Sunday, June 30, 2013

உத்தவன் தப்புவானா?

உத்தவன் மீண்டும் தன் பற்களை இறுகக்கடித்துக் கொண்டான்.  தன் உடலை விறைப்பாக வைத்துக் கொண்டான். எவ்விதமான உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காவிதத்தில் தன் நாடி, நரம்புகளை மாற்றிக் கொண்டான். தன் உடலை விட்டுத் தான் தனியே சென்றுவிட்டதாக உணர்ந்து கொண்டான். அவன் மனம் பரந்த வெளியில் சென்று அங்கே காணக்கிடைக்காப் பேரின்பத்தில் ஆழத் துடித்தது.  உத்தவன் தன்னை மறந்தான்.  தன் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூதாதையர்களின் பெருமையை மட்டுமே நினைவு கூர்ந்தான்.  அவர்கள் அனைவரும் அவன் உதவிக்கு வர வேண்டினான்.  விரைவில் அவன் உடல் விறைத்துக்கொள்ள வந்திருந்த இரட்டையரில் இன்னொருத்தி செய்த முயற்சிகளும் தோற்றுப் போயின.  இவளும் விம்மி, விம்மி அழ ஆரம்பித்தாள்.  ஏமாற்றம் தாங்க முடியாமல் எழுந்து அழுது கொண்டே ஓடிப் போனாள்.   கண் இமைக்கும் நேரம் அவளைத் திரும்ப அழைக்க எண்ணிய உத்தவன் உடனடியாக ஆரியர்களின் உயர்ந்த நோக்கத்தை நினைவு கூர்ந்தான்.  தன் மனைவி அல்லாத மற்றொரு பெண்ணிடம் எந்தவிதமான நெருக்கத்தையும் ஆரியர்கள் காட்டுவதில்லை என்பதை நினைத்த உத்தவனுக்கு அவளைத் தான் அழைப்பது மாபெரும் தவறு எனப் புரிந்து அமைதி காத்தான்.

“ஆஹா, மஹாதேவா, கடவுளே, இதெல்லாம் என்ன?  நான் ஏன் இங்கே வந்தேன்?  எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது!  என்னுடைய புனிதமான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டி ஷாய்ப்யாவை நான் ஏற்க வேண்டாம் என முடிவெடுத்ததோடு அல்லாமல், ஆரியர்களின் திட வைராக்கியத்தோடு ஒரு துறவிக்குரிய புனிதமான வாழ்க்கையையும் வாழ ஆரம்பித்து விட்டேன்.  ஆனால்….. ஆனால்…. இதன் மூலம் நான் இந்த இளம்பெண்களின் மனதைச் சுக்கு நூறாக்கி இருக்கிறேன்.  என்ன செய்ய முடியும்?? பாட்டியார் மரிஷாவின் யோசனையைக் கேட்டு நான் இங்கே வந்திருக்க வேண்டும். “  அதன் பின்னர் உத்தவன் படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தான்.  அன்றிரவு முழுதும் சரியாகத் தூங்கவில்லை.  அதிகாலை வழக்கம் போல் எழுந்த போதும் அவனிடத்தில்  வித்தியாசமானதொரு மனநிலையே காணப்பட்டது.  அந்தப் பெண்களின் பரிதாபமான நிலையை எண்ணி மனம் வருந்தினாலும் தனக்கு வைக்கப்பட்ட அக்னிப் பரிக்ஷையில் தான் தேறியது குறித்து சந்தோஷமும் அடைந்தான்.  நதிக்கரைக்குச் சென்று தன் அன்றாட நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டான்.   சற்று நேரத்தின் மணிமான் அவனை வந்து சந்தித்தான்.  ஆனால் அவன் நடத்தையில் பெருமளவு மாறுதல் காணப்பட்டது.  அதோடு அவன் உத்தவனைப் பார்த்த பார்வை.  அடிபட்ட பறவை ஒன்றின் வருத்தம் அவன் கண்களில் தெரிந்தது.  நேற்று வரை அந்நியோன்னியமாகப் பழகிய மணிமானின் இன்றைய நடத்தை அவன் யாரோ, உத்தவன் யாரோ என எண்ணும்படி மாறுதல்கள் இருந்தது.  ஆஹா, தன் இரட்டைச் சகோதரிகளை உத்தவன் அவமானம் செய்துவிட்டான் என்று மணிமான் தெரிந்து கொண்டுவிட்டான்.  அதனால் அவன் உத்தவன் மேல் மிகக் கோபமாக இருக்கிறான். 

