Wednesday, January 20, 2016

காட்டில் கண்ணன்!

தான் சரியான பாதையில் தான் வந்திருப்பதாகக் கிருஷ்ணன் நினைத்தான். ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். தெய்வீகக் காவலர்களால் பாதுகாக்கப்படுவதாக சத்ராஜித்தினால் சொல்லப்பட்ட அந்தப் புனிதமான குகைக்கு ச்யமந்தகத்தை எடுத்துக் கொண்டு அங்கே பத்திரப்படுத்த வேண்டி பிரசேனன் சத்ராஜித்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ச்யமந்தகத்தை ஒளித்து வைக்க இதைவிடச் சிறந்த இடம் சத்ராஜித்திற்குக் கிடைக்காது. அதிலும் கிருஷ்ணன் தான் ச்யமந்தகத்தைத் திருடி விட்டான் என்று அவன் சொன்ன பொய்யை யாதவர்கள் நம்புவதற்கும் அது இங்கே இருந்தால் தான் சரிப்படும். கிருஷ்ணன் யோசனையுடன் ச்யமந்தகம் இப்போது எங்கே எனச் சுற்றும் முற்றும் தேடினான். பிரசேனனின் உடைமைகள் அங்கே தரையில் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்தன.ஆனால் அவற்றில் ச்யமந்தகம் இருப்பதாகத் தெரியவில்லை. கிருஷ்ணன் மேலும் தேடியதில் ஒரு கனத்த தங்கச் சங்கிலியின் ஒரு பாகம் மட்டுமே கிடைத்தது. இதிலிருந்து சங்கிலியின் மற்றொரு பாகத்தோடு ச்யமந்தகமும் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். மனிதனோ அல்லது மிருகமோ பிரசேனனை யார் தாக்கி இருந்தாலும் அவர்கள் அவன் கழுத்திலிருந்த ச்யமந்தக மணியோடு கூடிய மாலையையும் பிடுங்கி இருக்க வேண்டும். அந்த முயற்சியில் மாலை இரண்டாக அறுபட்டு இருக்க வேண்டும். ச்யமந்தகம் இருக்கும் பாகத்தை எடுத்துக் கொண்டு இதை இங்கேயே விட்டு விட்டுப் போயிருக்க வேண்டும்.

கிருஷ்ணன் பிரசேனனின் உடலைக் கழுகுகள் தின்ன விட்டு விட்டு அவன் உடைமைகளைப் பொறுக்கி எடுத்தான்.அவனுடைய ஆபரணங்களையும், ஆயுதங்களையும் தரையிலிருந்து எடுத்து அங்கே ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைத்தான். மேலே ஒரு சின்ன அடையாளக் கல்லையும் வைத்தான். பின்னர் மீண்டும் முன்னோக்கிச் செல்ல ஆயத்தமானான். இப்போது காட்டுக்குள் செல்லும் இந்த வழியானது மிகவும் குறுகலாகவும், மரங்கள் அடர்ந்தும் காணப்பட்டதோடு அல்லாமல் இருபக்கங்களிலும் புதர்கள் வேறு வரம்பு கட்டி இருந்தன. புதர்களும் அடர்த்தியாகவே இருந்தன. அவை ஆங்காங்கே மேலே செல்லும் வழியை மூடிக் கொண்டும் காணப்பட்டன. அதோடு அங்கே சூரியவெளி உள்ளே நுழைய முடியாதபடி மரங்கள் அடர்த்தியாகக் காணப்பட்டதோடு அல்லாமல் அவற்றின் கிளைகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு பசுமையான கூடாரமாகக் காட்சி அளித்தது. இந்தக் குறுகிய பாதை தன்னை எங்கே இட்டுச் செல்லும்? ம்ம்ம்ம். சத்ராஜித் சொல்லும் அந்தப் புனிதமான குகைக்கு இது செல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது எங்கே செல்கிறதோ, அங்கே நாமும் செல்வோம். ஏனெனில் இந்தப் பாதையில் சென்றால் ஒருவேளை ச்யமந்தகத்தைக் குறித்தத் தகவல்கள் ஏதேனும் கிட்டலாம். மேலும் காட்டுக்கு உள்ளே செல்ல இது ஒன்று தான் வழியாகக் காண்கிறது.

