Tuesday, May 13, 2014

ஷிகண்டினின் துக்கம்!

“போதும், போதும், இந்த அவமதிப்புப் போதும். இதற்கு மேல் தாங்காது.” திரெளபதி என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்து உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது.  ஷிகண்டினையே உற்றுப் பார்த்தாள்.  ஒருகாலத்தில் அவளுக்கு சகோதரியாக இருந்த ஷிகண்டின் இன்று சகோதரன்.  இந்த அவமானங்கள், அவமதிப்புக்கெல்லாம் இவனே/இவளே? காரணம்.  இவனால் தான் இத்தகைய அவமானம் தந்தைக்கு நேரிட்டிருக்கிறது.  வெகு தூரத்திலிருந்து வருகிறான்போல் தெரிகிறது. சாலைப் புழுதி முழுவதும் முகத்தில் அப்பி இருக்கிறது.  அவன் உறையிலிருந்து தொங்கிய வாளின் நுனி, வாளின் உறை முழுதும் கூடப் புழுதியால்  மூடப்பட்டு இருந்தது.   காம்பில்யத்துக்குச் சரியான நேரத்தில் வந்து சேர வேண்டும் என மிகவும் முயற்சி எடுத்திருக்கிறான்.  நீண்ட தூரப் பயணம் என்பதால் இப்படிப் புழுதி மூடிக் கிடக்கிறான்.

ஆனால் ஒரு விஷயம் உண்மைதான்.  இவன் முன்னர் இருந்த அந்த மென்மையான நுண்ணிய இதயம் படைத்த பெண் இல்லை.  இவன் முகத்தில் தெரிந்த அந்தப் பெண்மைக்குரிய வளைவு, நெளிவுகளை இப்போது காணமுடியவில்லை.  முகம் மிகவும் வெளுத்துக் கொஞ்சம் இளைத்தாற்போல் காணப்படுகிறான்.  கண்ணுக்கு மேலுள்ள புருவம் கூட ஒரு பெண்ணினுடையதாகத் தெரியவில்லை.  அதே போல் தாடையிலும் தாடி முளைத்துள்ளது.  இவன் சொல்வது உண்மைதான்.  முழு உண்மை.  ஒரு பெரிய மாற்றம் கட்டாயம் நடந்துள்ளது. இவன் இப்போது நிச்சயமாய்ப் பெண்ணல்ல.   அப்போது சத்யாஜித் அவன் வாயிலும் கொஞ்சம் நீரை ஊற்றினான்.  ஷிகண்டின் மெல்லக் கண்களை விழித்துத் தன் சகோதரியையும், இளைய சகோதரனையும் பார்த்துக் கொஞ்சம் வருத்தம் கலந்த புன்னகையைச் சிந்தினான்.  அவர்களிடம் மன்னிப்புக் கோருவது போல் இருந்தது அது.  வெயிலிலும், மழையிலும், காற்றிலும் அடிக்கடி இருக்க நேரிட்டதால் கடினப்பட்டிருந்த அவன் முகத்தை மிகவும் ஆவலோடும், அன்போடும் திரெளபதி பார்த்தாள்.  ஹூம், இவன் எவ்வளவு தான் நம் குடும்பத்துக்கும், பாரம்பரியத்துக்கும் கேடு தேடித் தந்தாலும் என் மனம் இவனிடம் பாசம் கொள்ளத் தான் செய்கிறது.  திரெளபதியின் மனம் ஷிகண்டின் பால் பாசத்தையே காட்டியது.  ஒருகாலத்தில் சகோதரியாக இருந்து, இப்போது சகோதரன் ஆகிவிட்ட அவனைப் பார்த்தபோதும் அவள் பாசம் குன்றவே இல்லை.

ஆனால்….ஆனால்…… இப்போது பார்த்து இவன் இங்கே வந்திருப்பது யாருக்குமே மகிழ்ச்சியைத் தரப் போவதில்லை.  ஏற்கெனவே தந்தையார் மனக்கலக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்.  சகோதரன் த்ருஷ்டத்யும்னனுக்குப் பொறுப்புகள்  அதிகம். அதோடு தந்தையின் கவலையும் கூட.  சத்யஜித்துக்கு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் தான் நேரம் இருக்கும். எனக்கோ இந்த மாபெரும் சுயம்வரம் என்னும் போர்க்களம் காத்திருக்கிறது.  தலையை உலுக்கிக் கொண்ட திரெளபதி தன் கழுத்தில் போட்டிருந்த ஆபரணங்களை இன்னது செய்கிறோம் என்னும் எண்ணமில்லாமல் பிடித்து இழுத்த வண்ணம்மீண்டும் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.  அப்போது ஷிகண்டின் எழுந்து கொண்டான்.

