Friday, June 21, 2013

உத்தவன் அருகில் ஒரு நாக கன்னி!

மணிமானின் இரட்டைச் சகோதரிகள் ஆன பிங்கலை, கபிலா இருவரும் அழகும், எழிலும் நிரம்பியவர்களாக ஒரே உயரத்திலும் பருமனிலும், இதய வடிவ முகத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.  அவர்கள் கன்னங்களில் விழுந்த அழகான குழி அவர்கள் முகத்தைப் பிரகாசப் படுத்தியது.  யார் பிங்கலை, கபிலா யார் எனக் கண்டுபிடிப்பதும் முதலில் கஷ்டமாகவே இருந்தது.  ஒரே மாதிரியாக மஞ்சள் நிற உடை, தலை அலங்காரம், தலையில் பூச்சுடி இருப்பதும் இருவருமே தாமரை மலர்கள்,  ஒரே மாதிரி பாவனைகளும். சிரிப்பது கூட ஒரே சமயம் சிரித்தனர்.   

ஆரிய இளவரசிகளின் நாகரிகமான நடத்தைகள் இல்லைதான்.  ஆனாலும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த உத்தவனின் வருகை அவர்கள் மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை.  இயல்பாக அவனை ஏற்றுக் கொண்டதோடு அவனும் மகிழ்வோடு இருக்கத் தங்களால் இயன்றதைச் செய்தனர்.  அவன் என்ன சொன்னாலும் அதை ரசித்தனர். அவன் சொல்வதை வேத வாக்காக நினைத்தனர். அவர்களால் இயன்ற அளவுக்கு அவனை சந்தோஷமா வைத்திருக்கவும் முயன்றனர்.  தங்கள் கண்கள் வியப்பால் விரிய அவன் சொல்லும் விஷயங்களைக் கேட்டார்கள்.  மெல்ல மெல்ல உத்தவனை அவனின் இயல்பான கூச்சத்திலிருந்து சகஜ நிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர்.  அவன் தன்னைப் பற்றிய செய்திகளைக் கூறும்படி கேட்டார்கள்.  உத்தவன் எப்படி ஆரம்பித்தாலும் அது கடைசியில் கிருஷ்ணன் செய்த சாகசங்களைக் குறித்துக் கூறும் ஒன்றாகவே ஆயிற்று என்பதையும் கண்டார்கள்.

கிருஷ்ணனும், உத்தவனும் சேர்ந்த செய்த சாகசங்கள் குறித்துக் கேட்டு அறிந்து கொண்டதோடு அல்லாமல், விருந்தாவனத்தில் கோபியருடன் ஆடிய ராஸலீலை குறித்தும் கேட்டார்கள்.  கம்சனைக் கிருஷ்ணன் கொன்ற விதம், உத்தவனாக இருந்தால் தன்னுடைய வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக இருக்கையில் இப்படிப் பட்ட ஒரு காரியத்தைச் செய்வானா எனக் கேட்டார்கள்.  சாந்தீபனியின் ஆசிரமத்தில் அவர்கள் படித்தது, நாகலோகம் சென்று புநர்தத்தனை மீட்டுக் கொண்டு வந்தது, கோமந்தக மலைக்குச் சென்று ஜராசந்தனிடமிருந்து தப்பியதோடு இல்லாமல், அவனை ஓட ஓட விரட்டியது ஆகியவற்றையும் கேட்டார்கள்.  ஜராசந்தன் குறித்து அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை என்பதை உத்தவன் கண்டான்.  துவாரகைக்கு அவர்கள் சென்ற விதம், கிருஷ்ணன், பலராமன், உத்தவன் மூவரும் துவாரகையை எப்படி வென்றனர் என்பதோடு, கிருஷ்ணன், ருக்மிணி கல்யாணம் குறித்தும், ருக்மிணியைத் தூக்கிவரக் கிருஷ்ணன் போட்ட திட்டமும், உத்தவனின் உதவியையும் குறித்துக் கேட்டு அலுக்கவில்லை அவர்களுக்கு.  கிருஷ்ணனின் இன்னொரு மனைவியான ஷாயிபா பற்றி அறிந்ததும் இருவருக்கும் வியப்பு.  அதிலும் இருவரும் ஒற்றுமையுடன் இருப்பதையும் கேட்டு வியந்தனர். 

