Wednesday, November 18, 2015

பாமாவின் தனிமை!

சத்யபாமா படுக்கையை விட்டு எழுந்ததும், தன் வழக்கம் போல் கோயிலுக்குச் செல்வதற்காக அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தாள். அங்கிருந்து அவள் தன் தாயின் சகோதரியைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தாள். அவள் கிருதவர்மாவின் தாய். தன்னை அலங்கரித்துக்கொள்ளும்போதே, காலை நடந்தவை எல்லாம் அவள் கண் முன்னே திரும்பத் திரும்ப வந்து போயிற்று.அவள் தந்தை கிருஷ்ணனைப் பார்த்துக் கத்தியது, “சூரிஅ பகவானின் சாபம் உன்னைச் சும்மா விடாது!” என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணனை அவன் அமர்ந்திருந்த ஆசனத்திலே சேர்த்து அழுத்திக் கொல்ல முயன்றது! அப்போது கிருஷ்ணனின் தோள்கள் ஆசனத்தின் பின்னே சாய்ந்திருந்த விதம், அவன் தன்னிரு கரங்களால் ஆசனத்தின் கைப்பிடியை இறுகப்பிடித்திருந்த முறை! அவன் உடல் விறைப்பாகக் காணப்பட்டது! சத்ராஜித்தைத் தாக்கவேண்டும் என்னும் தன் மனோநிலையை அவன் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்த விதம்! ம்ம்ம்ம்ம்ம்…….. எப்படிப்பட்ட மனிதராலும், ஏன்! கடவுளரால் கூட இப்படியான சந்தர்ப்பங்களில் தன் மனோபலத்தால் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே! அதுவும் அவன் சத்ராஜித்தின் கரங்களால் கொல்லப்பட இருக்கையில்! நிச்சயமாய் இது எவராலும் சாத்தியமே இல்லை!

அவள் மனதின்/மூளையின் மூலை, முடுக்குகளில் எல்லாம், “ச்யமந்தகத்தை நானே எடுத்துக்கொண்டுவிடுவேன்!” என்று கண்ணன் கூறியது எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன் குரலே திரும்பத் திரும்ப அவள் காதுகளில் மோதியது! என்ன செய்யப் போகிறான் கிருஷ்ணன்? ச்யமந்தகத்தைத் தன் தந்தையிடமிருந்து பிடுங்கப் போகிறானா? அல்லது திருடப் போகிறானா? அப்போது அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. அது மிகவும் சிறந்தது என்றும் அவள் நினைத்தாள். அதாவது வழிபாட்டு அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ச்யமந்தகத்தை அவளே எடுத்துச் சென்று கண்ணனிடம் கொடுத்துவிட்டால்? இந்த நினைப்பு அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஆனால் அவளால் இதைச் செய்ய முடியாது! ஏனெனில் அவள் தந்தை பகல் முழுவதும் அதை அணிந்து கொண்டிருப்பார்; இரவானதும் அதை வழிபாட்டு அறையில் வைத்துவிட்டு அந்த அறைக்குச் செல்லும் வழியிலேயே உள்ள ஓர் அறையில் தான் படுத்துத் தூங்குகிறார். ஆகவே அவருக்குத் தெரியாமல் அவளால் எதுவும் செய்ய இயலாது. கோயிலுக்குச் செல்லும் முன்னர் தந்தையை விசாரிக்கும் தோரணையில் அவள் அவருடைய அறைக்குச் சென்றாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவல்!

அவள் தந்தை ச்யமந்தக மணிக்குத் தன் வழிபாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஓர் சிறுமேடையின் மேல் அது வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துத் தந்தையையும் விசாரித்த பின்னர் அவள் கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கிருதவர்மாவின் வீட்டிற்குச் சென்றாள். செல்லும் வழியெல்லாம் ஆங்காங்கே நிறைய மனிதர்கள் காணப்பட்டனர். தெருவோரங்களிலும், அவரவர் வீட்டின் உள்ளேயும், தாழ்வாரங்களிலும் காணப்பட்ட அவர்கள் தங்களுக்குள்ளாக ஏதோ ஆச்சரியமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவளுக்கு அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பது தெரிந்தே இருந்தது. அதே சமயம் அவளைப் பார்த்ததுமே அவர்களின் பேச்சு நின்றது. அவளையே முறைத்துப் பார்த்த வண்ணம் அனைவரும் அமைதியானார்கள். அவர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு கிருதவர்மாவின் வீட்டை அடைந்தாள் சத்யபாமா!

அங்கே சென்றதுமே கிருதவர்மாவின் வீட்டு மனிதர்கள் பாமாவைச் சுற்றிக் கொண்டனர். காலையில் அவள் வீட்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையா என விசாரித்தனர்! கிருஷ்ணன் அவர்கள் வீட்டிற்கு வந்தானா? அவள் தந்தையைச் சந்தித்தானா? மற்ற யாதவர்கள் இழந்த சொத்திற்கான நஷ்ட ஈட்டைக் கேட்டுப் பெறுவதற்காக வந்திருந்தானா? சத்ராஜித் கொடுக்க வேண்டிய பங்கைக் கேட்டானா? அவற்றை எல்லாம் மறுத்து சத்ராஜித் கிருஷ்ணனைக் கொல்ல முயன்றானா? அது உண்மையா? அப்போது பாமா உள்ளே புகுந்து தலையிட்டாளா? அதுவும் உண்மையா? சத்ராஜித்தின் தாக்குதலில் இருந்து கண்ணனை பாமா தான் காப்பாற்றினாளா? அப்போது அங்கிருந்து செல்லும் முன்னர் கிருஷ்ணன் சத்ராஜித்திடம் அவன் தானாகவே முன் வந்து ச்யமந்தக மணிமாலையை அக்ரூரரிடம் ஒப்படைக்கச் சொன்னானா? அது உண்மையா? நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொடுத்தாகவேண்டும் என்று கெடு வைத்திருப்பதும் உண்மையா?

