Sunday, February 19, 2012

மன்னவன் கண்ணன் நாளுங் கவலையில் மூழ்கினோன்!

தன் மாணாக்கனைப் பெருமையுடன் பார்த்த சாந்தீபனி இத்தகையதொரு மனநிலை ஆர்யவர்த்தத்தில் அனைத்து அரசர்களிடையேயும் காணப்பட்டால் நாட்டில் போரே நிலவாதே! என்ற எண்ணம் தோன்றியது. “கண்ணா, நான் உன்னை நன்கறிவேன். நீ இத்தகைய ஆசைகளுக்கெல்லாம் அவ்வளவு எளிதில் மசிந்து கொடுக்கமாட்டாய் என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறேன். அதையே துருபதனிடம் ஏற்கெனவே சொல்லியும் விட்டேன். ஆனாலும் அவனுடைய வற்புறுத்தல் தாங்காமலேயே நான் அவன் செய்தியைத் தாங்கி வந்து உன்னிடம் கூறி உள்ளேன். கிருஷ்ணா, துருபதனிடம் நான் கண்ணனை அவ்வளவு எளிதில் வழிக்குக்கொண்டு வரமுடியாது என்பதையும் கூறினேன். உனக்கான, உன் வாழ்க்கைக்கான முடிவை மற்றவர் உனக்காக எடுக்க நீ அனுமதிக்க மாட்டாய் என்பதையும் கூறி விட்டேன்.”

“ஆஹா, குருதேவரே, இது என்ன! என்னைப் பற்றி இவ்வளவு மோசமான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறீர்?” கண்ணன் கண்கள் குறும்பு கூத்தாட இதை மொழிந்ததும், ஒருவரை ஒருவர் அன்பு ததும்ப நோக்கிக் கொண்ட குருவுக்கும், சீடனுக்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. “என் அருமைச் சீடனே, உன்னைப் போன்ற பல சீடர்களை நான் பெறும்படி அந்த மஹாதேவன் எனக்கு அருள் செய்ய வேண்டும். அது போகட்டும் அப்பனே, துருபதனுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?”

“குருதேவரே, துருபதனுக்கு என்னுடைய தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு இத்தகைய மாபெரும் பரிசை எனக்குக் கொடுக்க முன்வந்ததற்கு நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதைத் தெரிவியுங்கள். அதோடு யாதவர்கள் பிரபாஸ க்ஷேத்திரத்தில் மன அமைதியோடும், மகிழ்வோடும், குறைவில்லாச் செல்வத்தோடும் நிம்மதியாக வாழ்வதாகவும், இங்கிருந்து கிளம்பும் எண்ணம் அவர்களில் எவருக்கும் இல்லை என்றும் சொல்லுங்கள். துருபதனால் எனக்கு அளிக்கப்படும் மாபெரும் சேவையை நிறைவேற்ற நான் துளியும் தகுதியற்றவன் என்பதையும் எடுத்துக் கூறுங்கள். “

“கண்ணா, துருபதனின் வேண்டுகோளை அவ்வளவு எளிதில் நீ நிராகரிக்க இயலாது; அதன் விளைவுகளச் சிறிதானும் சிந்தித்துப் பார்த்தாயா?” ஆசாரியரின் முகம் கல்லைப் போன்று உணர்ச்சியற்றுக் காணப்பட்டது. கண்ணன் திடுக்கிட்டான். “சொல்லுங்கள் ஆசாரியரே!” என்றான். “குழந்தாய், துருபதனின் வேண்டுகோளை நீ நிராகரித்தால் அவன் கோபம் மட்டுமில்லாமல் வெறுப்பும் சேர்ந்து கொண்டு அவனை எந்த நிலைக்குக்கொண்டு போகும் எனச் சொல்ல முடியவில்லை; அவ்வளவு ஏன்? திரெளபதியை ஜராசந்தனுக்குக் கொடுக்கக் கூடத் தயங்க மாட்டான். அதன் மூலம் குரு வம்சத்தினரின் மேல் படையெடுக்கவும் தயங்க மாட்டான். குருவம்சத்தினர் மேல் படையெடுப்பதன் மூலம் துரோணரின் பகையையும் தீர்த்துக்கொள்ள முடியும். அதன் பின்னர் இந்த ஆர்யவர்த்தத்தில் அமைதியோ, சத்தியமோ, தர்மமோ இருக்க முடியாது.”

