Thursday, October 29, 2015

கண்ணா! எனக்கு வாழ்வு கொடு!

“ஐயா, நீங்கள் உங்களைத் தவிர மற்றவர் எவரைக் குறித்தேனும் எப்போதேனும் சிந்தித்திருக்கிறீர்களா?” என்று சாந்தமாகக் கேட்டான் கிருஷ்ணன். “ஏன்? எதற்காக நான் மற்றவரைக் குறித்துக் கவலைப்பட வேண்டும்?” சத்ராஜித் கோபத்துடனும், திமிருடனும் கேட்டான். “ஆம், அதைத் தான் நானும் காண்கிறேன். உங்கள் பார்வையில், உங்கள் சொந்த சந்தோஷத்தைவிடவும் வேறெதுவும் உயர்வாகத் தெரியவில்லை.” என்ற கிருஷ்ணன் குரலில் கவலையின் தீவிரம் தெரிந்தது. “நான் என்னுடைய சந்தோஷத்தை மட்டும் தான் நினைக்க முடியும். அதைக் குறித்தே கவலைப்படவும் முடியும். மற்றவர் சந்தோஷத்தைக் குறித்து எனக்கு என்ன? அவர்களைக் குறித்து அவர்களே கவலைப்படவேண்டும்! நான் ஏன் கவலைப்பட வேண்டும்?”
“ஐயா, நீங்கள் எதைத் தேடி அலைகிறீர்கள்? ஏற்கெனவே உங்களிடம் இருப்பது போதுமென உங்களுக்குத் தோன்றவில்லையா? தெரியவில்லையா?”
“சூரிய தேவன் எனக்கு இந்த ச்யமந்தக மணியை அளித்தான். இது ஒவ்வொரு நாளும் பொன்னை வாரி வழங்கக் கூடியது. இதன் மூலம் என் கௌரவமும் என் சந்தோஷமும் அதிகரிக்கிறது. என்னையும் என் குடும்பத்தையும் எப்போது சந்தோஷத்தில் வைத்திருக்கிறது. மற்றவர்களை விட நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் இங்கே வந்து யாகங்கள் செய்யும் வேத பிராமணர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகப்பொன்னையும், பொருளையும் நான் வழங்குகிறேன். ஆகவே அவர்கள் என்னுடைய வாழ்க்கை செம்மையாகவும், சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டிப் பிரார்த்தனைகள், வழிபாடுகள் செய்கின்றனர். ஒவ்வொரு யாகத்திலும் நான் கொடுக்கும் அர்க்கியங்களைப் போல் இந்த சௌராஷ்டிரத்தில் எவரும் அளிக்க முடியாது. அவ்வளவு சிறப்பாக இதுவரை கண்டிராத அளவுக்குப் பிரம்மாண்டமாகச் செய்கிறேன்.” என்றபடி தன் உதடுகளைக் கோணலாக மடித்துக் கொண்டான். வக்கிரமான அவன் மனபாவத்தை முகம் காட்டியது. அதே கோபத்தோடு அவன் மேலும் பேச ஆரம்பித்தான். அப்போது அவன் முன்பற்களில் சில இல்லை என்பதைக் கிருஷ்ணன் கண்டான். அது வேறு அவன் வாயைத் திறக்கையில் மேலும் பயங்கரத்தை ஏற்படுத்தியது.
“ஹூம், என்னுடைய எதிரிகளை அழித்தொழிக்க வேண்டி நான் செய்வது……..” என்று இழுத்தவன் கிருஷ்ணனைப் பார்த்து, “ நீ செல்வத்தை இகழ்ச்சியாகக் கருதுகிறாய். நான் அப்படி அல்ல! அதை உயர்வாகக் கருதுகிறேன்.” என்றான். கிருஷ்ணன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“நான் ஒருபோதும் செல்வத்தை இகழ்வாகக் கருதியதில்லை; இனியும் கருத மாட்டேன். நான் செல்வத்தைத் தன்னுடைய சொந்த சுகபோகங்களுக்கு மட்டும் பயன்படுத்துபவர்களை மட்டுமே இகழ்ச்சியாகக் கருதுகிறேன். ஒருவரிடம் சொத்துக்கள் இருப்பது அவர்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கு அல்ல. அப்படிப் பயன்படுத்துவதை முட்டாள்தனம் என்றே நான் கருதுகிறேன். