Sunday, June 5, 2016

த்வைபாயனருக்குப் பரிட்சை!

“தாங்கள் பயப்படுகிறீர்களோ, தாயே! மன்னிக்கவும் மஹாராணி! யுவராஜா காங்கேயர் தன் சபதத்தை நிறைவேற்ற மாட்டார் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அதனால் தான் ராஜசபையில் அனைவர் எதிரிலும் அதை அறிவித்தாக வேண்டும் என்கிறீர்களா?” என்று த்வைபாயனர் கேட்டார்.

“இல்லை மகனே, காங்கேயன் சொன்ன வண்ணமே செய்து முடிப்பான். அவன் சபதத்திலிருந்து ஒருக்காலும் பிறழ மாட்டான். அவன் மிகவும் நேர்மையானவன். உண்மையை விரும்புவான். நியாயமான, நேர்மையான பாதையில் செல்ல விரும்புவான். என்னை அவன் ஒருபோதும் சிற்றன்னையாகக் கருதியதே இல்லை. சொந்தத் தாயாகவே கருதுகிறான். அவன் தன் தந்தையிடம் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை! அவனுக்குத் திருமணத்திற்குப் பல தேசத்து ராஜகுமாரிகளைக் கொடுப்பதாகச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவன் திருமணம் செய்து கொள்ள இன்று வரை சம்மதிக்கவில்லை. அதோடு இல்லாமல் அவன் என் மகன்களைத் தான் ராஜரீக காரியங்களிலும், போர்ப்பயிற்சிகளிலும் ஈடுபடுத்திக் கற்றுக் கொடுத்து வருகிறான்.”

“பின் என்ன கஷ்டம் தாயே! வழி தான் தெளிவாக இருக்கிறதே!”

“இல்லை, மகனே! காங்கேயனைப் பொறுத்தவரை எல்லாம் சரிதான். ஆனால் இந்தக் குரு வம்சத்தின் மற்றத் தலைவர்கள்! அவர்கள் அனைவரும் தங்கள் பாரம்பரியத்தில் மிக்க பெருமை கொண்டவர்கள்; கர்வம் மிக்கவர்கள்! ராஜசபையில் அனைவர் எதிரிலும் காங்கேயனின் சபதம் குறித்த அறிவிப்புச் செய்வதற்கு முன்னரே ஆர்யபுத்திரர் ஷாந்தனு மஹாராஜா பித்ரு லோகம் சென்றுவிட்டாரெனில்! ம்ஹூம், அப்போது உள்ள நிலைமையைக் குறித்து எதுவும் சொல்ல முடியாது மகனே! குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவரும் காங்கேயனுக்குத் தான் ஆதரவு தெரிவிப்பார்கள். அவர்கள் ஆதரவு கிட்டிவிட்டதெனில் காங்கேயனைத் தவிர வேறு எவரும் அரியணை ஏறவே முடியாது. ஏனெனில் அவர்கள் அவ்வளவு செல்வாக்குப் படைத்தவர்கள். ம்ம்ம்ம், உன் தந்தை, மஹான் பராசர முனிவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்! மகனே! அவருடைய மந்திர வித்தையின் மூலம் ஷாந்தனு மஹாராஜாவைக் குணப்படுத்தும்படிக் கெஞ்சிக் கேட்டிருப்பேன். ஆனால், மகனே, எனக்கு என்னவோ தோன்றுகிறது! அவருடைய அந்தச் சக்தி அவர் மூலமாக உனக்கும் வந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.”

“எனக்குத் தெரியவில்லை, தாயே! என்னிடம் அந்த சக்தி இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை!” அடக்கத்துடன் கூறிய த்வைபாயனர் மேலும், “என்னுடைய தூது வெற்றிகரமாக முடியவேண்டும் என்பது கடவுளரின் விருப்பமாக இருந்தால், தாயே சக்கரவர்த்தியின் உடல்நலத்தைக் குணப்படுத்தும் பொறுப்பில் எனக்கு அவர்கள் உதவி கட்டாயமாய்க் கிட்டும்.”

