Tuesday, November 19, 2013

பானுமதியின் எதிர்காலம்?????

தூக்கத்தில் கூட துரியோதனனின் சோகப் பெருமூச்சைக் கேட்ட பானுமதிக்குத் தாங்கவே இல்லை.  அவள் கிருஷ்ணனைச் சென்று பார்த்தால் தான் என்ன?  என்ன மோசமாக நடந்துவிடும்!  ஒன்றும் இல்லை. அவளால் அதற்கும் மேல் பொறுத்திருக்க இயலவில்லை .  மெல்ல எழுந்தாள்.  தன் கைகளை மென்மையாக துரியோதனன் மேல் வைத்தாள். அவனைக் கட்டிக் கொண்டே குனிந்து, “ஆர்ய புத்திரா, நீங்கள் விரும்பினால் நான் நிச்சயமாய்க் கிருஷ்ணனைச் சென்று பார்க்கிறேன்.” என்றாள்.

 தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தான் துரியோதனன்.  அவன் மிகவும் மோசமான நிலைமையில் இருந்ததால் அவனுக்கு எதுவுமே புரியவில்லை. “என்ன சொல்கிறாய்?” என்றான் அவளிடம்.  “உங்கள் சொற்களை மீற நினைத்ததுக்கு மன்னிப்புக் கேட்கிறேன், ஆர்யபுத்திரா!  நான் கிருஷ்ணனைச் சென்று பார்க்கப்  புஷ்கரம் செல்கிறேன்.” என்றாள் பானுமதி. “நிஜமாகவா சொல்கிறாய்?  நீ போகிறாயா? “ துரியோதனனுக்குத் தான் கனவு காண்கிறோமோ என்று சந்தேகம்.  தன்னை உலுக்கி விட்டுக் கொண்டான். அவன் தோள்களில் தொங்கியவாறே, “ஆம், ஐயா, நான் செல்கிறேன்.” என்றாள் பானுமதி.

“நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, என்ன விரும்புகிறீர்களோ அதைச் செய்கிறேன்.  நான் புஷ்கரம் சென்று கிருஷ்ணனைப் பார்த்து என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டாள் பானுமதி. “புஷ்கரம் சென்று கிருஷ்ணனைப்  பார்.  என்னுடன் நட்பைத் தொடரச் சொல்! அவன் ஒரு வலிமை மிக்க, பலம் பொருந்தியவனாக ஆகிவிட்டான். அத்தகையவன் நட்பு எனக்குப் பல வகைகளிலும் உதவி செய்யும்.”

“சரி, என் ப்ரபுவே!  அவ்விதமே செய்கிறேன்.”

“இன்னும் ஒன்றும் இருக்கிறது பானுமதி! அதை மட்டும் நீ செய்துவிட்டால்!! செய்வாயா? எனக்காக அதை நீ செய்வாயா?”

“என்ன?”

“சுயம்வரத்தில் என்னை மணமகனாகத் திரெளபதி தேர்ந்தெடுக்க வேண்டும்.  அதற்குக் கிருஷ்ணனிடம் உதவி கேள்! அவன் உதவியின் மூலம் திரெளபதியிடம் பேசி அவள் மனதை என்பால் திருப்ப முயலச் சொல்!”

அவன் தோள்களில் தொங்கிக் கொண்டிருந்த பானுமதி அவன் தன்னோடு இணக்கமாக இருந்த இந்தச் சூழ்நிலையிலும், இந்த உதவியைத் தன்னிடம் கேட்டது மாபெரும் சுயநலமாகப் பட்டது.  அவள் மனம் என்ன பாடு படும் என்பதை யோசிக்காமல் அவளிடமே இதைக் கேட்கிறானே!  தன் உதடுகளைக் கடித்துக் கொண்ட வண்ணம் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றாள் பானுமதி.  ஹூம், பாஞ்சால இளவரசியிடம் அவனுக்கு இருக்கும் ஈர்ப்புக்கும் கவர்ச்சிக்கும், அவள், பானுமதி, அவன் மனைவி, துணை நிற்க வேண்டும்.  அதுவும் எப்படி!  வேசிகளுக்குத் தரகு வேலை பார்ப்பவர்கள் போல் அவளும் இந்தச் சூழ்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும். மனம் பூராவும் துக்கத்திலும் வெறுப்பிலும் ஆழ்ந்தது பானுமதிக்கு.

