Thursday, June 30, 2016

எதிர்பாராமல் கிடைத்த கூட்டணி!

மௌனமாகவே இருந்த த்வைபாயனர் தன் மனதுக்குள் தன்னுடைய வழிகாட்டியான சூரிய பகவானை வேண்டிப் பிரார்த்தனைகள் செய்தார். அவரை முழு மனதோடு வழிபட்டார். தனக்கு தைரியத்தைக் கொடுக்கும்படியும் வேண்டினார். அங்கிருந்த மற்ற ஸ்ரோத்ரியர்களுக்கும், ஆசாரிய விபூதிக்கும் இப்படி நிலை குலைந்து போயிருக்கும் த்வைபாயனரை தர்மசங்கடத்தில் மூழ்கி இருக்கும் த்வைபாயனரை ரசிக்கத் தூண்டியது. த்வைபாயனரோ தன் மனதினுள், “எல்லாம் வல்ல ஒளிக்கடவுளே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் தன் கண்களைத் திறந்த த்வைபாயனர் அனைவரையும் பார்த்துப் பொதுவாக, “ஆசாரியரே, என்னை மன்னியுங்கள். நான் சொன்னதையும் செய்ததையும் மன்னித்து மறந்துவிடுங்கள்!” என்று சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்தினார். அவர் குரல் முற்றிலும் உடைந்து போயிருந்தது. என்றாலும் சமாளித்துக் கொண்டு தன் கைகளைக் கூப்பி அனைவரையும் வணங்கினார். “நான் செய்த தவம் போதுமானதாக இல்லை. இங்குள்ளவர்களின் மனதை மாற்றும் சக்தி அதற்கு இல்லை! என் கனவுகளை நனவாக்கும் சக்தி அந்தத் தவத்துக்கு இல்லை!” என்று மெல்லிய குரலில் முணுமுணுப்பது போல் கூறினார்.

பின்னர் ஆசாரிய விபூதியின் கால்களிலும் அவர் தந்தையின் கால்களிலும் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். மற்றவர்களின் பாதங்களையும் பணிந்து தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார். தன்னுடைய தண்டத்தையும், சுரைக்குடுக்கையையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்வதற்காகத் திரும்பினார். அப்போது கிழவர் பிரமிஷ்டர் தன் கைகளை நீட்டி அவரைத் தடுத்தார். மெல்லிய சுருங்கிப் போன தன் கைகளால் அவரைத் தடுத்தவண்ணம், “த்வைபாயனா, திரும்பிச் செல்லாதே! வா! இங்கே வா!” என்று ஜாடை காட்டினார். “நீ ஏன் போகிறாய்? மகனே! இதோ இப்படி உட்கார்!” என்று இடத்தையும் காட்டினார். ஆசாரிய விபூதிக்கோ கோபம் வந்தது. “அப்பா, அப்பா, என்ன காரியம் செய்கிறீர்கள்? அவன் போகட்டும்! அவனைப் போகவிடுங்கள்!” என்று தன் தந்தையின் மேல் கை வைத்துச் சொன்னார். ஆனால் கிழவரோ விபூதியிடம், “இதோ பார் விபூதி! நான் சொல்வதைக் கேள்!” என்று பேச ஆரம்பித்தார். பல்லாண்டுகளாக இந்த வேதம் ஓதும் உலகில் அனுபவப் பட்டுத் தேர்ந்து அதில் தலைமை வகித்து வந்தவர் என்பதால் அவர் குரலில் அதற்கான அதிகாரமும் தொனித்தது. குரலில் ஓர் தீர்மானமும் தெரிந்தது. பரம்பரையாக வந்த ஞானம் அவர் நடத்தையில் தெரிந்தது. ஆகவே விபூதியால் அவரை எதிர்க்க முடியவில்லை. ஸ்ரோத்ரியர்களோடு பழகிப் பழகி அவர்களுக்குத் தலைமை வகித்துக் குலபதியாகவும் கோத்திரத் தலைவனாகவும் இருந்தபடியால் அவர் பேச்சை மீறவும் முடியவில்லை. பிரமிஷ்டர் மேலே பேசினார். “இந்த இளைஞன் சொல்வதில் விஷயம் இருக்கிறது. அவன் எதிர்பார்க்கும் மாற்றங்கள் மட்டும் வந்து விட்டால் ஸ்ரோத்திரியர்கள் மனம் வைத்து மாறி விட்டால், வேதங்களையோ வேதங்களை ஓதுபவரையோ எவராலும் வெல்ல முடியாது! உயர்ந்த இடத்திற்குப் போய்விடும். ஸ்ரோத்திரியர்கள் இதன் மூலம் பழைய பலத்தோடும், வளத்தோடும் நிம்மதியாக வாழ்வார்கள்!”

