Friday, December 11, 2015

கிருஷ்ணனின் முடிவே எங்கள் முடிவு!

இப்போது பலராமனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெருங்குரலெடுத்துச் சிரித்தான். “உன்னிடம் இது தான் கஷ்டம், கிருஷ்ணா! உன்னைச் சமாளிப்பது பெரிய விஷயம்! நான் ஒரு பக்கம் உன்னோடு சண்டை இட்டுக் கொண்டிருக்க நீ இன்னொரு பக்கம் வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு அவற்றை எங்களுக்குச் சிறிதும் புரியாத விதத்தில் நிறைவேற்றி விடுகிறாய்!” என்றான் பலராமன்.

“ஆஹா, அண்ணா? உங்களுக்கா புரியவில்லை? நன்கு புரிந்து கொள்கிறீர்கள்! அதை நீங்கள் உங்கள் பெரிய மனதால் ஆதரிக்கவும் செய்கிறீர்கள்! உங்களுடைய பெருந்தன்மையான போக்கினால் இதன் பலாபலன்களை என்னை அனுபவிக்கும்படி விட்டு விடுகிறீர்கள். அப்படி விட்டு விட்டு, இப்படி எல்லாம் நீ செய்தது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது, கிருஷ்ணா என்றும் சொல்வீர்கள்!”

சற்று நேரம் அங்கே எவரும் பேசவில்லை. அனைவரும் அமைதி காக்க, கர்காசாரியார் திடீரென நினைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். “நம்மிடையே இருக்கும் தேர்வுகளில் ஒன்று என்னவெனில் இந்தச் சண்டையை நாம் ஆயுதங்களுடன் கூடிய மோதலாக மாற்றினோம் எனில், நம்மிடையே ஒரு உள்நாட்டுப் போர் நிச்சயம் ஏற்படும். அது அவசியமானதாகவும் இருக்கலாம். சத்ராஜித்திடம் இருக்கும் வளங்கள், ஆயுதங்கள், வீரர்கள் அனைத்தையும் மீறி அவனை ஒரே நாளில் நாம் முடித்து விடலாம். ஆனால், அவனோடு சமாதானமாகச் செல்ல ஒரு வழி கிடைத்தது எனில் அதை ஏன் விடவேண்டும்? அதை முயன்று பார்க்கலாமே? கிருஷ்ணனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம்.”

“நான் ஒருக்காலும் அவன் செய்தவற்றை மறக்கவும் மாட்டேன்; அவனை மன்னிக்கவும் மாட்டேன். இன்னமும் அவன் நமக்கெல்லாம் கெடுதல்களைத் தான் செய்து வருகிறான். நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பாண்டவர்களின் சுமையைப் பகிர்ந்து கொண்டிருக்கையில் அவனுக்கு மட்டும் அதில் கடமை ஏதும் இல்லையா? நம்மோடு அவனும் தானே சுமையைப் பகிர வேண்டும்? என்னால் அவனை வற்புறுத்திக் கொடுக்கும்படி செய்திருக்க முடியும். ஆனால் நான் அதை விரும்பவில்லை. யாதவர்கள் அனைவருமே பெருந்தன்மையோடும் பெரும்போக்குடனும் அவர்கள் இஷ்டப்பட்ட அளவுக்குப் பாண்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்காகத் தான் நான் என்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருந்தேன். அவனிடம் என்ன இருந்து என்ன? அவன் என்ன சொன்னால் தான் என்ன? யாதவர்களை ஏமாற்றியதன் மூலம் அவன் தனிமைப்படுத்தப்பட்டு விட்டான். அவமானம் அடைந்திருக்கிறான். ஆகவே இப்போது அவன் பேரம் செய்கிறான். அவனுடைய பங்கு கொடுக்கப்படவில்லை என்பதற்காக மகளுக்குச் சீதனம் தருவதன் மூலம் அதை நியாயப்படுத்த விரும்புகிறான். அதற்காக என்னை வற்புறுத்துகிறான்.”

“இப்படி ஒரு பேரத்திற்கு நான் ஏற்றவன் இல்லை. அதில் நான் பங்கெடுக்கவும் மாட்டேன். இதை மட்டும் நான் ஒத்துக்கொண்டால் யாதவர்கள் செய்த தியாகம் அனைத்தும் வீணாகும். இந்த அச்சுறுத்தலுக்கு நான் பணிவதன் மூலம் யாதவர்கள் செய்ததை ஒன்றுமில்லாமல் போகவிட மாட்டேன். அதோடு அவன் பெண்ணைப் பொறுத்தவரை என் முடிவு இது தான். என் மகன் யுயுதானா சாத்யகி ஒரு நாளும் அவளை மணக்கமாட்டான். இது என் முடிவான முடிவு. அவள் மட்டும் என் குடும்பத்தின் மருமகள் ஆனாள் எனில் அவளுக்கும் எங்களிடம் மரியாதை ஏதும் இருக்காது! அதே போல் எங்களாலும் அவளை மரியாதையுடன் நடத்த இயலாது. குடும்பத்தின் தினசரிச் சட்டதிட்டங்கள் அனைத்தையுமே அவளுக்காக மாற்ற வேண்டி வரும். ஆனால் பலராமன் சொன்னதும் ஒரு வகையில் சரியே: நாம் என்ன தீர்மானிக்க வேண்டும் எனில், கிருஷ்ணனை அவன் தாக்கியதற்கு நாம் அவனுக்கு எவ்வகையில் பாடம் கற்பிக்கப் போகிறோம்? கிருஷ்ணன் நமக்கெல்லாம் அருமையானவன். நம் கண்ணின் கருமணி போன்றவன்.  நம்முடைய சொத்துக்களை எல்லாம் விட அவன் மதிப்பு மிக உயர்ந்தது. அவ்வளவு ஏன்? நம்முடைய உயிரை விட மேலானவன். நமக்கெல்லாம் அவன் ஓர் ரக்ஷகன்! நம்மைப் பாதுகாத்து வருகிறான். அவனைத் தாக்குபவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் இறந்தே ஆகவேண்டும். இது தான் என் முடிவு!”