“கிருஷ்ணை, நீயுமா என்னிடம் கோபத்தில் இருக்கிறாய்?” எனப் பரிதாபமாகக் கேட்டான்.  அவனுடைய அந்த அவநம்பிக்கைக் குரலைக் கேட்ட திரெளபதி அவனையே பார்த்தாள்.  “நீ என்னைப் புரிந்து கொள்வாய் என நம்பினேனே கிருஷ்ணை!  நீ எப்போதுமே ஒரு தாயின் பாசத்தை என்னிடம் காட்டி வந்துள்ளாய்!” என்று ஷிகண்டின் மீண்டும் தன் குரலில் ஏமாற்றம் தொனிக்கக் கேட்டான்.

“ஆனால் இவை எல்லாம் எப்படி நடந்தது சகோதரா?  என்னால் நம்பவே முடியவில்லையே! நீ சொல்வதை எல்லாம் என்னால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.  நீ கங்கையில் முழுகி இறந்து போனாய் என்றல்லவா நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம்!” என்றாள் திரெளபதி.

ஷிகண்டின் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.  “நான் கங்கையில் விழுந்து உயிரை விடவே தீர்மானித்திருந்தேன்.  ஆனால்….ஆனால் என் வாழ்வில் ஒரு கடவுள் வந்தார்.  என் வழியில் அவர் வந்தார்.  அவர் தான் என்னை துரோணாசாரியாரிடம் போகச் சொன்னார்.  அவர் சொல்படி நான் துரோணரிடம் சென்றேன்.  நான் துரோணரின் பரம வைரியின் மகன் எனத் தெரிந்தும் என்னை மிகவும் பாசத்தோடும், நேசத்தோடும் துரோணர் வரவேற்று மாணாக்கனாக ஏற்றுக் கொண்டார்.” இதைச் சொல்கையில் ஷிகண்டின் தன் சகோதரியின் முகத்தையும், சகோதரன் முகத்தையும் கூர்ந்து கவனித்தான்.  அவர்கள் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனர் என்பதை உன்னிப்பாய்க் கவனித்தான். இருவர் முகத்திலும் சுருக்கங்களும், கவலைக்கோடுகளும் கண்டதோடு அன்றி அடுத்து அவர்கள் விட்ட பெருமூச்சையும் கேட்டான்.


தன்னுடைய பயந்த குரலிலேயே தொடர்ந்தான் அவன்:”  ஆசாரியர் என்னை ஒரு யக்ஷனிடம் அனுப்பி வைத்தார்.  இருவருமாகச் சேர்ந்து ஓர் அற்புதமான நிகழ்வை உருவாக்கினார்கள்.  ஆனால் முதலில் ஒரு நான்கு மாதங்களுக்கு நான் மிகவும் வேதனைகளை அடைந்தேன்.  உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கஷ்டங்களை அனுபவித்தேன்.  உணவு எனக்கு மறுக்கப்பட்டதோடு அல்லாமல் மூலிகைச்சாறுகளும், குடிநீருமே உணவானது.  கிட்டத்தட்ட என்னைத் தூள்தூளாக்கிவிட்டனர். நான் மிகவும் ரத்தமும் இழந்தேன். சில சமயங்களில் நான் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதாகவே உணர்ந்தேன்.  பல நாட்களுக்கு என் சுய நினைவில்லாமல் கிடந்தேன்.  நான் கண் விழித்துப் பார்க்கையில் யமனின் கைப்பிடிகளுக்குள் இருப்பதாகவே உணர்ந்தேன்.  ஆனால் அந்த மஹாதேவன் என்னில் அற்புதம் நிகழ்த்தி இருப்பதை உணர்ந்தேன்.  நான் மனிதன் ஆகிவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.”

