Sunday, March 13, 2016

ஜாம்பவான் பாசம்! சாம்பன் கோபம்!

இவை அனைத்திலிருந்தும் அந்த மனிதன் அங்கே உள்ள இந்தக் கரடி-மனித இனத்தின் ஆசாரியன் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஜாம்பவான் மெதுவாகக் கிருஷ்ணன் காதுகளில் கிசுகிசுத்தார்! “அவர் தான் புனிதமான ஆசாரியர், சாம்பன் என்பவர்! மஹாவல்லமை பொருந்தியவரும், கரடி உலகைச் சிருஷ்டி செய்தவருமான வல்லமை பொருந்தியவரின் மிகவும் பிரியமான மகன் இவர், இந்த சாம்பன் என்பவர்! இந்தக் கரடி உலகைப் பல்லாண்டுகளாக இவரே காத்து வருகிறார். அவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்!” என்றார். கரடிகளின் அரசனான ஜாம்பவான் தன்னுடைய தோள்களில் தட்டிக் கொண்டு மார்பில் அடித்துக் கொண்டு அவர்கள் வழக்கப்படி அந்தப் புனிதமான கரடி மனிதனுக்குத் தன் மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார். அதற்குப் பதில் தரும் விதமாக சாம்பன் லேசாக உறுமினார். ஆசிகளைத் தெரிவிக்கும் விதமாக அரசனின் கழுத்தருகே முகர்ந்து பார்த்துவிட்டு அவர் கன்னங்களைத் தன் இரு விரல்களால் தட்டிக் கொடுத்தார். கரடிகளின் அரசனான ஜாம்பவான் கண்ணனையும், பாமாவையும் தான் எப்படிச் சந்திக்க நேர்ந்தது என்பதை சாம்பனுக்கு விளக்கிக் கூறினார். அதைக் கேட்ட சாம்பன் கொஞ்சம் முகச் சுளிப்புடனேயே அவர்கள் இருவரையும் பார்த்தார். கிருஷ்ணனுக்குப் புரிந்து விட்டது! இந்த மனிதனுக்குப் பிடிக்கவில்லை எனில் தங்களுக்கு இங்கே வரவேற்பு இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டான்.

அவர்கள் இருவரும் கீழே குனிந்து சாம்பனின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்கள். சாம்பன் தன் முகத்தில் கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு கிருஷ்ணனின் கழுத்தருகே முகர்ந்து பார்த்தான். அதையே சத்யபாமாவிடமும் செய்ய முயன்றான். ஆனால் சத்யபாமா உடனே விலகிக் கொண்டாள். பின்னே நகர்ந்து விட்டாள். அவளுக்குப் பயம் வந்து விட்டது! சாம்பனின் முகத்தில் தெரிந்த புன்னகை மெல்ல மெல்ல மறைந்தது. ஒரு கொடூரமான பார்வை அவர் கண்களில் தெரிந்தது. ஏதோ தீமையைச் செய்யப் போகிறான் என்று கிருஷ்ணன் மனதில் தோன்றியது. அதற்குள்ளாக ஜாம்பவான் இது எதையும் கவனிக்காமல் சாம்பனின் அருகே அமர்ந்த வண்ணம் கிருஷ்ணனை அழைத்துத் தன்னருகே அமரச் சொன்னார். சாம்பனின் இடப்பக்கம் ஒரு குண்டான பெண்மணி அமர்ந்திருந்தாள். அவள் சற்று நகர்ந்து கொண்டு சத்யபாமாவுக்கு அங்கே அமரும்படி இடம் கொடுத்தாள். அங்கே சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. அந்த இடைவெளியில் சாம்பனின் அருகே அமர்ந்திருந்த பெண்மணி சத்யபாமாவின் கையில் இருந்த பூனைக்குட்டியைப் பிடுங்கினாள். அதையும் நெருப்பில் போட்டு வேக வைத்து உண்ணவேண்டும் என்பது அவள் ஆசை! சத்யா உடனே கிருஷ்ணனின் பக்கம் ஓடிச் சென்று தன் கையிலிருந்த குட்டியை அவனிடம் கொடுத்துவிட்டாள். அந்தப் பெண்மணியின் கோபம் தலைக்கேறியது. அவளும் உடனே எழுந்து கொண்டு அவர்கள் மொழியில் கிருஷ்ணனையும், பாமாவையும் திட்டிக் கொண்டு கிருஷ்ணனிடமிருந்து அந்தக் குட்டிப் பூனையைப் பிடுங்க வந்தாள். சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த ஊரிக்கு அவள் எண்ணம் புரிந்து விட்டது. கிருஷ்ணன் அருகே வந்து நிலை கொள்ளாமல் தவித்த வண்ணம் மியாவ், மியாவ் என்று விடாமல் கத்தியது.