நாகர்களின் வாழ்க்கை முறைக்கும், ஆரியர்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள இந்த வித்தியாசம் தெள்ளத் தெளிவாய் உத்தவனுக்குப் புரிந்தது.  நாக கன்னிகள் இம்முறையில் தான் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்வார்கள் போலும்!  இது அவர்கள் வழக்கமாகவே இருக்க வேண்டும்.  ஆனால் ஆரியர்கள் மத்தியில் இது மிகக் கேவலமான ஒன்று.  ம்ம்ம்ம்ம் யமனின் உலகம் என்னும் லோகத்தில் புனர்தத்தனை மீட்கச் சென்ற போது ஆசிகா இப்படித் தானே கண்ணனைப் பார்த்ததுமே அவன் மேல் காதல் கொண்டாள்.  ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது உத்தவனுக்கு.  இந்த இரட்டையர்கள் இருவரும் அனைவருக்கும் தெரிந்தே தான் உத்தவனை அணுகி இருக்க வேண்டும்.  அவர்கள் சகோதரனும், பெற்றோரும் இதற்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.  அவர்களின் அழைப்பை அவன் நிராகரித்தது அவர்களை அவன் மதிக்கவில்லை என்று பொருள் படுமோ?  அவர்களின் விரோதத்தை அவன் சம்பாதித்துக் கொண்டுவிட்டானோ?  அவர்களின் குல வழக்கப்படி நடந்த ஒன்றை மதிக்காததன் மூலம் அவன் அவர்களின் தர்மத்தை மீறிவிட்டானோ!  அல்லது பொதுவானதொரு தர்மத்தை மீறி விட்டானோ! அவர்கள் மிகவும் மதிக்கும் சம்பிரதாயங்களை மீறிவிட்டானோ!

கிட்டத்தட்ட மதிய உணவு நேரத்துக்கு உத்தவன் ஆசாரியர் ஜைமினியால் வியாசரும், ஆர்யகனும் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.  கொலைக் களத்துக்குச் செல்லும் பலி ஆடு போல் உணர்ந்தான் உத்தவன்.  தன் பல்லக்கிலிருந்து பிரிக்க முடியாத ஆர்யகனை ஆசாரியர் அருகே பார்த்தான் உத்தவன்.  ஆர்யகனின் மகன் கார்க்கோடகன் நெரித்த புருவங்களுடன் தீவிர யோசனையில் இன்னொரு பக்கம் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.  அவன் முகத்திலிருந்து ஏதோ விரும்பத் தகாத விஷயம் நடந்திருப்பதை உணர்ந்தான் உத்தவன்.  கார்க்கோடகன் மனைவி, இன்னும் சில நாக குலப் பெண்டிரில் மூத்தவர்கள், மணிமானின் மனைவி, அட, இது என்ன?  இரட்டைச் சகோதரிகளுமே அங்கே காணப்பட்டனர்.  அந்தப் பெண்கள் அழுது அழுது வீங்கிய முகத்தோடும் இன்னமும் கண்ணீர் கொட்டும் கண்களோடும் காணப்பட்டதோடு அல்லாமல் உத்தவன் ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டானோ என அனைவரும் எண்ணும்படியாக அவனைக் குற்றவாளியாகப் பார்த்தனர்.  தான் செய்தது தன் வரையில் குற்றம் அல்ல என்பதை உத்தவன் உணர்ந்திருந்தான்.  ஆனால் தன்னை மிகவும் அருமையாக உபசரித்து அன்பு காட்டிய குடும்பத்தினருக்குத் தன் நன்றியை இவ்விதத்தில் இல்லாமல் வேறுவிதத்தில் தான் காட்டலாமே என்றும் எண்ணிக் கொண்டான்.  அவர்களைக் குடும்பத்தோடு தான் இவ்விதம் அவமரியாதை செய்துவிட்டோமே என்றும் வருந்தினான்.  தனக்கு நேரிடப் போகும் துன்பத்தை எண்ணி வருந்தியவன் அல்ல.  ஆனால் அந்தப் பெண்களுக்கு இழைத்தததாய்க் கருதப்படும் துன்பத்துக்கு அவன் காரணகர்த்தா என்பதோடு அதன் விளைவுகள் என்னவாக இருக்குமோ எனவும் எண்ணிக் கலங்கினான். குறிப்பாக அந்த இரு இளம்பெண்களின் நிலைமையையும் பார்த்தால் பரிதாபமாகவே இருந்தது.  உத்தவன் மனம் வருந்தியது.

