Tuesday, March 29, 2016

ரோகிணியின் முடிவு!

அவர்கள் மூவரும் திரும்பியதும், கரடி மனிதர்கள் தங்கள் உணவில் அவர்களுக்கும் பங்கு கொடுத்தனர். அனைவரும் இருப்பதைப் பங்கிட்டு உண்டனர். கரடி மனிதர்கள் அதீத சந்தோஷத்திலும் மன நிம்மதியிலும் இருந்தனர். ஆகவே நன்கு உண்டு குதித்துக் கும்மாளமிட்டனர். ஆனால் அதற்கு மாறாகக் கரடிகள் அரசனான ஜாம்பவான் கடுமையான முக பாவத்துடன் அமைதியைக் கடைப்பிடித்தான். உணவு உண்டு முடித்ததும், நான்கு கரடி மனிதர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி எழுந்து ஒரு பெரிய கரடியின் தோலைக் கொண்டு வந்தார்கள். அதன் தலை அது இருக்குமிடத்திலேயே எப்போதும் போல் காணப்பட்டது. இதைத் தான் சாம்பன் அணிந்திருந்தான். அந்த உடையை இப்போது கொண்டு வந்த கரடி மனிதர்கள் நால்வரும் அதைக் கிருஷ்ணனுக்கு அணிவித்தனர். அதன் பின்னர் சாஸ்திர ரீதியான சம்பிரதாய ரீதியான சடங்குகள் தொடங்கின. தங்கள் கரகரத்த குரலில் பெண்கள் வாழ்த்துப் பாடல்களைப் பாட ஆண்களோ அவர்களின் கருநிறக்கடவுளைத் துதித்து அழைக்க ஆரம்பித்தனர். பின்னர் அங்கிருந்த நெருப்பில் இருந்து கொஞ்சம் சாம்பலைக் கைகளில் எடுத்த கரடி அரசன் அதைக் கிருஷ்ணனின் நெற்றியிலும் உடலிலும் தடவினான். பின்னர் பிரார்த்தனை செய்து கொண்டான். “என்றென்றும் வல்லவரே, என்றென்றும் எவருக்கும் பயப்படாதவரே! அனைவருக்கும் கடவுளாக இருப்பவரே! எங்கள் கருநிறக் கடவுளே! எங்களைக் காத்து ரக்ஷிப்பாய்! உன்னுடைய அடிமைகளான நாங்கள் கரடி மனிதர்கள்! எங்களைக் காத்து அருள்! இதோ வசுதேவனின் குமாரன் வாசுதேவக் கிருஷ்ணன்! இவனை உன்னுடைய பிரியத்துக்கும் விருப்பத்துக்கும் உகந்த மகனாக அங்கீகாரம் செய்து விடு! இவனை ஏற்றுக் கொள்! கரடி மனிதர்களாகிய நாங்கள் இன்றையிலிருந்து நான்காம் நாள் உன் முன்னர் உன் அங்கீகாரத்திற்கென இவனைச் சமர்ப்பிக்கிறோம்.”

அவன் முகமும், உடலும் விபூதியால் பூசப்பட்டபோது கிருஷ்ணனுக்கு உள்ளூர நடுக்கம் ஏற்பட்டது. அதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அதிலும் அந்த நெருப்பு யாக நெருப்பு எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் அதில் தான் பல மிருகங்களும், பல கரடி மனிதர்களும் தூக்கி வீசப்பட்டிருக்கின்றனர். இதை நினைக்கையில் அவன் கலங்கினான். பின்னர் கரடி அரசன் கரடிகளின் பற்களால் ஆன கழுத்தில் அணியும் ஆபரணம் ஒன்றைக் கிருஷ்ணனுக்கு அணிவித்தான். கரடி மனிதர்கள் சந்தோஷம் தாங்காமல் கூச்சலிட்டுத் தங்கள் மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டனர். பின்னர் கிருஷ்ணனை, “எல்லாம் வல்ல கருநிறக்கடவுளின் பெயரில் அவருடைய கட்டளைகளைத் தான் ஏற்றுக் கீழ்ப்படிந்து நடப்பதாக” உறுதிமொழி எடுக்க வைத்தான். கிருஷ்ணனைத் தான் சொன்னவற்றை அப்படியே திரும்பச் சொல்லச் சொன்னான். கிருஷ்ணனும், “எல்லாம் வல்ல, எவருக்கும் பயமில்லாத கருநிறக் கடவுள் மேல் தான் அவருடைய கட்டளைகளைச் சிரமேற்கொண்டு நடத்துவேன்!” என உறுதி மொழி கொடுத்தான். அதன் பின்னர் சாம்பன் அதுவரை அமர்ந்திருந்த ஆசாரியர்களுக்கே உரிய தனியான ஆசனத்தில் அமரும்படி கிருஷ்ணனை ஜாம்பவான் கேட்டுக் கொண்டான். அதன் பின்னர் அவர் கரடி மனிதர்களின் மொழியில் ஏதேதோ கட்டளைகளைக் கூற அங்கிருந்த கரடிப் பெண்களில் சிலர் எழுந்து சென்று ஜாம்பவானின் மகளான அந்தப் பறவைக்குரலில் பாடும் பெண்ணை அழைத்து வந்தனர். அவள் தலையிலிருந்து கால் வரை கரடித் தோலால் மூடப்பட்டிருந்தாள். அவள் தயக்கத்துடனும், விருப்பமில்லாமலும் வேறு வழியின்றி நடுங்கியபடி அங்கே வந்திருந்தாள் என்பது அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்ததிலிருந்து புரிந்தது.

