Monday, August 8, 2011

ஷ்வேதகேதுவின் சங்கல்பமும், பீஷ்மகனின் அதிர்ச்சியும்!

ஆழ்ந்த யோசனையோடு பேசினான் ஷ்வேதகேது. “நேற்று இரவு வரையிலும் ஏதேனும் அதிசயம், அற்புதம் நடக்கும் என எதிர்பார்த்தேன். என் இறையை, என் கடவுளை முழு மனதோடு பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். ஆனால், என் பிரார்த்தனைகள் பயனற்றுப் போயின. என் கடவுள், என் தலைவன் என் பிரார்த்தனைகளை நிராகரித்துவிட்டானோ?? தெரியவில்லை! எந்த அற்புதமும் நடக்கவில்லை. எனில் நான் எடுத்துக்கொண்ட சங்கல்பத்தின் காரணமாக மேற்கொண்டு இங்கே நான் தங்குவதில் எந்தப் பொருளுமில்லை. நான் தங்குதல் தவறாகவும் இருக்கலாம். இங்கே நான் மேலும் தங்க இயலாது. மேலே எதுவும் என்னைக் கேட்காதீர்கள். சொல்லும் நிலையில் நான் இல்லை.” கொஞ்சம் துக்கத்தோடு பேசினாலும், தன் மாணாக்கர்களிடம் உள்ள கனிவையும், பாசத்தையும் குறைக்காமல் பேசிய ஷ்வேதகேது அனைவரையும் ஆசீர்வதித்து விட்டு அப்லவனும், ஜாஹ்னுவும் பின் தொடர அங்கிருந்து அகன்றான்.

பீஷ்மகனின் தர்பார் மண்டபம். அவனுடன் சக்கரவர்த்தி ஜராசந்தன் சற்றே உயரமான சிங்காதனத்தில் வீற்றிருக்க, அங்கே இருந்த தாமகோஷனோடும், ஜராசந்தனோடும், பீஷ்மகன் சுயம்வர ஏற்பாடுகள் குறித்தும், அடுத்துச் செய்ய வேண்டியவை பற்றியும் ஆலோசனைகள் செய்து கொண்டிருந்தான். அப்போது காவலாளி ஆச்சாரியர் ஷ்வேதகேது வந்து கொண்டிருப்பதைக் கூறிச் செல்ல பீஷ்மகனும், தாமகோஷனும் இயல்பான மரியாதையோடு முன் சென்று வரவேற்க ஆயத்தமாயினர். ஆனால் ஜராசந்தனோ இருந்த இடத்தை விட்டு சற்றும் நகரவில்லை. ஷ்வேதகேது உள் நுழைய மன்னர் இருவரும் வணங்கி வரவேற்று ஷ்வேதகேது அமர்ந்த பின்னர் தாங்களும் அமர்ந்து கொண்டனர். கவிஞர்களோ, அறிஞர்களோ தன்னைத் துதித்துப் பாடுபவர்களை மட்டுமே மதித்துப் பேசும் சுபாவம் கொண்ட ஜராசந்தன், மனதுக்குள் எத்தனை சொன்னாலும் இந்த ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் இந்தத் துறவிகளையும், ஆசாரியர்களையும் வணங்கும் இழிவான பழக்கத்தைக் கைவிடவே மாட்டேனென்கிறார்களே! இது அவ்வளவு நல்லதில்லை என்றாலும் கேட்பதில்லை என நினைத்துக்கொண்டான். இந்த நினைப்பில் அவன் முகம் சற்றே சுளுக்கிக்கொண்டது.

