Sunday, March 16, 2014

துரோணர் அதிசயித்தார்!

கண்ணன் இதைச் சொல்லிவிட்டுத் தன் படைவீரர்களிடம் இருந்து தான் மட்டும் பிரிந்து  தன் சொந்த மெய்க்காப்பாளன் மட்டும் துணை வர, ரதத்தைக் கோட்டையை நோக்கிச் செலுத்தினான்.  துரியோதனனோ, துரோணரோ யாராக இருந்தாலும் அவனைத் தனியே எதிர்கொள்ள நினைத்தால் அவ்விதமே எதிர் கொள்ளட்டும். இந்த சவாலை அவன் எதிர்கொண்டே ஆகவேண்டும். ஆரியர்களின் வழக்கப்படி ஒரு வீரன், இன்னொரு வீரனை எதிர்கொள்ள நினைத்து, அதை அவன் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தால் அந்த வீரன் அதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  இது தான் வீரத்துக்கு அடையாளம்.  அதிலும் எதிர்கொள்ள நினைப்பவன் ஒரு அதிரதியாக இருந்துவிட்டால் நிச்சயமாய் அவன் தன்னந்தனியே தன் எதிரியை எதிர்கொண்டு போரிட்டே ஆகவேண்டும். வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் இதை மறுதலிப்பது ஒரு ஆரியனுக்கு அழகல்ல.    கிருஷ்ணன் இதை எல்லாம் நினைத்து அசைபோட்டுக்கொண்டே கோட்டைக்கு அருகே வந்துவிட்டான்.


ஆனால் என்ன ஆச்சரியம்?? அங்கே யுத்தம் நடக்கப்போவதற்கான அறிகுறிகள் எதையும் காணோமே!  கோட்டையின் கொத்தளங்களில் படை வீரர்கள் வில்லும், அம்புமாகக் காவல் காத்துக் கொண்டு, இவர்கள் படையின் திக்கை நோக்கி அம்புகளைச் செலுத்தத் தயாராக நிற்கவில்லை.  சொல்லப் போனால் எந்தக் காவலும் இல்லாமல் ஒரு வில்லாளியோ, ஒரு காவலாளியோ இல்லாமல் இருந்ததோடு, பளபளவெனப் பட்டாடைகளாலும், மலர் மாலைகளாலும் , வாசனைத் திரவியங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்ட பொதுமக்களே  கொத்தளங்களில் நின்று கொண்டிருந்தனர். அவர்களும் கிருஷ்ணன் வரவுக்கே காத்திருப்பதாகப் பட்டது.  ஏனெனில் அவனைக் கண்டதுமே அவர்கள், “கிருஷ்ண வாசுதேவனுக்கு ஜெய மங்களம்!” என்னும் கோஷத்தைச் செய்து அவனை வரவேற்றார்கள்.  சற்று தூரத்திலேயே தன் ரதத்தை நிறுத்திய கிருஷ்ணன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.  கிருஷ்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துத் தான் நட்பு முறையில் வந்திருப்பதைத் தெரிவிக்கும் வகையில் ஒலித்தான்.

கண்ணனின் நட்பு முறையிலான சங்கின் ஒலியைக் கேட்டதுமே கோட்டைக் கதவுகள் திறந்தன.  மூன்று ரதங்கள் கிருஷ்ணனை எதிர்கொண்டன.  தன் ரதத்தில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணன் முன்னால் வந்த ரதத்தின் கொடியில் தங்க நூல்களால் நெய்யப்பட்ட நீர்ப்பானையின் சின்னத்தைக் கண்டான்.  இது ஆசாரியர் துரோணரின் சொந்த அடையாளச் சின்னம்.  குரு வம்சத்தினருக்கு  ஆயுதப் பயிற்சி கொடுக்கும் தலைமைத் தளபதியும் குருவம்சப் படைகளுக்குத் தலைவரும் ஆவார்.  அடுத்தது யாதவக் கொடியாகத் தெரிந்தது. ஆம், அது உத்தவனின் கொடி. கிருஷ்ணனின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. ஆஹா, இந்த உத்தவன் என்னவெல்லாம் அதிசயங்களைச் செய்கிறான்! இவனை சகோதரனாகவும், நண்பனாகவும் அடைய நான் பெற்ற பேறுதான் என்னே!  இதோ இப்போதும் ஹஸ்தினாபுரத்தில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தி துரோணரை இங்கே அழைத்து வந்துள்ளான்.  மூன்றாவது ரதம் சகுனியின் காந்தார நாட்டுக் கொடியின் சின்னத்தோடு காணப்பட்டது.  அப்படி எனில் மாமா ஷகுனியும் வந்திருக்கிறாரா?

