Friday, April 26, 2013

உத்தவன் தேடக் கிளம்பி விட்டான்.


வெகு நாட்களாக நாம் உத்தவனைக் காணவே இல்லை.  அவன் எங்கே போனான், என்ன செய்கிறான் என்பதை இப்போது பார்ப்போமா?  உத்தவன் பார்க்க மிகவும் ஒன்றும் தெரியாதவனாகவும், அவ்வளவு விரைவில் முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறுபவனாகவுமே இருந்தான்.  எனினும் சில சமயங்களில் அவன் எடுக்கும் முடிவுகள் ஆச்சரியகரமானதாக இருக்கும்.  அதே சமயம் அந்த முடிவின்படி நடந்து கொள்ளவும் ஆரம்பிப்பான்.  இப்போது அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கும் தருணம் இது.  கிருஷ்ணன் அவனிடம் எப்போது பாண்டவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என்றும், அரக்கு மாளிகையிலிருந்து தப்பி எங்கோ ஒளிந்து வாழ்ந்து வரலாம் என்னும் சந்தேகத்தைத் தெரிவித்தானோ அப்போதே அவன் தங்கள் தந்தைமார்களின் தாய்வழிப் பாட்டன் ஆன நாகர்களின் அரசன் ஆர்யகனைச் சந்திக்க முடிவு செய்தான்.  ஆர்யகன் கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட இடங்களில் செழித்துக் காணப்பட்ட காடுகளுக்குள்ளாக வசித்து வந்தான்.  ஆகவே அவனால் மட்டுமே அரக்கு மாளிகை எரிக்கப் பட்டபோது அங்கிருந்து தப்பிய பாண்டவர்களை ஒளித்து வைத்துக் காப்பாற்ற இயலும்.

தெளமிய முனிவரின் ஆசிரமத்தில் நடந்த வேத வியாசரின் சந்திப்பின் போது வியாசர் அடுத்து நாககூடம் செல்லப் போவதை அறிந்தான் உத்தவன்.  முனி சிரேஷ்டரின் மூலம் இந்தப் புதிரின் விடையை அவிழ்க்க முடிவு செய்த உத்தவன் அனைவரும் உறங்கிய பின்னர் அன்று வியாச முனியைத் தனிமையில் சந்தித்து அவருடன் தானும் நாககூடம் வர அனுமதி கேட்டான்.  உத்தவனின் நோக்கத்தை அறிந்தோ என்னமோ வியாசர் உடனடியாகச் சம்மதம் கொடுத்துவிட்டார்.   ஜைமினி மஹரிஷியின் தலைமையில் வியாசரின் முக்கியமானப் பத்து சீடர்களும், நாகர்களின் முக்கியத் தலைவர்களும் உடன் வர வியாசரின் குழு அங்கிருந்து கிளம்பிப் படகுகளின் மூலமாக மூன்று நாட்களில் ஏக சக்ரதீர்த்தக்கரையை அடைந்தது.  வியாசருக்கு ஆரியர்களிடம் மட்டுமில்லாமல், நாகர்கள், நிஷாதர்கள் போன்ற அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருந்த செல்வாக்கை உத்தவன் நன்கறிந்தான்.  வியாசரின் வரவை அறிந்த மக்கள் அந்த அந்த ஊரின் நதிக்கரைகளில் கூடி இருந்து வியாசரை வரவேற்று நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றதோடு அல்லாமல் அவருக்கும், சீடர்களுக்கும் வேண்டிய உணவு, உடை போன்ற வசதிகளையும் தந்து பெருமைப் படுத்தினார்கள்.  வியாசரும் அவ்வப்போது படகில் இருந்து கீழே இறங்கி மக்களை ஆசீர்வதித்தும், அவர்களின் விருந்தோம்பலை ஏற்றும், தக்க உபதேசங்களைச் செய்தும், அவர்களின் குறைகளைக் கேட்டும் அவர்களை உற்சாகப் படுத்தி வந்தார்.

