Thursday, October 1, 2015

பாமாவின் துக்கம்!

“அப்படி எனில் கேள், பாமா! உனக்குத் தெரிந்திருக்கும் எப்படி என! நாங்கள் உன் தந்தை, உறவினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களை அணுகினோம். அப்போது அவர்கள் தங்கள் சொத்துக்களை சம்பாதித்த சொத்துக்களை எக்காரணம் கொண்டும் இழக்க முடியாது எனத் தெரிவித்து விட்டனர்.”

“ஆம், எனக்குத் தெரியும், மதிப்புக்குரிய அக்ரூரரும், நீயுமாகத் தான் என் தந்தையைச் சந்தித்தீர்கள். அந்த அறைக்குப் பின்னர் இருந்து தான் நான் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு என்ன இப்போது? உத்தவன் என்ன சொன்னான் கண்ணனிடம்?” என்று கேட்டாள் பாமா.
“உன் தந்தையும், மற்றவர்களும் எதுவும் கொடுக்க விரும்பவில்லை என்பதை உத்தவன் எடுத்துச் சொன்னான். ஆகவே அதை ஈடுகட்டவேண்டி சில யாதவத் தலைவர்கள் தாங்கள் ஏற்கெனவே கொடுத்ததை விட அதிகமாகக் கொடுக்க வேண்டி இருந்தது. அது அவர்கள் மொத்த சொத்து மதிப்பில் பாதியாகி விட்டது. அதே சமயம் எங்கள் குடும்பம், ராஜா உக்ரசேனரின் குடும்பம், வசுதேவரின் குடும்பம் ஆகியோர் மொத்த சொத்தையும் கொடுத்துவிட்டோம். அப்போது தான் மதிப்பிடவேண்டிய அளவு செல்வம் பாண்டவர்களுக்குப் போய்ச் சேரும். அது மட்டுமா? தேவகி அன்னை, வைதர்பியான ருக்மிணி, ஷாய்ப்யா ஆகியோர் தங்கள் நகை, ஆபரணங்கள், ரத்தினங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டனர்.  கிருஷ்ணன் அளித்த வாக்குறுதி எழுத்துக்கு எழுத்து அப்படியே நிறைவேறியாக வேண்டும் என்பதில் அவர்கள் திடமாக இருந்தனர்.”

“ஆஹா, மஹாதேவா! மஹாதேவா! அப்படியா நடந்தது?” பெருங்குரலில் ஓலமிட்டாள் பாமா. “ஏன், நீ பார்க்கவில்லை? யாதவத் தலைவர்களின் பெண்கள், மனைவிமார், குழந்தைகள் அனைவரும் குறைவாக மிகக் குறைவாகவே ஆபரணங்களை அணிந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் காணவில்லையா நீ? அதே சமயம் நீ? எப்படி இருந்தாய்? நினைவில் இருக்கிறதா?” என்று கேட்டான் சாத்யகி.

“அதற்குக் கிருஷ்ணன் என்ன சொன்னான்?”

“கிருஷ்ணன் உத்தவன் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான். அவன் முகம் இறுகி உதடுகளும் அழுத்தமாக மூடிக் கொண்டன. உத்தவன் ஏன் அதை முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்டான்! அதாவது யாதவர்கள் அளித்த பொருளோடு உத்தவன் இந்திரப் பிரஸ்தம் வந்தபோதே இதைக் குறித்து ஏன் சொல்லவில்லை என்று கேட்டான். அதற்கு உத்தவன் அக்ரூரரும், உத்தவனும் யாதவர்களின் இந்தக் குறைபாட்டைக் குறித்து ஆர்யவர்த்தத்து மனிதர்கள் முன்னர் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்றும் யாதவர்களில் சிலர் கண்ணன் சொல்வதைக் கேட்காமல் இருப்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் சொன்னான்.”

“அப்படியா? அவன், அதுதான் கிருஷ்ணன், என் தந்தையிடம் மிகவும் கோபமாக இருக்கிறானா?” இதைக் கேட்கையிலேயே சத்யபாமாவின் மனம் வெதும்பி சோகத்தில் ஆழ்ந்தது. “அதெல்லாம் தெரியவில்லை! அவன் சொன்னதெல்லாம் இது தான்: “இப்போது எனக்கு எல்லாம் புரிகிறது!” என்றான். “ என்று சாத்யகி மறுமொழி கூறினான்.  “எனக்கு? என் விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது?” என்று வினவினாள் பாமா. “அதன் பிறகு எங்களில் ஒருவருக்கும் உன்னைக் குறித்து எதுவும் பேசத் தோன்றவில்லை”

“ஆனால் இன்று காலை, கிருஷ்ணன் என்னிடம் அன்பாகவே பேசினான்!” என்றால் பாமா யோசனையுடன். அவள் குரலில் எங்கோ தொலைதூரத்தில் தெரியும் சின்னதொரு நம்பிக்கைக் கோட்டைப் பற்றிக்கொள்ளும் ஆவல் தொனித்தது. ஆனால் சாத்யகி அடுத்துச் சொன்னது அவளை நம்பிக்கை இழக்க வைத்தது. “அதெல்லாம் அவனுக்கு இங்குள்ள நிலைமை பற்றித் தெரியும் முன்னர் பேசினது!” என்றான் சாத்யகி. “இப்போது என்ன செய்யலாம்! நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?” சற்றும் நம்பிக்கை இல்லாமல் ஏமாற்றத்தின் எல்லையில் நின்று கொண்டு சத்யபாமா கேட்டாள்.