கிருஷ்ணனைத் தொடர்ந்து வந்த பாதுகாப்பாளர்களில் தலைமை வகித்து வந்த கடன், சற்று தூரத்தில் துரோணரும், உத்தவனும் சேர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.   வில்லில் அம்பை ஏற்றி நாணைச் செலுத்தத் தயாராக நின்ற கடனைப் பார்த்துச் சிரித்த கிருஷ்ணன், “கடா, உன் வில்லின் நாணைத் தளர்த்துவாய்! புஷ்கரம் எவ்வித சேதமும் இல்லாமல், நீ வில்லையும் அம்புகளையும் உபயோகிக்காமல் செகிதானாவிடம் போய்ச் சேரப் போகிறது.” என்று சொல்லிவிட்டுத் தன் மந்திரச் சிரிப்பை உதிர்த்தான்.  கடனுக்கு இங்கே என்ன நடக்கிறது என்றே சுத்தமாய்ப் புரியவில்லை.  “இப்போது அவர்கள் நம்மோடு போர் புரியவென வரவில்லையா பிரபுவே!  நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று குழப்பத்தோடு கேட்டான்.

“இல்லை கடா, இப்போது இங்கே போர் இல்லை.  குரு வம்சத்தினரின் பிதாமஹர் ஆன பீஷ்மர் ஒரு தவறைச் சரி செய்திருக்கிறார்.  செகிதானாவுக்குப் புஷ்கரத்தைத் திரும்பக் கொடுத்திருக்கிறார்.   இது தான் நியாயம், இது தான் தர்மம்.  நீ சென்று செகிதானா, சாருதேஷ்னா இன்னும் மற்றவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வா.” என்று அவனை அனுப்பினான். மூன்று ரதங்களும் சற்று தூரத்திலேயே நின்றன.  முதல் ரதத்தில் இருந்து விலை உயர்ந்த பட்டாடைகளைத் தரித்த துரோணர் வெளிப்பட்டார்.  அவர் முகம் ஆணையிடும் தோற்றத்தில் காணப்பட்டது.  கண்கள் வெற்றியில் பளபளத்தன.  கிருஷ்ணனைப் பார்த்து அவர் சிரித்த சிரிப்பிலும் வெற்றியின் அறிகுறி தெரிந்தது.  “மாட்சிமை பொருந்திய வாசுதேவா, உன்னுடைய வில்லின் நாணை ஏற்றாமல் அம்புகளைச் செலுத்தாமல் நீ புஷ்கரத்தை எடுத்துக் கொள்ளலாம்.  ஏன் எடுத்துக் கொண்டு விட்டாய்.  இது உன்னால் மட்டுமே முடியும் கிருஷ்ணா!  பாட்டனார் பிதாமஹர் பீஷ்மரும், மஹாராஜா திருதராஷ்டிரரும் உன்னையும் செகிதானாவையும் வரவேற்க வேண்டியே என்னை இங்கே அனுப்பியுள்ளார்கள்.” என்றார்.

கிருஷ்ணனும் தன் ரதத்திலிருந்து இறங்கினான்.  கிருஷ்ணனிடம் இயல்பாகவே உள்ள விநயத்துடனும், பணிவுடனும், அவன் அந்த பிராமண ஆசாரியரைப் பார்த்துத் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கக் குனிந்தான்.  ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தினார் துரோணர். அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொன்டார்.  பல வருடங்களாக கிருஷ்ண வாசுதேவனின் பெயரைக் கேட்டிருக்கிறார் அவர்; அவனைப் பற்றிப் பல விதங்களில் நினைத்திருக்கிறார்.  அவனைப் பார்க்க வேண்டி இத்தனை நாட்களாய்க் காத்திருந்திருக்கிறார்.  ஆனால்,,,, ஆனால் இது என்ன?  அவர் பார்ப்பது?  கிருஷ்ண வாசுதேவன் என்னும் பெயருக்கு உள்ள இந்த உருவம், கருணையின் மறு உருவாகவன்றோ இருக்கிறது.  சிறு பிள்ளை போல் குழந்தைத் தனமாகச் சிரித்துக் கொண்டு, தெளிவாகத் தெரியும் நேர்மையுடன், சொல்லொணா வியப்பை அன்றோ அளிக்கிறது!!  இவனைப் பார்க்கையிலேயே அன்பின் மறு வடிவாக, கருணையின் மொத்த உருவாக, அவனிடம் உள்ள அனைத்துச் சிறப்புக்களையும் தன் ஒரு தோற்றத்திலேயே பரிபூரணமாய் எடுத்துக் காட்டிக் கொண்டு….. துரோணர் நிச்சயமாய் இப்படி ஒரு இளம்பிள்ளையைக் கருணையின் மொத்த உருவாய் எதிர்பார்க்கவே இல்லை.


3 comments:

ஸ்ரீராம். said...

சண்டையில்லாமல் கொஞ்சம் 'சப்'பெனப் போய்விட்டதோ! :)))))

திண்டுக்கல் தனபாலன் said...

கிருஷ்ணனின் ஆனந்தமும் வியப்பு தான்...!

பித்தனின் வாக்கு said...

mika nanru