இரவு தங்கும் இடத்தில் ஹோமம் செய்ய வியாசர் மறக்கவில்லை.  தன் வெண்கலக் குரலால் வேத மந்திரங்களை முழக்கிய ஜைமினி மஹரிஷியும், யாகங்களை முன்னின்று நடத்திய வியாசரின் சீடர்களும் அனைவர் மனதிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தினர்.  அஸ்வினி தேவர்களை வேண்டிக் கொண்டு வியாதியஸ்தர்களுக்குப் பெருமளவு மருத்துவ உதவியும் செய்தனர்.  மேலும் அனைவருக்கும் வியாசர் நேரிலேயே தன் கைகளால் உணவு அளித்தது அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கை ஒளி தோன்றியது.  ஏகசக்ர தீர்த்தத்தில் இருந்து அனைவரும் கால்நடையாகவே நாககூடத்துக்குச் சென்றனர்.  செல்லும் வழியெங்கும் நாகர்கள் கூடி இருந்து அவர்களை வரவேற்று நமஸ்கரித்து மரியாதை செய்தனர்.  சிறு வயதில் இருந்தே வியாசரைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான் உத்தவன்.  எனினும் அவரின் பெருமையை இப்போதே நன்கு உணர்ந்தான்.  அவருடைய இருப்பே அனைவர் மனதிலும் ஏற்படுத்தும் மாற்றங்களை ஒரு அதிசயமாக உணர்ந்தான்.  எத்தனை வருடங்கள் எனச் சொல்ல முடியாத வருடங்களாக வியாசர் கங்கையின் கரைகளிலும், யமுனையின் கரைகளிலும் ஆசிரமம் ஆசிரமமாகச் சென்று அங்குள்ள ரிஷி, முனிவர்களுக்கு உபதேசித்து வந்தார்.  ஆரியர்களை ஒரு நல்வழிப் படுத்தி வந்ததோடு காடுகளிலேயே வசித்த நாகர்களையும் நன்முறையில் திருப்பி அவர்களையும் ஆரியர்களின் பாதையில் மெல்ல மெல்ல மாற்றி வந்தார். 

நான்கு நாட்கள் நடைப்பயணத்தின் பின்னர் அவர்கள் நாககூடம் வந்தடைந்தனர்.  ஆர்யகன் தன் பேரன் ஆன கார்க்கோடகனுடன் வியாசரையும் அவர் குழுவையும் எதிர்கொண்டு அழைத்தான்.  நூறு வயதைத் தாண்டிய ஆர்யகனைப் பார்க்கக் கொஞ்சம் பயமாகவே இருந்தது.  உடலில் எலும்பும், தசைகளும் இருக்க வேண்டிய அளவை விடக் கொஞ்சமாகவே இருந்தன.   முடக்கு வாதத்தால் வளைந்த கால்கள், நீண்ட எலும்புகள் துருத்திக் கொண்டு தெரியும் கைகள்,  உயிர்க்களையே இல்லாத சுருங்கிய முகம், மஞ்சள் வண்ணக் கண்கள், ஆனால் அந்தக் கண்கள் அனைவரையும் கவனித்துக் கொண்டே இருந்தது எப்படி இருந்தது எனில்   அவன் மூளை மட்டும் எப்போதும் தயார் நிலையில், எந்தவிதமான சூழ்நிலையையும் ஈடு கொடுக்கும் விதத்தில் இருக்கிறது என்பதைக் காட்டின.  கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட  அந்தப் பிரதேசத்தில் அவன் வைத்தது தான் சட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவன் கண்கள். ஆறு மனைவிகளும், பதினோரு பிள்ளைகளையும் கணக்கற்ற பேரப்பிள்ளைகளையும் பெற்றிருந்த ஆர்யகன், பார்க்க எலும்புக்கூடாக உயிரோடு நடமாடும் பிணம் போன்று தெரிந்தாலும் இன்னமும் அந்த உலகை அவனே கட்டி ஆண்டு கொண்டிருந்தான் என்பதும், அவன் சொல்லை மீறி அங்கு எதுவும் நடக்காது என்பதும் தெரிந்தது.

Saturday, April 20, 2013

கண்ணன் என் ஆசான்!



“பொறுமையை இழக்காதீர்கள் மன்னரே.  உங்களுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்கவேண்டும் என்பதே உங்கள் சபதம்.  உங்களை வலுவான நிலையில் நிறுத்திக் கொண்டு துரோணரை இருந்த இடம் தெரியாமல் செய்வதில் உங்கள் சபதம் நிறைவேறியதாகாதா? யோசியுங்கள்.”