ஆனால் அவர்கள் அனைவரிலும் அங்கே முழு திடத்தோடும் உத்தவனை நன்கு புரிந்து கொண்டும், அவன் செயலை உள்ளூரப் பாராட்டிக் கொண்டும் இருந்தவர் வியாசர் ஒருவரே.  உத்தவனைப் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார்.  இப்போதும், இந்த நிலைமையிலும் அவரின் இந்தப் புன்னகையானது உத்தவன் மனதுக்கு ஆறுதலையும், சாந்தியையும் அளித்தது.  சரமாரியாக அவர்கள் அனைவரும் தனக்குக் கொடுக்கப் போகும் சாபங்களை எதிர்பார்த்த உத்தவனை ஆசாரியர் மிருதுவாக அழைத்துத் தனக்கருகே அமரச் சொன்னார்.  அவருடைய புன்னகை உத்தவனுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டியது.  இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உத்தவன் மாட்டிக் கொண்டதை ஏதோ விளையாட்டாகக் கருதுபவர் போல் இருந்தார் வியாசர்.  உள்ளூர ரசிக்கிறாரோ என்றும் உத்தவன் எண்ணினான். ஆசாரியர் உத்தவனை நோக்கிக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

“உத்தவா, இது என்ன நீ செய்தது? நாகர்களின் இணையற்ற தலைவனை,  உன் தவறான செயல்களின் மூலம் நீ மிகவும் வருந்தச் செய்துவிட்டாய்!  ஹூம், தலைவனை மட்டுமல்ல, அவரின் மொத்தக் குடும்பத்தையும்!”

“நான் என்ன செய்ய முடியும், ஆசாரியரே!’ உத்தவன் பரிதாபமாகக் கேட்டான்.  “என்ன தவறு செய்தேன்?” உத்தவன் காதுகளில் அந்தப் பெண்களின் அழுகை சப்தம் கேட்டது.  அவன் மனம் படபடவென அடித்துக் கொண்டது.  அவனுடைய இன்னொரு மனம் அவனை ஒரு இரக்கமற்றவன் எனக் குற்றம் சாட்டியது.


“நீ இந்தப் பெண்களைத் திருப்பி அனுப்பி விட்டாய்!” ஆசாரியர் இதைச் சொல்கையில் ஆர்யகன் தலையை ஆட்டித் தன் அதிருப்தியைத் தெரிவித்தான்.  ஒருவருக்கும் தெரியாமல் திருடும் ஒரு சிறுவன் அகப்பட்டுக் கொண்டுவிட்டதைப் போல்  முகத்தை வைத்துக் கொண்டு மிகவும் வெகுளியாக உத்தவன் பதில் சொன்னான். “ஆனால், ஆசாரியரே, நான் அவர்களை அழைக்கவில்லையே!”

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சமாளிக்க திடமான பதில்....!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவன் மனம் படபடவென அடித்துக் கொண்டது. அவனுடைய இன்னொரு மனம் அவனை ஒரு இரக்கமற்றவன் எனக் குற்றம் சாட்டியது.//

உத்தவனின் அப்போதைய மன உணர்வுகள் நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

மிகவும் சுவாரஸ்யமான பகிர்வு. தொடருங்கோ.

ஸ்ரீராம். said...

விசாரணைக்குப் பின்வரும் வியாசரின் தெளிவான விளக்கத்துக்குக் காத்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உத்தவனின் நிலை மஹா பரிதாபம்.வியாசரின் வார்த்தைகளுக்குக் காத்திருக்கிறோம்.

sambasivam6geetha said...

சந்தர்ப்ப சூழ்நிலை தான் உத்தவனைத் தப்புவிக்க வேண்டும். :))))

அனைவருக்கும் நன்றி. தனித்தனியாகப் பதில் சொல்ல முடியலை. மன்னிக்கவும்.