“மகனே, நான் காங்கேயனை அழைத்து உன்னை ஆர்யபுத்திரரின் படுக்கைக்கு அருகே கொண்டு விடச் சொல்கிறேன்.” என்றாள் சத்யவதி!

உடனே காங்கேயர் அங்கே வரவழைக்கப்பட்டார். அவரிடம் சத்யவதி, த்வைபாயனரைச் சுட்டிக் காட்டி, அவர் பராசர முனிவரின் மகன் என்றும் அவரும், த்வைபாயனரும் வேதங்களை நன்கு கற்று கற்பிப்பதாகவும் அதில் உள்ளபடியே வாழ்க்கை நடத்துவதாகவும், அவற்றுக்காகவே வாழ்ந்து வருவதாகவும் கூறினாள். மேலும் அவர்களின் வேத மந்திரங்களால் அவர்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்றும் கூறினாள். மேலும் தன் இனிய குரலில் அவள் கூறியதாவது:” நான் ஏன் அவரைத் திரும்பக் கூப்பிட்டேன் தெரியுமா! ஏனெனில் அவர் உணவே பல நாட்களாக உண்ணவில்லை என்பதை அறிந்தேன். அதனால் அழைத்தேன். அதெல்லாம் போகட்டும்! இப்போது நாம் ஏன் த்வைபாயனரை வைத்து ஆர்யபுத்திரரின் உடல்நலம் மேம்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபடக் கூடாது? அவருடைய மந்திர வித்தையையும் முயன்று பார்க்கட்டுமே! அதில் நமக்கு எவ்விதமான நஷ்டமும் இருக்கப் போவதில்லை!” என்றாள்.

காங்கேயனுக்குத் தன் தந்தையின் உடல்நலம் குறித்து நன்கு தெரியும். அவர் உடல் நலம் இனிமேல் முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியங்களே இல்லை என்பதையும் அறிவார். ஆனாலும் தன் சிற்றன்னையின் வேண்டுகோளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். ஏனெனில் சிற்றன்னையின் விருப்பம் பூர்த்தி செய்யப்படவில்லை என்னும் குறை அவளுக்கு இருக்க வேண்டாம். ஒருவேளை தன் விருப்பம் பூர்த்தியாகி இருந்தால் சக்கரவர்த்தி உயிர் பிழைத்திருப்பார் என்று அவள் எண்ணலாம் அல்லவா?

ஆகவே காங்கேயர் சம்மதித்தார். சத்யவதி ஒரு ஊழியனைக் கூப்பிட்டு த்வைபாயனரை கங்கை நதியின் கரைக்கு அரண்மனைக்கருகிலேயே இருக்கும் கரைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினாள். அங்கே த்வைபாயனர் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு சூரிய பகவானையும் வேண்டிக் கொண்டு காயத்ரி மந்திரத்தையும் ஜபித்தார். காயத்ரியைத் தன் உதவிக்கு அழைத்தார். வெளிப்பார்வைக்கு அமைதியாகவும் தன்னை அடக்கிக் கொண்டவராகவும் இருந்தாலும் த்வைபாயனர் உள்ளுக்குள்ளே உணர்ச்சிவசப்பட்டிருந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் அவரை மாபெரும் உணர்ச்சிக்கடலில் தள்ளி இருந்தது. அவர் தந்தையின் மரணம்; ஓநாய்களின் பிடியிலிருந்தும் ராக்ஷசர்களின் பிடியிலிருந்தும் அதிர்ஷ்டவசமாகத் தப்பியது; இறந்து கொண்டிருப்பவர்களைப் பிழைக்கவைக்கும் மஹா மந்திரத்தைத் தற்செயலாக அதர்வ மஹாரிஷியின் மூலம் தெரிந்து கொள்ள நேர்ந்தது; எல்லாவற்றுக்கும் மேல் அதர்வ ரிஷியின் ஆசிரமத்திலிருந்து உயிருடன் தப்பியது; விசித்திரமான சம்பவங்கள் மூலம் மிகவும் விசித்திரமான முறையில் அவர் தாயுடன் சந்திப்பு நேர்ந்தது; தாய் மூலம் குரு வம்சத்து சக்கரவர்த்தியை இப்போது குணப்படுத்த வந்திருப்பது! இவை எல்லாமே தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்னும் தன் முயற்சி வெற்றி பெற்று விடும் என்பதை உணர்த்துவதாகவே த்வைபாயனர் நினைத்தார். அதற்கு ஹஸ்தினாபுரத்து உதவி கிட்டும் என்றும் மனமார நம்பினார். ஆஹா! இது எல்லாம் நடந்திருப்பது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் கருணையினால் அல்லவோ! கடவுளர் அனைவரும் தம் மேல் தங்கள் கருணாகடாட்சத்தைப் பொழிவது குறித்து த்வைபாயனருக்கு மனம் விம்மியது.