கண்ணன் பேசிய தொனியும், அவன் குரலும், அவன் முகத்தில் தெரிந்த உறுதியும், உண்மையும் துருபதன் மனதைக் கவர்ந்தது.  சிறு பிள்ளை போல் பால்வடியும் முகம் கொண்ட இந்த இளைஞன், என்னவெல்லாம் சொல்கிறான்!  அவனுடைய அதிகாரத்தை எப்படி எல்லாம் அழகாய்க் காட்டுகிறான்.  பிறருக்குத் துன்பமோ, வருத்தமோ விளைவிக்காமல் தன் பேச்சை ஒப்புக்கொள்ள வைக்கிறானே.  இவனுடைய சக்தியை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  துருபதன் மனம் கண்ணன் பால் சென்றது.  கண்ணனின் யோசனைக்கு அவன் ஒத்துக் கொண்டான். அவன் மனம் கண்ணனின் சொற்களால் சமாதானம் அடைந்தது.

“எனில் என் சபதம் நிறைவேறும் என உறுதியாகச் சொல்கிறாயா? “ துருபதன் கேட்டான். 

“நிச்சயமாய்.  நான் உறுதியாகச் சொல்கிறேன்.  நானும் இருந்து உங்கள் சபதம் நிறைவேறுவதைப் பார்க்கப்போகிறேனே!’
“நீயும் சுயம்வரத்தில் கலந்து கொள்வாயா கண்ணா?”  துருபதன் மனம் இன்னமும் கண்ணனையே மருமகனாக ஏற்க விரும்பியது.  

“அப்போது அதற்கு ஏற்ற மனநிலையில் நான் இருந்தேன் எனில் பங்கேற்பேன்.  இல்லை எனில் இல்லை. ஆனால் மன்னரே, யாராக இருந்தாலும் இந்தப்போட்டியில் ஜெயிப்பவர்கள் சிறந்த வில்லாளியாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.”

துருபதன் யோசனையுடன் கண்ணனையே பார்த்தான். அவன் மனம் எந்தத் திசையில் செல்கிறது என்பதையோ, அவன் மனதின் ஆழத்தையோ துருபதனால் உணரமுடியவில்லை.    திடீரென அவன் ராஜ்யாதிகாரம் அதிகரித்து விட்டதைப் போலவும், சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாகவும் தன்னை உணர்ந்தான் துருபதன்.  இந்த நம் இளைய விருந்தாளியின் கூற்றுக்கேற்ப திரெளபதியின் சுயம்வரம் மட்டும் நடந்து முடிந்தால்?? இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கும் இந்தத் துன்ப நிலை மாறி துரோணரைப் பழிவாங்க மட்டுமின்றி ஆர்யவர்த்தத்திலேயே வல்லமை பொருந்தியதொரு அரசனாகவும் திகழலாம்.  நன்றியுடன் கண்ணனைப் பார்த்தான் துருபதன்.

“வாசுதேவா, நீ கூறியபடியே திரெளபதியின் சுயம்வரத்தை நடத்துகிறேன்.  நீ கூறியவற்றில் மட்டுமில்லாமல் உன்னிடம் எனக்கு மிக்க நம்பிக்கை உள்ளது.  அப்படி ஒருவேளை இந்த சுயம்வரத் திட்டத்தின் மூலம் தோல்வியையே அடைந்தாலும் எனக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப் போவதில்லை.”

கிருஷ்ணன் சிறு புன்னகையோடு, “இந்த சுயம்வரம் மட்டும் தோல்வி அடைந்தால், இவ்வுலகிலேயே அனைத்தையும் இழந்தவனாக நான் மட்டுமே இருப்பேன்.  எனக்குத் தான் தோல்வி.”

“அனைத்தையும் இழந்துவிடுவாயா? வாசுதேவா, நீ என்ன சொல்கிறாய்?”

“ஆம், மன்னரே,   உங்கள் நட்பை முதலில் இழப்பேன்.  திரெளபதிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனவன் ஆவேன்.  இந்தப் பரந்த பரதகண்டத்தின் அனைத்து இளவரசர்கள், அரசர்கள் முன்னிலையில் யாதவர் குலத்துக்கே அபக்கியாதியைத் தேடிக் கொடுத்தவன் ஆவேன்.  யாதவ குலமே அவமானம் அடையும்.”

