Friday, May 27, 2016

ஜாபாலிக்கு ஏற்பட்ட சந்தேகம்!

அந்த ஊர்வலம் நண்பகல் நேரத்திற்கு ஓர் அடர்ந்த காட்டுக்குள் சென்றது. அங்கே ஒரு சின்னக்குன்று காணப்பட்டது. அனைவரும் அந்தக் குன்றின் அருகே போய்ச் சேர்ந்தார்கள். அந்தக் குன்றின் உச்சியில் காணப்பட்ட பூமியில் ஒரு சில குடில்கள் தெரிந்தன. அது தான் அதர்வ ரிஷியின் ஆசிரமமாக இருக்கவேண்டும் என்று த்வைபாயனர் புரிந்து கொண்டார். அனைவரும் குன்றின் மேலேறி ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே நட்ட நடுவாகப் பெரிய அக்னிக் குண்டம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதில் இரவும், பகலும் அணையாத நெருப்பு இருக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்ததும் அனைவரும் அந்த அக்னிக் குண்டத்தின் சாம்பலை எடுத்துத் தங்கள் நெற்றியில் பூசிக் கொண்டு அங்கிருந்து அவரவர் குடியிருப்புக்குக் கலைந்து சென்றனர். சுமாந்து த்வைபாயனரைத் தன் குடிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஏற்கெனவே பைலரை இரு சீடர்கள் தூக்கிக் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். பைலர் இன்னும் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார். குடிசைக்குள் நுழைந்த உடனேயே த்வைபாயனருக்குத் தனக்கு அதுவரை இருந்த சக்தியெல்லாம் இழந்து விட்டாற்போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. அதர்வ ரிஷி தன் மேல் செலுத்தி இருந்த வசியப் பிடி தளர்ந்து விட்டது என்றும் அதனால் இப்போது உடல் நோவு அதிகம் தெரிவதையும் த்வைபாயனர் உணர்ந்து கொண்டார். அவர் சக்தியே இல்லாமல் அப்படியே தளர்ந்து போய்த் தரையில் அமர்ந்து கொண்டார். உடலின் ஒவ்வொரு அங்கமும் வலித்தது.

சுமாந்துவோடு அவன் சகோதரி வாடிகாவும் அப்போது வந்து சேர்ந்து கொண்டாள். அவளைப் பார்த்தால் சுமாந்துவைப் பார்க்க வேண்டாம். அப்படியே அவர்கள் இருவரும் இரட்டையர் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. தலை மயிரைத் தூக்கிக் கட்டிச் சிறு பின்னல்களாகப் போட்டிருந்த வாடிகா சாதாரணமாகப் பெண்கள் இருக்கும் உயரத்தை விட அதிக உயரமாக இருந்தாள். ஆனால் ரொம்பவே சகஜமாகவும் , சரளமாகவும் பழகினாள். அவள் நேரே த்வைபாயனரிடம் வந்தாள். அவரைக் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னாள். தெய்வீக மருத்துவர்களான அஸ்வினி தேவர்களை வேண்டிக் கொண்டு வழிபட்டு த்வைபாயனருக்கு சக்தியைக் கொடுக்கச் சொல்லிப் பிரார்த்தித்தாள். தன்னுடன் எடுத்து வந்திருந்த மூலிகைக் கஷாயத்தை த்வைபாயனரிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள். அதைக் குடிக்கையில் த்வைபாயனரின் நாடி, நரம்பெல்லாம் சூடாக மிக மிக வெப்பமாக உணர்ந்தார். நெருப்பிலிட்டாற்போல் உணர்ந்தார். அவர் முதுகுக்காயம் வேறே அவரைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது.

