Thursday, July 28, 2011

பீஷ்மகனின் கெஞ்சல், கண்ணன் வருவான், 2-ம் பாகம்!

தன் தந்தையின் பக்கம் திரும்பிய ருக்மிணி, “தந்தையே, நான் சொல்வது சரிதானே?? நான் விலைபேசப்படும் பசுமாடு தானே? பாருங்கள், என் அண்ணனுக்கு ஒரு முட்டாள் காளையினளவு அறிவு மட்டுமே உள்ளது. தந்தையே, நீங்கள் அண்ணன் சொல்படி கேட்டீர்களானால், மிகப் பெரிய தர்மசங்கடத்தில் மாட்டிக்கொள்வீர்கள். நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்.” தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணம் ருக்மிணி தந்தையிடம் கெஞ்சினாள். அவள் மனோபாவம் இப்போது திரும்பியிருந்தது.

ஏதுமறியா அபலையாய்த் தந்தையைக் கெஞ்சினாள் ருக்மிணி. பீஷ்மகனோ, “என்னால் என்ன செய்ய முடியும் ருக்மிணி?? நீ குடும்பத்தின், பரம்பரையின், போஜர்களின் கெளரவத்தைக் காக்க வேண்டும். நான் சுயம்வரத்திற்கு ஒத்துக்கொண்டு விட்டேன். அரசர்களும், இளவரசர்களும் ஒவ்வொருவராகக் குண்டினாபுரத்துக்கு வர ஆரம்பித்துவிடுவார்கள். “

“என்றால், சுயம்வரம் நடப்பது உறுதி எனில், நானே என் கணவனைத் தேர்ந்தெடுப்பேன். நீங்கள் யாரும் தலையிடாதீர்கள். போலியான சுயம்வரத்தை நடத்தாதீர்கள்.”

“குழந்தாய், உனக்கு இதைவிடவும் நல்ல மணமகன் அமைய மாட்டான்.” கூடியவரை தன் சொற்களில் கனிவைக் குழைத்து ஆறுதலாய்ப் பேசினான் பீஷ்மகன்.

“தந்தையே, நீங்கள் மட்டும் கிருஷ்ண வாசுதேவனை சுயம்வரத்திற்கு அழையுங்கள். நல்லதொரு மணாளனை நானே தேர்ந்தெடுக்கிறேன். அவனை விட நல்ல மணாளன் எனக்குக் கிடைக்க மாட்டான். அவனுடைய சாகசங்களையும், வீரத்தையும் குறித்து இவ்வுலகமே பேசுகிறது.”

பீஷ்மகன் பதறினான். எனினும் வெளியே அநுதாபத்துடன், “குழந்தாய், குழந்தாய், உன் மனம் உன் வசத்தில் இல்லை. நீ என்ன பேசுகிறாய்? தெரிந்து தான் பேசுகிறாயா? நான் எப்படி அவனை சுயம்வரத்திற்கு அழைக்க முடியும்?? அதுவும் இது அரசர்களுக்கும், பேரரசர்களுக்கும், இளவரசர்களுக்குமானது. இவர்கள் நடுவில் அவனை எவ்வாறு அழைப்பேன்?? அவன் ஒரு முழு க்ஷத்திரியன் கூட இல்லையே? அவன் குலத்து முன்னோரான யதுவின் அன்னை தேவயானி ஒரு அந்தணப் பெண். அவன் தந்தை தான் க்ஷத்திரியன். அவர்கள் அரசாள முடியாது என்பதை நீ அறிவாயா? யாதவ குலத்து ஒரு பிரிவின் தலைவனின் மகன். அதுவும் இடையர்களால் வளர்க்கப் பட்டவன். ஒரு இடையன் போலவே வாழ்க்கை நடத்தியவன்.”

“இருக்கலாம்; ஆனால் அவன் இந்த மஹா சக்கரவர்த்தியான ஜராசந்தனை விடவும் மேம்பட்டவன். அவ்வளவு ஏன்? ஜராசந்தனுக்கே உயிர்ப்பிச்சை கொடுத்திருக்கிறான்.”