கிருஷ்ணன் ஊரியைப்பார்த்து ஆறுதல் அளிக்கும் பார்வை ஒன்றால் தான் அதன் குட்டியை விட்டுப் பிரிய மாட்டேன் என வாக்குறுதி அளித்தான். கரடி மனிதனுக்கு இந்த மௌன யுத்தம் எதன் காரணமாக என்று புரிந்து விட்டது. அவன் அந்தப்பெண்மணியிடம் பூனைக்குட்டியை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். அந்தப் பெண்மணி அரசனின் மூத்தமகள் என்றும் அவள் தான் சாம்பனின் தாய் என்பதையும் கிருஷ்ணன் பின்னால் அறிந்து கொண்டான். ஆனால் அந்தப் பெண்மணி விடவில்லை. மீண்டும் மீண்டும் குட்டியைக் கிருஷ்ணனிடமிருந்து வாங்கித் தர நிர்ப்பந்தம் கொடுத்தாள். ஜாம்பவானோ அந்தக் குட்டியைக் கிருஷ்ணனிடமிருந்து எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டு அதைச் சீராட்டித் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். கிருஷ்ணனைக் கொலை செய்துவிடுவது போல் குரோதமாகப் பார்த்த அந்தப் பெண்மணி வேறு வழியின்றித் தன் ஆசனத்தில் சென்று அமர்ந்தாள். சற்று நேரம் கழித்து அந்தக் குட்டிப் பூனை தன் தாய் அருகே இருப்பதை உணர்ந்து தாயிடம் சென்று விட்டது. அப்போது திடீரென அந்தப் பறவைக்குரல் சங்கீதம் எங்கிருந்தோ கேட்டது. கிருஷ்ணன் அந்தப் பகுதியினுள் நுழைகையில் மரத்தின் மேலே இருந்து கேட்ட அந்தக் குரல் இப்போது மிக அருகே கேட்டது. உடனே சற்றும் தயங்காமல் கிருஷ்ணன் தன் புல்லாங்குழலை எடுத்து அதே ஸ்வரத்தில் அதில் கீதம் இசைத்தான். அங்கிருந்த அனைவருக்கும் இந்த இசையின் மூலம் இருவரும் பேசிக் கொண்டது மிகப் புதுமையாகத் தென்பட்டது.

