Saturday, July 5, 2014

துரியோதனன் பலமும், திரௌபதியின் மனமும்!

கண்ணன் பலராமனிடம் திரும்பினான்.  “அண்ணா, பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர்!” என்று ஏதும் அறியாதவன் போலச் சொன்னான். “உனக்கு எப்படித் தெரியும்?” பலராமன் சந்தேகத்துடன் கேட்டான்.  “அண்ணா, அதோ நமக்கு எதிரே பிராமணர்கள் அமர்ந்திருக்கும் பக்கம் கொஞ்சம் உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.  அவர்கள் அதோ அங்கே வீற்றிருக்கிறார்கள். அந்த பிரம்மாண்டமான உருவம் பீமனைத் தவிர வேறெவரும் இல்லை. அவனுக்கு அடுத்து அமர்ந்திருப்பது தான் பெரியண்ணா யுதிஷ்டிரர்.  அந்த அழகான, நளினமான இளைஞன் அர்ஜுனன்.  அவர்களுக்குப் பின்னர் அமர்ந்திருக்கும் இரட்டையர் நகுல,சஹாதேவர்கள். “

தன் கண்களை நன்கு தேய்த்துவிட்டுக் கொண்டு மீண்டும், மீண்டும் அங்கேயே உற்று நோக்கினான் பலராமன்.  பிராமணர்களிடையே அவர்களும் பிராமணர்களைப் போல் வேஷம் தரித்து அமர்ந்திருந்தாலும் அவர்கள் பாண்டவ சகோதரர்களே என்பதை உறுதிப் படுத்திக் கொண்டான்.  உடனேயே அவனுக்கு விஷயம் புரிந்து, அது பெரியதொரு புன்னகையாக மலர்ந்தது.  திரும்பித் தன் சகோதரன் கண்ணன் முதுகில் ஓங்கி ஓர் அறை அறைந்தான். “தந்திரக்காரா, மாயக்காரா!  இது எல்லாம் உன் சூழ்ச்சி தானே? எனக்குத் தெரியும்டா மாயாவிப் பயலே!” சந்தோஷம் தாங்க முடியா அந்நிலையிலும் பலராமன் கிசுகிசுப்பாகவே கண்ணனிடம் சொன்னான்.  அதற்குள்ளாக யாதவத் தலைவர்களிடையே அமர்ந்திருந்த சாத்யகிக்குப் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய்ப் போய்க் கொண்டிருந்தது.  அவன் கிருஷ்ணனின் ஆணைக்குக் காத்திருந்தான்.  கிருஷ்ணனோ வாயைத் திறக்கிற வழியாய்த் தெரியவில்லை. தன்னிடத்திலிருந்து கொஞ்சம் மேலெழும்பிக் கிருஷ்ணனின் பக்கம் சாய்ந்தவண்ணமே, “பிரபுவே, நான் எப்போது போட்டியில் கலந்து கொள்ளலாம் என்பதைத் தெரிவியுங்கள்.” என்று வேண்டிக்கொண்டான்.

அவன் கைகளை ஆறுதலாக அழுத்தினான் கிருஷ்ணன்.  “பொறுமையை இழக்காதே சாத்யகி.  நேரம் வருகையில் உன்னிடம் சொல்வேன்.” என்றான். பின்னர் தன் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த உத்தவனிடம், “யாதவத் தலைவர்கள் யாருமே நான் சொல்லும்வரை போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்துவிடு!” என்றான்.  “கோவிந்தன் விருப்பமே எங்கள் விருப்பம்.” என்றான் உத்தவன்.

துரியோதனன் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுடன் காத்திருந்தான்.அளவிடமுடியா உற்சாகத்துடன் இருந்தான்.  தான் நிச்சயமாகப் போட்டியில் வென்று விடுவோம் என்னும் நம்பிக்கை அவனிடம் இருந்தது. தன்னுடைய பலத்தையும், திறமையையும் அவன் நன்கறிந்திருந்தான்.  இன்னும் சிறிது நேரத்தில் அவன் போட்டியில் கலந்து கொண்டு குறி இலக்கை ஒரே அம்பில் வீழ்த்தி விடுவான்.  அங்கே சுயம்வர மண்டபத்தில் மன்னர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த கூடத்தில்  அமர்ந்த வண்ணம் அவன் போட்டியில் எவ்வாறு வெல்வது என்பதைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.  வில்லின் நாணை இழுத்துக் கட்டத் தேவைப்படும் வலிமை, நாணை முறுக்கேற்றி வளைத்து, அம்பைப் பொருத்தி எய்ய வேண்டிய தூரம், சுற்றிக் கொண்டிருக்கும் மீனின் கண்ணின் பாகத்தை எங்கிருந்து தாக்கினால் குறி சரியாகப் போய்த் தைக்கும் என்பதை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தான். ம்ஹூம், அவன் தோற்க வாய்ப்பே இல்லை.  அவன் தான் வெல்வான்.