பின்னர் கரடி அரசன் எழுந்து நின்று உரத்த குரலில் தன் ஆசிகளைத் தெரிவித்துவிட்டுக் கிருஷ்ணனை எழுந்து நிற்கச் சொன்னான். அதன் பின்னர் ஜாம்பவான் கேட்டார்:”கரடிகளின் ஆசாரியரே! இந்தக் கரடி உலகு முழுதுக்கும் குருவானவரே! நீங்கள் எல்லாம் வல்ல கருநிறக்கடவுளால் அவரின் பிரியத்துக்குப் பாத்திரமானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீஈர்கள். இதோ இங்கே நிற்கும் இந்த இளம்பெண், ரோகிணியை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இவள் கரடிகளின் அரசனான ஜாம்பவான் ஆகிய என்னுடைய பெண்! இவளை நீங்கள் ஏற்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் கிருஷ்ணன், “கரடிகளின் அரசரே! என்னை உங்கள் ஆசாரியன் என நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்கள்! ஆகவே அதன்படி நான் தீர்மானித்திருப்பது என்னவெனில் நான் இவளைத் திருமணம் செய்யப் போவதில்லை என்பதே!” என்றான் திட்டவட்டமாக! ஜாம்பவானுக்குக் கோபம் எல்லை மீறியது. அவர் கண்கள் பயங்கரமான கோபத்தில் சிவந்து காணப்பட்டன. கிருஷ்ணனிடம், “நீ ஆசாரியனாக இருந்தாலும் எங்கள் கருநிறக்கடவுளால் ஏற்கப்படும்வரை நீயாக எந்த முடிவும் எடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது!” என்றார். திடமாக அதே சமயம் எவராலும் எதிர்க்க முடியாவண்ணம் ஜாம்பவான் பேசினார். “எங்கள் கருநிறக்கடவுளின் சட்டதிட்டங்களின் படி இதுவரை இருந்து வந்த ஆசாரியனை எவன் ஒருவன் வெல்கிறானோ அல்லது கொல்கிறானோ அந்த வென்றவன், தோற்றவனுக்கு என நிச்சயித்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மணந்தே ஆகவேண்டும். அதை எவரும் மறுக்க முடியாது! மறுக்கவும் கூடாது! அப்படி நீ  அவள் பிறந்ததில் இருந்து சாம்பனுக்கு என நிச்சயிக்கப்பட்டிருந்த ரோகிணியை மணக்க மறுத்தாயெனில், ரோகிணி இந்த எரியும் நெருப்பினுள் தள்ளப்படுவாள். ஏனெனில் அவளுக்கென நிச்சயிக்கப்பட்டிருந்த மணாளனை நீ கொன்று விட்டாய்! ஆகவே இந்தக் கரடி உலகச் சட்டப்படி நீ அவளை மணந்தே ஆகவேண்டும்; அல்லது ரோகிணி நெருப்பினுள் தள்ளப்படவேண்டும்! அதுவும் இங்கேயே, இப்போதே அது நடக்க வேண்டும்!”

இந்த இறுதி எச்சரிக்கைக்கு அங்கு கூடி இருந்த கரடி மனிதர்களிடையே இதை ஆதரித்துக் கூக்குரல்கள் எழுந்தன..”எல்லாம் வல்ல கருநிறக்கடவுள் இந்தக் கரடி மனிதர்களைக் காப்பாற்றட்டும்; ரக்ஷிக்கட்டும்!” என்றெல்லாம் கூச்சல் இட்டனர். சற்று நேரம் கூக்குரலிட்ட அனைவரும் அமைதி அடைந்த பின்னர் கிருஷ்ணன் மேலும் பேசுவான்; “ உங்கள் கடவுளால் இயற்றப்பட்ட சட்டத்தையோ சம்பிரதாயத்தையோ நான் மீற விரும்பவில்லை. ஆனால் எனக்கோ அல்லது அந்தப் பெண்ணுக்கோ விருப்பமே இல்லாத ஒரு திருமணத்தை நடத்துவதற்கு அந்தக் கடவுளே ஒத்துக்கொள்ள மாட்டார்! அவரும் மறுதலிப்பார்!” என்றான் கிருஷ்ணன். ஜாம்பவான் தன் கைகளைத் தூக்கிய வண்ணம் அவர்களின் கருநிறக்கடவுளைத் துதித்துக் கொண்டு அவரின் கட்டளைகளைத் தங்களுக்குத் தெரிவிக்குமாறு பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பிக்கக் கூடி இருந்த கூட்டமும் ஜாம்பவானுடன் அந்தப் பிரார்த்தனையில் கலந்து கொண்டது. அதன் பின்னர் கரடி அரசன் ஜாம்பவான் கிருஷ்ணன் பக்கம் திரும்பித் தன் கண்டிப்பான குரலில் மீண்டும் கேட்டார்:”உன்னை முடிவாகக் கேட்கிறேன். இந்தப் பெண்ணை நீ ஏற்கப் போகிறாயா? இல்லையா? நீ ஏற்க மறுத்தாயெனில் இவளை எல்லாம் வல்ல கருநிறக் கடவுளுக்குப் பலி கொடுத்தே ஆகவேண்டும்; வேறு வழியில்லை! என்ன செய்யப் போகிறாய்? விரைவில் சொல்!”

