Sunday, March 9, 2014

நான் தான் உன்னைக் கடத்தினேன்!

“முட்டாள் சாத்யகி, நான் உன்னை ஜெயசேனனிடம் இருந்தும்  அவன் கூட்டத்தாரிடமிருந்தும் காப்பாற்றவே விரும்பினேன். ஏனெனில் ஜெயசேனன் உன்னைக் கொல்வதற்கு இருந்தான்.  அதற்காகவே உன்னுடைய நடவடிக்கைகளை நோட்டம் பார்க்க வேண்டி உன்னிடம் நண்பனைப் போல் வலிய வந்து பேசினான்.  நீ உன் படை வீரர்களிடம் சேர்வதற்காகக்காலை செல்கையில் உன்னை எப்படியேனும் தொடர்ந்து வந்து உன்னைக்கொன்றிருப்பான்.  அவர்கள் திட்டம் என்னவென அறிந்த பின்னர் அவர்கள் உன்னைத் தொடுமுன்னர் உன்னை நான் அப்புறப்படுத்தி மறைத்து வைக்க விரும்பினேன்.   இல்லை எனில் அவர்கள் இந்தப் பாவகரமான திட்டத்தைச் செயல்படுத்தி இருப்பார்கள்.”

“பொய், முழுப் பொய்!  உன் இஷ்டத்துக்குப் பொய்களை மேன்மேலும் கூறிக்கொண்டு போகாதே! என்னைக் காப்பாற்ற வேண்டி கடத்தினாளாம்!  யாரிடம் பொய் சொல்கிறாய்!  ஏ, பெண்ணே, உனக்கு என் மீது அப்படி என்ன அக்கறை?  ம்ம்ஹூம், அக்கறை எல்லாம் எதுவும் இல்லை, எனக்குப் புரிந்து விட்டது.  நான் என் படை வீரர்களுடன் கோவிந்தனுக்கு உதவியாகச் செல்வது உனக்குப் பிடிக்கவில்லை. அதைத் தடுத்து நிறுத்தவே இப்படி ஒரு  நாடகம் ஆடி இருக்கிறாய்!”

அவன் கூறியதைக் கேட்டு எந்தவிதக் கவலையும் படாமல் சத்யபாமா கலகலவெனச் சிரித்தாள்.  “மீண்டும், மீண்டும் நீ தவறாகவே யூகங்கள் செய்கிறாய், சாத்யகி!  நான் உன்னைக் கடத்தினேன். அது தான் உண்மை. உன் உயிரைக் காப்பாற்றினேன்.  ஏனெனில் நீ கிருஷ்ண வாசுதேவனின் நண்பன்.  கிருஷ்ண வாசுதேவனின்  நன்மைக்காக நீ பிழைத்திருக்க வேண்டும்;  உன் உதவிகள் தொடர்ந்து அவனுக்குக்கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.”

தன்னைத் தானே கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அமைதியுடன் சொல்லும் அவளை விரிந்த கண்களோடு ஆச்சரியம் அகலாமல் பார்த்தான் சாத்யகி. ஆனால் அவளோ அவன் பார்வையையோ, ஆச்சரியத்தையோ லக்ஷியமே செய்யவில்லை.  மேலும் தொடர்ந்தாள்: “இதோ பார் சாத்யகி, நான் உன்னைக் கடத்தி இங்கே கொண்டு வரவில்லை எனில் நீ கட்டாயம் கொல்லப்பட்டிருப்பாய்.  அல்லது மிக மோசமாகக் காயங்கள் அடைந்து மரணப்படுக்கையில் இருப்பாய். அந்தக் குழுவினர் அவ்வளவு பொல்லாதவர்கள்.    கிருஷ்ணனின் பக்கமே இருந்து அவனுக்கு உதவிகள் செய்ய வேண்டும் நீ என்றே நான் விரும்புகிறேன்.  அதிலும் இப்போது கிருஷ்ணன்  மிகப் பெரிய ஆபத்து விளைவிக்கக்கூடிய துணிகரச்செயல்களில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறான். இப்போது தான் அவனுக்கு உற்ற நண்பர்கள் உதவியும்,உற்றார், உறவினர் உதவியும் தேவை.  இந்தச் சமயத்தில் அவனைத் தனிமையில் வாட விடுவதை நான் சிறிதும் விரும்பவில்லை.”  இதைச் சொல்கையில் அவள் குரலில் இனம் புரியாத ஏக்கமா, கவலையா, ஏதோ ஒன்று இருந்தது.    சாத்யகியின் கோபம் தணிந்தது.  கட்டாயம் இதில் உண்மை இருந்தாக வேண்டும்.  சத்யபாமா உண்மையைத் தான் சொல்கிறாள்.

  சாத்யகி படை வீரர்களுக்குத் தலைமை வகிக்கச் செல்கையில் ஜெயசேனன் அவன் குழுவினருடன் அவனை அவர்கள் திட்டப்படி தாக்கி இருந்தால் அவன் ஒருவேளை இப்போது அவர்கள் கட்டுப்பாடில் இருக்கலாம்;  அல்லது மரண காயப்பட்டிருக்கலாம்;  அல்லது ஒருவேளை இறந்தே போயிருக்கலாம். ஆனால் சாத்யகிக்கு இது தான் புரியவில்லை.  சத்ராஜித் கிருஷ்ணனை முழுதும் எதிர்ப்பவன்.  அப்படி ஒரு எதிரியின் பெண்ணுக்குக்  கிருஷ்ணனின் தோழனைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்திருக்கும்?  ஏன் வந்தது?

