Thursday, March 13, 2014

கண்ணன் விரைந்தான்!

தர்மம் கிருஷ்ணனைத் தொடர்ந்து வந்து ஈர்த்தது. அது அவனை அவசரப் படுத்தவும் செய்தது.  கிருஷ்ணனும் அவசரத்திலே இருந்தான்.  சாத்யகியின் படைகளுக்குத் தலைமை வகித்த கிருஷ்ணன் அந்தப் படையின் ரத சாரதிகளைத் தலை போகும் அவசரத்தில் விரட்டினான்.  அதைத் தவிர குதிரை வீரர்கள், ரதங்களின் மாற்றுக் குதிரைகள், காலாட்படையினர், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள் தாங்கிய வண்டிகள், மருத்துவ உதவிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என ஒரு பெரிய கூட்டமே கிருஷ்ணனைத் தொடர்ந்து மாட்டு வண்டிகளிலும், குதிரை பூட்டிய ரதங்களிலும், கால்நடையாகவும் வந்து கொண்டிருந்தனர்.  கிருஷ்ணன் கிளம்பிய மூன்றாம் நாள் கடன், கிருஷ்ணனின் ரதப் படைத்தலைவன், மஹாரதி, தன் படை வீரர்களோடு கிருஷ்ணனை வந்து சேர்ந்து கொண்டான்.  கிருஷ்ணன் துவாரகையை விட்டுச் சென்ற பின்னர் நடந்தவைகளைக் குறித்துச் சுருக்கமாக அதே சமயம் தெளிவாகக் கிருஷ்ணனுக்கு எடுத்துச் சொன்னான்.  பலராமன் தன் போதை கலந்த தூக்க மயக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு அனைத்து யாதவர்கள், அதிரதர்களுக்குத் தலைமை வகித்துப் புஷ்கரத்தை மீட்கக் கிளம்ப முடிவெடுத்திருப்பதைக் கூறினான்.  சாத்யகி கொல்லப்படவில்லை;  மாறாக சத்ராஜித்தின் ஒரே மகள் சத்யபாமா அவனைக் காப்பாற்றி உக்ரசேனரிடம் ஒப்படைத்திருக்கிறாள்.  சாத்யகி இப்போது பலராமனுடன் கிளம்பும் படைகளோடு சேர்ந்து வந்து கொண்டிருக்கிறான். இந்த திடீர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு சத்ராஜித்தும், சாகசங்களை நிகழ்த்தக் கிளம்பும் யாதவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டான்.  இதைக் கேட்டுக் கொண்ட கண்ணன் முறுவல் செய்தான்.


அவர்கள் சென்று கொண்டிருந்த அந்தப் பிரதேசம் மக்கள் தொகை குறைவாக உள்ளதாகும்.  அந்தப் பிரதேசத்தின் சொற்ப மக்களுக்கும், அந்த மக்கள் வசிக்கும் கிராமத் தலைவர்களுக்கும் கிருஷ்ணனின் வரவைக் குறித்து அறிவிக்கக் குதிரை வீரர்கள் முன்னதாகச் சென்றிருந்தனர்.  “கிருஷ்ண வாசுதேவன்” “கோவிந்தன்” என்னும் பெயர்களே ஒரு மாய, மந்திரச் சொல்லாக அந்த மக்களுக்கு ஆகி விட்டிருந்தது.  அவனைப் பார்க்கவும், வழிபடவும் காத்திருந்த அந்த மக்கள் இந்தச் செய்தியைக் கேட்டதும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.  இந்த வழியாகச் செல்லும் கண்ணனைப் பார்க்காமல் தவற விடுவதில்லை என்னும் எண்ணத்தோடு அவனுக்காக ஊரை அலங்கரித்து வரவேற்புக் கொடுக்கச் சித்தமானார்கள்.  கொட்டு மேளங்களும், பறைகளும் முழங்க, எக்காளங்கள் ஊத, சங்குகள் ஒலிக்கக் கிருஷ்ணனுக்குக் கண்டவர் வியக்கும் வரவேற்பை அளித்து மகிழ்ந்தனர்.