துரியோதனன் அவளைப் பார்த்து, “செய்வாயா!  இதை நீ செய்வாயா ?  சொல் தேவி, நீ இதைக் கட்டாயம் எனக்காகச் செய்வேன், எனக் கூறு.  என் பாதுகாப்பிற்காக.  என் பலத்துக்காக.  என் நாட்டுக்காக.  இதன் மூலம் உன்னுடைய நிலைமையில் மாற்றம் ஏதும் நேராது.  நிச்சயம்.  ஆனால் என் எதிர்காலமே இதில் தான் அடங்கி இருக்கிறது.”

பானுமதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.  “ நீங்கள் சந்தோஷமாக இருந்தாலே போதும்.  என் நிலையைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை. அவ்வளவு ஏன்?  என் உயிரைக் குறித்துக் கூட எனக்குக் கவலை இல்லை. நான் புஷ்கரம் செல்கிறேன்.  திரெளபதியை நீங்கள் மணப்பதற்குக் கண்ணன் உதவி செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.  என்னால் முடிந்த வரை முயற்சி செய்து கண்ணனை உங்களுக்கு உதவி செய்ய வைக்கிறேன்.”

அவளுடைய இந்தப் பெருந்தன்மையான போக்கினால் உண்மையாகவே நெகிழ்ந்த துரியோதனன், “ நீ என்றென்றும் என் அன்புக்குரியவள் பானுமதி!   நீ மிக மிக நல்லவளும் கூட!”  என்று சொல்லிக் கொண்டே அவளைத் தன் பக்கம் இழுத்து அணைத்து அவளுக்கு உற்சாகம் ஊட்ட விரும்பினான்.  பானுமதியும் அவனை அன்போடு அணைத்துக் கொண்டாள்;  என்றாலும் அவன் மார்பில் முகத்தைப் புதைத்தவள் அப்படியே தனக்கு வந்த ஒரு மாபெரும் விம்மலையும் அடக்கிக் கொண்டாள்.   அவளிடம் துரியோதனன் கேட்டது சாதாரண விஷயமா?  அவள் நிலை, யுவராஜாவின் மனைவி, அடுத்த பட்ட மஹிஷி என்பதிலிருந்து விலகிவிடுவாள்.  அதோடு அவள் எதிர்காலம், அவளுக்கு இப்போது பிறக்கப் போகும், இனி பிறக்கப் போகும் குழந்தைகள், முக்கியமாய் அவள் மகன்களின் எதிர்காலம், அவளுடைய வாழ்க்கை, உயிர் எல்லாமே தான் துரியோதனன் கேட்டுவிட்டான்.  இனி அவள் நிலை என்னாகும்? போகட்டும்,  அவன் விரும்புவது அதுவானால், அதுவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமெனில் அதை அவள் செய்து முடிப்பாள்.

“மேலும் கேள் பானுமதி.  நீ ஆசாரியரோடு தனியாகச் செல்ல வேண்டாம்.  ஷகுனி மாமா உன் துணைக்குக் கூட வருவார்.” என்றான் துரியோதனன்.  பானுமதிக்குச் சீற்றம் தாங்க முடியாமல் தொண்டையை அடைத்தது.  அவள் இவ்வளவு சொல்லியும் அவள் அருமைக் கணவன் அவளை முழுதும் நம்பவில்லை.  அவளை உளவு பார்க்க மாமா ஷகுனியைக் கூட அனுப்புகிறான்.  அவள் இவ்வளவு நேரமும் மிகவும் முயன்று அவன் மனதில் இடம் பிடிக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும், அவன் தன்னை நம்பவேண்டும் என்று செய்த தியாகங்கள் அனைத்தும், வியர்த்தமாகி அர்த்தமே இல்லாமல் போய்விட்டனவே!

“அப்படியே, ஆர்ய புத்திரா!” இதைச் சொன்னவண்ணம் தனக்கு வந்த பெரியதொரு விம்மலை அடக்கியவண்ணம் படுக்கையில் வீழ்ந்தாள் பானுமதி.  மீதி இரவு அவளுக்குத் தூக்கமின்றிக் கழிந்தது.



6 comments:

இராஜராஜேஸ்வரி said...

மிகக்கடுமையான பரிட்சைதான் பானுமதிக்கு..!

ஸ்ரீராம். said...

காதல் என்றால் என்ன, அன்பு என்றால் என்னவென்று உணர வைக்கிறாள் பானுமதி.

RajalakshmiParamasivam said...

பானுமதியின் நிலைமை மிகவும் பரிதாபமே!
படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, ஆமாம், கடுமையான சோதனை!

sambasivam6geetha said...

உண்மை ஶ்ரீராம்.

sambasivam6geetha said...

நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம்.