Thursday, July 23, 2015

கனவு நகரம் நிர்மாணிக்கப் போகும் இடம்!

கிருஷ்ணன் தோள்களில் தன் கரங்களை அன்புடனும், ஆதரவுடனும் வைத்த பீமன், “கிருஷ்ணா! அந்தக் கனவு நகரை நாம் எவ்விதம் நிர்மாணிக்கப் போகிறோம்? நீ எல்லாவற்றையும் யோசித்து வைத்திருக்கிறாய் போல் இருக்கிறதே!” என்று கேட்டான். தன் தலையைத் தடவிக் கொண்டான் கிருஷ்ணன். பின்னர் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின்னர் கனவில் பேசுவது போல் பேச ஆரம்பித்தான்.” நான் உன் இடத்தில் இருந்தால் ஹஸ்தினாபுரத்தில் இருந்து தொலைதூரத்தில் அந்த நகரை நிர்மாணிப்பேன்.” என்றான். “நீ சொல்வது சரியே கிருஷ்ணா! துரியோதனனின் நிழல் கூட அங்கே விழக் கூடாது! அப்படி ஓர் இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்.” என்றான் பீமன்.

“யமுனையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? யமுனையின் ஒவ்வொரு அலையையும் நான் நன்கறிவேன். நீர் மட்டம் எப்போது உயரும், எப்போது தாழும் என்பதிலிருந்து, எப்போது வெள்ளம் வரும் நேரம், வடியும் நேரம் என அனைத்தும் அறிவேன்.  நான் யமுனையிடம் மிகுந்த அன்பு செலுத்துகிறேன். யமுனையின் கரையில் உள்ள காடுகள் அனைத்தும் எனக்குப் பழக்கமானவை. அதன் ஒவ்வொரு செடியையும், மரத்தையும் நான் நன்கறிவேன். ஒவ்வொரு மூலை முடுக்கையும் நன்கு கவனித்து வைத்திருக்கிறேன்.”

“கிருஷ்ணா, கிருஷ்ணா! நீ சொல்வதைப் பார்த்தால் மத்ராவை மீண்டும் நிர்மாணிக்கச் சொல்கிறாய் எனத் தோன்றுகிறதே! அப்படியா?” என்றான் பீமன்.

“ஆஹா! அது எங்கனம்? அது யாதவர்களின் நகரம்! நான் பாண்டுவின் குமாரர்களுக்கென ஒரு தனி நகரத்தை நிர்மாணிக்கச் சொல்கிறேன்.”

“ஆனால் அது எங்கே அப்பா?”

“ம்ம்ம்ம், என்னிடம் மணிமான் ஓர் விஷயம் சொன்னான். உன்னுடைய முன்னோர்கள் ஒரு சமயம் காண்டவப்ரஸ்தம் என்னும் பகுதியில் வசித்திருக்கிறார்கள். அதை மணிமான் என்னிடம் உறுதி செய்தான். இப்போது அது நாடாக இல்லை. காடாக உள்ளது. “

“கிருஷ்ணா, எனக்குள் மீண்டும் சந்தேகம் முளை விட்டு விட்டது! நீ உண்மையாகவே சொல்கிறாயா? அல்லது என்னை முட்டாள் ஆக்கப் பார்ர்க்கிறாயா?” ஆனால் இதைச் சொன்னபோது அவன் சிரித்த விதத்தில் இருந்து அவன் கிருஷ்ணனைச் சீண்டுவதற்குக் கேட்கிறான் என்பதும் அவனுக்குக் கிருஷ்ணனிடம் முழு நம்பிக்கை வந்து விட்டதும் புரிந்தது.

“என் பேச்சுக்கு ஒப்புக் கொள் பீமா! நான் உன்னுடனும் நம் நண்பர்கள் அனைவருடனும் வருகிறேன். ஒரே வருடத்திற்குள் நாம் அனைவருமாக அங்குள்ள காட்டை அழித்து நகரை நிர்மாணிப்போம்.”

“கிருஷ்ணா, அப்படி எனில் எனக்கு உன் முழு மனப்பூர்வமான சம்மதத்தைக் கொடு! அப்படிச் செய்வதாக உறுதி மொழி கொடு!” என்று தன் வலக்கையை அவன் முன் நீட்டினான் பீமன். “ஓஹோ,, பீமா! நான் சத்தியம் செய்கிறேன்!” என்ற வண்ணம் அவன் கரங்களில் ஓங்கி அடித்துத் தன் உறுதிமொழியைத் தந்தான் கிருஷ்ணன். துவாரகையைக் கட்ட யாதவர்களுக்கு எப்படி உதவினேனோ அவ்வாறே உனக்கும் நான் உதவுவேன். ஆனால் ஒரு விஷயம் பீமா! இதை உன் நன்மைக்காக மட்டும் நான் செய்யவில்லை. இதில் என் நன்மையும் அடங்கி உள்ளது. ஏனெனில் நான் இப்படிச் செய்யவில்லை எனில் ஆர்யவர்த்தத்தில் நான் தோற்றவனாகவே கருதப்படுவேன். ஆர்யவர்த்தத்தில் எபோதும் தர்மத்தின் ஆட்சியே நடைபெறவேண்டும். இல்லை எனில் மனிதன் தடம் புரண்டு விடுவான். இவ்வுலக மனிதர்களைக் காப்பாற்ற ஆர்யவர்த்தத்தில் தர்மத்தின் ஆட்சி நடைபெற்றால் தான் முடியும். வரும் நாட்களில் இது தான் இந்த பாரத வர்ஷத்தையே காத்து நிற்கும்.”

“ஓ, இதற்காகவே, இதை நிறைவேற்றவே நீ உயிர்வாழ்கிறாயா கிருஷ்ணா? உன் வாழ்க்கையின் லட்சியமே இது தானா?” என்ற பீமனுக்கு அப்போது தான் அகோரியின் குடிசைக்குச் சென்றிருந்தபோது அகோரியின் உடலில் ஆக்கிரமித்திருந்த தேவி மாதா சொன்னது நினைவில் வந்தது. கிருஷ்ணனின் பிறப்பையும் அவன் எதற்காக வாழ்ந்து வருகிறன் என்பதையும் தேவிமாதா சொன்னவை எல்லாம் அப்போது பீமன் நினைவு கூர்ந்தான். அவனுக்குள்   கிருஷ்ணன் பால் பிரமிப்பும், பக்தியும் பெருகின.  கிருஷ்ணனும் அவன் சொன்னதை ஆமோதித்தான்.

“ஆனால் நீ காண்டவப்ரஸ்தத்தை நகராக நிர்மாணிப்பதன் மூலம் உன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றியவன் ஆவாயா?” என்று கேட்டான் பீமன்.

“ஆம், நான் நிறைவேற்றியவன் ஆவேன்!” என்றான் கிருஷ்ணன். அவன் கண்களில் ஓர் ஒளி தோன்றியது. அந்த ஒளியினால் கிருஷ்ணன் முகமே பிரகாசம் ஆனது. “இந்த ஆர்யவர்த்தத்தின் எதிர்காலமே நீங்கள் ஐவரும் நடத்தப் போகும் தர்மத்தின் ஆட்சியில் தான் உள்ளது. உங்கள் நல்லாட்சியில் தான் ஆர்யவர்த்தம் தழைக்க வேண்டும்.” என்றான் கிருஷ்ணன்..