Tuesday, September 2, 2014

பீமன் அழைப்பும், கண்ணன் மறுப்பும்!

“உனக்கு யார் இப்படி ஒரு சபதம் எடுக்கும்படி கேட்கச் சொன்னார்கள், திரௌபதி?  யார் சொல்லிக் கொடுத்து நீ இவ்விதம் யுதிஷ்டிரனை சபதம் எடுக்க வைத்தாய்?” வாசுதேவக் கிருஷ்ணன் கேட்டான்.  “இது என் யோசனை இல்லை,கோவிந்தா.  தெய்வீகமான ரிஷி நாரதமுனி என் கனவில் வந்தார்.  அவர் தான் இந்த யோசனையைச் சொன்னார்.  இது ஒன்றே சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளாமல் இருக்கும் வழி என்றும், மேலும் இதனால் எனக்கு நன்மையும் கிடைக்கும் என்றும் கூறினார்.” என்று திரௌபதி கூறினாள்.


“ஓஹோ, அப்படியா?  தவறான வழியில் ஒரு பிரச்னையைத் திர்க்கவேண்டுமெனில் நாரதமுனியைத் தான் கேட்கவேண்டும்.” என்றான் பீமன்.


  “திரௌபதி, கவலைப்படாதே!  இந்த முரடன் பீமன் வெகு விரைவில் உனக்கு அடிமையாகிவிடுவான்.  எப்படி எனச் சொல்லித் தருகிறேன். இவனுக்குப் பசி அதிகம்.  அதிலும் ஒரு ஓநாயைப் போல் எப்போதும் ஏதேனும் தின்றுகொண்டே இருக்க வேண்டும்.  அதற்காகவே இவனை வ்ருகோதரன் என அழைக்கின்றனர். வ்ருகோதரன் என்றால் ராக்ஷச உலகில் ஓநாயின் வயிற்றோடு கூடியவன் எனப் பொருள்.  இவனை நன்கு சம்பிரமமாகச் சாப்பிடவை.  உன் கைகளாலே சாப்பாடு போடு.  பின்னர் காலத்துக்கும் இவன் உனக்கு அடிமை. “ என்றான் வாசுதேவன்.


பீமன் உடனேயே தன் வயிற்றைத் தட்டிக்காட்டி, ஒரு வீம்புத்தனமான திருப்தியுடன், “திரௌபதி, நீ மட்டும் இந்த வயிற்றைச் சம்பிரமமாகச் சாப்பாடு போட்டு திருப்தி செய்து விடு.  நீ செய்த பாவங்களை எல்லாம் மன்னித்துவிடுகிறேன்.” என்றான்.  திரௌபதி  இப்போது தன்னுடைய சுபாவமான நிலைக்கு வந்துவிட்டாள்.  கிருஷ்ணனைப் பார்த்துப் புகார் செய்யும் குரலில், “கோவிந்தா, ஆர்யபுத்திரர் என்னை எவ்வாறு நடத்துகிறார் என்பதற்கு நீயே சாட்சி!  இவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சபதப்படி, நான் இந்த வருடம் முழுவதும், பெரியவருக்கே சொந்தமானவள்.  இவர் நடுவில் புகுந்து சபதத்தை உடைத்துவிட்டார்.” என்றாள்.


