Friday, July 18, 2014

அர்ஜுனன் முடிவெடுத்தான்!

துரியோதனன் திரும்பிச் சென்றதும் அங்கே அனைவரும் எதிர்பார்த்தாற்போல் நீண்டதொரு மௌனம் நிலவியது. திடீரென அங்கே பல குரல்கள் ஒரே சமயத்தில் பேச ஆரம்பித்தன.  கர்ணன் தன் இருக்கையிலிருந்து எழுந்து மண்டபத்தின் மையத்தை நோக்கி வர வேண்டிக் கீழே இறங்கினான். எவரோடும் ஒப்பிட முடியாததொரு எழிலான கம்பீரத்துடன் நடந்து வந்தவன், துருபதனைப் பார்த்து வணங்கி விட்டு செயற்கைக்குளத்தருகே சென்று நின்று கொண்டு அங்கே குழுமி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டான். கர்ணனைப் பார்த்த அர்ஜுனனுக்கு மனம் தளர்ந்து விட்டது. அவன் மனம் நம்பிக்கை இழந்தது. சொல்லத் தெரியாததொரு வேதனையில் ஆழ்ந்தான். கர்ணன் எப்போதுமே அவனுக்குச் சரியான போட்டி!  அவன் எதிரி! அதிலும் வில் வித்தையில் அவனுக்கு நிகரானவனே!  அதோ!  தன் இடக்காலை பூமியில் அழுந்த ஊன்றிக் கொண்டு கர்ணன்  சூரியனைப் போல் பிரகாசிக்கும் தன் கண்களில் சிரிப்பின் ஒளி தோன்ற வில்லைக் கையில் எடுத்துவிட்டான். அவையே அமைதியில் மூழ்கிக் கிடந்தது.  அடுத்து நடக்கப் போவதை அனைவரும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.  தேர்ந்த திறமையான கைகளுடன் அந்த நாணை வெகு எளிதாக வில்லின் மற்றொரு முனையில் இழுத்துப் பூட்டினான்.  வில்லைத் தன் கைகளில் ஏந்திய வண்ணம் அம்பையும் எடுத்துப் பூட்ட ஆரம்பித்துவிட்டான்.

அதுவரை அமைதியாகச் சிலை போல் நின்றிருந்தாள் திரௌபதி.  அப்போது தான் தனக்கு உயிர் வந்தவள் போல் திடுக்கிட்டு விழித்தாள். கொஞ்சம் முன்னால் வந்து தன் தமையன் த்ருஷ்டத்யும்னன் காதுகளில் ஏதோ மெல்ல முணுமுணுத்தாள்.  உடனே த்ருஷ்டத்யும்னன் குறி பார்த்துக் கொண்டிருந்த கர்ணனைத் தடுத்து நிறுத்திவிட்டு அவன் அருகே வந்தான்.

“அங்க மன்னா!  நமஸ்காரங்கள்.  ஆனால் நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது!” என்று சத்தமாக அனைவருக்கும் கேட்கும்படி சொன்னான்.  “நீர் ஒரு தேரோட்டியின் மகன்!” என்றும் மேலே கூறினான்.  மிகுந்த இறுமாப்புடனும், அவமதிப்புச் செய்யும் தொனியுடனும் பலர் சிரிக்கும் தொனி அங்கே கேட்டது.  ஆனால் கர்ணன் அசைந்து கொடுக்கவில்லை.  புன்னகை மாறாமல் தன் கையிலிருந்த வில்லைக் கீழே தாழ்த்திய வண்ணம் பணிவாக அதே சமயம் தன் கௌரவத்தையும் விட்டுக் கொடுக்காமல் பேச ஆரம்பித்தான்.  “ பாஞ்சால இளவலுக்கு வணக்கம். எனக்குத் தெரியும் நான் வென்றாலும் இளவரசியை மணக்க முடியாது என்பது.  ஆர்ய வர்த்தத்தின் நெறிமுறைகளுக்கு மாறானது என்பதும் அறிவேன்.  அப்படிப்பட்ட மணம் தடை செய்யப்பட்டிருப்பதையும் அறிவேன். தர்மத்திற்குப் புறம்பானது என்றும் அறிவேன்.  ஆனால் நான் இங்கே அனைவருக்கும் காட்ட விரும்பியது குரு வம்சத்தினருக்கு இந்தப் போட்டியில் வெல்லும் அளவுக்குத் திறமைவாய்ந்த நண்பர்கள் உண்டு என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே!  நான் வெல்வதன் மூலம் குரு வம்சத்தினருக்குத் திறமையான நண்பர்கள் இருப்பது உறுதியாகத் தெரிந்து விடும் அல்லவா?”  சத்தமாய்ச் சிரித்தான் கர்ணன்.  பின்னர் தானே நாணை அகற்றினான். மிகவும் கவனமாக அங்கே இருந்த தர்ப்பைப்புற்களின் மேல் வில்லையும், அம்பையும் வைத்தான்.  தன் நிமிர்ந்த தலை நிமிர்ந்தவாறே கம்பீரம் சற்றும் குறையாமல் சென்று தன் இருப்பிடத்தில் அமர்ந்தான்.