பின்னர் தனக்குத் தானே மெதுவாக, “பின்னர் கிருஷ்ணன் எதற்கு இவ்வுலகில் தோன்றி இருக்கிறான்?  தர்மம் எங்கே காக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் அதற்குத் தக்கப் பாதுகாப்புக் கொடுத்து தர்மத்தை நிலைநாட்டுவது ஒன்றே அவன் பிறந்ததன் காரணம்.”

மிகவும் ஆவலுடனும், அன்புடனும் கிருஷ்ணனின் தோள்களில் தன்னிரு கரங்களையும் வைத்துக் கொண்டே துருபதன், “ வாசுதேவா, நீ என்ன சொல்கிறாயோ, அதன்படியே செய்கிறேன்.  உன் ஆலோசனையை அப்படியே ஏற்கிறேன்.  அவ்வப்போது உன் ஆலோசனைகளை உத்போதனனுக்கும், ஷ்வேதகேதுவுக்கும் வழங்கி வா. “

“இன்னொரு ஆலோசனையும் உள்ளது மன்னரே!”
“என்ன அது?”

“நாளையே அறிவிப்புச் செய்யுங்கள்.  திரெளபதிக்கு சுயம்வரம் நடத்தப் போவதாகவும், அந்தச் சுயம்வரம் அடுத்த வருடம் சைத்ர மாதத்தில் நடக்கப் போவதாகவும் அறிவியுங்கள்.  உடனடியாக இதைச் செய்யுங்கள்.”

மிகுந்த கிளர்ச்சியுடன் காணப்பட்ட துருபதன், “அப்படியே செய்கிறேன் வாசுதேவா!” என்றான்.

Sunday, April 7, 2013

நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்! பண்பிலே தெய்வமாய்!


கண்ணனை துருபதன் பார்த்த பார்வையில் இப்போது புதியதொரு நேசமும், பரிவும், அன்பும் தென்பட்டன.  “எந்த விதமான நிபந்தனைகளுமின்றி, எதையும் திரும்பத் தனக்கெனக் கேட்காமல் தன்னுடைய நட்பையும், அன்பையும் மட்டுமே தருகின்றானே இந்த இளைஞன்!  இவன் எப்படிப் பட்டவன்! இது எனக்கு ஒரு சவாலாக இருக்கும் போலுள்ளதே!”  ஆம், இயல்பிலேயே நல்ல முறையில் வளர்க்கப்பட்ட துருபதனுக்குக் கண்ணனின் இந்தப் பெருந்தன்மையையும் விசாலமான மனப்போக்கையும் கண்டு தான் கண்ணனிடம் திரெளபதியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததைக் கண்டு தன் மேலேயே கோபம் வந்தது.  துருபதனின் பழிவாங்கும் எண்ணமெல்லாம் கட்டோடு மறைந்து இந்தக் கருநிறத்து இளைஞனின் மேல் அளவற்ற அன்பும், மரியாதையும் மிகுந்தது.  கண்ணனைப் பார்த்து, “வாசுதேவா, எனக்கு ஒரு வாக்குறுதி அளிப்பாயா?  நீ எப்போதும் எனக்கும், என் குழந்தைகளும், என் நாட்டுக்கும் நண்பனாகவே இருக்க வேண்டும்.  எந்நிலையிலும் இதற்கு மாற்றம் கூடாது.  திரெளபதியை சுயம்வரத்தில் மேஹசந்தி வென்றாலும், அவ்வளவு ஏன்?  துரியோதனனோ, சிசுபாலனோ இந்தப் போட்டியில் வென்று திரெளபதியை அடைந்தாலும், நீ மட்டும் எப்போதும் எங்கள் நண்பனாகவே இருக்க வேண்டும்.  இந்த வாக்குறுதியை மட்டும் அளிப்பாய்!” என்றான்.
“அப்படியே மன்னா! நான் சத்தியம் செய்கிறேன்.  என்றென்றும் உங்கள் நண்பனாகவே இருப்பேன்.  ஆனால் ஒரு விஷயம், நீங்கள் மேலே சொன்ன எவருக்கும் இந்தத் தேர்வில் வெற்றியடைவது கடினமே!” என்றான் கண்ணன்.

“எப்படிச் சொல்கிறாய் கண்ணா?” துருபதன் கொஞ்சம் ஆச்சரியத்துடனேயே கேட்டான்.

“மன்னா, நீங்கள் அநுமதி அளித்தால் நான் ஆசாரிய ஷ்வேதகேதுவை இங்கே விட்டுச் செல்கிறேன்.  சுயம்வரத்துக்கான ஏற்பாடுகளை அவர் கவனித்துக் கொள்வார்.  பின்னால் ஆசாரியர் சாந்தீபனி அவர்கள் வந்து சேர்ந்ததும், எப்படிப் பட்ட வில் வித்தை வைக்கலாம் என்பதை அவர் முடிவு செய்யட்டும்.  ஆனால், மன்னரே, மீண்டும் உங்களை ஒரு விஷயத்தில் எச்சரிக்கிறேன்.  சுயம்வரம்  நடைபெறப்போகிறது, அதற்கு ஒரு போட்டி உண்டு என்பது மட்டுமே அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும்.  எப்படிப்பட்ட போட்டி என்றோ, அது வில் வித்தையில் போட்டி என்றோ சுயம்வரத்தின் ஆரம்பநாள் வரை கடைசி நிமிடம் வரை எவரும் அறியக் கூடாது.  அதை மட்டும் ரகசியமாகவே வைத்திருங்கள்.  வில் வித்தையில் சிறந்தவனை மட்டுமே திரெளபதி மணப்பாள் என்பது கடைசி நிமிடத்தில் தெரிந்தால் போதும்.”

“வாசுதேவா, அவர்கள் அனைவரும் திரெளபதி தனக்குப் பிடித்த மணமகனைத் தேர்ந்தெடுக்கப் போவதாய் அன்றோ  நினைப்பார்கள்?  அது சரியல்ல.  அப்படி எல்லாம் நியாயமில்லாமல் நடந்து கொள்ள என் மனம் சம்மதிக்கவில்லை.  அது ஏமாற்றுவது போல் ஆகிவிடாதா?”  துருபதன் மனம் கவலையில் ஆழ்ந்தது.

“ஏன், மன்னா?  ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் இளவரசி தன் கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவது கூடத் தவறா?  அவளுக்கு அந்த உரிமை இல்லையா?  அதைச் சுயம்வர நாளன்று அவள் அறிவித்தல் தவறா?”

“இல்லைதான். “ யோசனையுடன் துருபதன் கூறினான்.

“பின்னர் ஏன் கவலை அடைகிறீர்கள் மன்னரே?  இளவரசியவர்கள் சுயம்வர தினத்தன்று சுயம்வர மண்டபத்திற்கு வந்து தனக்கு வரப்போகும் கணவனுக்கு ஏற்படுத்தி இருக்கும் போட்டியைப் பற்றிக் கூறி அந்தப் போட்டியில் வெல்பவனையே மணமகனாக ஏற்கப் போவதாய் அறிவிக்கச் செய்யுங்கள்.  இது இளவரசியின் விருப்பம்.  இது தான் உண்மையும் கூட.”  என்றான் கண்ணன்.

“தெரியவில்லை வாசுதேவா, என்ன சொல்வது எனப் புரியவில்லை.  எப்படி இவ்வளவு விரைவில் உன்னிடம் நம்பிக்கை வைக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை.  அல்லது நான் சரியானதொரு செயலைத் தான் செய்கிறேனா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை.  உன்னுடைய யோசனையை ஏற்பது சரியா என்றும் தெரியவில்லை.  ஆனால் என் மனம் உள் மனம் அதை ஏற்கச் சொல்கிறது.  நீ மட்டும் என்னுடைய சபதத்தை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டால், நான் உன்னுடைய யோசனையை ஏற்கிறேன்.  “

“கவலைப் படாதீர்கள் மன்னரே!   நான் நினைக்கிறாப்போல் சுயம்வரம் வெற்றி பெறட்டும்.  வெற்றி பெற்றுவிடும் என்றே எண்ணுகிறேன்.  அப்படி மட்டும் நடந்துவிட்டால்…….. மன்னா, நீர் மிக்க வலிமை பொருந்திய மன்னராக இந்த ஆர்யவர்த்தத்தில் திகழ்வீர்கள்.  எந்தவிதமான இடையூறுமின்றி உங்கள் நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ளலாம்.  ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளியை உங்கள் மருமகனாய்ப் பெறுவதோடு அவன் நண்பர்கள் அனைவரும், அவன் உறவினர்களும் உங்களுக்கு உறுதுணையாய் வருவார்கள்.  இப்போது வெறுப்பிலும், விரக்தியிலும் ஆழ்ந்திருப்பவர்களால் எந்தவிதமான குறையையும் கூற இயலாது.”

“யாதவர்கள்?  கண்ணா அவர்களின் உதவி எனக்குக் கிட்டுமா?”

“வருவோம் மன்னா.  பலராமன் தலைமையில் நாங்கள் அனைவரும் உங்கள் உதவிக்கு வந்து கூடுவோம்.  குரு வம்சத்தினரின் துணையும், பலமும் இருந்தாலும் துரோணர் பலமிழந்தவராகவே இருப்பார்.  நீங்கள் அவரைக் குறித்துச் சிந்தனையே செய்ய வேண்டாம்.”

“இதன் மூலம் என் சபதம் எப்படி நிறைவேறும்?” துருபதனின் முகம் வாட்டமுற்றது.  உள்ளூறக் கோபமும் வந்தது.

Friday, April 5, 2013

திரெளபதிக்கு சுயம்வரமா? துருபதனின் ஒப்புதல்!



“கண்ணா, சுயம்வரம் என்பது இப்போதெல்லாம் மிகப் பழமையான நாகரிகமாகி விட்டது.  அர்த்தமற்ற வெறும் சடங்காகி விட்டது.  அப்படியே சுயம்வரம் நடத்தினாலும் அதன் மூலம் திரெளபதிக்கு ஆர்யவர்த்தத்தின் மிக வலிமை வாய்ந்த வில் வித்தையில் சிறந்ததொரு வீரன் கிடைத்துவிடப் போகிறானா?”

“மன்னரே,  தாங்கள் புரிந்து கொள்ளவில்லை.  நம் முன்னோர்கள் செய்ததைப்போன்றதொரு உண்மையான சுயம்வரத்தை நீங்கள் ஏன் நடத்தக் கூடாது? “ சற்றே குரலைத் தழைத்துக் கொண்டஅன் கிருஷ்ணன்.  “ ஒரு பரிக்ஷை வையுங்கள் மன்னா,  உண்மையானதொரு பரிக்ஷையாக அது இருக்கட்டும். வில் வித்தையிலேயே சிறந்ததொரு போட்டியைத் தேர்ந்தெடுங்களேன்.  அதன் மூலம் இந்தத் தேர்வில் எந்த வில்லாளி ஜெயிக்கிறானோ அவனை இளவரசி மணமகனாய்த் தேர்ந்தெடுக்க இயலும்.”

துருபதன் அசந்து விட்டான்.  அவனுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது.  இதன் மூலம் ஏற்படப் போகும் தாக்கங்களை நினைத்துப் பார்த்தான்.  சிறந்த வில் வீரன் யார் எனவும் நினைத்துப் பார்த்தான்.  ஒரு புன்னகையுடன் கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவா, இப்போது உன்னையன்றிச் சிறந்த வில்லாளி வேறு எவர் இருக்கின்றனர்?”  என்றான்.

“எனக்குத் தெரியவில்லை மன்னா!  வில் வித்தையில் சிறந்த வீரன் யார் எவர் என்பது இன்னமும் நமக்குள் நிச்சயமாய்த் தெரியவில்லை.  இந்தப் போட்டி முடிவடைந்ததாகவும் தெரியவில்லை.  ஆனால் மற்ற வில்லாளிகள் நிறையப் பேர் இருக்கையிலே நீங்கள் அவர்கள் அறியாமல் என்னை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? எத்தனை அரசகுமஅரர்களை அழைக்க முடியுமோ அவ்வளவு பேரையும் அழையுங்கள்.  கடுமையானதொரு போட்டியை ஏற்படுத்துங்கள்.  அதன் மூலம் அரசகுமாரி சிறந்ததொரு வீரனைத் தன் மணமகனாய்த் தேர்ந்தெடுக்க உதவுங்கள்.”