சால்வ மன்னனின் பிரதேசத்தைச் சூழ்ந்து சென்றது அந்தப் பாதை.  ஒரு காலத்தில் சால்வன் மிக மோசமானதொரு எதிரியாகவே இருந்து வந்தான்; இப்போது கிருஷ்ணனால் வெல்லப்பட்டிருக்கிறான். அந்த அதிர்ச்சியான நிகழ்வில் இருந்து அவன் இன்னமும் விடுபடவே இல்லை;  எனினும் இப்போது கிருஷ்ணனை வரவேற்க வேண்டி. தன் வீரர்களை அனுப்பிக் கிருஷ்ணனுக்கு ஆடம்பரமானதொரு விருந்தோம்பலை அளித்தான்.  தவிர்க்க இயலாமல் அதில் பங்கெடுத்த கிருஷ்ணன் இரவு மட்டும் அங்கே தங்கிக் காலையில் விடைபெற்றுக் கிளம்பி விட்டான்.  அவனுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புஷ்கரம் சென்று அடைய வேண்டும் என்று இருந்தது.  அக்ரவனத்தில் ஏற்பட்ட சந்திப்பு ஒரு ஏமாற்றமாகவும், வெறும் நடிப்பாகவும் இருந்தது.  அதைக் குறித்து அனைவரும் பேசிக் கொண்டனர். உண்மையில் ஒரு ரகசியச் செய்தியைக் கண்ணன் கிருதவர்மா மூலம் ஏற்கெனவே அனுப்பி இருந்தான்.  யாதவத் தலைவர்களும், நாகர்களின் தலைவன் மணிமானும்  புஷ்கரத்தில் இருந்து இரண்டு நாட்கள் பயணத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்றும், அங்கே தான் திடீர்த் தாக்குதல் நடத்த வேண்டும் என முடிவு ஆகி இருந்தது. ஆனால் அவர்கள் கண்ணன்  குறிப்பிட்ட நாளில்  வராமல் முன் கூட்டியே வரப் போவது குறித்து அறிந்திருக்கவில்லை.

ஆகவே கண்ணன் இப்போது மீண்டும் சாருதேஷ்னா, கிருதவர்மா, மற்றும் அக்ரவனத்தில் காத்திருக்கும் மணிமான் ஆகியோருக்குத் தான் முன் கூட்டியே வந்து கொண்டிருக்கும் செய்தியைத் தெரியப்படுத்தினான்.  அதோடு இல்லாமல் அனைவரும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கிருஷ்ணனோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறும் செய்தி அனுப்பினான்.  இந்தச் செய்தியைத் தாங்கிச் சென்ற கடன் செய்தியை அளித்ததும், அனைவருமே உற்சாகம் அடைந்தனர்.  இனி தாமதிக்கப் பொழுது இல்லை. எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு விரைவில் கிருஷ்ணன் இருக்குமிடம் சென்று அவனுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.  ஆனால் உத்தவன் இன்னமும் ஹஸ்தினாபுரத்திலிருந்து செய்தி ஒன்றும் எடுத்து வரவில்லை தான்;   அவனுக்காகக் காத்திருக்க இயலாது.  இதோ, கண்ணன் வந்துவிட்டான். ஆகவே விரைவில் அவனைச் சென்று அடைய வேண்டும் தங்கள் படைகளை விரட்டிக் கொண்டு அவர்கள் சந்திக்க நிச்சயித்திருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர் அனைவரும். அங்கே போனால் என்ன ஆச்சரியம்!  அவர்கள் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னராகவே கிருஷ்ணன் அங்கே வந்து சேர்ந்திருந்தான்.