“ஆஹா, இதெல்லாம் தேவையில்லாத விஷயம்.  இவற்றைப் பற்றி எல்லாம் பேசாதே திரௌபதி. நான் சபதம் குறித்து அனைத்தும் அறிவேன். அது இன்றைக்கு நடுப்பகலில் இருந்து தான் ஆரம்பம் ஆகப்போகிறது. சூரியன் நடு வானுக்கு வருவதற்குள்ளாகச் சில நொடிகள் இன்னும் மீதம் இருக்கின்றன. அதுவரையிலும் நான் என்ன நினைக்கிறேனோ அதை உன்னிடம் சொல்லலாம்; ஆகவே நீ நினைப்பது நடவாது மகளே! “ என்று அவள் ஆக்ஷேபணையைப் புறம் தள்ளிவிட்டு பீமன் கூறினான்.  பின்னர் புனிதமான ஒன்றை ஏற்பது போல் பாவனை காட்டினான்.  “நான் மதியம் என்னுடைய நித்யகர்மாவைச் செய்ததும், இந்த சபதம் ஆரம்பிக்கும் நாள், நேரம் தொடங்கி விடும்.  அதன் பின்னர் ஒரு வருடத்துக்கு உன்னை நான் பார்க்கக் கூட மாட்டேன்.  ஆனால் அடுத்த வருடம் ஆரம்பிக்கட்டும்;  நான் சேர்த்து வைத்துப் பழி வாங்குவேன்.  நீ என் கால்களில் விழுந்து கதறி அழ வேண்டும்.  அழுது, அழுது உன் கண்ணீர் வற்றும் வரை உன்னை நான் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்.  உன் கண்களே மங்கிப் போகும்வரை நீ அழ வேண்டுமாக்கும்!” என்ற பீமனுக்கு விளையாட்டுப் போக்கான மனோநிலை திடீரென மாறியது.  கொஞ்சம் தீவிரமான சிந்தனையுடன், “இதோ, பார் திரௌபதி, ஒரு நல்ல மனைவியாக இருப்பாய்.  கொஞ்ச நேரம் நான் சொல்வதைக் கேள்.  நான் சொல்லும்படி செய்.  இந்த கோவிந்தனை, உன் கோவிந்தனை நம்முடன் ஹஸ்தினாபுரம் வரவேண்டும் என்று சொல்!”  என்று சொன்னான்.


தன் திறமையான மயக்கும் குரலில், “ கொஞ்சம் யோசித்துப் பேசு பீமா!  நான் அங்கே வருவதில் என்ன பயன் இருக்கப்போகிறது?  நீங்கள் அனைவருமே அங்கே துரியோதனனோடு உள்ள உங்கள் மனவேறுபாடுகளைக் களைந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.  இது நல்ல வாய்ப்பு.  நீங்கள் அதற்காகத் தயாராகுங்கள்.  உங்கள் பக்கம் பிதாமகர் பீஷ்மரும், உங்கள் பாட்டியாரான மஹாராணி சத்யவதியும் இருப்பார்கள் என நம்புகிறேன்.”


“எங்கள் பக்கம் யார் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, கிருஷ்ணா!  எவரும் என்னுடன் போட்டியிடும் அளவுக்கு நான் தகுதிக் குறைவானவன் அல்ல.  என் தகுதியைக் குறித்து நான் நன்கறிவேன்.  ஆனால் ஒன்று நினைவில் கொள்வாய் கிருஷ்ணா! நாங்கள் ஹஸ்தினாபுரத்தின் படை வீரர்கள் போல் ராணுவப்பயிற்சி பெற அங்கே செல்லவில்லை;  அப்படி ஒரு நினைப்போடு செல்லப் போவதும் இல்லை.  நாங்கள் பாண்டுவின் புத்திரர்கள்.  ஹஸ்தினாபுரத்து அரியணைக்கு முழு உரிமையுடையவர்கள். அதோடு எங்களை இப்போது உயிர்ப்பித்தவன், கிருஷ்ண வாசுதேவனாகிய நீ தான்.  உன்னால் தான் நாங்கள் உயிருடன் இருக்கிறோம்.  நடமாடும் கடவுளான வாசுதேவக் கிருஷ்ணன் எங்கள் பாதுகாவலன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.”


