Tuesday, April 10, 2012

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!

சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த பீமன் ,”நான் துரியோதனனின் மண்டையையும், அவன் நண்பன் அந்தத் தேரோட்டி மகன் கர்ணனின் கழுத்தையும் முறிக்க ஆசைப்படுகிறேன்.” இதைச் சொல்கையிலேயே தான் அந்தக் காரியத்தைச் செய்து முடித்துவிட்டாற்போல் பூரணத் திருப்தி அடைந்தான் பீமன். “அண்ணா, நடு அண்ணா, இவ்வளவு கொடூரக் காரனாய் இருக்காதே. நமக்கெல்லாம் எதுவும் ஆகாது; நாம் நன்றாகவே இருப்போம்.” அர்ஜுனன் பீமனைக் கண்டிக்கும் தோரணையில் கூறினான். அதே சமயம் உத்தவனைப் பார்த்துச் சிரித்ததில் இருந்து இது அடிக்கடி நடக்கும் ஒன்று என உத்தவன் புரிந்து கொண்டு அவனும் சிரித்தான். பீமனோ அதை லக்ஷியம் செய்யாமல், “நான் தீமைகளை அழிக்கவே பிறந்துள்ளேன்.” என்று பெருமையுடன் கூறினான். மேலும், அர்ஜுனனைப் பார்த்து, “நான் உன்னைப் போல் மனம் பலஹீனமானவன் அல்ல; அதே சமயம் பெரியண்ணா யுதிஷ்டிரனைப் போல் ஒரு துறவியும் அல்ல. நான் யதார்த்தமான விஷயங்களை அதன் போக்கிலேயே புரிந்து கொண்டு நடப்பவன். அவங்க என்னோடு சண்டை போட்டாங்கன்னா நானும் சண்டை போடுவேன். சும்மா விட மாட்டேன்.” என்றான்.

“ஓஹோ, பீமா, நீங்கள் ஒருவருக்கொருவர் இப்படி அடித்துக் கொண்டால் உங்கள் வம்சமே பாழாகிவிடுமே! இந்தக் குருவம்சத்தினரின் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும் போல் இருக்கிறதே. இது உங்களை மட்டுமில்லாமல் ஆர்யவர்த்தத்தையே பாதிக்கும். “ என்று உத்தவன் கவலையுடன் கூறினான். பீமனோ அதைக் குறித்துக் கவலைப்படாமல், “ஆர்யவர்த்தம் இதை அனுபவித்தே ஆகவேண்டும். அதன் அஸ்திவாரம் ஆட்டம் கண்டதெனில் பலப்படுத்த உதவியாக இருக்கும். எத்தனை நாட்கள் இப்படிப் பயந்து கொண்டு வாய் மூடி மெளனியாக இருப்பது? எப்போது, எங்கே இருந்து, எம்முறையில் தாக்கப் போகிறார்கள் என்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் எப்படி வாழ்வது? உண்ணும் உணவில் கூட விஷத்தைக் கலந்தார்கள். எத்தனை நாட்கள் பயந்து பயந்து உணவு உண்ண முடியும்?? அவர்கள் பக்கம் நீதியோ, நியாயமோ, உண்மையோ இல்லை. இந்த அநீதிக்குப் பயந்தல்லவோ வாழவேண்டி உள்ளது? ஆகவே அர்ஜுனா, உன் ஆயுதங்களை நன்கு கூர் தீட்டி வைத்துக்கொள். இப்போது நிஜமாகவே துரியோதனாதியரோடு யுத்தம் செய்ய வேண்டி இருக்கும்.” பீமன் பெருமூச்சு விட்டான்.

அப்போது அவர்களை மதிய உணவு உண்ண வேண்டி அழைக்க வந்த குந்தி, பீமனின் கடைசி வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டாள். ஆனால் இளைஞர்கள் மூவரும் அதை அறியவில்லை. “பீமா, எப்போதும் யுத்தம், போர் என்றே பேசாதே! எனக்குப் பயமாய் இருக்கிறது.” என்று கவலையோடு கூறினாள் குந்தி. குந்தியின் உண்மைப் பெயர் ப்ரீத்தா என்பதாகும். குந்திபோஜனுக்கு தத்துக் கொடுக்கப்பட்டு அவனால் வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற காரணப்பெயரைப் பெற்றாள். பார்த்தாலே மரியாதை கொடுக்கும் விதமாய்க் காணப்பட்டாள் குந்தி. முக காந்தி மெய் சிலிர்க்க வைத்தாலும் அதில் காணப்பட்ட நிரந்தர சோகம் அனைவர் மனதையும் வருத்தியது. தன் மக்களைப் பார்க்கையில் அவள் கண்கள் அன்பு நிரம்பியதொரு கடல் போல் காணப்பட்டது. அதோடு தன் குழந்தைகள் வளர்ந்து இளைஞர்களாக ஆகி இருப்பதை ஏற்காதவள் போல அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள் என்று தோன்றும்படியாகப் பேசினாள் குந்தி.

“அம்மா, நாம் க்ஷத்திரியர்கள். போர் செய்வதும் ரத்தம் சிந்துவதும் நம் தொழில்; தர்மம்; கடமை. “

“தர்மத்தைக் காக்க மட்டுமே ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டும் பீமா!” குந்தி கண்டிப்பான குரலில் கூறினாள்.

“அதே தான் தாயே! நம் அனைவரையும் அதர்மத்தில் இருந்தும் அதர்மமான முறையில் நாம் தாக்கப்படுவதில் இருந்து காக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. துரியோதனாதியரின் அதர்மமான செயல்களில் இருந்து நம் அனைவரையும் காக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அதற்காகவே போர் செய்ய எண்ணுகிறேன். உங்கள் மகனான எனக்கு இது கடமையன்றோ!” பீமன் கூற, “உத்தவன் போன்ற சிறந்த வீரர்கள் துணை இருக்க உங்களுக்கு ஆபத்து எங்கிருந்து வரும்?” என்று கூறினாள் குந்தி.

“அத்தையாரே, எங்களில் கூட ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது தான் எதிரிகளிடம் மட்டுமே சண்டையிடுவது என வைத்திருக்கிறோம். இதை எங்களுக்கு உணர்த்திய வாசுதேவ கிருஷ்ணனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றான் உத்தவன்.

“ஆஹா, கிருஷ்ணன் மட்டும் இங்கிருந்தால்?” குந்தி பெருமூச்சு விட்டாள்.

1 comment:

பித்தனின் வாக்கு said...

good and super. Mahabaratham ithu ponra vivathankalai nan padippathu ithuthan muthal thadavai. good.

Neengalum, mamavum nalama?. udal nalanai kavanithuku kollungal.