த்வைபாயனர் சக்கரவர்த்தி ஷாந்தனு படுத்துக் கிடந்த அறைக்குள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். மெதுவாக மனதுக்குள்ளாகத் தங்கள் குல முன்னோர்களான பராசரர், சக்தி, வசிஷ்டர் அனைவரையும் பிரார்த்தித்துக் கொண்ட த்வைபாயனர் பிருகு முனிவரையும் ஆங்கிரஸ முனிவரையும் கூட மறக்காமல் பிரார்த்தித்துக் கொண்டார். பின்னர் தாம் குருவாக ஏற்றுக் கொண்ட மஹா அதர்வ ரிஷி ஜாபாலியையும் மானசிகமாக வணங்கிக் கொண்டார். ஒளிக்கடவுளான சூரியனை வேண்டிக் கொண்டார். எல்லாவற்றுக்கும் மேல் தன்னை இந்த அளவுக்குத் தக்கவனாக மாற்றி இருக்கும் மாபெரும் வேதங்களின் துணையை வேண்டினார். தன் வாழ்க்கையை அவற்றுக்காகவே அர்ப்பணித்திருப்பதால் அவற்றின் உதவி தனக்குக் கிட்டும் என்றும் நம்பினார்.

அங்கே வந்த தன் தாயைப் பார்த்தார். அவள் முகத்தில் தன் மகன் மீதிருந்த நம்பிக்கை தெரிந்தது. த்வைபாயனருக்கு அது கவலையைத் தந்தது. ஒரு வேளை அவர் தோற்று விட்டால்! “ஆஹா, கடவுளே, நான் இந்தப் பரிட்சையில் தோற்று விட்டேன் எனில் என் தாய் மனம் புண்படுவாள். அவள் இதயம் சுக்கு நூறாகி விடும். அவள் முகத்தில் புன்னகையை இனி ஒரு போதும் பார்க்கவே முடியாது!” தான் தோற்கக் கூடாது என்று உறுதி பூண்டார் த்வைபாயனர். இல்லை. இல்லை. த்வைபாயனன் தோற்க மாட்டான். தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். கடவுளர் அனைவரும் விரும்புவதற்கேற்ப தர்மக்ஷேத்திரம் புனர் நிர்மாணம் அடைய வேண்டும். பழைய வளத்தைப் பெற வேண்டும். அது நடக்கவேண்டுமெனில் தான் தோற்கக் கூடாது!

தன்னம்பிக்கையுடன் அறைக்குள்ளே நுழைந்தார் த்வைபாயனர். அவருடன் யுவராஜா காங்கேயனும், சத்யவதியும், மற்ற ஊழியர்களும் பின்னால் வந்தனர். ஏற்கெனவே அங்கிருந்த பழைய ஸ்ரோத்ரியர்கள் இந்த இளந்துறவி யுவராஜனால் விரட்டப்பட்டுச் சென்றவன் மீண்டும் உள்ளே வந்திருக்கிறானே என அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.  தங்களுடைய அதிகாரத்தை ஏகபோக உரிமையை அவன் பிடுங்கிச் செல்ல வந்திருப்பதாகவே நினைத்தார்கள். வருடக்கணக்காகத் தங்களுடைய கடுமையான உழைப்பினால் கிடைத்திருக்கும் இந்தப் பிரத்தியேக உரிமையை இப்போது இன்று வந்த இவன் பிடுங்கிக் கொண்டு விடுவானோ? இவனால் எப்படி வெல்ல முடியும்?

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.