“ஓஹோ, ருக்மிணி, அவன் குடும்பத்தின் தராதரத்தைச் சற்றே நினைத்துப் பார். அவனுடைய இப்போதைய நிலைமை என்ன என்பதையும் யோசிப்பாய். அவனை மட்டும் நான் அழைத்தேனானால் நம்முடன் இந்தப் பரந்த ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் எவரும் நட்பாய் இருக்க மாட்டார்கள். சுயம்வரத்திற்கு ஒரு அரசகுடும்பம் கூட வராது. அனைவரும் ஒதுங்கிவிடுவார்கள்.”

“சரி, அது போகட்டும்; நான் சுயம்வரத்தில் எவரையுமே தேர்ந்தெடுக்கவில்லை எனில்?” ருக்மிணியின் குரலில் சற்றே வெற்றிப் பெருமிதமோ?

“இல்லை அம்மா; அவ்வாறு நீ இருக்க முடியாது. அப்படி நீ எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனில் அவர்களை எல்லாம் நாம் அவமதித்துவிட்டோம் என்று எண்ணிக்கொண்டு அனைவரும் ஒன்றாய்க் கூடிக்கொண்டு நம்மிடம் போர் தொடுப்பார்கள். அது தேவையா?”

“சரி, அதுவும் வேண்டாம்; சுயம்வர மண்டபத்திலேயே நான் உயிரின்றிச் செத்து விழுந்தால்?”

“அப்போதும் போருக்கு வருவார்களா?” ருக்மிணியின் குரலில் இன்னதென்று தெரியாததோர் உணர்வு.

“தயவு செய் தாயே, என் குழந்தாய் ருக்மிணி! இப்படியான அமங்களமான சொற்களைப் பேசாதே அம்மா. உன் திருமணம் குறித்து, அதன் பின்னர் நீ வாழப் போகும் இனிய வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் இவ்வாறான அமங்களச் சொற்கள் வேண்டாமே. நான் என்னால் இயன்றவரையிலும் உனக்கு உதவுகிறேன். சுயம்வரம் எப்படியேனும் நடந்தே தீரும். நீ உன்னிஷ்டப்படி வேறு எவரையேனும் உன் கணவனாக வரித்தாலும் நீ வரித்தவனே உன்னை ஏற்றுக்கொள்ளத் தயங்குவான். ஏனெனில் ஜராசந்தன் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி! அவனைப் பகைத்துக்கொள்ள எவரும் தயங்குவார்கள். ஜராசந்தனோ நீ சிசுபாலனைத் தான் மணக்கவேண்டும் என்றே விரும்புகிறான்.”

“தந்தையே, உம்முடைய விருப்பமும் அதுதானே?” ருக்மிணி ஆக்ரோஷத்துடன் கேட்டாள்.

“ஆம், என் விருப்பமும் அதுவே. என் தந்தையை அவன் வலுக்கட்டாயமாய்ப் பதவியில் இருந்து இறக்கி என்னை அரசனாக்கினான். நான் மறுத்திருப்பேன். ஆனால்……… நம் படைத்தளபதிகளைச் சிறைப்பிடித்திருந்தான். கத்தி முனையில் என்னை அரசனாக்கினான். நான் கொஞ்சமேனும் என் எதிர்ப்பைக் காட்டி இருந்தேனானால் நம் படைத் தளபதிகள் அனைவரையும் கொன்றுவிட்டு இந்தக் குண்டினாபுரத்தையும் நாசமாக்கி இதற்கு நெருப்பு வைத்திருப்பான். அவன் எவ்வளவு பொல்லாதவன் என உனக்குத் தெரியாது குழந்தாய்! எவ்வளவு கஷ்டமான பாதையை நாங்கள் கடந்து வந்திருக்கிறோம் என்பதை நீ அறிய மாட்டாய். நீ அப்போது பிறக்கவே இல்லை.”