மறுநாள் ஒற்றர் படை கொண்டு வந்த செய்திகளின் மூலம் துரோணரே தலைமை வகித்துப் படைகளை நடத்திக் கொண்டு புஷ்கரத்திற்கு வந்திருப்பதாகத் தெரிய வந்தது.  ஆனால் குரு வம்சத்து இளவரசர்கள் எவரேனும் அவருடன் வந்திருக்கிறார்களா என்பது குறித்து அந்த ஒற்றர்களுக்கு நிச்சயமாய்த் தெரியவில்லை.  அனைவரும் இதைக் கேட்டதும், தங்கள் மீசைகளை முறுக்கிக் கொண்டும், தோள்பட்டையில் கைகளால் தட்டிக் கொண்டும், ஆயுதப் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தும் தங்கள் பங்குக்கு வீரத்தைக் காட்டினார்கள்.   மூன்றாம் நாள் அதிகாலையில் மாபெரும் ஏரிக்கரையில் அமைந்திருந்த புஷ்கரத்தின் கோட்டை அவர்கள் கண்களில் பட்டது.  ஏரியைச் சுற்றிலும் சின்னச் சின்ன கிராமங்கள் தென்பட்டன.  அதன் குடிமக்களுக்குக் கிருஷ்ண வாசுதேவன், பற்பல சாகசங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்திக் கொண்டிருப்பவன் இங்கே வந்து கொண்டிருக்கிறான் என்னும் செய்தி கிடைத்தது.  கிராமத்துக் குடிமக்கள் அனைவரும் அவனுடைய தரிசனம் கிடைக்க வேண்டிக் கைகளில் கிடைத்த மலர்கள், பழங்கள், தேன் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அவனுக்குச் சமர்ப்பித்து அவனிடம் ஆசிகள் பெற ஓடோடி வந்தனர்.

யாதவர்கள் அங்கே கூடாரங்கள் அமைத்துத் தங்கினார்கள்.  கிருஷ்ணன் இது தன் சொந்தப் போர் எனவும் இதைத் தான் மட்டுமே கவனித்துக் கொள்வதாகவும் கூறி விட்டான்.  ஆனால் செகிதனா தான் சேர்ந்து கொள்வதாகக் கிருஷ்ணனிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் கிருஷ்ணன் பிடிவாதமாக மறுத்துவிட்டான்.  “இல்லை செகிதனா, நான் தான் உன்னை இந்தப் புஷ்கரத்தின் காவலனாக நியமித்து நாங்கள் இவ்வழியே செல்லும்போதெல்லாம் எங்களுக்கு உணவு அளிக்கவும், பாதுகாப்புக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்தேன்.  ஆனால் நீ புஷ்கரத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டாய்!  அப்போது உன்னிடம் நான் உனக்குத் திரும்பப் புஷ்கரத்தைப் பெற்றுத் தருவதாக வாக்களித்தேன்.  அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்ற வேண்டாமா?”

“ஒருவேளை என்னால் இயலவில்லை எனில், நீ இங்கே வந்திருக்கும் யாதவப் படைகளுடன் சேர்ந்து கொண்டு உன் வீரத்தையும், போர்ப்பயிற்சியையும் இந்தக் குரு வம்சத்தினரிடம் காட்டுவாய்.  ஒருவேளை  அப்போது பெரிய அண்ணன் பலராமனும் சேர்ந்து கொள்ளலாம்.  ஆனால் அது குரு வம்சத்தினருக்கும், யாதவருக்கும் இடையில் நடைபெறும் ஒரு பொதுவான யுத்தமாக மாறிவிடக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.  நான் அதை விரும்பவில்லை.  தனிப்பட்ட முறையில் துரியோதனனுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே விரும்புகிறேன்.” என்று சொன்ன கிருஷ்ணன் செகிதனாவின் தோள்களைத் தட்டிக் கொடுத்து அவனை ஆசுவாசம் செய்தான்.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நான் இருக்கும் போது கவலை எது என்று தானே...?

பித்தனின் வாக்கு said...

mikavum arumai, vidupatta athanaiyum padithu vitten. nalla pani thodarungal

ஸ்ரீராம். said...

துரோணரே வந்திருக்கிறாரா... அடுத்து என்ன என்று காத்திருக்கிறேன். இது போன்ற இடங்கள் பல இடங்களில் படிக்கக் கிடைப்பதில்லை!