அதிக உணர்ச்சிவசப்பட்டதால் ஷிகண்டினின் குரல் நடுங்கியது.  கண்ணீர் பெருக்கெடுத்து வந்து அவன் கன்னங்களை நனைத்தது.  அவன் தன்னுடைய உணர்வுகளுக்கு ஒரு வடிகால் கொடுக்கும் முயற்சியில் அவற்றை நன்கு வெளிப்படுத்தினான்.  “சகோதரி, நான் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தேன்.  அப்படி இருந்தும், நான் இங்கே உங்களை எல்லாம் காண வேண்டி வெகு தூரம் பயணப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறேன்.  எவ்வளவு விரைவாக வந்திருக்கிறேன் தெரியுமா?  எதற்கு?  நான் உன் சுயம்வரத்தின் போது இங்கே, காம்பில்யத்தில் இருக்க வேண்டும் என ஆசைப் பட்டேன்.  அதோடு, அதோடு, நீங்கள் எல்லோரும் என்னைக் கண்டதும் ஆனந்தத்தில் ஆடுவீர்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். “  இப்போது ஷிகண்டினால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை.  விம்மவும் ஆரம்பித்தான்.  சிறு சிறு விம்மல்கள் அவனிடம் தோன்றின.  கஷ்டப்பட்டு அவற்றை அடக்க முயன்றான்.

“ஆனால் நீங்கள் அனைவரும் என்னைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறீர்கள்.  தந்தையோ எனில் என்னைச் செத்துப்போ என்கிறார்.  உங்கள் யாருக்குமே நான் தேவை இல்லை.  என்னுடைய எவ்வித உதவியும் உங்களுக்கும் தேவை இல்லை.  நான் எதற்காக இத்தனை கஷ்டம் பட்டேன்? நம் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மாபெரும் கறையைத் துடைக்க விரும்பினேன்.  அவமானத்தை அடியோடு அழிக்க விரும்பினேன். இதற்காகவே அந்த யக்ஷனிடம் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தேன். இந்த உலகுக்கு துருபதனுக்கு ஷிகண்டின் என்பவன் மகன் தானே தவிர மகள் அல்ல என்பதைக் காட்ட விரும்பினேன்.  அதற்காக அத்தனையும் பொறுத்துக் கொண்டு ஒரு ஆண்மகனாக மாறி இங்கே வந்துள்ளேன்.  ஆனால் சகோதரி, எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு!”

இப்போது ஷிகண்டின் ஒரு பெண்ணைப் போலவே அழுதான்.  “நான் இறந்திருக்க வேண்டும்.  உயிரோடு இருந்திருக்கக் கூடாது.  நான் ஏன் சாகவில்லை?  உங்கள் அனைவருக்கும் இப்படி ஒரு கஷ்டத்தைக் கொண்டு வந்துவிட்டேனே!  இந்த அவலமான நிலைக்கு நானே காரணம். ஆனால்….ஆனால் நான் எங்கே போவேன்?  எந்த இடம்  இருக்கிறது நான் போக?  உங்கள் யாருக்குமே என்னுடைய உதவியோ, என்னுடைய அருகாமையோ தேவை இல்லை.  அப்போது நான் எங்கே செல்வது?”  தன் முகத்தைக் கைகளால் மூடிய வண்ணம் இன்னும் மோசமாகப் பார்க்கவே பரிதாபமாக அழுதான் ஷிகண்டின்.

3 comments:

ஸ்ரீராம். said...

துரோணரிடமும், யட்சனிடமும் ஷிகண்டின் பெற்ற மாற்றம் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

sambasivam6geetha said...

http://kannanvaruvan.blogspot.in/2013/09/blog-post_27.html

ஶ்ரீராம், ஏற்கெனவே படித்திருக்கிறீர்கள். மேற்கண்ட சுட்டியில் போய் அடுத்தடுத்து உள்ள பதிவுகளையும் பார்க்கவும். :)))) பின்னூட்டம் கூடக் கொடுத்திருக்கிறீர்கள்.

ஸ்ரீராம். said...

பார்த்தேன். நான் சொன்னது பெண்மை கலந்த ஷிகண்டினை ஆண்மையுள்ளவனாக மாற்றுவது. அதற்கான ட்ரீட்மென்ட் பற்றிச் சொன்னேன். :)))))))))))