Tuesday, July 22, 2014

தர்மத்துக்கு ஆபத்து!

“எல்லாம் என்னால் வந்தது ஆசாரியரே!  என்னைப் போன்ற துரதிர்ஷ்டக்காரிகளால் வேறேன்ன நடக்கும்?” குந்தி தன்னைத் தானே நொந்து கொண்டாள்.  அவள் குரல் தழுதழுத்தது.  “அர்ஜுனன் திரௌபதியை நாங்கள் தங்கி இருந்த குயவனின் வீட்டுக்கு அழைத்து வந்தான்.  உற்சாக மிகுதியில் வெளியில் இருந்தே அவன், “அம்மா, நான் ஒரு அதிசய பிக்ஷை வாங்கி வந்திருக்கிறேன். மிகவும் விலை மதிப்பில்லாத பிக்ஷை அது!” என்றான். முட்டாள் பெண் நான்!  என்னைப் போன்ற முட்டாளும் உண்டோ?  அவன் வழக்கமாய்க் கொண்டு வரும் பிக்ஷை தான் அது என நினைத்தேன். பெண் என நினைக்கவில்லை.  ஆகவே நானும் உள்ளிருந்து கொண்டே, “என் குழந்தாய், நீ கொண்டு வந்த பிக்ஷை எத்தனை உயர்வானதாக இருந்தாலும் அதை உன் மற்ற சகோதரர்களுடன் சமமாகப் பங்கிட்டுக் கொள்வாய்!” என்று சொல்லிவிட்டேன். அதன் பின்னர் தான் அவன் கொண்டு வந்த பிக்ஷை ஒரு பெண் என்றும், அவனுக்கு மனைவியாகக் கொண்டு வந்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டேன். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ஏனெனில் என் மகன்கள் ஐவரும் என்னுடைய வார்த்தையை, என் உத்தரவை மீற மாட்டார்கள்.  நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே மறு கேள்வி கேட்காமல் செய்வார்கள்.  இதை அவர்கள் பல வருடங்களாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.  அவர்களின் வாழ்நாள் முழுதும் இதைக்கடைப்பிடிப்பதாக உறுதிமொழியும் எடுத்திருக்கின்றனர்.” என்று சொல்லிக் கொண்டே தன் கண்ணீரைத் துடைத்தாள் குந்தி.

“இப்போது என்னை இந்தச் சூழ்நிலையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள அனுமதியுங்கள்.” என்று மென்மையாக வியாசர் கூறினார்.  மேற்கொண்டு அவர், “அர்ஜுனன், சுயம்வரத்தில் திரௌபதியை வென்றான் அல்லவா? திரௌபதி ஆர்யவர்த்தத்தின் மிகச் சிறந்த வில்லாளியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள்.  அவள் ஆசை பூர்த்தியாகிவிட்டது.  மிகச் சிறந்த வில்லாளி கிடைத்துவிட்டான்.  குந்தியின் வார்த்தைகளைத் தவிர்த்தால் வேறு ஏதேனும் தொந்திரவுகள் இருக்கின்றனவா அர்ஜுனா?” வியாசர் அர்ஜுனனைக் கேட்டார்.

அர்ஜுனன், “ மதிப்புக்குரிய ஆசாரியரே, நான் இந்தப் பெண்ணை வென்று அடைந்திருக்கிறேன்.  அது சரிதான்.  சந்தேகமே இல்லை.  ஆனால், ஆசாரியரே, என் மூத்தவர் ஆன யுதிஷ்டிரருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.  பீமனோ ஒரு ராக்ஷசியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அதைத் திருமணம் எனச் சொல்ல முடியுமா?  என் மூத்தவர்கள் இருவரும் இப்படி இருக்கையில் நான் மட்டும் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும்?  இது நித்திய கர்மாநுஷ்டானங்களைச் செய்கையில் மனைவி இல்லாமல் அவர்கள் செய்வது சரியல்லவே!  அது மட்டுமல்ல,  ஆரியர்களின் எல்லையற்ற   சட்டதிட்டங்களுக்கும் குலதர்மத்துக்கும் விரோதமான ஒன்று.  இதை நான் எவ்விதம் நிறைவேற்ற முடியும்? ஆகவே நான் மூத்தவர்கள் இருவரையும் திரௌபதியை ஏற்கச் சொல்லி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.” என்றான் மிகவும் வருத்தத்தோடு!

“ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான் அர்ஜுனா!  யுதிஷ்டிரா, நீ ஏன் திரௌபதியை மணக்கக்கூடாது?” யுதிஷ்டிரன் பக்கம் திரும்பிக் கேட்டார் ஆசாரியர்.  “ஆசாரியரே, அவளை நான் வெல்லவில்லை.  சுயம்வரத்தில் அர்ஜுனன் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அவளைத் தன் மணமகளாக அடைந்திருக்கிறான்.  திரௌபதியும் அவனைத் தன் கணவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.  என் இளைய சகோதரனிடமிருந்து அவளை நான் திருடிக் கொள்ள முடியுமா? அதுவும் தர்ம விரோதமானதே!” என்றான் யுதிஷ்டிரன்.  “பீமன் என்ன சொல்கிறான்?” என்று கேட்டுக் கொண்டே பீமனைப் பார்த்து வியாசர் சிரித்தார்.  “பீமனும் அவளை ஏற்க மறுக்கிறான்.” என்று சொன்னான் அர்ஜுனன்.

“ஆமாம், ஆமாம், அவனுக்கு ஏற்கெனவே திருமணம் தான் ஆகிவிட்டதே!” என்று விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே சொன்னார் வியாசர்.  அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை சற்றே தளர்ந்தது. “ஓ, ஆசாரியரே,  அவன் திருமணம் செய்திருப்பது ஒரு ராக்ஷசியை.  அவன் ஒரு ஆர்ய குலத்து மனைவியை யுதிஷ்டிரன் திருமணம் செய்து கொள்ளும் வரை கொண்டு வர முடியாது. “ என்று மிகவும் சோகத்தோடு அர்ஜுனன் கூறினான். “அவன் சொல்வது சரியே!  ஒரு ராக்ஷசி சகல விதத்திலும் மாறுபட்டவளே, வித்தியாசமானவளே!  இல்லையா பீமா?” என்று  தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியவண்ணம் வியாசர் பீமனைப் பார்த்துக் கேட்டார்.  ஆனால் பீமனோ சத்தமாகச் சிரித்தான்.  அவன் சிரிப்பு அந்தச் சந்தர்ப்பத்துக்குச் சற்றும் பொருந்தவில்லை.  மற்றவர்கள் முகம் சுளித்தனர்.

“ஆம், நான் அந்த ராக்ஷசியைத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டி இருந்தது.  அந்த நேரம் ஏதேனும் செய்தாகவேண்டும் என அம்மாவும் கட்டளையிட்டு விட்டாள்.  இது சரியான தர்மம் அல்ல;  ஆனாலும் அந்த நேரத்தின் அவசரத்தை முன்னிட்டுச் செய்தாகவேண்டிய ஆபத் தர்மம் ஆனது அது.  ஒரு பேரிடரில் இருந்து எங்கள் அனைவரையும் காத்துக்கொள்ள வேண்டிச் செய்தது.  நான் மட்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளவில்லை எனில் ராக்ஷசர்கள் அனைவருமாகச் சேர்ந்து எங்கள் அறுவரையும் கொன்று தின்றிருப்பார்கள்.  அது தான் நிச்சயம் நடந்திருக்கும். “சிரிப்பை அடக்கிய வண்ணம் பீமன் மேலே பேசினான். “ஆறு உயிர்களைக் காக்க வேண்டி நான் செய்த பக்தி வேள்வி அது எனலாம்.”என்றபடியே வியாசரைப் பார்த்துக் கண்ணடித்தான் பீமன்.  “ஆனால் அதற்காக நான் ஹிடும்பியைக் காதலிக்கவில்லை;  அவள் பால் ஈர்க்கப்படவில்லை எனச் சொல்ல முடியாது!” என்று முடித்தான்.

சத்தமாய்ச் சிரித்த வியாசர், “என்னிடம் அப்படி எல்லாம் கூறினாலும் நான் நம்ப மாட்டேன். அதை நினைவில் வைத்துக்கொள், குழந்தாய்! அன்றிரவு நீ அவள் படுக்கையில் திருட்டுத்தனமாகப் புகுந்து செய்த வேலையை நான் மறந்துவிடவில்லை.  நடு இரவில் உன் வேலைத் தனத்தைக் காட்டினாயே!” என்று கூறியவண்ணம் ஆள்காட்டி விரலை நீட்டி அவனைப் பயமுறுத்துவது போல் விளையாட்டாக மிரட்டினார்.  இந்த நகைப்பை உண்டாக்கிய பேச்சுக்கு அனைவருமே சிரித்தனர்.  சூழ்நிலையின் இறுக்கம் முழுதும் குறைய ஆரம்பித்தது.  வியாசர் ஒரு அதிசயமான இணக்கமான சூழ்நிலையை அங்கே தன் பேச்சால் உருவாக்கிவிட்டார்.  அநீதி நடந்துவிட்டது என ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருந்த சூழ்நிலை மெல்ல மெல்ல மாறியது.  அனைவரும் சகஜபாவத்துக்கு வர ஆரம்பித்தனர்.