அவன் சென்று அமர்ந்த பின்னரும் எழுந்த சிரிப்புச் சப்தம் அஸ்வத்தாமா எழுந்த வேகத்தில் அடங்கியது. அவன் வந்ததில் இருந்தே காம்பில்யத்தில் அனைவருக்கும் அவன் வரவு பிடிக்கவில்லை.  ஆகவே அவன் எழுந்ததுமே பலர் முகமும் சுளித்துக்கொண்டது.  அஸ்வத்தாமா எதையும் கவனிக்காமல் வேகமாய் நடந்து சென்றவன் சற்றும் பொறுமையின்றிச் செல்லும்போதே துருபதனைப் பார்த்துத் தன் கைகளைத் தூக்கி ஆசீர்வதிக்கும் பாவனையில் உயர்ர்த்தினான்.  விரைவில் குளத்தருகே சென்றான்.  அவன் மிகக் கோபத்தில் இருந்தது அவன் முகத்திலிருந்தே தெரிய வந்தது.  கீழே குனிந்து வில்லை எடுக்க முயன்றான்.  ஆனால் அவனால் குனிந்தவண்ணம் வில்லை எடுக்க முடியவே இல்லை;  தன் பற்களைக் கடித்த வண்ணம் மீண்டும் மீண்டும் முயன்றான்.  அம்முயற்சியில் அவன் நாடி, நரம்புகளெல்லாம் கூடப் புடைத்துக்கொண்டன.  ஆனால் அவனால் முடியவில்லை.  கையில் எடுத்த வில்லின் தண்டை வேகமாய்த் தூக்கி எறிந்தான்.  “வில்லா இது?  இல்லை! இல்லவே இல்லை! இது வில்லே இல்லை.  இதெல்லாம் ஒரு போட்டியா? இப்படி ஒரு போட்டியும் நடக்கக் கூடாது!” எனக் கடித்த பற்களுக்கிடையே சீறினான்.  அவமானத்தால் தலை குனிந்தவண்ணம் தன் இடத்திற்குத் திரும்பினான்.  அவை மீண்டும் சிரிப்பில் ஆழ்ந்தது.

சிறிது நேரத்தில் சபை மீண்டும் அமைதி அடைந்தது.  இப்போது அனைவரின் எதிர்பார்ப்புகளும் உச்சத்தில் இருந்தன.  சிசுபாலன், துரியோதனன், விராடன், அஸ்வத்தாமா போன்ற தேர்ந்த வில்லாளிகளாலேயே முடியாத ஒன்றைத் துணிகரமாக முயலப் போவது யார்?  இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார்?  அனைவருமே இப்போது யாதவர்கள் பக்கம் பார்த்தார்கள்.  அவர்களில் ஒருவரா?  அர்ஜுனன் இப்போது திரௌபதி மலர்ந்த முகத்துடன் இருப்பதையும், தன் கண்களால் கிருஷ்ணனைப் பார்த்து மௌனமாகக் கேள்விகள் கேட்பதையும் கவனித்தான்.   அவள் கண்கள் அவள் தன் மண வாழ்க்கையின் கதாநாயகனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்வதாய் அவனுக்குத் தோன்றியது.  அந்த நாயகன் இன்னும் வரக் காணோமே என அந்தக் கண்கள் தேடுவதாகவும் நினைத்தான்.  அவனுக்குள் ஏதோ ஒன்று அவனைத் தூண்டியது.  இது தான் என நிச்சயமாகச் சொல்ல முடியாததொரு ஏதோ ஒரு இனம்புரியா உணர்ச்சி அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது.  அவன் தான் இதை முடிக்க வேண்டும் என்றும் அது சொன்னது.