இம்மாதிரியான சாகசங்களை அவர்கள் வாழ்நாளில் எவரும் நடத்தியதைப் பார்க்கவும், நடந்ததைக் கேட்டு அறிந்ததும் இல்லை. கிருஷ்ணனை ஒரு கடவுளாகவே நினைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.  தங்கள் இருவருக்குள்ளேயே கிருஷ்ணன், உத்தவன் இருவரைக் குறித்தும் பேசிக் களிப்படைந்தனர்.  இம்மாதிரியான  ஆர்வத்துடன் எல்லா விஷயங்களையும் கேட்டு அறியும் மக்களை உத்தவன் இத்தனை நாட்கள் பார்த்தது இல்லை.  தன்னுடைய சில சாகசங்களும் கிருஷ்ணனுக்கு உதவியாக இருந்ததை நினைத்து மகிழ்ந்த உத்தவன் அவற்றைக் குறித்தும் கூற முடிந்தது.  தன்னை இவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது உத்தவனால்.  அந்த இரு பெண்களையும் மிக அற்புதமான குழந்தைகளாகவே உத்தவன் நினைக்க அவர்களோ இருவரும் சேர்ந்தே உத்தவனைத் தங்கள் கணவனாக அடைய வேண்டும் என நினைத்தனர்.


நாகர்களையும், அவர்களின் உபசாரங்களையும் உத்தவன் மிகவும் ரசித்தான்.  அவர்களின் வெகுளித்தன்மையால் கவரப் பட்டான்.ஆர்யகனும் அவன் குடும்பமும் தன்னைக் கவனித்துக் கொண்ட விதத்தில் நெகிழ்ந்து போன உத்தவன், இளவரசன் மணிமானுக்குத் தனக்குத் தெரிந்த ஆயுதப் பயிற்சிகளைக் கற்பித்தான். கார்க்கோடகனும், அவன் மனைவியும், இரு இளவரசிகளும் காட்டிய அன்பிலும் இன்ப நிகழ்ச்சிகளிலும் மனதைப் பறி கொடுத்தான்.  அதோடு உத்தவனுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக ஐந்து சகோதரர்கள் காட்டுக்குள் இருக்கலாம் என்ற செய்தி கிடைத்துள்ளது.  அவன் இனி அவர்களைத் தேடிக் காட்டுக்குச் செல்ல வேண்டும். இந்தப் புதிய சாகசத்தில் உடனடியாக ஈடுபட அவன் மனம் துடித்தது.  அன்று இரவு மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் உத்தவன் உறங்கினான்.  கிருஷ்ணனும், மணிமானும், இரட்டையர்களான இளவரசிகளும் அவன் கனவில் வந்தனர்.  அவனோடு பேசிக் களித்தனர்.  திடீரெனக் கனவு மாறியது. மெல்லியதொரு கரங்களால் அவன் அணைக்கப்பட்டான்.  இது என்ன?? உத்தவன் திடுக்கிட்டு விழித்தான்.  அவன் அருகே நாககன்னி ஒருத்தி படுத்திருக்கிறாள்.  உத்தவனுக்கு முழுக்க விழிப்பு வந்துவிட்டது.  யார் இது??

3 comments:

ஸ்ரீராம். said...

1) ஷாயிபா? பாமா?

//அவன் அருகே நாககன்னி ஒருத்தி//
2) யார் அது?!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கதை அழகாகப் போகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

திடீரென சுவாரஸ்யம்...!

ஆவலுடன்...