“இப்போது சொல், யுதிஷ்டிரா, இதற்கு நீ சொல்லும் தீர்வு தான் என்ன? நீ மிகவும் புத்திசாலி. விவேகம் உள்ளவன்.  யோசித்துச் சொல்!” என்றார் வியாசர்.

“என் தாயின் வார்த்தைகள், அவை எந்த நிலையில் சொல்லப்பட்டிருந்தாலும், அவள் உண்மை தெரியாமல் பேசி இருந்தாலும், அது ஒன்றே ஒரே தீர்வு!  நாங்கள் ஐவருமே திரௌபதியை மணந்து கொள்கிறோம்.”  என்றான் யுதிஷ்டிரன்.

“மஹாதேவா, மஹாதேவா!” குறுக்கே புகுந்தான் துருபதன்.  நீண்டதொரு பெருமூச்சு விட்டுக் கொண்டு, “ஐந்து ஆண்கள் என் ஒரே பெண்ணைப் பங்கிட்டுக் கொள்வது என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.  கொடூரம்!” என்றான்.  த்ருஷ்டத்யும்னனும் கோபத்தோடு, “ என் சகோதரி ஐந்து ஆண்களை மணந்து கொள்வதற்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்.” என்று கத்தினான்.  அப்போது தன் மாறாப் புன்னகையோடு கிருஷ்ணன் குறுக்கிட்டான்.

“மதிப்புக்குரிய ஆசாரியரே, இது மிகவும் கடினமான விஷயம்.  இது பாஞ்சால அரசன் துருபதனின் கௌரவத்தை மட்டுமில்லாமல் திரௌபதியின் எதிர்காலத்தையும் குறித்தது.   ஐந்து சகோதரர்களின் எதிர்காலமும் இதில் அடங்கியுள்ளது.  நம்மெதிரே ஒரு பேராபத்து உருவாகியுள்ளது.  எல்லாப் பக்கங்களில் அந்த ஆபத்து சூழ்ந்துள்ளது.  யுதிஷ்டிரன் சொன்னபடி மட்டும் நடந்து விட்டால் அது பரதனின் வம்சத்துக்கே மாபெரும்  களங்கமாக அமைந்துவிடும்.  பாண்டவர்களின் வாழ்க்கையிலும் பெரும் பின்னடைவு ஏற்படும்.   ஒரு வேளை திரௌபதி யுதிஷ்டிரனின் யோசனையை ஏற்க மறுத்தாளானால், ஆர்யவர்த்தத்திலேயே ஒரு பேரழிவு ஏற்படும்.  அந்தப் பேரழிவு ஆர்யவர்த்தத்தையே மூழ்கடித்துவிடும்.  மரியாதைக்குரிய அரசர் துருபதன் இவ்வளவு வருடங்களாகப் பாடுபட்டதற்கும், நான்   இந்த சுயம்வரம் நடைபெற வேண்டிச் செய்த அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.  எப்படிப் பார்த்தாலும் தர்மம் ஆபத்தில் இருக்கிறது.  எந்த வழியில் சென்றாலும் பிரச்னை தான்.”  என்றான்.

அங்கே அமர்ந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த திரௌபதி கண்ணீர் உகுத்தாள்.  அவள் கண்ணீர் நிற்கவே இல்லை. இப்போது கிருஷ்ணன் பேசினதைக் கேட்டதும் விம்மி அழவே ஆரம்பித்தாள். அந்நிலையிலும் தனக்குச் சொல்லப்பட்டதை நினைத்து அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.  “ஐந்து கணவர்கள்!  எனக்கு!  ஓ, மஹாதேவா! ஏன் இப்படி என்னைச் சோதிக்கிறாய்?” என்று இறைஞ்சினாள்.  உடனே தன் முகத்தை மூடியவண்ணம் வேகமாய் அழவும் ஆரம்பித்தாள்.  “யுதிஷ்டிரா, நீ என்ன சொல்கிறாய்?” ஆசாரியர் யுதிஷ்டிரனைப் பார்த்துக் கேட்டார்.



3 comments:

ஸ்ரீராம். said...

//வியாசரைப் பார்த்துக் கண்ணடித்தான் பீமன்.//

:)))))))))

மிகவும் சிரமமான சூழல். பாவம் திரௌபதி.

திண்டுக்கல் தனபாலன் said...

கண்ணன் இருக்க எல்லாப் பக்கங்களிலிலும் ஆபத்து வந்தால் என்ன...?

பித்தனின் வாக்கு said...

nallathu, itharkana vidai nam pala kelvikalukku vidai allikum. thodarnthu eluthungal