எல்லாவற்றையும் கவனித்தும் கவனியாது போல் ஷ்வேதகேது அமர்ந்திருந்தான். பீஷ்மகன் பணிவோடு, “ஆசாரியரே, தாங்கள் இந்த அரசவையைத் தேடி வரும்படியான சூழ்நிலை எவ்வாறு ஏற்பட்டது?? தாங்கள் அழைத்திருந்தால் நானே நேரில் வந்து தங்களுக்கு ஆவன செய்திருப்பேனே? “ என்றான். ஜராசந்தனுக்கு இந்தப் பணிவையும் விநயத்தையும் கண்டு கோபம் வந்தது. ஆனால் அடுத்து ஷ்வேதகேது பேசியதைக் கேட்டதும் உள்ளூர மகிழ்வும் வந்தது. ஷ்வேதகேது, “போஜமன்னனே, அரசர்களில் சிறந்தவனே! நான் இங்கிருந்து விடைபெறும் தருணம் வந்துவிட்டது. அதைச் சொல்லிவிட்டு என்னுடைய ஆசிகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவிக்கவே வந்தேன்.” பீஷ்மகனுக்கு உண்மையிலேயே தூக்கிவாரிப்போட்டது. இதை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
“ஆஹா, இது என்ன நான் கேள்விப் படுவது? விடை பெறுகிறீரா?? குண்டினாபுரத்தை விட்டு வேறு எங்கே செல்கிறீர்?? அதுவும் இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் இந்நகரத்தை விட்டு நீர் செல்லும் காரணம் என்னவோ?? ம்ம்ம்ம்???? ஒருவேளை, யாரேனும் உம்மை அவமரியாதையாய்ப் பேசிவிட்டார்களா? எவர்? சொல்லுங்கள் எனக்கு! அவனுக்குத் தக்க தண்டனையை உடனே அளிக்கிறேன்.”

“மதிப்பும், மாட்சிமையும் பொருந்திய மன்னா! நான் குண்டினாபுரத்தை விட்டுச் செல்கிறேன். என் மாணாக்கர்களிடம் நான் விடைபெற்று அவர்களுக்குச் சொல்ல வேண்டிய அறிவுரைகளைச் சொல்லி ஆசிகளும் வழங்கிவிட்டேன். மன்னா! நான் இங்கு வந்தபோது நீர் எனக்குக்கொடுத்த சொத்துக்கள், பசுக்கள், நிலம் அனைத்தையும் ஆசிரமத்தின் மொத்தச் செல்வத்தையும் இந்தக் கோட்டையின் பாதுகாவலனிடம் ஒப்படைத்துவிட்டேன். இங்கே வந்து உம்மிடம் விடைபெற்றுவிட்டு உமக்கும் உம் குடும்பத்திற்கும் என் மனமார்ந்த ஆசிகளை வழங்க வேண்டியே வந்தேன்.”…..

“எங்கே செல்கிறீர்?”

“இறைவன் என்னை எங்கே போகச் சொல்லிக் கட்டளை இடுகிறானோ! அவன் ஆணை என்னை எங்கே இழுத்துச் செல்கிறதோ! அங்கே செல்வேன். ஆனால் இங்கிருந்து நான் செல்லவேண்டும்.”

“சரி, ஆசாரியரே? ஆனால் உடனே ஏன் செல்ல வேண்டும்? எனக்குப் புரியவில்லையே!” பீஷ்மகனால் இன்னமும் இந்த அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஜீரணிக்க முடியவில்லை. “ஆசாரியரே, என் நாட்டின் விருந்துபசாரத்தில் குறை ஏதேனும் கண்டீரா? இங்கே உம்மைச் சரியாகக் கவனிக்கவில்லையோ? தவறு நிகழ்ந்து விட்டதோ?” உண்மையான கவலை தொனிக்கக் கேட்டான் பீஷ்மகன்.