துருபதன் தன் மனதிற்குள்ளாக இந்த யோசனையை  நன்கு ஆராய்ந்தான்.  இதன் மூலம் ஏற்படப் போகும் நிகழ்வுகள் அவன் மனதில் புரண்டு ஓடிக் கொண்டிருந்தன. கிருஷ்ணன் மேலே பேசிக் கொண்டிருந்தான்.  “உங்களுடன், உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் பல தேசத்து அரசர்கள், அரசகுமாரர்கள் என அனைவரும் இந்தச் சுயம்வரத்துக்கு வருவார்கள்.  நீங்கள் தவிர்க்கவே முடியாததொரு அதிகார மையமாக அவர்கள் நடுவில் விளங்குவீர்கள்.  மேன்மேலும் பற்பல அரசர்களின் உதவிகளும் அவர்களின் நட்பும் உங்களுக்குக் கிடைக்கும்.  அதன் மூலம் உங்கள் படைபலம் மேலும் வலுவடையும்.  நீங்கள் யாரையும் எவரையும் விரோதிக்கப் போவதில்லை.  இந்தச் சுயம்வரத்தின் மூலம் அனைவரையும் நீங்கள் சரிசமமாகப் பார்க்கிறீர்கள் என்றே உறுதியாகும்.  சுயம்வரத்தின் முடிவில் நீங்கள் மிகவும் வலுவடைவீர்க்கள்.  மனரீதியிலும், படை பலமும், மேலும் நண்பர்கள் வட்டமும் விரிவடைந்து வலுப்பெறுவீர்கள்.  இப்போது நீங்கள் என்னை உங்கள் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்தீர்களானால், பல அரசர்கள், இளவரசர்களின் விரோதத்துக்கு ஆளாவீர்கள்.”

“எல்லாம் சரிதான் வாசுதேவா! ஆனால் எந்த அரசனாலும், இளவரசனாலும் இந்தப் போட்டியில் ஜெயிக்கவே முடியவில்லை எனில்?  என் பெண்ணுக்கு மணமகன் யார்?”

“பின்னர் உங்கள் மகளும், நீங்களும் வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்களில் எவரேனும் தகுதி வாய்ந்த ஒருவரை உங்கள் மகளுக்கு மணமகனாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியுமே?”

“வாசுதேவா, அப்போது என் மகள் உன்னைத் தேர்ந்தெடுத்தால்?”  துருபதனின் முகத்தில் குறும்புச் சிரிப்பு. ஒரு கண நேரம் துரோணரையும், அவர் தன்னை அவமானம் செய்ததையும், தான் பழிவாங்க வேண்டியே உயிர் தரிப்பதையும் மறந்தவன் போல் காணப்பட்டான்.   ஆனால் கண்ணன் அசரவில்லை.

“மன்னா, இந்தப்போட்டியில் நான் கலந்து கொண்டு ஜெயிக்கவில்லை எனில்?”  கண்ணனும் சிரித்தான்.  “பின்னர் உங்கள் மகள் என்னை எப்படித் தன்மணமகனாய்த் தேர்ந்தெடுப்பாள்?  அவள் தான் ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளியை அல்லவோ மணக்க எண்ணுகிறாள்?  ஆனால் அரசே, யாதவர்களின் நட்பும், பலமும் என்றென்றும் உங்களுக்குக் கிடைக்கும்.  நான் உங்கள் மாப்பிள்ளையாக ஆகாவிட்டாலும் யாதவர்கள் உங்களை என்றும் நட்பாகவே கருதுவார்கள். அதில் சந்தேகமே வேண்டாம்.”

சற்று நேரம் யோசித்த துருபதன் பின்னர் கண்ணனிடம் மெதுவாக, “வாசுதேவா, நீ கூறியபடி சுயம்வரம் வைத்தால் நிச்சயமாய் என் பலம் கூடும்.  நட்பு வட்டமும் பெருகும். “ என்று ஒத்துக் கொண்டான்.