அஸ்வத்தாமா துருபதனுக்குள் ஏற்பட்டிருந்த அதிருப்தியை முதல் நாள் இரவு பேசித் தீர்த்துக் கொண்டு வந்து விட்டான்.  ஆகவே அவனுக்கு பாஞ்சால அரச குடும்பத்தினரிடமிருந்து தடைகள் ஏதும் வரப் போவதில்லை.  இங்கிருக்கும் கூட்டமும் அவனை நன்கு வரவேற்று உற்சாகம் செய்யும்.  இப்போதே எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.  அவன் கண்ணெதிரே சில காட்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன.  அவனை யுவராஜாவாகத் தேர்ந்தெடுக்காமல் யுதிஷ்டிரனைத் தேர்ந்தெடுத்தது, பின்னர் அவர்கள் நாடு கடத்தப்பட்டது,  துரியோதனன் யுவராஜாவாக ஆனது, வாரணாவதத்தில் பாண்டவர்கள் அனைவரும் உயிருடன் எரிக்கப்பட்டது, துரியோதனனைத் தன் வசம் கொண்டு வரச் செய்த துரோணரின் முயற்சிகள், அதில் அவர் கண்ட தோல்வி…….ஆஹா, இப்போது இனி எந்தத் தடையும் இல்லை.  பாஞ்சால நாட்டு இளவரசி அவன் மனைவியாகப் போகிறாள்.  திரௌபதி அவன் மனைவியாக ஆனதும், வெற்றித் திருமகள் அவனை நாடி வருவதோடல்லாமல் அவனை விட்டுச் செல்லவும் மாட்டாள்.  அவன் வம்சத்து முன்னோரான பரதனை விட அதிக பராக்கிரமத்துடனும், அதிகச் செல்வாக்குடனும் பெரியதொரு சாம்ராஜ்யத்தை அவன் ஆளப் போகிறான்.

அவனுடைய அதீதமான தன்னம்பிக்கை இத்துடன் முடியவில்லை. அவனுடைய மனம் திரும்பத் திரும்ப அவன் தான் வெல்லப் போகிறான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது.  என்றாலும் ஒரு சிறியதொரு தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்னும் எண்ணம் அவன் மனதில், மூளையில் ஒரு பகுதியில் உறுத்திக் கொண்டே இருக்கிறது.  அவனுடைய அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போகும்படி அந்த உறுத்தல் செய்து விடுமோ என்று பயமாகவும் இருந்தது அவனுக்கு.  ஏதேனும் துரதிர்ஷ்டவசமாக நடந்து விடுமோ?  ம்ஹ்ஹூம் அப்படி ஏதும் நடக்காது. தன் தலையை உலுக்கிக் கொண்ட துரியோதனன், தான் நிச்சயமாக ஜெயிப்போம் என நம்பினான்.

