லை, இல்லை, நான் பாலமுனி என்றல்லவோ சொல்லி இருக்க வேண்டும்! இல்லையா வாடிகா! இந்த பாலமுனி உன்னைப் போன்றதொரு அருமையான மனைவியைப் பெற்றதற்கு மிகவும் சந்தோஷம் அடைந்திருக்கிறான்.” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள். வாடிகாவால் தன் உணர்ச்சிகளை மறைக்கவோ அடக்கவோ முடியவில்லை. அப்படியே மஹாராணியின் பாதங்களில் விழுந்து அழுத வண்ணம், “அம்மா, அம்மா!” என்றாள். அவளால் மேலே பேச முடியவில்லை. அவளைத் தூக்கி அணைத்துக் கொண்ட சத்யவதி, “எனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கவில்லையே என்னும் வருத்தம் இருந்தது. இன்று அது தீர்ந்தது. நீ என் அருமைப் பெண்!” என்று சொல்லிவிட்டு அவளை இறுக அணைத்தாள்.

அனைவரும் அன்றைய யாகத்தை முடிக்க வேண்டி யாகசாலைக்குச் சென்றனர். யாகசாலையின் சடங்குகள் அனைத்தும் முறைப்படி முடிவடைந்ததும் ஆசாரிய விபூதியை அழைத்துக் கொண்டு அவர் துணையுடன், மஹாராஜா ஷாந்தனு யூபம் நாட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு ஏறிச் செல்லும் படிகளில் ஏறினான். பின்னணியில் மந்திரங்கள் உச்ச ஸ்தாயியில் ஒலித்தன. வாடிகாவின் கைகளைப் பிடித்த வண்ணம் அன்றைய அலங்காரத்தில் எழிலுடன் காட்சி அளித்த மஹாராணியும் மன்னன் பின்னால் தானும் ஏறினாள். இதைப் பார்த்த த்வைபாயனருக்கு வாடிகாவின் மனதில் இருந்த அவநம்பிக்கை போய் நம்பிக்கை குடி புகுந்திருப்பது கண்டு சந்தோஷம் அடைந்தார். வாடிகா முழுவதும் மேலே ஏறாமல் மஹாராணியைப் போகவிட்டுத் தான் கீழே நின்று கொண்டு ஒருவேளை மஹாராணிக்கு ஏற முடியவில்லை என்றாலோ அவளுக்குத் தடுக்கினாலோ உடன் உதவி செய்யத் தயாராக நின்று கொண்டாள்.

அந்த யூபத்தின் மேல் கட்டப்பட்டிருந்த அறைக்குள் மஹாராஜாவும் மஹாராணியும் நுழைந்தனர். குறிப்பிட்ட மந்திரங்கள் முழுவதும் சொல்லி முடிக்கும்வரையிலும் அங்கேயே இருவரும் தங்கினார்கள். அதன் பின்னர் அத்வர்யூ தலைமை தாங்க ஆசாரிய விபூதி துணை செய்யக் கூடி இருந்த மக்கள், “பரத குலச் சக்கரவர்த்தியான ஷாந்தனுவுக்கு மங்களம், ஜெய மங்களம்! மஹாராணிக்கு மங்களம், ஜெய மங்களம்!” என்று உச்சஸ்தாயியில் மக்கள் கோஷம் போடக் கீழே இறங்கி வந்தனர். எஞ்சி இருந்த சோமபானம் அங்கு வந்திருந்த அனைத்து சமயச் சடங்குகள் செய்தவர்களிடையே பகிர்ந்து அருந்தப்பட்டது. மீதம் இருந்தது அங்கிருந்த அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் மணை போடப்பட்டு அதில் அரசனும் அரசியும் அமரப் புனித மந்திரங்கள் ஓதி ஜெபிக்கப்பட்ட புனித நீரால் இருவருக்கும் அபிஷேஹம் செய்யப்பட்டது. அதற்கேற்றவாறான மந்திரங்களை அங்கு வந்திருந்த ஸ்ரோத்திரியர்கள் உச்சரித்துக் கோஷித்தனர். அவர்கள் இருவரும் சாதாரண மனிதர்கள் அல்ல இப்போது; இருவருமே உன்னதமான கடவுள் பதவியை, சொர்க்கத்தை மனித உடலுடன் அடைந்து விட்டனர்.