“உங்கள் ராஜரீக செளகரியங்களுக்கும், அதைச் சார்ந்த உயர்பதவிகளுக்கும் நான் ஒரு திறவுகோல். இந்தப் பசுவின் மதிப்பு என்னவெனப் புரிந்துவிட்டது தந்தையே! அப்படியே என் அண்ணனான இந்த முட்டாள் காளையின் மதிப்பும், கெளரவமும்.’ இகழ்ச்சி பொங்கத் தமையனைப் பார்த்த ருக்மிணி அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.

Tuesday, July 26, 2011

ருக்மிணி நடத்திய நாடகம்! கண்ணன் வருவான்!

தன் அண்ணனைப் போல் பேச ஆரம்பித்தாள் ருக்மிணி. “அரசியலைப் பற்றியும், ராஜரீக விஷயங்களையும் குறித்து உனக்கு என்ன தெரியும் ? “அப்படியே ருக்மியின் குரலில் மேலும் தொடர்ந்தாள்.” உள்ளே போ! உன் கன்னிமாடத்தின் அந்தப்புரத்தில் போயிரு! முட்டாள் பெண்ணே! நீ நல்லவிலைக்குப் போகும் ஒரு முதல் ஈற்றுக் கறவைப் பசுமாட்டை ஒத்தவள். நான் உன்னை சிசுபாலனுக்கு மனைவியாக அளிக்கப் போகிறேன். இதன் மூலம் தாமகோஷன் எனக்குக் கட்டுப்பட்டுவிடுவான். நானோ ஜராசந்தனின் மகன் வயிற்றுப் பேத்தி அப்நவியை மணக்கப் போகிறேன். இதன் மூலம் அனைத்தும் என் கட்டுப்பாட்டில் வரும். எல்லாருமே எனக்குக் கீழே வருவார்கள். ஜராசந்தனின் மாபெரும் படையின் பிரதம தளபதியாக ஆகிவிடுவேன்.”

ருக்மி வாயடைத்துப் போயிருந்தாலும் கோபம் தலைக்கு மேல் ஏறச் சினத்துடன் எழுந்தான்.
“ஓஹோ, இரு, இரு என் அருமைச் சகோதரா! அவ்வளவு விரைவில் உன்னை நான் விட்டுவிடுவேனா?” ருக்மிணி சீறினாள். அவள் கோபம் முழுதும் அந்த வார்த்தைகளில் வெளிப்பட்டது. “ கொஞ்சம் பொறுமையாக நான் பேசுவதைக் கேட்டால் ராஜரீக விஷயங்களில் எப்போது, எவ்வாறு நடந்து கொள்வது என்பதைச் சொல்லித் தருவேன் அல்லவா?” ருக்மிணியின் எகத்தாளமான பேச்சுத் தொடர்ந்தது ருக்மியின் குரலிலேயே. “பெண்களைப் பணயமாக வைத்து நடத்தப்படும் இந்தப் பேரம் படிந்தால் ஜராசந்தனின் அனைத்து நண்பர்களும் உனக்குக் கட்டுப்படுவார்கள். அவர்களுடனான நல்லுறவுக்கு ஓர் தளம் அமைத்து விட்டாற்போல் ஆகிவிடும். ஏற்கெனவே அவந்தி தேசம் விதர்ப்பாவைத் தான் உதவிக்கு நாடிக் கொண்டு இருக்கிறது. இந்த சாம்ராஜ்யச் சிக்கலில் இருந்து அவ்வளவு எளிதில் அது விடுவித்துக்கொள்ள இயலாது. நான், ருக்மி, விதர்ப்பாவின் பட்டத்து இளவரசன், என் அருமைச் சகோதரியின் மூலம், அவள் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் தவறான சிந்தனை உள்ளவள்; அதனால் பரவாயில்லை; அவள் மூலம் சேதி நாட்டை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவேன்.”