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன். ஒரு வேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; அல்லது தெரிந்திருக்கலாம்.கடவுளால் நமக்கு அளிக்கப்பட்ட இந்த மாபெரும் செல்வத்தின் மீது தர்மத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது என்றும் தர்மத்திற்காகவும் இந்தச் செல்வம் செலவிடப்படவேண்டும் என்றும் அதற்கான உரிமை தர்மத்திற்கும் உண்டெனவும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; புரிந்திருக்கலாம்; அதை ஒப்புக்கொள்ளலாம்.” என்றான் கிருஷ்ணன்.
“வாசுதேவா, நான் என்னுடைய நிலையைத் தெளிவாக உன்னிடம் கூறிவிட்டேன். என்னுடைய தர்மம் என்னவென்று எனக்குத் தெரியும். அது என் செல்வத்தை நான் பெருக்கிக் கொள்வது மட்டுமே ஆகும். எவருடைய கற்பனைக்கும் எட்டாத உயரத்திற்கு என் செல்வம் என்னைக் கொண்டு சேர்க்கும். மற்ற எவரையும் விட நானும் என் குடும்பமும் வாழ்க்கையை மிக நன்றாக ஆனந்தமாக அனுபவிப்போம்.” என்று சொன்ன சத்ராஜித்தின் குரலில் தெரிந்த மிதமிஞ்சிய கர்வம் கிருஷ்ணனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. சற்று நேரம் அவன் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தான். அவன் முகத்தில் எப்போதும் நிலை கொண்டிருக்கும் சிரிப்புக் காணாமல் போனது. பின்னர் மெல்ல சத்ராஜித்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“ஐயா, உங்கள் தற்பெருமையை விடவும், சுயப் புகழ்ச்சியை விடவும் உயர்ந்ததாக ஒன்று இவ்வுலகில் இருப்பதைத் தாங்கள் உணர்வீர்களா? அதைக் குறித்து அறிவீர்களா?” என்று கிருஷ்ணன் சத்ராஜித்தைப் பார்த்துக் கேட்டான். கிருஷ்ணனையே கோபத்துடன் முறைத்துப் பார்த்தான் சத்ராஜித். சில நிமிடங்கள் சஎன்றன. அதன் பின்னர் கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவா! நீ மற்றவர்க்கு வேண்டுமானால் ஒரு கடவுளாக இருக்கலாம். உன்னைப் புகழ்ந்து போற்றித் துதித்துக் கொண்டு உன் பின்னே வருபவர்களுக்கு நீ ஒரு கடவுளாக இருக்கலாம். ஆனால் உன்னைப் போன்ற ஒருவன் வாயால் என்னைக் குறித்த விமரிசனங்கள் செய்யப்படுவதை நான் சிறிதும் விரும்பவில்லை. ஆகவே நீ என்னைக் குறித்து எதுவும் பேசாதே!” என்றான். அவன் முகத்தில் தெரிந்த கோபத்தை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்திலேயே கிருஷ்ணன் எதிர்கொண்டான். “ஐயா, உங்களைக் குறித்த விமரிசனங்களை நீங்கள் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். அதுவே உங்களுக்கு நன்மை பயக்கக் கூடியது! இது தான் உங்கள் கடைசி பதிலா? அப்படி எனில், நான் இங்கே உட்கார்ந்து கொண்டு வெட்டிப் பேச்சுக்களைப் பேசிப் பொழுதைக் கழிக்க விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.  யாதவர்களால் தர்மம் நிலைநாட்டப்படும். அது மட்டும் நிச்சயம்!” என்றான்.