“என்ன சொல்கிறீர்கள் தந்தையே? உங்கள் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வரலாமா? இவ்வுலகில் யார் வேண்டுமானலும் சொல்லலாம்! நீங்கள் சொல்லலாமா?” என்று விபூதி ஆச்சரியத்துடன் தந்தையைப் பார்த்துக் கேட்டார். “ஆம், நான் தான் சொன்னேன்! ஆனால் காரணமில்லாமல் சொல்லவில்லை! காரண, காரியங்களுடனேயே சொல்கிறேன்.” என்ற கிழவர் சற்று நிறுத்தினார். பின்னர், “நான் இந்தப் பரம்பரையாகத் தொடர்ந்து வரும் பகையில் அந்த மனவேறுபாட்டில் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறேன். இன்னமும் இருக்கிறேன். வேதங்களின் தொகுப்பும், அதன் உள்ளடக்கமும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்தையே கொண்டு இருந்து வருகிறேன். ஆனால் இதன் மூலம் நாம் சாதித்தது என்ன? இந்தப் பிள்ளை சொல்வது போல் ஸ்ரோத்திரியர்களுக்குள்ளேயே பிரிவினை ஏற்பட்டது தான் மிச்சம்! ஒருவருக்கொருவர் விரோதிகளாகவே வாழ்நாளைக் கடந்து வருகிறோம்.இந்தப் பகையால் நாம் மனித குலத்தை முன்னேற்றுவதற்கான வழிகளைக் கண்டறிய விடுவதில்லை. நம்முடைய தபோபலன் அத்தனையும் இந்தப் பகை கவர்ந்து இழுத்து விடுகிறது. ஆகவே எப்பாடுபட்டேனும் இந்தப் பரம்பரைப் பகை ஒழிய வேண்டும்!” என்றார் கிழவர்.

விபூதிக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்! இது என்ன விந்தை! பேசுவது தன் தந்தைதானா? த்வைபாயனரையும் தன் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தவருக்கு ஓர் சந்தேகம் ஜனித்தது. ஒரு வேளை……….. ஒரு வேளை………. இந்தப் பிள்ளை தன் அதர்வ வசிய சக்தியைத் தந்தையிடம் பிரயோகம் செய்து விட்டானோ? அவர் தந்தை இப்போது பேசியதெல்லாம் அவர் பூரண நினைவுடன் கூறியவையா? சந்தேகத்துடனேயே அவர் தந்தையிடம், “என்னை இதற்குக் கூப்பிடாதீர்கள் தந்தையே! நான் வேதத்தின் ஓர் பாகம் தான் அதர்வம் என்பதையும் ஒத்துக்கொள்ள மாட்டேன். வேதம் நான்கு பகுதிகளால் ஆனது என்பதையும் ஏற்கப் போவதில்லை!” என்றார் தீர்மானமாக! திரும்பித் தன் மகனைப் பார்த்தார் கிழவர் பிரமிஷ்டர். அவர் கண்கள் மங்கிக் கிடந்தாலும் அதிலும் அவர் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. “மகனே! நீ வாஜ்பேய யக்ஞத்தை நடத்தித் தர ஏன் மறுக்கிறாய்? ஏனெனில் ஒரு சில படித்த அறிவார்ந்த அதர்வ ரிஷிகள், அல்லது ஸ்ரோத்திரியர்கள் யக்ஞத்துக்குத் தலைமை தாங்கும் பிரம்மன் பதவியில் இருப்பார்கள் என்பதும், அவர்களால் அப்போது அதர்வ வேதம் ஓதப்படும் என்பதாலும் தான் அல்லவா?”

“தந்தையே! தாங்கள் தான் எனக்கு வேதம் மூன்றே பகுதிகள் என்றும் எப்போதும் அதன்படியே நிற்கவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள்! இதனோடு ஒருக்காலும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் சொன்னீர்கள். ” விபூதி கூறினார். தன் தந்தையின் அதீத உணர்ச்சிப் பெருக்கைக் கண்ட விபூதி தன் தந்தையைச் சமாதானம் செய்யும் தோரணையில் அவர் தோள்பட்டைகள் மேல் கையை வைத்துக் கொண்டார். அவர் கைகளும் நடுங்கின. அதே சமயம் கிழவரின் தோள்களும் நடுங்கின. “ தந்தையே! த்வைபாயனன் இப்போது போகட்டும். அவனைப் போக விடுங்கள். நாம் இந்த விஷயத்தைக் குறித்து அவகாசம் கிடைக்கையில் நிதானமாகப் பேசி முடிவு செய்வோம்.” என்றார்.