சற்றுத் தூரம் தான் சென்றிருப்பான். மீண்டும் பிணம் தின்னிக் கழுகுகளின் கூச்சல் காதைப் பிளந்தது. கிருஷ்ணன் கொஞ்சம் ஆச்சரியத்தோடு நிமிர்ந்து தனக்கு முன்னே கவனித்தான். அங்கே இன்னொரு உடல் இருக்கிறது போலும். அதைத் தான் இந்தக் கழுகுகள் உணவாக்கிக் கொண்டிருக்கின்றன! யாருடைய அல்லது எதன் உடல் அது?  தன்னுடைய அரிவாளால் இரு பக்கமும் இருந்த முட்புதர்களை வெட்டிச் சீராக்கினான் கிருஷ்ணன்.அவன் செல்ல வழியை உண்டாக்கினான். அந்த வழியே சென்றதும் மீண்டும் ஓர் திறந்த வெளி. அங்கே ஒரு சிங்கத்தின் உடல் கிடந்தது. அதைத் தான் அந்தக் கழுகுகள் தங்களுக்கு உணவாக்கிக் கொண்டிருந்தன. சிங்கத்தின் உடல் அநேகமாகக் கழுகுகளால் பக்ஷணம் ஆகி விட்டது. எனினும் கிருஷ்ணன் ஓர் அம்பை விட்டு ஒரு கழுகைக் கொன்று வீழ்த்தவே மற்றவை பறந்து மேலே போய் விண்ணில் சுற்றிச் சுற்றி வந்தன. ஒரு காலத்தில் காட்டுக்கே ராஜாவாக இருந்த சிங்கராஜா இப்போது உயிரில்லாமல் வெறும் எலும்புக்கூடாகக் காட்சி அளித்தார். எலும்புகளும் ஆங்காங்கே உடைய ஆரம்பித்துவிட்டன. சிங்கத்தின் பிணத்தைக் கூர்ந்து ஆராய்ந்தான் கிருஷ்ணன்.

அதன் ஒரு முன்னங்காலில் பிரசேனன் அணிந்திருந்த துணியின் ஒரு முனை காணப்பட்டது. ஆக சிங்கம் தான் பிரசேனனை அடித்துக் கொன்றிருக்கிறது. இன்னொரு காலில் நகத்துக்கும் சதைக்கும் இடையே கறுப்பாக ஏதோ காணப்பட்டது. அதைக் கூர்ந்து பார்த்தான் கிருஷ்ணன். கரடியின் உடலில் இருந்து பிடுங்கப்பட்ட மயிர்! கொஞ்சம் சதையோடு பிய்ந்து வந்திருந்தது. கரடிக்கும் சிங்கத்திற்கும் கடுமையான சண்டை நடந்திருக்க வேண்டும். ஒரு கரடியா அல்லது இரண்டு மூன்று கரடிகளா? தெரியவில்லை. கரடியாகத் தான் இருக்க வேண்டும். சுற்றும் முற்றும் பார்த்தாலும் சிங்கத்திற்கும் கரடிகளுக்கும் அல்லது கரடிக்கும் கடுமையான சண்டை நடந்ததன் அடையாளங்கள் தெரிந்தன. ஒரு வேளை சிங்கத்திடம் ச்யமந்தகம் பிணைத்திருக்கும் தங்கச் சங்கிலியின் மற்றொரு பாகம் இருக்குமோ? கிருஷ்ணன் கூர்ந்து ஆராய்ந்து பார்த்ததில் எங்குமே ச்யமந்தகத்தோடு கூடிய தங்கச் சங்கிலியின் மற்றொரு பாகம் காணப்படவில்லை. ச்யமந்தகத்தை பிரசேனன் காட்டுக்குக் கொண்டு வந்திருந்தான் எனில்! ஆம், ஆம் நிச்சயமாய் அவன் கொண்டு வந்திருக்க வேண்டும். சிங்கம் அவனைக் கொல்லும்போது ச்யமந்தகத்தோடு கூடிய சங்கிலியின் ஒரு பாதியை அவன் கழுத்திலிருந்து அறுத்து எடுத்திருக்க வேண்டும். ச்யமந்தகம் இல்லாத மற்றொரு பாகம் தான் கிடைத்து விட்டது. ஒருவேளை அந்தச் சங்கிலியின் மற்றொரு பாதி சிங்கத்தின் பற்களுக்கிடையில் இருக்குமோ? அப்படி இருந்திருந்தால் கரடிகள் சிங்கத்தைத் தாக்கிக் கொன்றபோது அவற்றை எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பு உண்டு.

ஆனால் அது நடந்திருக்குமா? அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறதா? தெரியவில்லை! காட்டில் வாழும் மிருகமான சிங்கத்திற்கோ கரடிக்கோ இந்தப் பிரகாசமான ஒளிவீசும் வைரக் கல்லில் என்ன ஆர்வம் இருக்க முடியும்? ஒருவேளை சத்ராஜித் சொல்வது போல் ச்யமந்தகத்தின் அதிசயமான குணம், பார்ப்போரைக் கவர்ந்து இழுக்கும் குணம், இந்த மிருகங்களின் மனதையும் கவர்ந்து இழுத்துவிட்டதோ? அப்படி ஒருவேளை அந்தக் கரடிகள் ச்யமந்தகத்தைக் கொண்டு சென்றிருந்தால் அவை எங்கே சென்றிருக்கும்? இந்த மாபெரும் காட்டில் அந்தக் கரடிகள் வாழும் குகையை எப்படித் தேடுவது? அது ஒருக்காலும் நடக்காத ஒன்று. அது தான் அப்படி எனில் சாத்யகியையோ, சத்யபாமாவையோ எப்படித் தேடுவது? அவர்கள் இங்கே இருப்பதற்கான அடையாளம் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் இந்த வழியில் சென்றிருப்பதற்கான அடையாளங்களும் காணவில்லை. இப்படிப் போயிருக்க மாட்டார்கள் போலும்! எங்கே தான் போயிருப்பார்கள்?