பின்னர் தன் தலைப்பாகையைச் சரி செய்து கொண்டான் கிருஷ்ணன். தன் ஆசனத்திலிருந்து விடை பெறும் பாவனையில் எழுந்து கொண்டான். அப்போது திடீரென சத்ராஜித்தின் முகம் மாறியது. அவன் மொத்த உடல் மொழியும் மாறத் தொடங்கியது. ஒரு தேர்ந்த நடிகனைப் போல் தன்னுடைய மனோபாவத்தை அவன் மாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டான். அவன் முகத்தில் இதுவரை இல்லாத சிரிப்பு மலர, கிருஷ்ணனைப் பார்த்து ஆசனத்தில் அமரும்படி வேண்டிக் கொண்டான். அதைப் பார்த்து வியந்த கிருஷ்ணன் ஆசனத்தில் அமர்ந்தான். அப்போது சத்ராஜித் பேச ஆரம்பித்தான்.

“வாசுதேவா, யாதவர்களுடைய தர்மம் என்னவென்று எனக்குத் தெரியாது; உன்னுடைய சொந்த தர்மம் என்னவென்றும் நான் அறியேன். அது எனக்குத் தெரியவும் வேண்டாம். தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. ஆனால் மற்ற யாதவர்களால் கொடுக்கப்பட்ட என்னுடைய பங்குச் செல்வத்தை வேண்டியே நீ வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்றான் சத்ராஜித். “உங்களுக்கு அது புரிந்திருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி ஐயா!” என்றான் கிருஷ்ணன்.

“வாசுதேவா, நீ உன்னுடைய தர்மம் என்று எதைச் சொல்கிறாயோ அதை நிறைவேற்ற நிலை நாட்ட என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை நான் சொல்லுகிறேன் கேள்! உன் எதிரே இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழியில் நீ எனக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்கலாம். நீ துவாரகைக்குத் திரும்புகிறாய் என்னும் செய்தி கிடைத்த அந்த நாளில் இருந்தே இதற்கான சந்தர்ப்பம் உருவாகும், நீ உருவாக்குவாய் என்பதை எதிர்பார்த்து நான் அதற்கான தக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்.” இந்த இடத்தில் சற்று நிறுத்திய சத்ராஜித் தன் கர்வம் பொங்கும் முகத்தில் புன்சிரிப்போடு கிருஷ்ணனைப் பார்த்தான். அதோடு நிற்காமல் எதிரே தெரிந்த பச்சைப்பசும்புற்கள் நிறைந்த மைதானத்தைச் சுட்டிக் காட்டினான். அங்கே அவனுடைய விலை உயர்ந்த குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இதன் மூலம் தன் குதிரைப்படை வளத்தைச் சொல்கிறான் என்பதைக் கிருஷ்ணனும் அறிந்தான்.

“ஆம், நீங்கள் ஒரு மோதலுக்குத் தயாராகி வருகிறீர்கள் என்பதை நானும் அறிவேன்.” என்றான் கிருஷ்ணன். பின்னர் மெல்லத் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் பேச ஆரம்பித்தான். ஆனால் அவன் குரலில் உறுதியும் தெரிந்தது. ஆழ்ந்து ஆராய்ந்து ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதைச் சொல்லும் தொனியும் தெரிந்தது. தன் ஒவ்வொரு வார்த்தைகளையும் திட்டமிட்டு அளந்து பேசினான். யாதவர்களின் மேல் மோதல் ஏற்படுத்தப்பட்டால் அதை நாங்கள் எதிர்கொள்வோம். தைரியமாக எதிர்கொள்வோம். தர்மத்தைக் காக்கவேண்டி அது ஏற்பட்டால், அதை நாங்கள் எதிர்த்து நிற்போம். தர்மம் அதைத் தேவை எனக் கருதினால் நாங்கள் அதை எதிர்கொள்வோம். நான் சொல்வது சத்தியமான வார்த்தை! அதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இறுதியில் வெல்லப்போவது நீங்கள் அல்ல! அதுவும் நிச்சயம்!” என்றான். பின்னர் திடீரென நினைத்துக் கொண்டவன் போல, “அது என்ன இன்னொரு வழி? அதைக் குறித்து நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே?” என்றும் கேட்டான்.

“அடுத்த வழியா? அது என்னவெனில் என்னுடைய பங்குச் செல்வத்தை நான் இழந்தே ஆகவேண்டுமெனில் அதற்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்! அதைக் கொடுங்கள்!” என்றான் சத்ராஜித். “விலை? என்ன விலை? அதைச் சொல்லுங்கள்! யாதவர்கள் உங்களுக்கு என்ன விலை கொடுத்தால் நீங்கள் உங்கள் பங்குச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பீர்கள்? அது சரி, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் சத்ராஜித் அவர்களே! இந்த பேரத்தைப் பேசுவதன் மூலமாக நீங்கள் மற்ற யாதவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள நினைக்கிறீர்கள்! அதை நினைவில் இருத்தவும்!” என்றான் கிருஷ்ணன்.

“ஆம், அப்படித்தான், என் விலையும் அப்படி ஒன்றும் கடினமான ஒன்றல்ல! எளிதில் கொடுக்கக் கூடிய ஒன்றே! என் ஒரே மகள், அருமை மகள் சத்யபாமாவை உன் அருமைச் சிநேகிதன் சாத்யகி, யுயுதானா சாத்யகி மணந்து கொள்ள வேண்டும். சாத்யகனிடம் உனக்கும், உன் தந்தை வசுதேவனுக்கும் உள்ள செல்வாக்கை நான் நன்கறிவேன். சாத்யகனை என் மகளை மருமகளாக ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துங்கள். அவனை இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வையுங்கள்!”

கதவுகளுக்குப் பின்னர் நின்று கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சத்யபாமா மயக்கமுறும் நிலைக்குப் போய்விட்டாள். அவள் தந்தையின் பேரம் அவளை அதிர வைத்தது. அவள் மெல்லக் கதவைக் கொஞ்சம் உள்ளே பார்க்கும்படியாகத் திறந்தாள். அப்போது தான் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைச் சிறிதும் விடாமல் கேட்க முடியும். அவள் தலைவிதியையே நிர்ணயிக்கும் இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவை அறிய அவள் மிகவும் ஆவலுடனும், ஆத்திரத்துடனும் காத்திருந்தாள்.

“சாத்யகி உங்கள் மகளை மணக்க விரும்பவில்லை. அவன் தற்சமயம் திருமணத்தையே விரும்பவில்லை!” என்றான் கிருஷ்ணன். “அது உங்கள் சொந்த விஷயம்! எனக்கு அதில் சம்பந்தம் ஏதும் இல்லை! என்ன இருந்தாலும் அவன் உன்னுடைய சிறந்த சிநேகிதன்!” என்று கொஞ்சம் வித்தியாசமான குரலில் கூறினான் சத்ராஜித். மேலும் தொடர்ந்து, “சத்யபாமாவை மனைவியாக ஏற்கும்படி அவனிடம் கூறு. உன் நட்பை வைத்து அவனை வற்புறுத்து. நிச்சயமாக என் மகள் ஓர் நல்ல மனைவியாக இருப்பாள். அதற்கு நான் உறுதிமொழி தருகிறேன்.” என்றான் சத்ராஜித்.

கிருஷ்ணன் இதற்குத் தரப்போகும் பதிலில் தான் தன் வாழ்க்கையே அடங்கி இருப்பதாக வெளியே காத்திருந்த சத்யபாமா நினைத்தாள். தன் மனதினுள் மானசிகமாகப் பிரார்த்தனைகள் செய்தாள். “கிருஷ்ணா, கிருஷ்ணா, ஓ, கோவிந்தா! நீ ஒரு கடவுள் என அனைவரும் சொல்கின்றனரே! அது மட்டும் உண்மையானால், தயவு செய்து, ஆம், தயவு செய் கிருஷ்ணா! என்னுடைய இந்தப் பிரார்த்தனைகள் உன் செவிகளில் விழட்டும்! சாத்யகியின் மனைவியாக நான் ஆவதைத் தடுப்பது இப்போது உன் கரங்களில் தான் இருக்கிறது!” என்று மௌனமாகப் பிரார்த்தித்தாள்.

கிருஷ்ணனோ சத்ராஜித்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்னர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைச் சொல்லும் தொனியில் பேச ஆரம்பித்தான். “மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! சாத்யகி ஏன் உங்களை மணக்க மறுக்கின்றான் என்பதற்கான காரணத்தை நீங்கள் கண்டு பிடித்தீர்களா? அதற்கான முயற்சிகளைச் செய்தீர்களா?” என்று கேட்டான்.

“ஓ, எனக்கு அது நன்றாகவே தெரியும். அந்த முட்டாள் சாத்யகன், என்னை விட அவன் மிகப் பெரிய தலைவன், சிறந்த தலைவன் என்று நினைக்கிறான். அதனால் என்னை அவமானப்படுத்துவதற்காகவே இந்தத் திருமணத்தை ஏற்க மறுக்கிறான்.  அவன் கண்களின் முன்னால் நான் தீண்டத்தகாதவனாகத் தெரிகிறேன். என் மகள் உயர்ந்த யாதவ குலத்தில் தான் பிறந்திருக்கிறாள் என்பதை அவன் ஏற்க மறுக்கிறான். அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அவன் மகனைப் போல் என் மகளும் ஒரு யாதவகுலப் பெண் தான் என்பது! அவனுடைய இந்தச் சூழ்ச்சியை நான் முறியடிப்பேன். அவன் தற்பெருமையை அடியோடு அழிப்பேன்!” என்றான் சத்ராஜித். கிருஷ்ணன் சிரித்தான். “நிச்சயமாக நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தத் திருமணம் நடைபெறாமல் போனதற்கு இதைவிட வேறு காரணங்கள் நிச்சயம் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? நிச்சயமாய் வேறு காரணங்கள் தான்!” என்றான் கிருஷ்ணன்.

1 comment:

ஸ்ரீராம். said...

ஆஹா..... நல்ல இடத்தில் 'தொடரும்' வந்து விட்டதே. கிருஷ்ணன் அறிவானா பாமாவின் காதலை?