கிருஷ்ணன் திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவளுடைய அழகிய குழந்தை போன்ற முகம் துக்கத்தால் நிரம்பி இருந்தது. அவள் கண்கள் பயத்தைக் காட்டின. அவள் திரும்பி அந்த எரியும் நெருப்பைப் பார்க்கையில் அவள் கண்கள் மழையென வர்ஷித்தன. ஆனால் கரடி மனிதர்கள் அதற்கெலலம் அஞ்சாமல், “தூக்கி நெருப்பில் தள்ளுங்கள் அவளை!” என்று மீண்டும் மீண்டும் கூக்குரலிட்டனர். மீண்டும் அங்கு கஷ்டப்பட்டு அமைதியை நிலை நாட்டிய ஜாம்பவான் கிருஷ்ணனிடம், “ஆசாரியனே, நீ என்ன சொல்கிறாய்? ஜாம்பவானின் பெண்ணாகிய இந்தப் பெண்ணை நீ மணக்கப் போகிறாயா இல்லையா?” என்று மீண்டும் கேட்டான். ரோகிணி மயங்கிக் கீழே விழ இருந்தாள். ஆனால் மற்றக் கரடிப் பெண்கள் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். ஓர் வயது முதிர்ந்த கரடிப் பெண்மணி ரோகிணியின் முதுகில் ஓங்கி ஓர் குத்து வைத்து அவள் மயங்கி விழுவதிலிருந்து அவளைத் தடுத்தாள். தன் கையிலிருந்த ஓர் குடிக்கும் பானத்தை சத்யபாமா ரோகிணியிடம் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். ரோகிணி தனக்கு யார் குடிக்கக் கொடுக்கின்றார்கள் என்பதைப் பார்த்தாள். சத்யபாமா என்று தெரிந்ததும் அவளைப் பார்த்து, “நீ மிக மிக நல்லவள், அந்நியளே!” என்றபடி அவள் தோள்களில் சாய்ந்து விம்மினாள். சற்று நேரம் ஆசுவாசம் செய்து கொண்ட ரோகிணி பின்னர் தன் தந்தையைப் பார்த்துப் பேசினாள்.

“தந்தையே, என்னை நெருப்பிலிட்டு நம் கருநிறக்கடவுளிடம் ஒப்படைப்பீராக! இந்த அந்நிய மனிதனைத் திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை!” என்றாள். இதைச் சொல்லிவிட்டு மிகப் பரிதாபமாகத் தன் தந்தையைப் பார்த்தாள். கிருஷ்ணன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவள் இளம்பெண் என்று சொல்லப்பட்டாலும் இன்னமும் சிறுமிப் பருவத்தைத் தாண்டவில்லை. ஆனால் அவள் அவனைத் திருமணம் செய்து கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் விரும்பவில்லை. அவன் அவளுடைய விருப்பத்தை அந்தத் திருவிழா நாளன்று மறுத்துவிட்டான் அல்லவா? அதோடு இல்லாமல் அவளுக்குக் கிருஷ்ணன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்படுகிறான் என்பதும் புரிந்திருந்தது. “என்ன?” என்று கோபத்துடனும் ஆங்காரத்துடனும் ரோகிணி சொன்னதைக் கேட்டுக் கரடி அரசன் ஜாம்பவான் கூச்சலிட்டான். தன்னுடைய அத்தனை துக்கத்திலும், துயரத்திலும் கூட நடுங்கும் குரலில் உடலெல்லாம் நடுக்கத்தில் ஆழ்ந்திருக்க ரோகிணி பேசினாள்: “தந்தையே, நான் நெருப்பில் மூழ்க விரும்புகிறேன்!” என்ற வண்ணம் நெருப்பை நோக்கி நடந்தாள்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

என்ன கொடூரம். கடவுளே.

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.