“இவ்வளவு நேரம் பேசிய நீ கடைசியில் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டு விட்டாய். ஆம், நீ தவறான சிந்தனை உள்ளவளே தான்; அதில் சந்தேகமே இல்லை!” ருக்மி பெருங்குரலில் கத்தினான். வெளியே நின்ற காவலர்கள் சற்றே பயத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தனர். ருக்மியைப் போல் ருக்மிணீ செய்து காட்டிய நடிப்பு அவ்வளவு தத்ரூபமாய் இருக்கவே பீஷ்மகனால் என்ன முயன்றும் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் சிரிக்க ஆரம்பித்தான். “ஆஹா, நிறுத்தாதே, ருக்மிணி. இவ்வளவு அருமையானதொரு நடிப்பை சமீபத்தில் நான் காணவே இல்லை. அப்படியே தத்ரூபமாய் உன் அண்ணனை என் கண்ணெதிரே கொண்டு வந்துவிட்டாய். மிக நன்றாக இயல்பாய் நடிக்கிறாய். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மேலும் காணவேண்டும் என்றும் ஆவலுடன் இருக்கிறேன். தொடர்ந்து நடி.” பீஷ்மகன் தன் பெண்ணை மேலும் வற்புறுத்தியதோடு அல்லாமல் பாராட்டாகவும் பேசினான். ருக்மிக்குக் கோபம் வந்தது.

“தந்தையே, உங்கள் அளவுக்கு மீறிய செல்லத்தினாலேயே இவள் இப்படிக் கெட்டுக் குட்டிச் சுவராய் ஆகிவிட்டாள்.” என்று கத்தினான் ருக்மி. ஆனால் பீஷமகனோ இப்போது இருந்த மனநிலையில் இதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மிகவும் சந்தோஷத்துடனும், உற்சாகமான மனநிலையோடு, “ஓஓஓ, அவளை வேறொருவர் வந்து செல்லம் கொடுத்துக் கெடுக்க வேண்டுமா என்ன?? அவள் பிறக்கையிலேயே அனைவருக்கும் செல்லமானவளாய்த் தானே பிறந்தாள்? அவள் எப்போதுமே அனைவருக்கும் கண்ணின் கருமணியே!” என்றான்.

“தந்தையே, என்னை மேலும் தொடர விடுங்கள். “ ஒரு கண நேரத்திற்கு ருக்மிணியாக மாறிக் கேட்டுக்கொண்ட ருக்மிணி, மேலும் தன் சகோதரன் குரலிலேயே தொடர்ந்தாள். “ கேள், என் அறிவற்ற, மூளையே இல்லாத முட்டாள் தங்கையே! இப்போது நன்றாய்க் கேள். இவை அனைத்துக்கும் பிறகு நான் ஜராசந்தனின் படைகளுக்குத் தலைமைதாங்குவதோடு அல்லாமல், அவன் நண்பர்களான, சிசுபாலன், சால்வன், விந்தன், அநுவிந்தன், அனைவருக்கும் தலைமை வகிப்பேன்; ஆம், ஆம், அதில் சிசுபாலனின் சேதிநாட்டுப் படைகளும் சேர்ந்தவையே.” சொல்லிக் கொண்டே ருக்மியைப் போல் தன் மார்பிலும் வீராவேசமாய்த் தட்டிக் கொண்டாள் ருக்மிணி. கண்களிலிருந்து கண்ணீர் வழியும் வரை சிரித்தான் பீஷ்மகன். ருக்மிணியின் புத்திசாலித் தனத்தையும் சூட்டிகையான சுபாவத்தையும் எண்ணி எண்ணி வியந்தான்.