அக்னிக் குண்டத்தின் அருகே இருவரும் அமர்ந்து கொண்டனர். அரசர்களுக்கே உரித்தான வெண்கொற்றக் குடை இருவரின் தலைக்கு மேலும் பிடிக்கப்பட்டது. அங்கு குழுமி இருந்த அனைவரும் வந்திருந்த அரசர்கள், குரு வம்சத் தலைவர்கள், ஸ்ரோத்திரியர்கள் என அனைவரும் அங்கே வந்து மன்னன் பாதத்தையும் ராணி பாதத்தையும் தொட்டு வணங்கினார்கள். மஹா அதர்வர் மட்டும் மஹாமுனிவர் என்பதால் அவர் மட்டும் வரவில்லை. “பரத வம்சத்துச் சக்கரவர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்!” என்று அனைவரும் வாழ்த்தினார்கள். த்வைபாயனரால் மஹாராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தோஷத்தையும் வாடிகாவின் நிம்மதியான முகத்தையும் அதில் தெரிந்த மகிழ்ச்சியையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த யாகத்தின் முடிவு கடைசியில் இளவரசன் காங்கேயனால் அறிவிக்கப்பட்ட ஓர் உணர்ச்சி பூர்வமான அறிவிப்புடன் முடிவடைந்தது.

“கூடி இருக்கும் மக்களே, ஸ்ரோத்திரியர்களே, ரிஷி, முனிவர்களே! இதனால் பரத வம்சத்துச் சக்கரவர்த்தியான ஷாந்தனு மஹாராஜா அறிவிப்பது என்னவெனில் இனி இந்த தர்மக்ஷேத்திரத்தின் ஒவ்வொரு ஆசிரமத்தையும் மஹாராஜா ஆதரிக்கிறார். இவை அனைத்துமே தர்ம சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கும் நோக்கத்தைக் கொண்டவை. இங்கு இருக்கும் ஒவ்வொரு ஸ்ரோத்திரியனும் வேத வாழ்க்கைக்கும் வேத வாக்குக்கும் கட்டுப்பட்டு வாழ்வான்; வாழ்கிறான். அதே போல் இங்கு இருக்கும் ஒவ்வொரு பெண்மணியும் அவள் கணவனுக்குக் கட்டுப்பட்டு அவனுக்கேற்ற இல்லாளாக வாழ்வாள்; வாழ்கிறாள். தன் குடும்பத்திற்காகவும், குடும்பத்தின் க்ஷேமத்திற்காகவும் பசு, பக்ஷிகளையும் அவள் ஆதரித்து வருகிறாள். பேணிப் பாதுகாக்கிறாள். இத்தகைய அற வாழ்க்கையின் மூலமே இல்லறம் நல்லறமாகி தர்ம சாம்ராஜ்யமும் ஏற்படும்.”

“அதோடு இல்லாமல் சக்கரவர்த்தி ஷாந்தனு எனக்கு மேலும் ஓர் ஆணை இட்டிருக்கிறார். அது அவர் எவ்வகையிலேயும் எப்படியேனும் பராசர முனிவரின் ஆசிரமத்தின் பால முனியாகிய க்ருஷ்ண த்வைபாயனர் ஏற்படுத்தி இருக்கும் ஸ்ரௌத சாஸ்திரம் எனப்படும் பனிரண்டு வருட பிரமசரிய விரதம் காத்துப் படிக்கும் படிப்பை ஆதரிக்கவும், அதற்காக ஆவன செய்யவும் சம்மதித்திருக்கிறார். இங்கு க்ஷத்திரியர்களில் இருந்து அனைவரும் பனிரண்டு வருட பிரமசரியம் ஏற்று வேத அத்யயனமும் மற்றக் கலைகளும் கற்கலாம். அதற்கான ஏற்பாடுகள் மன்னரால் செய்து தரப்படும். இதன் மூலம் நாம் அனைவரும் கடவுளரின் கருணைக்கும் அருளுக்கும் பாத்திரர் ஆவதோடு வேதங்களை முன்னேற்றவும் உத்வேகம் கொண்டு செயலாற்றுவோம். வேதத்திற்காகவே வாழ்வோம்!”

3 comments:

ஸ்ரீராம். said...

.

பித்தனின் வாக்கு said...

சுபம். அப்ப சாப்பிட போலமா?. அடுத்து இளவரசர்கள் கல்யாண சாப்படு வரைக்கும் சேர்த்து சாப்பிட்டுக்கனும்.

வல்லிசிம்ஹன் said...

மஹா அற்புதம். அன்பினாலும் அறிவினாலும் உலகத்தையே வெல்லமுடியும் என்று சொல்லும் கிருஷ்ண த்வைபாயனர் நமக்கெல்லாம் ஆசிகள் அருளட்டும். படிக்கப் படிக்க மேலும்
ஆவல் அதிகம் ஆகிறது கீதா.
மிக மிக நன்றி.