“உண்மைதான் ஆசாரியரே! இந்த மாபெரும் கேடு நிகழாமல் தடுக்கப்படவேண்டும்.” கண்ணன் குரலிலும் கவலை தெரிந்தது. “துருபதனின் வெறுப்பு அவனை எவ்வளவு மோசமானவற்றையும் சிந்திக்கச் செய்வதோடு, செய்யவும் சொல்லும்.” என்று சாந்தீபனி கூற, “துரோணர் மட்டும் சாமானியரா?” எனக்கிருஷ்ணன் கூற குருவும், சீடனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கிருஷ்ணன்,, “இதை நன்கு ஆலோசித்துத் தெளியவேண்டும் குருதேவரே!” எனக் கூற அர்த்தமுள்ள பார்வை ஒன்றை அவன் மீது வீசினார் சாந்தீபனி. ஒருவருக்கொருவர் வாய்விட்டுப்பேசாமலே மற்றவர் மனதில் உள்ளவற்றைப் புரிந்து கொண்டனர்.

“ஆசாரியரே, என் அத்தை வழி சகோதரர்களைப் பார்க்க வேண்டி நான் ஹஸ்தினாபுரம் செல்லப் போகிறேன். அங்கிருந்து காம்பில்யம் வந்து துருபதனை நேரில் சந்திப்பதாய்க் கூறிவிடுங்கள். “ கண்ணன் முடிப்பதற்குள்ளாக சாந்தீபனி, “என்ன, ஹஸ்தினாபுரத்துக்குப் போகப் போகிறாயா? கண்ணா, வேண்டாம், வேண்டாம்; இது தக்க சமயம் அல்ல; இப்போது நீ அங்கே போகவேண்டாம். உனக்கு விஷயமே தெரியாதா? யுதிஷ்டிரன் இப்போது யுவராஜா அல்ல.”

இப்போது கண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. எழுந்தே விட்டான். “என்ன?” என்றான் ஆச்சரியத்துடன். “ஆம், அப்பா, ஷ்வேதகேது அனைத்தையும் நேரில் பார்த்திருக்கிறான். பாண்டவர்கள் ஐவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டனர். திருதராஷ்டிரன் அவர்களை நாடு கடத்திவிட்டான். ஷ்வேதகேதுவுக்கு மேலும் விஷயங்கள் தெரிந்திருக்கக் கூடும். நான் முழுதும் கேட்டுக்கொள்ள வில்லை. இப்போது தான் அவன் பிருகு தீர்த்தத்தில் இருந்து அவன் திரும்பி வந்துள்ளான். இதோ அவனை அழைக்கிறேன். நீயே நேரில் கேட்டுக்கொள்.” சாந்தீபனி தம் கைகளைத் தட்ட ஒரு மாணாக்கன் எட்டிப்பார்த்தான். ஷ்வேதகேதுவைத் தாம் அழைப்பதாகக் கூறச் சொல்ல அவ்வாறே அவனும் வந்து சேர்ந்தான். கண்ணனைக் கண்டதும் ஆரத் தழுவிக் கொண்டான்.

அவனிடம் சாந்தீபனி ஹஸ்தினாபுரத்தில் நடந்த விஷயங்களைக் குறித்துக் கண்ணனுக்கு விபரமாகச் சொல்லும்படிக் கூற அவனும் பேச ஆரம்பித்தான். “பாண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.”

1 comment:

priya.r said...

கண்ணனுக்கு மட்டுமா அதிர்ச்சி!

படிக்கும் நமக்கும் தான் ......