“நான் ருக்மி, ஒரு வீரமும், விவேகமும், புத்தியும் நிறைந்த விதர்ப்ப நாட்டுப்பட்டத்திளவரசன், “ ருக்மிணி மேலும் தொடர்ந்தவள், “ சேதிநாட்டரசன் தாமகோஷன் என்னுடைய விஷயங்களில் நுழையாமல் பார்த்துக்கொள்வேன். என் படைகளை நடத்திக்கொண்டு மதுரா வரை சென்று அந்த மாட்டிடையன் எங்கிருந்தாலும், எங்கே ஒளிந்திருந்தாலும் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து அவன் தொண்டையைக் கத்திகளால் நறுக்கிப் போட்டு அவனைக் கொல்வேன்.” ருக்மிக்கோ ஒரு பக்கம் ஆச்சரியம். தன் உள் மனதுக்குள்ளாக வெகுநாட்களாய்ப் புதைந்து கிடக்கும் ஒரு ஆசையை இவ்வளவு வெளிப்படையாய்ச் சொல்கிறாளே ருக்மிணி! என் மனதைப் படித்து விட்டாளே? ஆனாலும் இன்னொரு பக்கம் அதை நினைத்தால் கோபமும் பொங்கிற்று. “ஆம், ஆம்,” ஆவேசமாய்க் கத்தினான். “அதுதான் உன் விருப்பமெனில் அப்படியே செய்துவிடுகிறேன். சரிதானே?” என்று ஆவேசமாய்க் கேட்டான் ருக்மிணியிடம். அவன் எழுந்த வேகத்தையும், ருக்மிணியை நெருங்கிய வேகத்தையும் பார்த்தால் அவளைத் தாக்கிவிடுவான் போல் இருந்தது. ஆனால் ருக்மிணியோ எதற்கும் கலங்காமல் தானும் எழுந்து கொண்டு சற்றே முன்னால் வந்தாள்; அண்ணன் குரலிலும், அவனின் உடல்மொழியிலும் தொடர்ந்தாள் தன் நாடகத்தை.

“நான், ருக்மி, விதர்ப்ப நாட்டுப் பட்டத்து இளவரசன், என் தந்தையும் விதர்ப்ப அரசருமான பீஷ்மகருக்கு ஓய்வு அளித்துவிட்டு நான் பட்டம் சூட்டிக்கொள்ளப் போகிறேன். முடி சூடியதும், ராஜசூய யாகத்தை நடத்தி அனைத்து அரசர்களும் என் காலடியில் விழுந்து வணங்குமாறு செய்வேன். பின்னர் நானே இந்தப்பரந்த ஆர்ய வர்த்தத்தின் ஒரே சக்கரவர்த்தி!” வாயில் நுரை தள்ளும் என்பார்களே அந்த அளவுக்குக் கோபம் தலைக்கு மேல் போனது ருக்மிக்கு. “இந்தப் பிதற்றல்களை நான் கேட்கப்போவதில்லை,” பல்லைக் கடித்த வண்ணம் சீறினான். ருக்மிணியோ அவனை விடவில்லை. அந்த ஆசனத்தில் தன்னிரு கரங்களால் அவனை அழுத்தி அமர வைத்த வண்ணம், “கேள் சகோதரா, கேள். என்னிடமிருந்தும் நீ அறிந்து கொள்ளப்பல விஷயங்கள் இருக்கின்றன அல்லவா?” மேலும் ருக்மியின் குரலிலேயே தொடர்ந்த ருக்மிணி, “சக்கரவர்த்தி ஜராசந்தன் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்களைப் போய் அடைந்ததும், அவனுடைய ராஜ்யமும் என்னுடன் சேரும். இவை எல்லாம் எதனால்?? ஒரு கறவைப் பசுவான சகோதரியைப் பெற்ற காரணத்தினால். அவளை நான் சாமர்த்தியமாக சிசுபாலனுக்கு விற்றதால்.”

நிறுத்திய ருக்மிணி தன் கண்களில் இருந்து கண்ணீர் வரும்வரை சிரித்தாள்.

Thursday, July 21, 2011

அண்ணனும், தங்கையும்! கண்ணன் வருவான் 2ஆம் பாகம்!