“யுதிஷ்டிரனோடு இதைக் குறித்துக் கலந்து ஆலோசித்தாயா, பீமா?  அவருக்கு என்னை அங்கே அழைத்துச் செல்வது அறிவுள்ள, விவேகமான செயல் அல்ல என்பது நன்கு புரியும்.  அவர் புரிந்து கொள்வார். “


“அவர் அதை எங்கள் நால்வரிடமும் விட்டு விட்டார், கிருஷ்ணா.  நாங்கள் தான் நீ எங்களுடன் வரவேண்டும் என முடிவு செய்தோம்.  எங்கள் தாயும் அப்படியே விரும்புகிறார்.  இவர்களைத் தவிர நாங்கள் கலந்து கொள்ளவேண்டிய அடுத்த நபர் குடும்பத்தில் திரௌபதி தான்.  அவளோ இதோ இங்கே இருக்கிறாள். “ திரௌபதி பக்கம் திரும்பிய பீமன், “ இளவரசி, மரியாதைக்குரிய பாஞ்சால நாட்டு இளவரசி, நீ சொல், உன் கோவிந்தன் நம்முடன் வந்தாகவேண்டும் என்பதை!  நீ மட்டும் அவனிடம் சொல்லவில்லை என வைத்துக்கொள்!  என்ன நடக்கும் தெரியுமா?  அடுத்த வருடன் உன் எலும்புகள் அனைத்தும் நொறுங்கும். “


கொஞ்சம் வேடிக்கையுடன் இதைக் கூறிய பீமன் சொன்ன விதத்தைப் பார்த்த கிருஷ்ணனும், திரௌபதியும் சிரித்தனர்.  பீமன் கிருஷ்ணன் பக்கம் திரும்பி, “ ஏன் சிரிக்கிறாய் கிருஷ்ணா  இதில் சிரிக்க என்ன இருக்கிறது?  நீ ஒரு கல்லைப் போன்ற இதயம் படைத்த மாட்டிடையன்!   திரௌபதியை ஹஸ்தினாபுரத்திற்குத் தனியே அனுப்புவதில் உனக்குச் சம்மதமா?  அதில் உள்ள கொடுமை உனக்குப் புரியவில்லையா?  துரியோதனன், கர்ணன், ஷகுனி, துரியோதனனின் மற்ற சகோதரர்கள் அனைவருமே கொடுமையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையே!  அஸ்வத்தாமா? ஒவ்வொருவரும் கொடுமையில் போட்டி போடுபவர்களாயிற்றே! இந்தப் பரிதாபமான பெண்ணை ஏமாற்றுகிறாயா கிருஷ்ணா!  நீ தான் இவள் தந்தையைச் சுயம்வரம் நடத்தச் சொன்னாய். எங்களை ராக்ஷசவர்த்த்தில் இருந்து வெளியேற்றி சுயம்வரத்திலும் கலந்து கொள்ள வைத்து இந்தப்பெண்மணியை எங்கள் தலையிலும் கட்டிவிட்டாய்.  இப்போது நீ எப்படி இவளை ஹஸ்தினாபுரத்துக்குத் தன்னந்தனியே அனுப்பி வைக்கச் சம்மதிக்கிறாய்?”


திரௌபதி பக்கம் திரும்பிய பீமன் கண்ணடித்துச் சிரித்தான்.  அதைப் பார்த்தும், அவனுடைய போலியான முறையீட்டைப் பார்த்தும் திரௌபதிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.  “இதோ பார், துருபதன் மகளே!  என்னையே பார்க்காதே!  நீ அப்படிப் பார்ப்பதைப் பார்த்தால் இவன் யார் முட்டாள் என நீ நினைக்கிறாப் போல் தெரிகிறதே!  சும்மா, அப்படிக் கொஞ்சம் கண்ணீர் விடு! உன் கண்களை அழுதது போல் சிவப்பாக்கிக்கொள்.  விம்மவானும் விம்மு.  உன்னால் எது முடியுமோ அதைச் செய்! இந்த உன் கோவிந்தன் மனதில் அழும் பெண்ணுக்கென்று ஒரு மென்மையான இதயம், உணர்வுகள் இருக்கின்றன.  நீ அழுவதைப் பார்த்தாலே அது உருக ஆரம்பிக்கும்

1 comment:

ஸ்ரீராம். said...

மிகவும் இயல்பாகப் போகும் பகுதியாக இருக்கிறது இந்தப் பகுதி. இவற்றை எழுதும்போது முன்ஷிஜி ஜாலி மூடில் இருந்திருப்பார் போல!