“ம்ம்ம்ம்ம்? பாமா! இப்போது உள்ள நிலைமையில் நம்மால், அதாவது என்னால் எதுவும் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியும் என்று தெரியவில்லை. உன் இடத்தில் நான் இருந்தேன் எனில் எப்போதோ கிருஷ்ணனை அடையும் எண்ணத்தையே விட்டு விடுவேன்.”  சத்யபாமாவின் மனம் சுக்குச் சுக்காக உடைந்தது.

அவ்வளவில் அவள் அங்கிருந்து தன் வீட்டிற்குச் சென்றாள். அவள் மனமும் உடலும் பரிதவித்தன. தன் கனவுகள் அனைத்தும் நொறுங்கிவிடுமோ எனப் பயந்தாள். கண்ணன் அவளை ஏற்கப் போவதில்லை. நிரந்தரமாக ஏற்க மாட்டான்! இந்த உண்மை அவளைச் சுட்டெரித்தது. அவள் தந்தையால் வந்தது அனைத்தும். அவளுக்கிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் தகர்த்து எறிந்துவிட்டார். அவனை அடையும் அனைத்து வழிகளையும் மூடிவிட்டார். அவள் மனதில் அப்போதிருந்த நிலைமையில் அவள் செல்லப் பூனையான ஊரியின் மெல்லிய “மியாவ்” குரல் கூட அவளுக்குக் கேட்கவில்லை. ஆனால் அந்தப் பூனையோ அவளுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தது. அவளுடன் இரவு உணவை உண்ணக் காத்திருந்தது. ஆகவே பாமா சமையலறைக்குச் சென்று ஊரிக்காகக் கொஞ்சம் பாலை எடுத்து வந்தாள். அவளுக்குப் பசியே இல்லை. அல்லது சாப்பிடும் மனநிலையில் இல்லை. அவளுடைய கிருஷ்ணன் அவளுக்குக் கிடைக்க மாட்டான்! இதை விடப்பெரிய கொடுமை வேறென்ன வேண்டும்! அவள் மனமே வெறுமையாகத் தோற்றியது


அவளுக்கு. அவள் இதயத்தையே காலி செய்து விட்டாற்போல், ஏன் இதயம் இருந்த இடமே காலியானாற்போல் தோன்றியது அவளுக்கு. வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் படுக்கச் சென்றாள்; ஆனால் தூக்கம் வரவில்லை.
அவள் அருகே படுத்திருந்த அவள் செல்லப் பூனை ஊரி நன்கு உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் பாமா விம்மி விம்மி அழ ஆரம்பித்ததும் அது தன் கண்களைத் திறந்து அவளையே பார்த்தது. எழுந்து தன் பின்னங்காலில் நின்றவண்ணம் முன்னங்கால்களில் ஒன்றை அவள் கைகள் மேல் ஆறுதல் சொல்லும் பாவனையில் வைத்தது. பாமா அதைத் தட்டிக் கொடுத்தாள். ஊரியும் மீண்டும் அவளருகே படுத்தது. ஆனால் பாமாவின் உடல் அடுத்தடுத்த விம்மல்களால் குலுங்கியது. அவளால் தன் சோகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளையும் அறியாமல் ஊரியைக் கட்டி அணைத்த வண்ணம், “ஊரி, ஊரி, இனி எனக்குக் கல்யாணம் என்பதே இல்லை! கிருஷ்ணன் கிடைக்கவில்லை எனில் திருமணத்தால் என்ன பயன்? ஊரி, ஊரி! இந்த உலகமே கிருஷ்ணன் ஒருவன் இல்லாமல் எப்படிக் காலியாக மனிதர்களே இல்லாமல் ஆகிவிட்டது! பார்த்தாய் அல்லவா?” என்றாள்.

அப்போது அந்த அறைக்கு வெளியே இருந்த தாழ்வாரத்தின் வழியே சென்று கொண்டிருந்த பங்ககராவுக்கு பாமா அவள் அறையில் விம்மி விம்மி அழும் சப்தம் கேட்டது. பதறிய அவன் உடனே அந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். பாமாவின் தோள்களின் மேல் அன்பாகத் தன் கைகளை வைத்துக் கொண்டு, “பாமா, என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இப்படி அழுகிறாய்?” என்று கேட்டான்

“நான் செத்துப் போக விரும்புகிறேன்.” என்ற பாமா தன் இதயமே நொறுங்கி விட்டாற்போல் அழுதாள்! “சகோதரா! அவன்,கிருஷ்ணன் என்னை இனி நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டான்!” என்றாள் விம்மும் குரலில். “முட்டாள், முட்டாள்! நான் எத்தனை முறை உனக்கு எச்சரிக்கை கொடுத்தேன்! நீ தான் கேட்காமல் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தாய்! கிருஷ்ணனை நீ அடைய வேண்டுமெனில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. நான் யோசிக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமானது இல்லை. “ என்றான். “தெரியும், தெரியும்! எனக்கு நன்றாகத் தெரியும்!” என்ற வண்ணம் பாமா இன்னும் சோகத்துடன் தலையணையில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.


2 comments:

ஸ்ரீராம். said...

அச்சச்சோ!

வல்லிசிம்ஹன் said...

கண்ணனுக்கு நேர்ந்த அவமானம் பாமாவுக்கும் நேர்ந்தது போலத்தானே. மீண்டு விடுவாள் பாமா.