ஒரு நிமிடமே தோன்றியதொரு உணர்ச்சிப் பிரவாகத்தில் அவன் தன்னைத் தானே அலசி ஆராய்ந்தான்.  அவன் தான் எவ்வளவு முட்டாளாக இருந்து வருகிறான்!  அவனுக்கென ஏற்பட்டவற்றைக் கூட அடையப் பிறரை எதிர்நோக்கித் தானே எந்த முடிவும் எடுக்காமல் யோசித்துக் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறானே!  முடிவை அவனல்லவோ எடுக்க வேண்டும்!  இது அவன் வாழ்க்கை!  அவன் தான் தீர்க்கமான முடிவை எடுத்தாக வேண்டும்.  இப்போது அவன் எடுக்கப் போகும் இந்த முடிவு தான் அவர்களுக்கு இழந்த வாழ்க்கையை  மீட்டுக் கொண்டு வந்து தரப் போகிறது.  அது அவன் கைகளில் தான் உள்ளது.  அவன் முடிவின் மூலம் அவர்களுக்கு மாபெரும் அதிகாரங்களும், சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கப் போகிறது.  இந்த முடிவை இப்போது அவன் எடுத்துவிட்டான் எனில் பின்னர் திரும்பியே பார்க்க வேண்டாம்.  வாழ்க்கையின் முன்னேற்றப் பாதைக்குப் போய் விடுவான்.  தன் இருக்கையில் இருந்து அவன் எழுந்தான்.  அவனருகே அமர்ந்திருந்த மற்ற பிராமணர்கள் அவனை அமரச் சொல்லி வற்புறுத்தினார்கள்.  அவன் நின்று கொண்டிருப்பது அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.  குளத்தருகே நடப்பவை பற்றி அவர்கள் பார்க்க முடியவில்லை.  ஆனால் அர்ஜுனன் அவர்களை லக்ஷியம் செய்யவில்லை.

மெல்ல எழுந்து நடந்தான்.  தன் சகோதரர்களைக் கூடக் கலந்து ஆலோசிக்கவில்லை.  பெரிய அண்ணா யுதிஷ்டிரரின் சம்மதத்தை வாங்க வில்லை. ஆகவே தன்னை அமரச் சொன்ன பிராமணர்களையோ, தன்னருகே அமர்ந்திருந்த சகோதரர்களையோ நோக்காமல் நேராகக் குளத்தைப் பார்த்த வண்ணம் நடந்தான். கிட்டத்தட்டக் குதித்தான்.  சற்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தான்.  அவன் அழகிய முகம் உணர்ச்சி வசத்தில் சிவந்திருந்தது.  கண்கள் பளீரென ஜொலித்தன.

மொத்த சபையும் ஆச்சரியவசப்பட்டு அதே சமயம் சினத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தது.  எங்கும் நிசப்தம்! ஒரு இளந்துறவி,  அதிலும் பிராமணன் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறானா?  மோசம், மோசம்! கோரமானதொரு நிகழ்வு இது! அரசர்களும், இளவரசர்களும் ஏளனமாகப் பார்த்து நகைத்தனர்.  பலராமன், கிருஷ்ண வாசுதேவன், உத்தவன் ஆகியோர் மட்டும் அமைதி காத்தனர்.  மற்ற பிராமணர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த இளைஞன் போட்டியில் தோற்றுப் போய்த் தனக்குத் தானே தன்னை முட்டாளாக்கிக் கொள்வதல்லாமல் நம் குலத்தையும், இந்நிகழ்வையும் மிகவும் மோசமானதாக ஆக்கிவிடப் போகிறான்.  ஆனால் அங்கே அமர்ந்திருந்த யுதிஷ்டிரனோ ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தான்.  இன்று வரை அவனைக் கேட்காமல் ஓர் அடி கூட அர்ஜுனன் எடுத்து வைத்ததில்லை.  இப்போது எப்படி அவனுக்கு தைரியம் வந்தது?   பீமன் கட்டுக்கடங்காத சந்தோஷத்தால் துள்ளினான்.  நகுலனுக்கோ தன் அண்ணனைக் குறித்த மிதமிஞ்சிய பெருமை.  வழக்கம் போல் சஹாதேவனின் பொருள் புரியாச் சிரிப்பு.