மின்னல் போல் பளிச்சிட்ட ஒரு யோசனையில் முகம் மலர்ந்த ருக்மிணி சுறுசுறுப்பாய் எழுந்து கண்ணீரால் கலங்கிப் போயிருந்த முகத்தைக் கழுவிக் கொண்டாள். பின்னர் நல்லதொரு ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு அதற்கேற்ற நகைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டாள். தந்தை பீஷ்மகனைத் தேடிச் சென்றாள். மாளிகையின் மேல்மாடத்தில் உள்ள ஆசனங்களில் அமர்ந்த வண்ணம் சுயம்வரத்திற்கெனத் தான் செய்திருக்கும் ஏற்பாடுகளையும், செய்து வரும் ஏற்பாடுகளையும் ருக்மி விவரிக்க பீஷ்மகன் உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது அங்கே கன்னிமாடத்தில் இருந்த ருக்மிணி தன்னுடைய ரதத்தில் வந்து இறங்கினாள். அந்தச் சமயம் ருக்மிணி அங்கே வருவதை அவர்களில் யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதோடு அதை விரும்பவும் இல்லை. ருக்மியும், ருக்மிணியும் சமீபநாட்களில் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் இருவருக்கிடையேயும் சண்டைகள், வாக்குவாதங்கள், பின்னர் ஒருவரை ஒருவர் ஏசுதல், அதன் பின்னர் ருக்மிணியின் இடைவிடாத கண்ணீர் மழை! பீஷ்மகனுக்கு அலுப்பாக இருந்தது. ருக்மிணி அவளுடைய அரச கம்பீரம் இன்னும் அதிகம் ஆனாற்போல் காட்சி அளித்தாள். அவளின் கம்பீரத்திலும் அந்த அழகும்,இளமையும் பொங்கிப் பிரகாசித்தது. பீஷ்மகனுக்கு உள்ளூறப்பெருமையும் மகிழ்ச்சியும் இருந்தாலும் மகளின் வாழ்க்கையை நினைந்து கவலையும் இருந்தது. பெருமூச்சு விட்டான். தற்போதைய நிலவரத்தில் அவன் கவனம் சென்றது.

ஆஹா, இனி இங்கே இடியும், மின்னலும், புயலும், மழையும் தான். என்ன செய்ய முடியும்?? ருக்மியோ மெல்லக் கனைத்துக்கொண்டான். தன்னால் அடக்க முடியாத, தன் தகப்பனாலும் அடக்க முடியாத இந்த அடங்காப்பிடாரியான சகோதரியால் தான் எவ்வளவு தொல்லை! வாய்விட்டுச் சொல்லவும் முடியவில்லை அவனுக்கு. எடுத்த எடுப்பிலேயே தன் அதிரடிக் கேள்வியால் தாக்கினாள் ருக்மிணி.
“தந்தையே! என்னை விற்கச் செய்யும் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகிவிட்டனவா?” என்று கேட்டாள் ருக்மிணி. தானே அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தும் கொண்டாள். பீஷ்மகன் செய்வதறியாது, “இப்படி எல்லாம் பேசுவது தவறு, ருக்மிணி! உன் நன்மைக்காகவே இவை எல்லாம் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்!” என்றான். “ஆமாம், ஆமாம், எனக்குத் தெரியும்!” என்று ருக்மிணியின் வாய் சொன்னாலும் அவள் உள்ளத்தின் கசப்பு கண்களிலும் வார்த்தைகளை உச்சரித்த விதத்திலும் தெரிந்தது.

“ஓஹோ, ஒரு பெண், அதுவும் ராஜகுமாரி, அவள் பொறுப்பு குடும்ப கெளரவத்தையும், அரசபரம்பரையின் கண்ணியத்தையும் காக்க வேண்டியதிலே இருக்கிறது. தெரியுமா உனக்கு? ருக்மிணி! உன்னை யார் அந்தப் புரத்தை விட்டு வெளியே வரச் சொன்னது? யார் உனக்கு அனுமதி கொடுத்தது? உனக்கு என்ன புரியும்? எதைத் தெரிந்து கொள்ள நினைக்கிறாய்? அரசியல் விபரங்கள் உனக்குப் புரியாது!” ருக்மி சுளித்த முகத்துடனேயே பேசினான்.

“அப்படியா? ஆனால் எனக்குத் தெரியும். குடும்ப கெளரவம் என்னை விலை பேசி விற்பதில் தான் போகிறது என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது.”