மீண்டும் அந்த இடத்தைக் கவனமாகக் கிருஷ்ணன் ஆராய்ந்தான். அப்போது ஒரே ஒரு கரடி மட்டும் தான் சண்டை போட்டிருக்கிறது எனவும் மற்றொன்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது என்பதையும் கண்டு பிடித்தான். ஆனால் அது கரடியின் காலடிச் சுவடு தானா? அல்லது மனிதர் யாரேனும் கரடியோடு வந்திருந்திருந்தார்களா? கண்டு பிடிப்பது கஷ்டம்! இதற்குள்ளாக அங்கே சூரிய அஸ்தமனம் ஆகும் நேரமாகி விட்டது. சூரியன் இருக்கையிலேயே இருண்டு கிடந்த காடு இப்போது காரிருளில் மூழ்க ஆரம்பித்தது. கிருஷ்ணன் சற்றுத் தூரம் முன்னேறி ஒரு அடர்ந்த மரத்தின் மேலே ஏறிக் கொண்டு தன்னுடைய இரவுக்கான இருக்கையை அங்கே அமைத்துக் கொண்டான். அந்த மரத்தின் அடர்ந்த கிளைகளுக்கு நடுவே தன்னுடைய இரவுப் படுக்கையை அமைத்துக் கொண்ட கிருஷ்ணன் வேத வியாசர் தன்னை ருஷிகேசன் என்று அழைப்பதை நினைவு கூர்ந்தான். ஏனெனில் கிருஷ்ணன் தன் மனதையும், உடலையும் ஒருசேரக் கட்டுப்படுத்தத் தெரிந்து வைத்திருந்தான். இதைக் குறித்து பலராமன் கூடக் கிருஷ்ணன் அவ்வப்போது கேலி செய்வான். ஹூம், இப்படி இருப்பதால் உனக்குத் தூக்கத்தின் அருமையே தெரியாமல் போய்விட்டது என்றும் கூறுவான். இந்த இனிய நினைவுகளில் மனம் மகிழ்ச்சியுடன் இருந்த கிருஷ்ணன் தான் மரத்தின் மேல் இருந்தாலும் காட்டில் எங்கும் தொலையவில்லை என்றும் தனியாக இருக்கவில்லை என்றும் உணர்ந்தான்.

விட்டு விட்டுத் தெரிந்த நக்ஷத்திர ஒளியில் அதே மரத்தின் மற்றொரு கிளையில் அமர்ந்திருந்த ஓர் ஆந்தையைப் பார்த்தான். பளபளக்கும் தனது வட்டமான கண்களால் அது கிருஷ்ணனைப் பார்த்தது. கூ, கூ எனக் கத்தியது. அதைப் புரிந்து கொண்டாற்போல் கிருஷ்ணனும் இங்கிருந்து வாயினால் சீழ்க்கை சப்தம் செய்தான். கீழே இரண்டு முயல்கள் அந்த மரத்தின் அடியில் வந்து சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் ஓட்டமாக ஓடிப்போயின. நடு இரவுக்குப் பின்னர் ஒரு சிங்கராணி தன் குட்டிகளுடன் உலா வந்தாள். அவள் கண்கள் பளபளத்தன. முகத்தில் சோகம் இருந்தாற்போல் தோன்றியது கண்ணனுக்கு. அதற்கேற்றாற்போல் சிங்கராணியும் குட்டிகளும் மிகவும் மெதுவாக நடந்து சென்றன. தங்கள் குடும்பத் தலைவன் இறந்ததற்கு அவை சோகமாக இருப்பது போல் தோன்றியது கிருஷ்ணனுக்கு. சற்று நேரத்திற்கெல்லாம் சிங்கங்கள் அலறும் சப்தம் கேட்டது. இவையும் கொல்லப்பட்டுக் கழுகுகளுக்கு உணவாகி விட்டனவோ! கிருஷ்ணன் வருத்தம் அடைந்தான். மேலே விண்ணில் சப்தரிஷி மண்டலம் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தது.

1 comment:

ஸ்ரீராம். said...

ச்யமந்தகம் சிங்கத்திடம் இருந்ததாகத்தானே படித்த ஞாபகம்?