அர்ஜுனன் மிக எளிதாகவும், கலக்கமே இல்லாமலும் துருபதன் அமர்ந்திருக்கும் இடம் சென்றான். பொதுவாக உயர் பதவியிலிருக்கும் அரசர்களானாலும், சக்கரவர்த்திகளே ஆனாலும் பிராமணர்கள் அவர்களை விட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் அரசர்கள் க்ஷத்திரியர்களாக இருப்பதால் பிராமணர்கள் ஆசீர்வதிக்கும் பழக்கம் இருந்தது.  அந்தப் பழக்கப்படித் தன் வலக்கையைத் தூக்கி துருபதனை ஆசீர்வதித்தான் அர்ஜுனன். அவனிடம் போட்டியில் தான் கலந்து கொள்ள அநுமதி அளிக்கும்படி கோரினான்.துருபதன் அவனையே கூர்ந்து கவனித்தான்.  அந்த இளந்துறவியின் இளமை பொங்கும் கவர்ச்சியான முகமும், நெற்றியில் அவன் அணிந்திருந்த திருநீறும், அவன் கண்களில் தெரிந்த உறுதியும், வலிவாகவும் சக்தியுடனும்  காணப்பட்ட தோள்பட்டையின் அமைப்பும், ஆங்காங்கே ஒழுங்கற்றுக்காணப்பட்ட தாடியும் அவன் போர்ப்பயிற்சி உள்ளவன் என்பதை எடுத்துச் சொல்லியது.  அவன் நின்ற கோலமும் துருபதனுக்கு அவன் குருவான பரசுராமரை நினைவூட்டியது.  தன் இளமைக்காலத்தில் அவரும் இப்படித் தானே இருந்திருப்பார் என நினைத்துக் கொண்டான்.  பின்னர் அவனைப் பார்த்துக்கை கூப்பிய வண்ணம், “பிராமணோத்தமரே, உமக்கு என் அநுமதியை அளித்தேன்.  அதுவும் நீங்கள் கேட்டதால் அளித்தேன்.  ஆனால் நீங்கள் என் அனுமதியை வேண்டி இருக்கவே வேண்டாம்.  இந்தப்போட்டியில் கலந்து கொள்ள உமக்குப் பூரண உரிமை உண்டு!” என்றான்.


யாதவர்களிடையே அமர்ந்திருந்த பலராமனுக்குத் தன் ஆவலை அடக்க முடியவில்லை.  துள்ளிக் குதித்தான்.  ஆனால் கிருஷ்ணன் அவனை அடக்கினான்.  “உங்களை நீங்களே அடக்கிக் கொள்ளுங்கள் பெரிய அண்ணா! “ என்றும் கூறினான்.  துரியோதனன் அந்த இளம் துறவி யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டான்.  சிற்றப்பன் மகன் அர்ஜுனன்! சந்தேகமே இல்லை;  அந்த கெக்கலி கொட்டிச் சிரித்த குரலும் பீமனுடையதே!  அதிலும் சந்தேகம் இல்லை.  துரியோதனனின் சந்தேகம் ஊர்ஜிதம் ஆயிற்று.  பாண்டவர்கள் இறக்கவே இல்லை.  உயிருடன் இருக்கின்றனர்.  ஐவரும் இப்போது இந்த நிமிடம் இந்த சபையில் அமர்ந்திருக்கின்றனர்.  அவர்களில் ஒருவனான திறமைசாலி அர்ஜுனன் அதோ போட்டியில் கலந்து கொள்ளப் போகிறான்.  திரௌபதியை வெல்லவும் போகிறான்.  அவனுக்குத் தான் திரௌபதி கிடைக்கப் போகிறாள்.  ஆஹா!  இது என்ன சதி!  சூழ்ச்சி! இத்தனைக்கும் பின்னால் இருப்பது யார்? ஆம், அந்தக் கிருஷ்ண வாசுதேவன் தான்!  ரத்தம் வருவது போல் சிவந்த தன் கண்களைக் கிருஷ்ணன் பக்கம் திருப்பி அவனைக் கொன்றுவிடுவது போல் பார்த்த வண்ணம் தன் மாமன் ஷகுனியிடம், “மாமா, அவர்கள் வந்துவிட்டனர்!” என்றான்.  ஷகுனியின் முகத்தின் நிரந்தரப்புன்னகை மறைந்து எழுத்தில் எழுதமுடியாததொரு வார்த்தையை அவன் பிரயோகம் செய்தான்.

அதற்குள் துஷ்சாசனும் அர்ஜுனனை அடையாளம் கண்டுகொண்டு பற்களைக் கடித்த வண்ணம் தன் தமையன் பக்கம் திரும்பினான்.  “அண்ணா, அவர்கள் வந்துவிட்டனர்!  இது என்ன மாயமா, மந்திரமா, தந்திரமா?” என்றான். “இந்த சுயம்வரமே அதோ எல்லாத் திட்டங்களையும் சப்தமின்றிப்போட்டுவிட்டு ஒன்றும் அறியாதவன் போல் அமர்ந்திருக்கும் அந்த மாட்டிடையனுடைய மாபெரும் திட்டம்!  அதில் இதுவும் ஒன்று!” என்று சீறினான் துரியோதனன்.






3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மாயமா, மந்திரமா, தந்திரமா - எல்லாமே தான்...

பித்தனின் வாக்கு said...

ithai ithai ithaithan ethirparthen. mathavanin thittangal ippadithan irukkum allava. nanru thodarnthu eluthungal. nanri

ஸ்ரீராம். said...

ஆஹா..... நிறைவானதொரு காட்சி. ரசிக்க முடிந்தது.