ஜராசந்தனும் அவன் பரிவாரங்களும் சென்ற பிறகு ஒரு விசித்திரமான அமைதி அங்கே நிலவியது.  இப்போது அனைவரும் அவன் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  துரியோதனன் தான் போட்டியில் நுழைய வேண்டிய வேளை நெருங்கி விட்டதாகக் கருதினான்.  ஆம், வேளை வந்துவிட்டது.  தன்னுடைய வாளையும், தண்டாயுதத்தையும் தன் தம்பி துஷ்சாசனிடம் கொடுத்தான்.  தன் ஆசனத்திலிருந்து எழுந்து கொண்டு அனைத்து அரசர்களையும் பார்த்து நட்பாகச் சிரித்த வண்ணம் அங்கிருந்து கீழிறங்கி செயற்கைக்குளத்தை நோக்கிச் சென்றான்.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, தலையை கம்பீரமாகத் தூக்கியவண்ணம் ராஜநடை நடந்து சென்றான்.  இப்போது கட்டியம் கூறுபவர்கள் அவனுடைய புகழைப் பாடிக் கொண்டிருந்தனர்.  அதைக் கேட்டுக் கொண்டு மனதுக்குள் ரசித்த வண்ணம் உள்ளூர கர்வம் அடைந்தான்.  அவன் புகழைக்கேட்கக்கேட்க அவன் காதுகள் குளிர்ந்தன.  மனம் மகிழ்ச்சியில் மிதந்தது என்பதை அவன் பிரகாசமான முகம் காட்டியது.  அரசர்களுக்குள்ளே பேரரசன் போல் நடந்த அவன் முதலில் நேரே துருபதனை நோக்கிச் சென்றான்.  துருபதனை மரியாதை நிமித்தம் வணங்கியவனுக்கு துருபதன் முகத்தில் தெரிந்த சிந்தனைக் கோடுகளைக் கண்டு ஆச்சரியம் மிகுந்தது.  அவன் ஏதோ தீர்மானத்தில் உறுதியாக இருப்பதை அவன் கண்கள் சொல்லின.  செயற்கைக்குளத்தருகே சென்றவன் ஆசாரியர் சாந்தீபனியை வணங்கிக் கொண்டான்.  பின்னர் தங்கள் குரு வம்சத்தின்  காவல் தெய்வத்தை மானசீகமாகப் பிரார்த்தித்துக் கொண்டான்.  திரௌபதியைப் பாராட்டும் விதமாக ஒரு பார்வை பார்த்தான்.  அவள் உதடுகள் நடுங்கியதைக் கவனித்துக் கொண்டான்.  ஆனால் அது அவன் ஜெயிக்காமல் போய்விடுவானோ என்னும் பயத்தில் அவளுக்கு நடுக்கம் ஏற்பட்டதாகவும் நினைத்துக் கொண்டான். அவன் இதழ்களில் புன்சிரிப்பு மலர்ந்தது.

ஒரு நிமிடம் வைத்த கண் வாங்காமல் வில், அம்பு, வில்லில் கட்டி முறுக்கேற்ற வேண்டிய நாண், செயற்கைக்குளத்தில் நடப்பட்டிருந்த கம்பத்தின் உச்சியில் சுழலும் வட்டவடிவமான சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருந்த மீன், அதன் கண்களில் தான் வைக்க வேண்டிய குறி,  அதன் பிரதிபலிப்பு குளத்தில் தெரிவது எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டான். அவன் உடல் விறைப்பானது.  ஒரு வெற்றிப் புன்னகையுடன் சபையோரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான்.  அவன் துரியோதனன் எவ்வளவு வல்லமை மிக்கவன் என்பதை இந்த உலகுக்குக் காட்டப் போகிறான்.  தன் இடக்கையில் வில்லின் ஒரு நுனியை எடுத்தான்.  பின்னர் அதை மெல்ல மெல்லக் கீழே நழுவ விட்டு இப்போது அதன் நாண் கட்டப்படாத மற்றொரு நுனி வரும்வரை கொண்டு வந்தான். தன் முழு பலத்தையும் உபயோகித்து வில்லின் நடுத்தண்டை வளைத்தான்.  அவன் வலக்கையில் வில்லின் மற்றொரு நுனியில் கட்டவேண்டிய  நாண் இருந்தது.  அதை வில்லின் மற்றொரு நுனியில் இறுக்கிக் கட்ட ஆரம்பித்தான். எங்கும் அமைதி.  நிசப்தம்.  அனைவர் கண்களும் துரியோதனன் மேலேயே பதிந்திருந்தன.  துரியோதனன் நாடி,நரம்புகளில் எல்லாம் வெற்றி, வெற்றி என்று துடித்தன.  அப்போது ஒரு பலத்த சிரிப்புச் சப்தம்!  துரியோதனனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.  அதே சிரிப்பு!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

போர்................................!

ஸ்ரீராம். said...

அஸ்வத்தாமனுக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்குமா?

எதே சிரிப்பு? சூழ்ச்சி?

பித்தனின் வாக்கு said...

romba nalla suvaiyana kattathil niruthi vittinga. aduthu padikka mika aavalai ullom