Sunday, June 12, 2016

ஹஸ்தினாபுரத்தில் பதட்டம்!

மன்னன் உடல் நிலை தேறி எழுந்து நடமாட ஆரம்பித்திருப்பதோடு பேசவும் செய்கிறான் என்னும் செய்தி காட்டுத்தீயைப் போல் நகரெங்கும் பரவியது. சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு எல்லாம் இந்தச் செய்தி சென்றது. கூட்டம் கூட்டமாக மக்கள் அரச மாளிகை நோக்கிப் படை எடுத்தனர். இந்த வித்தையை/அல்ல விந்தையைச் செய்தது ஓர் இளம் துறவியாமே! அந்தத் துறவியையும் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் மக்களிடையே பல்கிப் பெருகியது. துறவி அரண்மனையில் வசிக்கவில்லை  என்பதும் பிரதிபேஸ்வர் கோயிலில் வசிப்பதும் தெரிந்து கோயிலுக்குச் சென்று மக்கள் த்வைபாயனரின் தரிசனத்தையும் ஆசிகளையும் பெற்றனர்.

கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் நோயால் அவதிப்படுபவர்களாகவும், வாழ்க்கையில் அளப்பரிய துன்பத்தை அனுபவித்தவர்களாகவுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் மன்னனை மந்திர வித்தையால் குணப்படுத்திய முனிவர் தங்களையும் குணப்படுத்துவார் என்னும் நம்பிக்கையுடன் வந்திருந்தனர். மிகவும் பரிதாபமாக அவர்கள் த்வைபாயனரிடம் தங்களை குணப்படுத்துமாறு கெஞ்சினார்கள். த்வைபாயனரும் அவர்களிடம் கருணை காட்டினார். அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட த்வைபாயனர் அனைவரின் புலம்பலையும் கருணையுடன் கேட்டு அவர்களை ஆசீர்வதித்தார். நோயுற்றவர்களுக்கு மூலிகைக் கஷாயத்தைக் கொடுத்தார்.


கூட்டம் மிக அதிகமாக இருந்தது. அவரைப் பார்க்க கோயிலுக்கு வந்த மந்திரி குனிகருக்கும், அவருடன் வந்த ஊழியனுக்கும் வழியே கிட்டாத அளவுக்குக் கூட்டம் இருந்தது. அரச காரியமாக வந்திருப்பதைச் சொல்லி மக்களை நகர்ந்து போகச் சொல்லி வழி உண்டாக்கித் தந்தனர். இரவில் த்வைபாயனர் படுக்கும் இடம் மட்டுமே காலியாக இருந்தது. மற்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் நெரிந்தது. த்வைபாயனர் அந்தக் கூட்டத்திலும் எப்படியோ நதிக்குச் சென்று நீராடித் தன் நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொள்வார். பின்னர் கோயிலுக்குத் திரும்புவார்.

மன்னனுக்குச் சிகிச்சை அளித்து வந்த நாட்களில் அவர் பகலில் உணவு உண்ணாமல் சிகிச்சையை முடித்துக் கொண்டு கோயிலில் தான் தங்குமிடம் வந்த பின்னரே ஒரே வேளை உணவு உண்டு வந்தார். இதற்குள்ளாக த்வைபாயனரைக் கவனித்துக்கொள்ள அரச குலத்தோரால் நியமிக்கப்பட்ட மந்திரி குனிகருக்கு த்வைபாயனரின் உணவு எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து விட்டது. அதோடு இல்லாமல் இந்த  இளம் துறவி அங்கே பசியோடு உணவுக்குக் காத்திருக்கும் சிறு குழந்தைகளுக்கு உணவு அளித்த பின்னரே தான் உண்ணுகிறார். நாளுக்கு நாள் இந்தக் குழந்தைகள் கூட்டமும் பெருகி வருகிறது.

மறுநாளே அரசரின் அறிவிப்புப் பறையறைந்து நாடு முழுவதும் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைக் கேட்ட குடிமக்கள் மிகவும் மனக்கிளர்ச்சிக்கு உள்ளானர்கள். அறிவிப்புத் தெரிவித்தது என்னவெனில்..

“நம் அனைவரின் வணக்கத்துக்கு உரியவரும், பரத வம்சத்திலே மிகச் சிறந்தவரும், ஆன குருவம்சத்து மன்னாதி மன்னர் ஷாந்தனு அவர்கள் தன் அன்பான குடிமக்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவெனில். அவர் இப்போது பூரண உடல் நலம் பெற்று வருகிறார். ஆகவே மக்கள் கவலை அடைய வேண்டாம். நாளை மஹா பிரதிபேஸ்வரின் கருணையால் மன்னாதி மன்னர் மாடத்தில் அமர்ந்த வண்ணம் குடிமக்களுக்குத் தன் தரிசனத்தைத் தருவார். மேலும் பரத வம்சத்தின் சிறந்த அரசரான ஷாந்தனு மன்னர் விரைவில் ராஜசபையைக் கூட்ட வேண்டும் என்று விரும்புகிறார்.

 ராஜசபை நாளை மறுநாள் கூடுகிறது. சூரிய உதயம் ஆகி ஆறு கடிகைகள் ஆன பின்னர் ராஜசபை கூடும். அந்த சபையில் யுவராஜா காங்கேயர் தான் எடுத்துக் கொண்டிருக்கும் சபதங்களை அறிவிப்பார். அனைவர் முன்னிலையிலும் சபதங்களை ஏற்கும் அவர் தான் யுவராஜா பதவியிலிருந்து விலகுவதையும் அறிவிப்பார். இளவரசர் சித்திராங்கதன், நீண்ட காலம் வாழ வேண்டும், வாழ்க, வளர்க! அவர் நாளை முதல் யுவராஜாவாகப் பொறுப்பேற்பார்.


மேலும் இங்கே இப்போது வந்திருக்கும் இளம் துறவி த்வைபாயனர், துறவிகளுக்குள்ளேயே தூய்மையானவர், தன்னுடைய மந்திர வித்தையால் மன்னனை முற்றிலும் குணமாக்கியவர், மன்னனுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர் அவரும் நாளைய ராஜசபையின் மாபெரும் கூட்டத்தில் கலந்து கொள்வார்.”


இந்த அறிவிப்புப் பலருக்கும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியது. யுவராஜா காங்கேயரை ஆதரித்து வந்த குரு வம்சத் தலைவர்களுக்கு இந்த அறிவிப்பு மாபெரும் இடியாக அமைந்தது. அவர்களில் பலரும் அடுத்து யுவராஜா காங்கேயனே மன்னன் ஆகவேண்டும் என்று அதற்காக ரகசியமாக ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தனர். யுவராஜா காங்கேயன் அரியணை ஏற மாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பதைக் குறித்துச் சிறிதும் கவலை இல்லாமல் அவர்கள் அதை ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். இப்போது இந்த அறிவிப்பு வந்திருக்கிறதெனில் அதற்குச் சூழ்ச்சியே காரணம். மஹாராணியாக இப்பொது இருக்கும் சத்யவதியின் சூழ்ச்சிகளாலேயே இது நடக்கிறது என்றும் அவள் காரணமாகவே சித்திராங்கதனை யுவராஜாவாக ஆக்க மன்னன் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நினைத்தனர்.