“அவன் ஏன் போக வேண்டும்?” என்றார் கிழவர். குரல் நடுங்கினாலும் அவர் பேச்சைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் தொடர்ந்த கிழவர், “எனக்கு இத்தனை வயது ஆகியும், என் வாழ்நாள் முழுவதும் வேதங்களுக்குச் செலவிட்டும், ஸ்ரோத்திரியர்களின் நலனுக்குச் செலவிட்டும் வந்திருக்கிறேன். ராஜகுருவாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று வரை இந்த இளைஞனைப் போன்ற ஓர் ஸ்ரோத்திரியனை நான் கண்டதில்லை. இவனிடம் தீர்க்கமான சிந்தனை, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தைக் குறித்தப் பிரகாசமான பார்வை இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் ஏன் நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படி ஓர் இளைஞன் இனித் தோன்றுவானா என்பதே சந்தேகம்! தோன்றப் போவதில்லை!” என்ற வண்ணம் த்வைபாயனரைப் பார்த்தார். மீண்டும் தன் கைகளைக் கண்களின் மேல் வைத்துக் கொண்டு த்வைபாயனரின் முகத்தை மறுபடி மறுபடி பார்த்தார்.  பின்னர் தன் மகனைப் பார்த்து, “மகனே, எழுந்திரு! வாஜ்பேய யக்ஞத்திற்கான உன்னுடைய ஏற்பாடுகளைத் தொடங்கு! நமக்குள்ளே, ஸ்ரோத்திரியர்களுக்குள்ளே இருக்கும் பிரிவினையும், பரம்பரைப் பகையும் அடியோடு ஒழிந்தாலன்றி தர்மம் நிலைக்காது!” என்றவர் த்வைபாயனரைப் பார்த்து, “அப்படி ஒருகால் விபூதி தான் தலைமை தாங்க முடியாது என்று கைவிட்டு விட்டால் நான் மீண்டும் ராஜகுருவாக ஆகிவிடுகிறேன். குரு வம்சத்தினரின் புரோகிதனாக ஆகிவிடுவேன். ஏற்கெனவே நான் இருந்த அந்தப் பதவியைத் தான் என் மகனுக்காக விட்டுக் கொடுத்திருந்தேன். இப்போது இந்த யக்ஞம் நடைபெற மீண்டும் பதவியை ஏற்பேன்! வாஜ்பேய யக்ஞத்தையும் நடத்தித் தருவேன்! ” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

அங்கிருந்த மற்ற ஸ்ரோத்திரியர்களுக்கும் கோபம் வந்து விட்டது. ஆனால் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியவரிடம் என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்று தெரியாமல் வாயை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். செய்வதறியாது திகைத்தனர். கிழவர் மீண்டும் தன் நடுங்கும் குரலில் த்வைபாயனரைப் பார்த்து, “மகனே, த்வைபாயனா! எதற்கும் கலங்காதே! மனதைத் தளர விடாதே! உன்னுடைய கொள்ளுப் பாட்டனார் வசிஷ்டரின் ஆசிரமத்தில் நான் இளைஞனாக இருந்தபோது மாணவனாக இருந்திருக்கிறேன். இந்தச் சண்டையில் எனக்கும் பங்கு இருந்தது. ஆனால் நீ சொல்வது சரி தான் மகனே! சஹஸ்ரார்ஜுனனுடன் ஏற்பட்ட மாபெரும் யுத்தம் அனைத்தையும் முற்றிலும் மாற்றி விட்டது. தர்மம் சிதைந்து போகாமல் காப்பாற்றக் கடமைப் பட்டவர்கள் நாம்! அதற்கு நாம் என்ன விலை கொடுத்தாலும் காப்பாற்றியே ஆக வேண்டும். வாஜ்பேய யக்ஞத்தை நான் தலைமை தாங்கி நடத்தித் தருகிறேன். பிரம்மாவாக இருக்கக் கூடிய தேர்ந்தெடுத்த ஞானம் நிறைந்த அறிவார்ந்த அதர்வனைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வா!” என்றார்.

பின்னர் விபூதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்தார். அவர் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஆனாலும் அவர் விடாமல், “நான் இந்தப் பகை அடியோடு ஒழிய விரும்புகிறேன். அதன் பின்னர் நான் முன்னோர்கள் வசிக்கும் பித்ரு லோகத்துக்குச் சந்தோஷமாகச் செல்ல முடியும்! என்னுடைய ஆசிகள் உனக்கு எப்போது உண்டு த்வைபாயனா!” என்றார்.  தன் கைகளை நீட்டி ஆசிகளைத் தெரிவித்ததோடு அல்லாமல் அந்தக் கால கட்டத்தில் இரு சிறந்த ஸ்ரோத்திரியர்கள் ஒருவருக்கொரு சந்திக்கையில் சொல்வது போல த்வைபாயனரிடம், “உன் தபோ வல்லமை பல்கிப்-பெருகட்டும்! தபம் சிறக்கட்டும்!” என்றும் வாழ்த்தினார். த்வைபாயனருக்கு நன்றி மீதூறப் பேச்சே வரவில்லை. கிழவர் தன் மகனிடம் திரும்பி, “நான் மிகவும் களைத்திருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் தூக்கம் வேண்டும்! என்னை உள்ளே அழைத்துச் செல்!” என்றார்.

1 comment:

ஸ்ரீராம். said...

மனதார ஈடுபடும் இந்தக் காரியத்திலும் வெற்றி உறுதி என்று தெரிகிறது.