சத்யபாமாவால் பேசவே முடியவில்லை. ஏனெனில் அனைத்தும் கசக்கும் உண்மை! நடந்தது என்னவோ உண்மை தானே! அவற்றை அவளால் மறுக்க இயலவில்லை. இதைக் கேட்டதும் கிருதவர்மா கோபத்தில் ஆழ்ந்தான். அவன் தாய்க்கும் கோபம் தான் என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது. சத்ராஜித் செய்த மன்னிக்க முடியாத குற்றம் அது என்பதை பாமா ஏற்கெனவே புரிந்து கொண்டிருந்தாள். யாதவர்களின் வீரதீரக் கதாநாயகனும், அவர்களின் கண்ணின் கருமணி போன்றவனும் ஆன கிருஷ்ணனை சத்ராஜித் தாக்க முயன்றது மிகவும் மன்னிக்க முடியாக்குற்றம்!  யாதவர்கள் அனைவரின் இந்த மனோபாவத்தை அறிந்து கொண்ட சத்யபாமாவால் பேசவே முடியவில்லை. அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கிருதவர்மாவின் வீட்டிலிருந்து விரைவில் வெளியேறிய அவள் தன் வீட்டுக்கு வந்ததும் தன் வீட்டு மனிதர்களின் போக்கைக் கண்டு திகைத்தாள். அனைவரும் கூடிக் கொண்டு மெல்லக் கிசுகிசுப்பான தொனியில் பேசிக் கொள்வதையும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டாற்போன்ற அவர்கள் நடவடிக்கையையும் பார்த்த அவளுக்குப் பேச்சே வரவில்லை. ஏதோ பிரளயம் வந்துவிட்டாற்போல் அவர்கள் நடந்து கொண்டனர்.

இரவை சத்யபாமா எப்படிக் கழித்தாள் என்றே கூறமுடியவில்லை. இரவு முழுவதும் குளிரால் நடுங்குவது போல் நடுங்கிக் கொண்டிருந்தாள். மிகவும் விரக்தி அடைந்து போயிருந்தாள். காலையில் நடந்த சம்பவங்களினால் அவளுடைய கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் செத்து விட்டது. இவ்வளவிற்குப் பிறகும் கிருஷ்ணன் அவளைக் கல்யாணம் செய்து கொள்வான் என்னும் நம்பிக்கை அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. இப்போது இருக்கும் நிலையில் அவளுக்கு உதவக் கூட யாருமில்லை! ஆலோசனைகள் சொல்லவும் எவருமில்லை! தனியாக விடப்பட்டிருக்கிறாள் அவள் நம்பிக்கை, அவள் ஆசை, அவள் கனவு, அவள் வாழ்க்கை அனைத்தும் பொடிப் பொடியாகச் சுக்குச் சுக்காகச் சிதறிப் போய்விட்டது! எல்லாம் யாரால்? அவள் தந்தையால்! அவருடைய அசிங்கமான மோசமான நடவடிக்கையால்!

மறுநாள் இந்த வதந்தி கை, கால்கள் முளைத்துக் கொண்டு அருமையான விகிதாசாரத்தில் துவாரகை முழுவதும் பரவி இருந்தது. அவளுடைய சேடிப்பெண் மூலம் அவள் சுபத்ராவுக்கு ஓர் செய்தி அனுப்பி இருந்தாள். சுபத்ராவைக் கிருதவர்மாவின் வீட்டில் சத்யபாமா சந்திக்க விரும்புகிறாள். இது தான் அந்தச் செய்தி! மதியம் போல் அவள் கிருதவர்மாவின் வீட்டிற்குச் செல்கையில் சாலை முழுவதும் சிறு சிறு குழுக்களாக மனிதர்களைக் கண்டாள். அனைவரும் ஏதோ போருக்கு ஆயத்தமாவதைப் போல் ஆயுதபாணிகளாகக் காட்சி அளித்தனர். அனைவர் கண்களிலும் போர் வெறி தெரிந்தது. அதோடு இல்லாமல் யாதவர்களின் முக்கியத் தலைவர்களில் சிலர் உக்ரசேனரின் மாளிகை நோக்கி  நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தன் தந்தையின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தவே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பாமா புரிந்து கொண்டாள். எப்படியோ ஒருவாறாக அவள் கிருதவர்மாவின் வீட்டை அடைந்தாள். அங்கே சுபத்ரா அவளுக்காகக் காத்திருந்தாள்.

ஆனால் சுபத்ராவின் முகத்தில் கோபம் கூத்தாடியது. எப்போதும் சிரித்துப் பேசி வேடிக்கையும், விளையாட்டுமாக இருக்கும் சுபத்ரா அன்று கோபத்தின் உச்சியில் இருந்தாள். மிக மிகக் கடுமையான கோபத்தில் இருந்த சுபத்ராவைக் கண்டதுமே பாமாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதோடு இல்லாமல் சுபத்ரா சொன்னதைக் கேட்ட பாமாவுக்கு உயிரையே விட்டு விடலாம் என்றே தோன்றியது. சுபத்ரா பாமாவின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை என்றும் அவள் இப்போது வந்ததின் காரணமே அவள் தந்தையால் அவள் அருமைச் சகோதரன் கொல்லப்பட இருந்ததைத் தவிர்க்க வேண்டியே வந்ததாகவும் தெரிவித்தாள். பாமா சுபத்ராவைச் சமாதானம் செய்ய முயன்றாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

பாமாவின் நிலை எப்போதுதான் சீராகுமோ!