அப்போது சாம்பன் உரத்த குரலில், “முட்டாள் பெண்ணே, கீழே இறங்கு! உன் மடத்தனத்தால் ஏற்கெனவே நாங்கள் அவதிப்பட்டு விட்டோம். போதும், போதும், கீழே இறங்கு!” என்று கடிந்து கொண்டான். அந்தப் பிசாசுப் பெண் மெல்ல மெல்லத் தரைக்கு இறங்கினாள். சாம்பனுக்கு மிக அருகே அவள் இறங்கினாள். அது மெலிதாக உடலில் பல வளைவுகளைக் கொண்ட ஓர் இளம்பெண் என்பதைக் கிருஷ்ணன் பார்த்தான். அவள் கருத்த நிறத்தோடு, அழகிய கரிய, பெரிய விசாலமான கண்களோடு காணப்பட்டாள். நரித்தோலை இடையில் தரித்திருந்தாள். அவள் உடலின் மற்ற பாகங்களை அவள் நீண்ட கூந்தல் மூடி இருந்தது. அவள் சாம்பனை நெருங்கியதும் அவரை வணங்கும் தோரணையில் தன் மார்பில் அடித்துக் கொண்டு தலைக் கீழே தாழ்த்தி வணங்கினாள். ஜாம்பவானுக்குச் செய்தது போல சாம்பன் இந்தப் பெண்ணின் கழுத்தருகேயும் முகர்ந்து பார்த்து அவள் கன்னத்தில் இரு விரல்களால் தட்டிக் கொடுத்தான். அதன் பின்னர் அவள் ஜாம்பவானை இறுக்கித் தழுவிக் கொண்டாள். ஜாம்பவானும் பாசத்துடன் அவளை அணைத்துக் கொண்ட வண்ணம் கிருஷ்ணனிடம், “இவள் என் மகள், பெயர் ரோகிணி!” என்றார். ரோகிணி கிருஷ்ணனின் பக்கம் திரும்பியவள் அவன் எதிர்பாராதவண்ணம் புல்லாங்குழலை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பின் மீண்டும் புல்லாங்குழலைக் கொடுத்துவிட்டாள்.

அங்கு கூடி இருந்த அனைவருமே அவளை மிகப் பிரியத்துடன் ரோகிணி, ரோகிணி என்று அழைத்துப் பாசத்தைக் காட்டினார்கள். சுறுசுறுப்பும் அதே சமயம் எல்லோரிடமும் பழகும் கலகலப்பும் கொண்ட அந்தப் பெண் எழுந்து தன் மூத்த சகோதரியின் அருகே சென்று அவள் தோள்களை அன்புடனும் பரிவுடனும் அழுத்தினாள். அதோடு இல்லாமல் எப்படியோ சத்யாவுக்கும், அந்த குண்டான பெண்மணிக்கும் இடையே தனக்கென ஓர் இடத்தையும் தேடிக் கண்டு கொண்டாள். அங்கே அமர்ந்ததோடு இல்லாமல் தன் ஒரு கையைத் தன் சகோதரியின் தோள் மீதும் இன்னொரு கையை சத்யாவின் தோள் மீதும் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். கிருஷ்ணனுக்கு அவள் ஆரியர்களின் பாரம்பரிய மொழியில் பேசுவதைக் கண்டு ஆச்சரியம் வந்தது. ஆனால் அவளாலும் ஜாம்பவானைப் போலவே மெதுவாக நிறுத்தி நிறுத்தித் தான் பேச முடிந்தது. வேகமாகப் பேச முடியவில்லை.

4 comments:

ஸ்ரீராம். said...




.

sambasivam6geetha said...

grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrஎன்ன கமென்ட் போட்டிருக்கீங்க? அடிக்கடி உங்க கிட்டே இருந்து இப்படி எதுவும் இல்லாமல் வருது! :P:P:P:P:P:P அதுவும் இந்தக் கண்ணன் பதிவில் மட்டும்!

ஸ்ரீராம். said...

பின்னே என்ன செய்ய? நான் படித்து விட்டேன் என்று சொல்ல வேண்டும். நீங்கள் (பெரும்பாலும்) பதிலும் சொல்வதில்லை. பதில் சொல்லும்படி நானும் கமெண்ட் போடுவதில்லை. படித்து விட்டேன் என்ற தகவலுக்குத்தானே.. அதான்! :)))))

வல்லிசிம்ஹன் said...

அதிசயத்துக்கு மேல் அதிசயம்.
ஜாம்பவானுக்கு ராமன் தான் கண்ணன் என்று தெரிய வருவது எப்போதோ.
வேறு புதுக் கண்ணன் இவன். இருந்தும் இனிமை.