“நீ கிருஷ்ணனுக்கு உதவ விரும்பினாயா?சத்யபாமா, உன்னை எப்படி நம்புவது?  நான் நம்பமாட்டேன்!” என்றான் சாத்யகி.  அவனுக்கு மீண்டும் தான் காண்பதெல்லாம் கனவோ என்னும் எண்ணம் ஏற்பட்டிருந்தது.  “ஹா, ஹா, பின் நான் ஏன் உன்னைக் கடத்தினேன்?  உன்னைக் கடத்தி இங்கே கொண்டு வந்து என் முன்னால் உன்னை நிறுத்தி மிகவும் அழகுடனும், வடிவுடனும் இருப்பதாக நீ நினைக்கும் உன் முகத்தைப் பார்த்து ரசிக்கவா?  அதிலும் உன் தந்தை மிக மோசமாக,மிக அசிங்கமாக என் தந்தையின் வேண்டுகோளை நிராகரித்த பின்னரா? “ கிண்டலாகக்கேட்டாள் சத்யபாமா.

“ஆனால் உனக்குக் கிருஷ்ணனிடம் என்ன  ஈர்ப்பு?  அவனிடம் எதற்காக நீ கவனம் செலுத்துகிறாய்? அவன் வேலைகளிலும், அவன் வெற்றியிலும் உனக்கு என்ன ஆவல்?  என்ன ஆர்வம் உனக்கு?  உன் தந்தையோ கிருஷ்ணனின் ஒவ்வொரு வேலைகளிலும் குற்றம் கண்டு பிடிப்பதோடு இல்லாமல்  அது நடைபெறாமல் இருக்கப் பாடுபடுகிறார்.  அவனை எதிர்த்து வெறுப்பேற்ற விரும்புகிறார்.   ஆனால் நீ அவனுக்கு உதவப்போகிறதாய்ச் சொல்கிறாய்!  “  சாத்யகிக்கு இது புரியாத புதிராக இருந்தது.   பாமா மீண்டும் உற்சாகம் குன்றாமல் சிரித்தாள்.

“ஒரு கடமை தவறாத பெண்ணாக என் தந்தையின் ஒவ்வொரு நடவடிக்கையும் , அவரின் திட்டங்களும் தோற்க வேண்டும் என நான் வேலை செய்கிறேன்.  அதையே விரும்புகிறேன்.  அவரை வெறுப்பேற்ற விரும்புகிறேன்.  கிருதவர்மன் உங்களுக்குக் குதிரைகள், ரதங்கள், பொற்காசுகள் கொடுத்திருப்பாரே!  அவர் என்ன அப்படிப் பெரிய பணக்காரரா ? இல்லையே!  இவை எல்லாம் அவரின் சொந்தச் சொத்தா?  அவரே கொடுத்ததா? இல்லை எனில் அவருடைய தொழில் கூட்டாளியிடமிருந்து வந்ததா?   கிருதவர்மன் என் தாயின் சகோதரி மகன் என்பதை மறக்காதே சாத்யகி!  நீ வெறும் குழந்தை! சூது, வாது தெரியாத, புரியாத குழந்தை! உன்னால் பெண்களையோ அவர்கள் மனம் வேலை செய்யும் விதத்தையோ புரிந்து கொள்வது இயலாது.”

சாத்யகி தள்ளாடினான். “பாமா, அப்படி எனில் கிருதவர்மாவுக்குக் குதிரைகள், ரதங்கள், பொற்காசுகளை நீதான் கொடுத்து எங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னாயா?”

பாமா மீண்டும் சிரித்தாள்:”நான் நேரிடையாகக்கொடுக்கவில்லை; அவை என் தந்தையின் சொத்துக்கள். நான் அவற்றை அவரிடமிருந்து திருடினேன்.”  சற்றும் கவலையின்றித் தயக்கமின்றிச் சொன்ன பாமா மேலும் தொடர்ந்தாள்.”எங்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவுக்கும், மதிப்புக்கும் இவை தூசு மாத்திரம். இந்தச் சொற்பத் தங்கம் திருடு போனதை என் தந்தையால் கண்டுபிடிக்கவே முடியாது. “தன் கைகளால் அந்த அறையைச் சுற்றிக்காட்டினாள் அவள்.  “இதோ பார், ஒவ்வொரு அறையிலும் தங்கமும், வைரமும், நவரத்தினங்களும் எப்படிக் கொட்டிக் கிடக்கிறது!  ஒவ்வொரு அறையும்  தங்கத்தாலும் வைரத்தாலும் நவரத்தினங்களாலும் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்.  எது எங்கே யாரிடம் போனது என்பதை எவராலும் கண்டு பிடிக்க இயலாது.  அதே போல் எங்களிடம் இருக்கும் குதிரைகளும் கணக்கிலடங்காதவை.  அவற்றில் ஒரு சில இல்லை என்பதையும் எவரால் கண்டு பிடிக்க இயலும்?”


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனி தொடர்ந்து எழுதவும்... மறந்து போச்சி... முந்தைய பதிவை படிச்சிட்டு வந்தேன்னாக்கும்... ஹிஹி... நன்றி அம்மா...

ஸ்ரீராம். said...

அம்மாடி... இதுதான் காதலா...

துணிச்சல் மிக்க ச.பா.