Monday, March 10, 2014

கண்ணனுக்கு ஏற்ற மனைவி நான் ஒருத்தியே!

சாத்யகிக்கு என்ன சொல்லுவது என்றே  தெரியவில்லை.  கிட்டத்தட்ட அவன் ஊமையாகி விட்டான்.  இந்தப் பெண்ணைப் பாராட்டுவதா  அல்லது இவள் என்னைக் கடத்தியது குறித்து வெறுப்பதா என்றே தெரியவில்லையே!   இப்படி எல்லாம் நினைத்துக் குழம்பிய வண்ணம் , “ இந்த ஆபத்தை விளைவிக்கக் கூடிய துணிகரமுயற்சிகளில் நீ எங்களுக்கு உதவவா நினைக்கிறாய்?  சத்யா,என்னால் நம்பவே முடியவில்லையே!  அதற்காகவா என்னைக்கடத்தினாய்?  ஏன்? சத்யா, ஏன் என்னைக் கடத்தினாய்?  உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, பெண்ணே!”  என்றான் சாத்யகி!

“பெண்கள் ஒரு புதிர் சாத்யகி.  எவராலும் புரிந்து கொள்ள முடியாத புதிர்!  யாராலும் அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி கூடச் செய்ய இயலாது. “  தன்னுடைய சுபாவமான அலக்ஷியம் தொனிக்கக் கூறினாள் சத்யபாமா.  “அவ்வளவு ஏன், சாத்யகி, எல்லாம் வல்ல அந்த மஹாதேவன், சாக்ஷாத் சங்கரன் கூட  பார்வதி தேவியின் சாதுர்யப் பேச்சால் மயங்கி விடவில்லையா?”

“அது சரி, பெண்ணே, எங்களுடைய இந்த சாகசங்களில் நீ கலந்து கொள்வதால் உனக்கு என்ன பயன்?நீ இங்கே என்ன செய்யப் போகிறாய்?”

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்ட பாமா, தன் குரலைத் தழைத்துக் கொண்டாள்.  ரகசியம் பேசும் குரலில் அவனை நெருங்கி, “ இதை உன்னுடன் வைத்துக் கொள்.  நான் இப்போது சொல்லப் போவது ரகசியமானது.  எனக்கு இதைக் காப்பாற்றுவதாக உறுதி கூறு!  நான் உனக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் எதிரிகளின் கூடாரத்திலும் எனக்கு ஒரு நண்பனாவது இருக்க வேண்டும் அல்லவா?”  அவள் கண்கள், முகம் முழுவதும் குறும்பில் கூத்தாடியது.  சாத்யகியின் ஆர்வம் அதிகரித்தது.  “ ஓ, சரி, சத்யா, நான் கட்டாயம் இந்த ரகசியத்தைக் காப்பாற்றுவேன். “என உறுதி மொழி கொடுத்தான்.

“இதோ பார் சாத்யகி, கிருஷ்ண வாசுதேவனிடம் கூடக் கூறக்கூடாது. சரியா?”

கொஞ்சம் யோசித்த சாத்யகி, “ சரி, உண்மையிலேயே உனக்குக் கிருஷ்ண வாசுதேவனைக் காக்க வேண்டும்;  அவனுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணம் இருப்பது உண்மையானால்;  அதன் மூலம் நானும் திருப்தி அடைய முடியும் எனில்,  உன் உதவி கிருஷ்ண வாசுதேவனுக்கு நேர்மையாகக் கிட்டும் எனில், நான் இந்த ரகசியத்தைக் காப்பாற்றுகிறேன்.”  என்றான்.

“ஓ, நான் கிருஷ்ண வாசுதேவனுக்கு  உண்மையாகவே உதவ விரும்புகிறேன்.  இல்லை எனில் இவ்வளவு சிரமம் எடுத்துத் துணிகரமாக நான் உன்னைக் காரணமே இல்லாமலா கடத்துவேன்?”  மீண்டும் அதே அலக்ஷியம் குரலில்.  கேலியும் மிகுந்திருந்தது.  பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான் சாத்யகி.

“எங்களிடம், எங்கள் முயற்சிகளிடம் என்ன ஆர்வம் உனக்கு?  சொல் என்னிடம்!” என்றான்.

“ஓஹோ, சாத்யகி,  இந்த நாங்கள், எங்கள் என்பதை எல்லாம் விட்டு விடு.  நான் உன்னிடம் ஆர்வம் கொள்ளவில்லை.  என் ஆர்வம் எல்லாம் கோவிந்தனின் துணிகரச் செயல்களிடம் தான்.  அவனிடம் தான் ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  உன்னிடம் அல்ல. “

“அப்படியா? சத்ராஜித்தின் மகளே,  கோவிந்தனிடம் என்ன ஆர்வம் உனக்கு?  அவனிடம் என்ன மயக்கம்?  என்ன வேண்டும் அவனிடமிருந்து?  எதற்காக அவனிடம் உன் கருத்தைச் செலுத்தி இருக்கிறாய்?”

பாமாவின் கண்கள் எங்கோ தூரத்தில் நிலை கொண்டன.  கனவு காண்பவளைப் போல் அரைக்கண் மூடிய வண்ணம் பார்வையைத் தொலை தூரத்தில் செலுத்திய வண்ணம்  அவள் பேச ஆரம்பித்தாள்.  அவள் குரல் மிக மிக மிருதுவாகவும், மெல்லியதாகவும், ரகசியம் பேசும்படியாகக் காணப்பட்டது. ஆனால் சொல்ல வேண்டிய விஷயத்தைத் தெளிவாக உறுதியாக, நன்கு புரியும்படியாகப்பேச ஆரம்பித்தாள்.  அவள் கனவுகளில் மிதக்கிறாள்  என்பதும், நீண்ட நாட்களாகத் தன் மனதில் புதைந்து கிடந்த ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறாள் என்பதையும் சாத்யகியால் புரிந்து கொள்ள முடிந்தது.

“நான் குழந்தையாக இருந்த போதிலிருந்தே என் தகப்பனாரும், இன்னும் என் உறவினர் சிலருக்கும் கிருஷ்ண வாசுதேவனை அறவே பிடிக்காது.  அவர்களுக்கு எவ்வளவு அவனைப் பிடிக்காதோ அத்தனைக்கு எனக்கு அவனை மிகவும் பிடித்தது.  அவனை நான்  மிகவும் விரும்பினேன்.  ஆகவே என் நிலைமை என் வீட்டவரை எதிர்க்க வேண்டிய நிலையில் இருந்தது.  மெல்ல மெல்ல நான் வளர்ந்து ஒரு பருவப் பெண்ணானதும், என் குறிக்கோள் அவனை மணந்து கொள்வதாகத் தான் இருந்தது.  ஆனால்….ஆனால்….  அவனோ  முதலில் ருக்மிணியையும், பின்னர் ஷாய்ப்யாவையும் மணந்து கொண்டான்.  அன்றிலிருந்து எனக்கு ருக்மிணியும், ஷாய்ப்யாவும் எதிரிகள் ஆகிவிட்டார்கள்.  நான் அவர்களை வெறுக்கிறேன்.  அவர்களிடம் மிகவும் கோபமும் கொண்டிருக்கிறேன்.  ஹூம்,  அந்த இரு சாமானியப் பெண்களாலும், என்னளவுக்குக் கிருஷ்ணனை நேசிக்க முடியுமா?  சந்தேகமே!   நான் அவனைக் கல்யாணம் செய்து கொண்டு மனைவியானால் இந்த உலகையே அவன் காலடியில் கொண்டு வருவேன்.  நான் என்னவெல்லாம்   அவனுக்குக்கொடுக்கவென வைத்திருக்கிறேனோ அவற்றில் கால் பங்கையாவது அந்த கர்வம் கொண்ட விதர்ப்ப நாட்டு இளவரசியாலும்,  அந்த ஷாய்ப்யாவாலும் கொடுக்க முடியுமா?  முதலில் அவனை மணந்து கொள்ளவே இவர்களுக்குத் தகுதி கிடையாது.  நான் மட்டும் கிருஷ்ணனை மணந்தால்!!! ஒரு சொர்க்கத்தையே அவனால் காண முடியும்!”

சாத்யகி புன்முறுவல் பூத்தான்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரகசியம் காப்பாற்றப்படுமா - அதுவும் பெண்களிடத்தில்....?

ஸ்ரீராம். said...

என்ன ஒரு நம்பிக்கை! என்ன ஒரு காதல்!