“மாட்சிமை பொருந்தி மன்னா! நீர் மிக அருமையானவர். என்னிடம் மிகவும் கருணையும், பாசமும் கொண்டு இங்கே தங்க வைத்து என்னை நன்றாகவே உபசரித்தீர். ஆனால் உம்முடைய இந்த உபசாரங்களை நான் இன்னமும் ஏற்க இயலாது. “

“தயவு செய்யுங்கள், ஆசாரியரே! குருதேவரே, நீர் இங்கிருந்து சென்றுதான் ஆகவேண்டும் எனில் செல்லுங்கள். ஆனால் சுயம்வரம் முடியட்டும். அரண்மனையில், நாட்டில் ஒரு மங்கல நிகழ்ச்சி நடக்க இருக்கையில் அந்தணரும், தபஸ்வியான பிரமசாரியுமான நீர் இங்கிருந்து செல்வது நன்மைக்கு உரியதாய் எனக்குத் தோன்றவில்லை. ஏதோ கெட்ட சகுனமாகத் தெரிகிறது.” பீஷ்மகன் குரலில் கவலை தோய்ந்திருந்தது.


அவ்வளவு நேரமும் கஷ்டப்பட்டுப் பொறுமை காத்த ஜராசந்தன், எரிச்சல் மிகுந்த குரலில், “ஏ, பிராமணனே, நீ எங்கே வேண்டுமானாலும் போய்க் கொள். ஆனால் சுயம்வரம் முடியும் வரைக்கும் இருந்து தொலை. “ மறைமுகமாகத் தன் கோபத்தைக் காட்டிய ஜராசந்தன் உள்ளூர ஷ்வேதகேதுவின் வலிமையிலும் திறனிலும் பயம் கொண்டிருந்தான். ஷ்வேதகேது சாந்தீபனியின் முதன்மைச் சீடன் என்பதும், அவந்தி நாட்டு இளவரசர்களின் முக்கியமான ஆசாரியர் என்றும், ராணுவ தளவாடங்களையும், அஸ்திர, சஸ்திரங்களையும், வில், அம்பு வித்தைகளிலும் , மிக மிகத் தேர்ந்தவன் என்பதையும் ஜராசந்தன் சற்றும் மறக்கவில்லை. அவனிடம் வித்தை கற்க தேச தேசங்களின் ராஜகுமாரர்கள் காத்திருக்கின்றனர் என்பதையும் அறிவான். மேலும் இங்கே போஜனின் நாட்டில் ஷ்வேதகேதுவுக்கு மிக உயர்ந்த உன்னதமான ஒரு ஸ்தானத்தைக் கொடுத்துக் கெளரவித்திருந்தார்கள் என்பதையும் இங்குள்ள பெரிய பெரிய படைத்தளபதிகளும், வீரர்களும் ஷ்வேதகேதுவிடம் மேற்கொண்டு பயிற்சிகள் எடுத்துக்கொண்டு தங்கள் திறனை மேம்படுத்த ஆவல் கொண்டிருக்கின்றனர் என்பதையும் தன் ஒற்றர்கள் மூலம் அறிந்திருந்தான். ஆகவே அவனுக்கும் உள்ளூர ஷ்வேதகேது இந்தச் சமயம் திடீரென நகரை விட்டு வெளியேறினான் எனில் நாட்டு மக்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டால் இது கெட்ட சகுனம் என்று நம்புவார்கள்; பின்னர் நாம் நினைத்த எதுவுமே நடவாமல் மக்களே தடுத்துவிடுவார்கள்; என்று அச்சம் ஏற்பட்டது. மக்கள் என்ன? இந்த ஆரியவர்த்தத்தின் ராஜாக்களும், இளவரசர்களுக்குமே அச்சம் ஏற்படும். பலருக்கும் இப்படிப் பல்வேறு வித்தைகளையும் கற்றுத் தேர்ந்த ஒரு ஆசாரியன் அதுவும் ஆசிரமம் நடத்தி சீடர்களை உருவாக்கிக் கொண்டிருந்தவன், திடீரென நாட்டை விட்டுச் சென்றால் அது நாட்டுக்கோ, மன்னர் குலத்துக்கோ கேடு என்பதை நம்புவார்கள். அதை எண்ணிக் கலக்கம் அடைவார்கள்.

“நான் இப்போதே செல்ல வேண்டும். என் சங்கல்பத்தை உடைத்துவிடுவேன்; என் புனிதமான சங்கல்பம் நான் இங்கிருந்து செல்லாமல் தங்கினால் உடைந்துவிடும்.” என்றான் ஷ்வேதகேது.

தாமகோஷனுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் மிகுந்தது. கிருஷ்ணனும், பலராமனும் தங்களுக்கு வேதங்கள் கற்றுக்கொடுத்த குருவான ஷ்வேதகேதுவைப் பற்றிப் பலமுறை கூறி உள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலே குருசாந்தீபனி தன் முதன்மைச் சீடன் ஆன ஷ்வேதகேதுவைப் பற்றிப் பேசாத நாளே இல்லை. எல்லாவற்றையும் இப்போது நினைவு கூர்ந்த தாமகோஷன் தான் அமர்ந்திருந்த இடத்தில் நிமிர்ந்து அமர்ந்து, “ ஆசாரியரே? ஏன் திடீர்ப் பயணம்?? நிச்சயமாக இந்தச் சில நாட்களுக்குள் உங்கள் மனம் வருந்தும்படியான சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே நடந்தது என்ன? சொல்லுங்கள் கேட்போம்.” என்றான்.

ஷ்வேதகேது கம்பீரம் குறையாமலேயே பேசினான்;”சேதி நாட்டு மன்னா! நான் நேற்றிரவு வரையிலும் தெளிவோடு தான் இருந்தேன். அவந்தி நாட்டு இளவரசர்கள் வந்து என்னைச் சந்தித்துப்பேசினார்கள். அதன் பின்னரே மனம் மாறினேன். மன்னா, சில காலம் நான் என்னை மறந்து, என் நிலையை மறந்து ஒரு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். அதை நீர் நன்கு அறிவீர். ஒரு ஆசாரியனாக நான் செய்ய வேண்டிய கடமைகளைக் கைவிட்டுவிட்டு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். போஜ மன்னா, நீர் என்னை அழைத்த சமயம் நான் இவற்றைப் பற்றி உம்மிடம் விரிவாகக் கூறியுள்ளேன். ஒரு அற்புதத்தின் காரணமாக, அதிசயமாக அந்த வீழ்ச்சியில் இருந்து நான் மீண்டு வந்தேன். ஒரு வருடம் முன்னர் உம்முடைய வேண்டுகோளின் பெயரில் இங்கே ஆசாரியனாக அமர்ந்தேன். மன்னா! கரவீரபுரத்தில் இருந்து அந்த அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து அதிர்ஷ்டவசமாக நான் காக்கப் படவில்லையெனில் எவ்வாறு இருந்திருப்பேன் என்பதைக் கூறுவதும் கடினம். மன்னா! அங்கிருந்து அந்தச் சுழலில் இருந்து நான் காக்கப் பட்டபோது நான் ஒரு சங்கல்பம் செய்து கொண்டேன். இனி, இந்த நிமிடம் முதல் தர்மம் எங்கே காக்கப் படுகிறதோ அந்த இடத்திற்கே, அந்த நாட்டிற்கே நம் சேவை பயன்படவேண்டும். எந்த இடத்தில் தர்மமானது இம்மியளவுக்காவது விலகுகிறதோ அங்கிருந்து உடனே கிளம்பிவிட வேண்டும். இதுவே நான் கொண்ட உறுதி, சங்கல்பம், என் விரதம், தவம்.”




1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 85 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

//இனி, இந்த நிமிடம் முதல் தர்மம் எங்கே காக்கப் படுகிறதோ அந்த இடத்திற்கே, அந்த நாட்டிற்கே நம் சேவை பயன்படவேண்டும். எந்த இடத்தில் தர்மமானது இம்மியளவுக்காவது விலகுகிறதோ அங்கிருந்து உடனே கிளம்பிவிட வேண்டும். இதுவே நான் கொண்ட உறுதி, சங்கல்பம், என் விரதம், தவம்.” //

இது தான் திருப்பு முனையா .,நன்று நன்று ;பதிவுக்கு நன்றி கீதாம்மா