அதன் பின்னர் வாடிகா பைலரின் பக்கம் திரும்பினாள். அவர் இன்னமும் உணர்விழந்த நிலையிலேயே இருந்தார். ஈரத்தில் நனைத்த துணிகளை அவர் நெற்றியிலும், தலையிலும் வைத்தாள். பின்னர் அவர் வாயை நெம்பித் திறந்து த்வைபாயனருக்குக் கொடுத்த அதே கஷாயத்தைக் கொஞ்சம் போல் அவர் வாயிலும் புகட்டினாள். கஷாயத்தைக் குடித்திருந்த த்வைபாயனருக்குத் தலை சுற்றியது. மயக்கத்தில் ஆழ்ந்தார். மெல்லிய குரலில் சகோதரனும், சகோதரியும் பேசிக் கொண்டதை உணர முடிந்ததே தவிர என்ன பேசினார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் தங்கள் இருவரையும் கண்டெடுத்தது குறித்தும் இங்கே கொண்டு வந்து சேர்த்தது குறித்துமே சுமாந்து தன் சகோதரியிடம் சொல்லி இருக்க வேண்டும் என்று த்வைபாயனர் புரிந்து கொண்டார். அப்போது அங்கே எவரோ வரும் காலடிச் சப்தம் கேட்டது. அது தங்கள் தந்தையின் நடையன்கள் ஏற்படுத்திய ஒலிதான் என்பதைப் புரிந்து கொண்ட சகோதர, சகோதரி இருவரும் எழுந்து மரியாதையாக நின்று கொண்டனர். தங்கள் கரங்களையும் கூப்பிக் கொண்டனர். அவர்களுடன் கூட வந்திருந்த இரு உதவியாளர்களும் கதவுக்கு அருகே மரியாதையாக நின்று கொண்டனர்.

மஹா அதர்வ ரிஷியின் வருகை அங்குள்ள சூழ்நிலையையே மாற்றி விட்டது. அவர் வருகையை உணர்ந்து கண் விழித்த த்வைபாயனர் அவரைப் பார்த்ததும் மரியாதையுடன் எழுந்து அமர முயற்சி செய்தார். ஆனால் மஹா அதர்வ ரிஷி அவரைச் சைகையால் எழுந்திருக்க வேண்டாம் என்றும் படுத்திருக்குமாறும் சொல்லிவிட்டு பைலரின் பக்கம் திரும்பினார். அவர் இன்னமும் மயக்கத்திலேயே இருப்பதைக் கண்டார். தன்னுடன் வந்திருந்த உதவியாள் புனித நெருப்பிலிருந்து கொண்டு வந்திருந்த சாம்பலை பைலரின் உடல் முழுவதும் தடவி விட்டார். மரணத்தின் பிடியிலிருந்து பைலரை விடுவிக்கும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே சாம்பலையும் பூசிக் கொண்டிருந்தார்.  த்வைபாயனர் அந்த மந்திரங்களை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு அவற்றைத் தம் நினைவில் இருக்கும் மந்திரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு உச்சரிப்பையும் கவனம் வைத்துக் கொண்டார். அப்போது தன்னுடன் வந்த சீடனைச் செல்லுமாறு சைகையில் உத்தரவிட்டார் மஹா அதர்வ ரிஷி. பின்னர் சீடன் ஒருவன் கொண்டு வந்த போட்ட பலகையில் த்வைபாயனருக்கு அருகே அமர்ந்து கொண்டு தன் தண்டத்தைச் செங்கோல் போல் பிடித்துக் கொண்டார்.

த்வைபாயனர் சுமாந்துவின் உதவியுடன் சுவரில் சாய்ந்த வண்ணம் அமர்ந்து கொண்டார். பின்னர் அதே போல் சைகையிலேயே தன் மகனையும், மகளையும் த்வைபாயனருக்கு அருகே அமரச் சொல்லிச் சொன்னார் ரிஷி.  அதன் பின்னர் த்வைபாயனரிடம் திரும்பி, “பிரமசாரியே, நீ வருணனை எழுப்பி வழிபடும் அதர்வ வேத மந்திரங்களை மிகவும் சரியாகவும் தவறின்றியும் சொன்னாய்!” என்றார். த்வைபாயனர் அதற்குத் தன் கரங்களைக் கூப்பிய வண்ணம், “மாட்சிமை பொருந்திய ரிஷியே, நீங்கள் அவ்வாறு என்னைச் சொல்ல வைத்ததன் மூலம் எனக்குப் பேருதவி செய்திருக்கிறீர்கள்.” என்றார். சிறிது நேரம் தன் பார்வையை த்வைபாயனரிடே வைத்திருந்தார் ரிஷி. அப்போது அதிசயமாக த்வைபாயனரின் வலி காணாமல் போய்விட்டது. “என்னிடம் உண்மையை மட்டுமே சொல்லுவேன் என்று சத்தியம் செய், இளைஞனே!” என்றார் மஹரிஷி.

No comments: