Thursday, September 18, 2014

பீமனின் ஆராய்ச்சி!

“ஓஹோ, அப்படியா விஷயம்?  அவை உமக்குக் கிடைக்கவில்லை எனில்?”


“சாத்தியமே இல்லை.  மக்கள் கொடுக்கும் அனைத்தையும்  நான் ஏற்கவேண்டும் என்றே அவர்கள் வற்புறுத்துகின்றனர்.  நீங்களும் அவ்வாறே வற்புறுத்துவீர்கள்;  அதிலும் இந்த ஹஸ்தினாபுரப் பயணத்தில் என்ன பணயம் காத்திருக்கிறது உங்களுக்கு எனத் தெரிய வந்தால் விட மாட்டீர்கள்!”


“என்னிடம் பணயமா?” சுற்றி வளைத்து பீமன் கேட்க விரும்புவதைப் புரிந்து கொண்ட துருபதனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.  நீங்கள் ஒரு பெரிய மஹாராஜா என்னும் உங்களைக் குறித்த நன்மதிப்பே இப்போது பணயம் வைக்கப்பட்டிருக்கிறதாக்கும்.  நான் தான் அதைக் கவனித்துச் சரி செய்ய வேண்டும்.”  இதைச் சொன்ன பீமன் இப்போது ஒரு வயதானவன் கூறும் தீர்ப்பைப் போலத் தன் கருத்தை மாறுபட்ட தொனியில் சொல்ல ஆரம்பித்தான். “பிரபுவே, உங்களைக் குறித்து என்ன சொல்வார்கள், தெரியுமா? ஒரு பெரிய மஹாராஜா, செல்வத்தில் செழித்தவன், மிகப் பெருந்தன்மையுள்ளவன், ஒரு நல்ல தந்தை, துரோணருக்கு எதிரியாகச் சிறப்புப் பெற்றவன். இப்போது இந்த அரசன், பாண்டவர்கள் ஐவரின் மாமனார். அதிலும் ஹஸ்தினாபுர  சாம்ராஜ்யத்தின் வருங்காலச் சக்கரவர்த்திக்கு மாமனார்.  இப்படிப் பெருமைகள் நிறைந்தவன் தன் மருமகன்கள் தங்களோடு யானைகள், குதிரைகள், ரதங்கள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் எடுத்துச் செல்லும்படி அவர்களை வற்புறுத்தவில்லையாமே! ஹூம், இப்படியும் ஒரு கஞ்சமாஹாப் பிரபு!”


துருபதன் வாய்விட்டு மனம் விட்டுச் சிரித்தான். “நீங்கள் மிகவும் கெட்டிக்காரர், பீமசேனரே! அதோடு தைரியமும் நிரம்பியவர்.”


“அதெல்லாம் தைரியம் இல்லை பிரபுவே!  நான் ரொம்பவே அடக்கமானவனாக்கும்.  உங்களிடம் மட்டும் தான் இப்படிப் பேசுகிறேன்.  ஏனெனில் உங்கள் நன்மதிப்பை நன்கு அறிந்திருக்கிறேன்.  இத்தகைய பெருமை மிகவும் அபூர்வமாகவே இருக்கும் என்பதால். “


“வ்ருகோதரா, புதிர் போட்டுப் பேசாதீர்!  உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையாக என்னிடம் சொல்லுங்கள்.” பீமன் பேசும் முறையை துருபதன் மிகவும் ரசித்தான்.  “ஆஹா, பிரபுவே, எங்கள் அண்ணா உங்களை எதுவுமே கேட்கக் கூடாது எனச் சொல்லி இருப்பதாக ஏற்கெனவே கூறினேன் அல்லவா? நீங்களே உங்கள் மருமகன்களுக்கு என்ன கொடுக்க வேண்டும்; எதைக் கொடுக்கலாம்;  எவை சிறப்பானவை என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் மருமகன்கள் போட்டியில் வென்று சிறப்பான பரிசுகளைப் பெற்று ஒரு வெற்றியாளராகப் போனால் நல்லதா?  அல்லது திருதராஷ்டிரனின் கைச் சோற்றை எதிர்பார்த்துக் கொண்டு அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் அடிமையாகச் செல்வதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் மன்னா!”


துருபதன் மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான். “யார் உங்களுக்கு இவ்வளவு அழகாகப் பேசச் சொல்லிக் கொடுத்தது?” என்றும் கேட்டான்.  “கற்றுக் கொடுத்தார்களா?  மஹாதேவா!  யாருமே எனக்கு எதுவுமே கற்றுக் கொடுக்கவில்லை.  அதிலும் பேசக் கற்றுக் கொடுக்கவில்லை.  இது என்னோடு உடன் பிறந்த கலை மன்னா!  இறைவன் அளித்த பரிசு.  உங்களுடைய மருமகனாக, இந்த ஹஸ்தினாபுரப் பயணத்தை நான் தலைமை தாங்கிச் செல்கையில் அங்கே ஹஸ்தினாபுரத்தில் துரியோதனனின் கண்கள் பொறாமையால் சிவக்க வேண்டும்.  மனம் கொதிப்பில் வெந்து போக வேண்டும்.”


மீண்டும் சிரித்த துருபதன், “ சரி, சரி, அப்படியே ஆகட்டும்,  உம் வழிக்கே நான் வருகிறேன்.  நீர் என் நிலையில் இருந்தீரானால், அதாவது நீர் மாமனாராக இருந்தாயெனில் உம்  மருமகன்களுக்கு என்ன பரிசுகளை அளிப்பீர்?”


“நான்  அதை  என் மனதில் யோசித்து அறிந்து கொள்ள வேண்டும்.  பிரபுவே, உங்களுக்கு மூன்று மகன்களும், ஐந்து மருமகன்களும் உள்ளனர்.  உங்கள் இடத்தில் நான் இருந்தால்  ஒருவேளை இந்த சாம்ராஜ்யத்தை அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிடுவேன்.  ஆனால் இந்த வழி உங்களுக்குப் பொருந்தாது என்பதையும் அறிவேன்.   ஏனெனில் உங்கள் மகன்கள் மூவரும் உங்களைப் “புத்” என்னும் நரகத்திலிருந்து மீட்பவர்கள்; அதே சமயம் உங்கள் மருமகன்களான நாங்கள் உங்களை நரகத்தில் தள்ளினாலும் தள்ளுவோம். “ ஏதோ ஞானம் பெற்றவனைப் போல, “சும்மாவா சொன்னார்கள்; ஒரு மருமகன் பத்தாவது கிரஹத்திற்குச் சமம் என!  கபடும், வஞ்சனையும் நிறைந்தவர்களும் கூட!”


“மஹாதேவா! நீர் ஓர் அற்புதமான மருமகன். உங்கள் செல்வாக்கில் எவ்வளவு கபடம், சூது உள்ளது என்பதை  எனக்குச் சொல்லுங்கள்!” துருபதனும் இப்போது இந்த வேடிக்கைப் பேச்சில் முழு மனதாகக் கலந்து கொண்டான்.  “நான் நன்மைகளை மட்டுமே கொடுக்கும் ஒரு கிரஹம், பிரபுவே.  அதனால் தான் உங்கள் மகள் ஹஸ்தினாபுரத்தில் நுழையும்போது, இந்த சாம்ராஜ்யத்தின் வருங்காலப் பட்டமஹிஷி வந்து விட்டாள் என்பதை துரியோதனன் புரிந்து கொள்ளவேண்டும் . அது தான் என் நோக்கம்.” என்று எவரையும் சுட்டாமல் பொதுவாகச் சொன்னான் பீமன்.


“ஆஹா, நீர் எப்போதும் துரியோதனன் என்ன நினைப்பான் என்னும் எண்ணத்திலேயே இருக்கிறீர் போலும்!”


“ஆம், ஐயா, உங்களுக்கு என் அருமையான, அன்பான சகோதரனைக் குறித்து எதுவும் தெரியாது.  நாம் அனைவருமே எப்படிக் காற்றைச் சுவாசிக்கிறோமோ அப்படியே அவர் எங்களிடம் உள்ள பொறாமையைச் சுவாசித்துக் கொண்டு அதிலேயே வாழ்ந்து வருகிறார்.  ஒரு சமயம் நான் கூட நினைத்தேன். என் ராக்ஷசி மனைவி ஹிடும்பியை ஹஸ்தினாபுரம் அழைத்து வந்துவிடலாமோ எனத் தோன்றியது. அவளைப் பார்த்தாலே துரியோதனன் பொறாமையில் வெந்து சாம்பலாகிவிடுவான்.  ஏனெனில் அவன் என்னுடன் எத்தனையோ போட்டிகளில் போட்டி போட்டிருக்கிறான்.  எத்தனையோ விஷயங்களில் போட்டி போடுவான்.  ஆனால் ஒரு ராக்ஷசியைக் கல்யாணம் செய்து கொள்வது குறித்து அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  அவளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என அவன் யோசித்து முடிப்பதற்குள்ளாக அவள் அவனைக் கொன்று தின்று விடுவாள்.” சர்வ அலட்சியமாகச் சொன்னான் பீமன்,


“ஆஹா, அப்படி என்றால் ஹிடும்பியை ஒரு போதும் ஹஸ்தினாபுரம் அழைத்து வந்துவிடாதீர் !  என் அருமை மகள் கிருஷ்ணா அந்த அதிர்ச்சியிலேயே உயிரை விட்டுவிடப் போகிறாள்.” அடக்க முடியாமல் சிரித்த வண்ணம் துருபதன் இதைக் கூறினான்.



“மன்னா, உங்களுக்குப் பெண்களைக் குறித்து நன்கு தெரியும் அல்லவா? ஆ, அவர்கள் எப்போதும் நம்மை மதிக்கவேண்டும்;  நம்மிடம் ஒரு மதிப்பு இருக்க வேண்டும்.  ஆகவே இப்படி ஏதானும் ஒன்றை நாம் நம் கையில் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.  அப்போது தான் இந்தப் பெண்கள் நம்மை மதிப்பார்கள். லக்ஷியம் செய்வார்கள். உங்கள் மகள் மட்டும் என்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை எனில் நான் ஹிடும்பியைக் கொண்டு வந்துவிடுவேன்.”


தன்னுடைய கம்பீரத்தையும் வழக்கமான கடுகடுப்பான போக்கையை விட்டுத் தன்னை மறந்த நிலையில் துருபதன் பீமன் முதுகில் விளையாட்டாக ஓங்கித் தட்டினான்.  “பொல்லாத மனிதன்!  பெண்களைக் குறித்து அலசி ஆராய்ந்து அறிந்து கொண்டிருக்கிறீர் போல் தெரிகிறதே!”  என்றான்

No comments: