Saturday, July 18, 2015

பீமனை வழிக்குக் கொண்டு வந்தான் கண்ணன்!

கருணையே வடிவெடுத்த கண்ணன் கருணை பொங்கி வழியும் தன் கண்களால் பீமனையே பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த கோபம் கிருஷ்ணனைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. பேசாமல் அவனுடன் நடந்தான். அந்த நதிக்கரையில் இருவரும் சிறிது நேரம் அங்கும் இங்குமாக நடந்தனர். அவர்களிடமிருந்து சற்றுத் தொலைவில் கூப்பிட்டால் கேட்கும் தூரத்தில் சகாதேவனும், சாத்யகியும் பின் தொடர்ந்தனர். சற்றுப் பொறுத்துக் கிருஷ்ணன் வாயைத் திறந்தான். “பீமா! நீ உன் சகோதரன் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை ஆள வேண்டும் என்றே விரும்புகிறாயா? திருதராஷ்டிரனைக் குறித்தோ, துரியோதனன் குறித்தோ உனக்கு ஆக்ஷேபணைகள் ஏதும் இல்லையா? அவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுர மன்னனாக ஆனால் போதும் உனக்கு! அது தானே?” என்று வினவினான்.

“ஏன்? மீண்டும் ஒரு பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? உன் பேச்சை, வஞ்சகப் பேச்சை நான் காது கொடுத்துக் கேட்கப்போவதில்லை.”

கிருஷ்ணன் இப்போது கொஞ்சம் தீவிரமாகவே பேசினான்.” ஒரு வேளை…அதாவது ஒரு வேளை,….. நான் அனைத்து சத்தியங்களையும், உறுதிமொழிகளையும் உடைத்து எறிந்துவிட்டு உன் மூத்தவன் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக உதவி செய்கிறேன்! என்றால்? அப்போது?” கிருஷ்ணன் ஏதோ தீவிரமான சிந்தனையில் இருப்பதும் அவன் குரலில் இருந்து தெரிந்தது. ஆனால் பீமன் சீறினான். “ வாயை மூடு கிருஷ்ணா! நீ எனக்கு உதவப் போகிறாயா? அதுவும் பானுமதிக்கு நீ அம்மாதிரி சத்தியம் செய்து கொடுத்த பின்னருமா? துரியோதனன் தான் ஹஸ்தினாபுரத்தை ஆளப்போகிறான் என அவளுக்கு நீ கொடுத்த வாக்கு? அதன் பின்னருமா?”பீமன் மேலும் கோபத்தில் சீறினான்.

கிருஷ்ணன் எதையும் லக்ஷியம் செய்யாமல் அவனை வசப்படுத்தும் மென்மையான குரலில் மேலும் பேச ஆரம்பித்தான். “என்னைக் கொஞ்சம் யோசிக்க விடு!” என்றவன், மேலும் தொடர்ந்து யோசித்த வண்ணமே பேச்சைத் தொடர்ந்தான். “ இதோ பார் பீமா! நான் திருதராஷ்டிரனைச் சந்தித்துப் பேசித் தாத்தா அவர்கள் போட்ட திட்டத்தின்படி யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை ஆளவும், துரியோதனன் தொடர்ந்து யுவராஜாவாக இருக்கவும் சம்மதம் வாங்குகிறேன். இந்த முடிவுக்கு அவனைச் சம்மதிக்க வைக்கிறேன்.” என்றான்.

“ஆஹா! அது உன்னால் முடியாது அப்பனே! நிச்சயமாய் முடியாது! நீ சிறு குழந்தையைப்போல் பேசுகிறாய்! என் பெரியப்பாவா இதற்கெல்லாம் சம்மதிப்பார்! நிச்சயம் மாட்டார்! என் மூத்தவன் ஹஸ்தினாபுரத்து அரசன் ஆகிவிட்டால் பின்னர் துரியோதனன் தற்கொலை அல்லவோ செய்து கொள்வான்! ஆகவே அவரால் இதற்குச் சம்மதம் அளிக்க முடியாது!”

“அப்படி எனில் அதுவும் சரிதான்!” கிருஷ்ணன் நம்பிக்கையை இழக்காமல் உற்சாகத்துடனே பேசினான். “பின்னர் நீ யுவராஜாவாக ஆகிவிடலாமே! துஷ்சாசனனோ இதற்கெல்லாம் போட்டிக்கு வரப் போவதில்லை. அவன் தான் காந்தாரம் செல்லப் போவதாய்ச் சொல்லிவிட்டானே!”

பீமனுக்குக் கிருஷ்ணன் பேசிய போக்குப் பிடிக்கவில்லை. அவன் கேலி செய்கிறான் என்பதைப் புரிந்து  கொண்டு, “இப்படி எல்லாம் பேசாதே! உன் பேச்சு எனக்குப் பிடிக்கவே இல்லை. நகைச்சுவையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு இப்படி என்னை வதைக்காதே!” என்று மீண்டும் சீறினான்.

“பீமா, பீமா, நீ எனக்கு நியாயம், நீதி கிடைக்கச் செய்ய மாட்டாயா? இதோ பார்! நம்மிடம் துருபத அரசன் நம் பக்கம் இருப்பதோடு அல்லாமல் விராட தேசத்து அரசர்கள், சுநீதன் மற்றும் யாதவத் தலைவர்கள் என ஒரு பெரும்படையே இருக்கிறது. அனைவருமே தாத்தா பீஷ்மரின் சொல்லைத் தட்ட மாட்டார்கள். அவர் சொல்படி நடப்போது அவர் கருத்துக்களுக்கே ஆதரவும் கொடுப்பார்கள். ஆகவே நமக்கு என்ன வேண்டுமோ அதை நாம் இதன் மூலம் அடைய முடியும்!” என்றான் கிருஷ்ணன். இது பீமனுக்குக் கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுத்தது என்பது அடுத்து அவன் கேட்டதிலிருந்து தெரிந்த்து.

“நிஜமாகவா சொல்கிறாய்? உன்னால் முடியுமா? அப்படி மட்டும் நடந்தால்??? ஆனால் என் மூத்தவன் யுதிஷ்டிரன் எண்ணம் என்னவாக இருக்கும்? அவன் என்ன சொல்வான்?”

“இதை ஒப்புக் கொள்வதை விட அவனுக்குவேறு வழியும் இருக்கிறதா? அவன் தான் திருதராஷ்டிரனிடம் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு அவன் சொல்படி நடப்பதாக உறுதிமொழி கொடுத்துவிட்டானே! “ பேசிக் கொண்டே வந்த கிருஷ்ணன் மனதில் திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. அந்தச் சிந்தனையின் விளைவு குரலிலும் தெரியுமாறு அவன் தனக்குள் பேசுவது போல் பேசினான்:” ஒருவேளை துரோணாசாரியாரும், கிருபாசாரியாரும் அஹிசத்ராவுக்குப் போய்விட்டார்கள் எனில்……………………..?

“ஓ, நாம் ஒன்றும் கோழைகள் அல்ல! நிச்சயமாய் வீரர்களே! நம்முடைய எதிரிகளை நாமே ஒன்று சேர்ந்து அழிப்போம்.” என்று தன் மார்பில் அடித்துக் காட்டிய பீமன், “குரு வம்சத்து பலம் எல்லாம் துரோணரையோ, கிருபரையோ நம்பி இல்லை. அவர்கள் இயல்பாகவே வீரர்கள்!” என்றான். இந்த யோசனை பீமனுக்குப் பிடித்திருந்ததால் கிருஷ்ணன் மேல் அவனுக்கு இருந்த கோபமும், வெறுப்பும் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது.

“ஒரு வேளை,…நீ துஷ்சாசனனோடு சண்டை போட நேர்ந்தால்? அவன் பாட்டனார் சுபலா குரு வம்சத்தினரோடு யுத்தத்துக்கு அறிவிப்புக் கொடுத்துவிடுவார்.”

“ஓ, அது ஒன்றுமே இல்லை! அவர்களை எல்லாம் சுலபமாக ஜெயித்துவிடலாம். கவலையே வேண்டாம்!” என்ற பீமன் மெல்ல மெல்லத் தன் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். கிருஷ்ணன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான்: “திருதராஷ்டிரன் ஒரு வேளை காட்டுக்குச் செல்ல யோசிக்கலாம். காட்டுக்குச் சென்று தவம் செய்ய விரும்பலாம். ஆனால் காந்தாரி? அவள் தன் மகன் இறந்துவிட்டால்,,,,, அதுவும் மூத்தவன் இறந்து பட்டால் அவன் சிதையிலேயே அவளும் தீக்குளிக்க யத்தனிப்பாள். ஏனெனில் அவன் அவளுக்குக் கண்ணுக்குக் கண்ணான மிக அருமையான மகன்.”

“அதெல்லாம் என்னை என்ன செய்துவிடும்? ஒன்றும் முடியாது! நான் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருக்கிறேன். ஆம், அவர்கள் எங்களுக்குச் செய்த தீமைகளை விடவா? ஆகவே எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.”

“ம்ம்ம்ம்ம் ….இன்னொரு தொந்திரவும் இதில் இருக்கிறது. திருதராஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல நேர்ந்தால்…….அப்போது குரு வம்சம் இரண்டாகப் பிரிய வாய்ப்பு உள்ளது.  இரு குழுவினராகப் பிரிந்து விடுவார்கள்.”

கிருஷ்ணன் மிக மிக மெதுவாகப் பேசினான். “சகோதரா, உன் வீரம், புஜபல பராக்கிரமம், விவேகம், பயிற்சி அனைத்தும் குருவம்சத்தினரை அதுவும் உன்னில் ஒரு பகுதியினரை ஒடுக்குவதிலேயே சகோதர யுத்தத்திலேயே செலவாகிவிடும். அதை யோசித்தாயா? நீ தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க நினைக்கிறாய்! ஆனால் அது முடியுமா? யோசித்தாயா? நான் சொல்வது சரிதானே?” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா! கிருஷ்ணா! இப்படி எல்லாம் பேசி என்னை பயமுறுத்தப் பார்க்கிறாயா? என்னால் இதற்கெல்லாம் பயப்பட முடியாது! எவருடனும் போர் தொடுக்கவோ, எந்தச் சூழ்நிலையையும் சந்திக்கவோ நான் தயாராகவே இருக்கிறேன்.”

1 comment:

ஸ்ரீராம். said...

மெல்ல வழிக்குத் திரும்பும் பீமன்!