பலராமன் குறுக்கிட்டான். “நிச்சயமாக! ஆம் அதுதான் என்னுடைய கருத்தும் கூட! உங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன். கோவிந்தனின் மேல் கைவைத்தவர்கள் எவராக இருந்தாலும் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் கட்டாயமாய்த் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.”

“நான் முடிவு செய்துவிட்டேன். எப்போது சத்ராஜித் தன் கைகளைக் கண்ணன் மேல் வைத்ததைக் கேள்விப் பட்டேனோ அந்த நிமிடத்திலேயே நான் செய்த முடிவு இது! சத்ராஜித்தை உயிருடன் விட்டு வைக்கக் கூடாது! இது தான் என் முடிவு. கிருஷ்ணனின் புத்திமதிகளைக் கேட்டுக் கொண்டு நான் காத்திருப்பதோ, பலராமனின்  யோசனைகளைக் கேட்டு உடனே செயல்படுவதோ எதுவும் எனக்கு முக்கியமில்லை. என் முடிவு ஒன்றே!” என்றார் சாத்யகி.

“உங்கள் கருணையும் என் மீது நீங்கள் கொண்டிருக்கும் பாசமும் இதில் வெளிப்படுகிறாது சித்தப்பா சாத்யகி அவர்களே! என்னை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். சத்ராஜித் என்னைத் தாக்கினார் என்பதை நீங்கள் உங்களையே அவர் அவமதித்தாற்போல் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் கொஞ்சம் பொறுங்கள், ஐயா! நான் அவரிடம் இருக்கும் விஷத்தை மெல்ல மெல்ல இறக்குகிறேன். அதற்கு எனக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அதை எனக்குக் கொடுங்கள். இதில் நான் தோற்றேன் எனில் நீங்கள் உங்கள் முடிவை செயல்படுத்திக் கொள்வதில் எனக்கு எவ்விதமான ஆக்ஷேபணைகளும் இல்லை!” என்றான் கிருஷ்ணன்.

“நாங்கள் இப்போது என்ன செய்யவேண்டும் என்கிறாய் கிருஷ்ணா?” என்று ராஜா உக்ரசேனர் கேட்டார்.

“பாட்டனார் அவர்களே, சத்ராஜித்தைக் குறித்து நீங்கள் அனைவரும் என்ன நினைத்தாலும் சரி. தற்காலிகமாகக் கொஞ்சம் பொறுங்கள். இந்த விஷயத்தை என்னிடம் விட்டு விடுங்கள். இதில் நான் தோற்றேன் எனில், என் அருமை அண்ணா பலராமனால் அவர் தலைச் சுக்குச் சுக்காக உடைக்கப்படுவதை நான் தடுக்க மாட்டேன். அவர் தன் கை முஷ்டிகளாலேயே சத்ராஜித்தின் தலையை உடைக்கட்டும்!” என்று கிருஷ்ணன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் உக்ரசேனரைப் பார்த்துக் கூறினான்.

“கிருஷ்ணா, கிருஷ்ணா! நான் அதைத் தான் இப்போதே செய்வதாகக் கூறுகிறேனே? ஏன் நான் இப்போதே அதைச் செய்யக் கூடாது?” என்று பலராமன் கேட்டான்.

“அண்ணா, உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். சத்ராஜித்தின் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் நான் மெல்ல மெல்ல ஒழிக்கிறேன். ச்யமந்தகத்தை அவனிடமிருந்து பெற்று அக்ரூரரின் கஜானாவில் சேர்ப்பிக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.

“உன்னால் அது ஒருக்காலும் முடியாது, கிருஷ்ணா! அவன் அதற்கு இடம் கொடுக்க மாட்டான்!” என்றான் பலராமன்.

கர்காசாரியார் குறுக்கிட்டார்:”இதை நாம் கோவிந்தனின் பொறுப்பில் விட்டு விடுவோம். இந்தச் சண்டையின் போக்கையே சத்ராஜித் கிருஷ்ணனைத் தாக்கியதன் மூலம் மாற்றி விட்டது; முற்றிலும் மாற்றிவிட்டது. கோவிந்தன் இதைக் குறிப்பாகச் செய்ததன் மூலம் அவன் மனதில் ஏதோ ஓர் திட்டம் இருப்பது புலன் ஆகிறது. இதை அவனே வரவழைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே அவனே சத்ராஜித்தைச் சமாளிக்கட்டும். அந்தப் பொறுப்பை அவனிடமே விட்டு விடுவோம். எனக்குக் கண்ணனிடம் நம்பிக்கை நிறையவே இருக்கிறது. அவன் என்ன செய்தாலும் தர்மத்தின் பாதையிலிருந்து பிறழ மாட்டான். முடிவில் தர்மமே வெற்றி பெறும்.”

உக்ரசேன மகாராஜா கூறினார்:”கிருஷ்ணா, உன்னிடம் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நீ சொல்லும்வரையிலும் நாங்கள் எவ்விதமான முடிவையும் எடுக்க மாட்டோம். சத்ராஜித்தின் விஷயத்தில் தலையிட மாட்டோம். நீ நினைப்பதை நீ முழு சுதந்திரத்தோடு உன் வழியில் செய்து முடிப்பாய் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் வழியில் நீ செல்!”


1 comment:

ஸ்ரீராம். said...

விவாதங்கள் ரொம்ப விளக்கமாக இருக்கிறதோ....!