“ஓஹோ, போஜர்களின் குல கெளரவத்தையும், அரச பரம்பரையின் கெளரவத்தையும் குலைக்கும் விதமாக இங்கே நாங்கள் என்ன செய்துவிட்டோம்?” ருக்மி கோபத்தில் இரைந்தான்.
“என் அருமை அண்ணாவே, உன் நண்பன் சிசுபாலனைத் தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது உன் ஏற்பாடு இல்லையா?” தைரியம் முகத்திலும் உடலிலும் கொப்பளிக்கக் கேட்டாள் ருக்மிணி.
“தந்தையே, இவளுக்கு எது நன்மை என்பதை இவள் புரிந்து கொள்ளவே இல்லை.” ருக்மி தந்தையின் உதவியை நாடினான்.
“ஓஹோ, அதுவும் அப்படியா? எனக்குப் புரியவில்லையா? என் அருமை அண்ணாவே, பாசத்துக்குரிய சகோதரரே, கேளும் இதை!” ஏளனம் பொங்கிற்று ருக்மிணியின் பேச்சில். கோபம் மீதூறப் பேசுகிறாள் என்பதும் புரிந்தது. தன் அண்ணனின் குரலிலேயே தானும் பேசி அவனைக் கேலி செய்தாள். “ருக்மிணியால் தான் இந்த நிலைமையில் அனைவரையும் காப்பாற்ற முடியும். ஜராசந்தன் பெரிய சக்கரவர்த்தியாக இருக்கலாம். ஆனால் அவன் தன் சுய கெளரவத்தை என்றோ இழந்துவிட்டான். அவன் மருமகன் ஆன கம்சன் ஒரு இடைச்சிறுவனால் கொல்லப் பட்டிருக்கிறான். நான், ருக்மி, விதர்ப்ப நாட்டின் பட்டத்து இளவரசன், கம்சனின் இடத்தை எடுத்துக்கொண்டு உனக்கு உதவுகிறேன்.” இவ்விதம் ருக்மியின் குரலில் சொல்லி முடித்த ருக்மிணி தன் தமையன் செய்வது போல் தன்னிடம் இல்லாத மீசையை முறுக்கிக் காட்டிவிட்டு அவனைப் போல் தலை குனிந்த வண்ணம் வணக்கமும் செய்தாள்.
“மோசம், மோசம்,” கூவினான் ருக்மி.
“நான் சரியாய்த் தான் இருக்கிறேன்.” என்ற ருக்மிணி தன் பேச்சை அதே முறையில் மீண்டும் தொடர்ந்தாள். “சக்கரவர்த்தி ஜராசந்தன் இப்போது மிகவும் கேவலமாக நகைப்புக்கு இடமாக இருக்கிறார். ஒரு இடைச்சிறுவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த இடையன் அவனுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து அனுப்பி இருக்கிறான். நான், ருக்மி, மதிப்புக்குரிய பரசுராமரின் சீடன், ஜராசந்தனுக்கு வலக்கையாக இருந்து அவன் இழந்த மதிப்பை மீட்டெடுக்கிறேன்.” மீண்டும் ருக்மியைப் போலவே மீசையை முறுக்கிக் காட்டி, நமஸ்கரித்தாள் ருக்மிணி. இத்தனையையும் பார்த்த வண்ணம் பீஷ்மகன் அமைதியாகவே இருந்தான். அவனால் தன் பிள்ளையைக் கண்டிக்கவும் முடியவில்லை. பெண்ணை அடக்கவும் முடியவில்லை. இப்போது இருவருக்கும் பெருமளவில் வாய்ச்சண்டை ஆரம்பிக்கப் போகிறது என்பதைப் புரிந்து கொண்ட அவன் அது வெடிக்கட்டும் என்று காத்திருந்தான்.

“நிறுத்து உன் பிதற்றலை!” ருக்மி கத்தினான்.

“நீ நிறுத்து முதலில்!” ருக்மிணி திரும்பக் கத்தினாள். “நிறுத்தப் போகிறாயா இல்லையா?” ருக்மி ஆத்திரத்துடன் கத்த, “நீ கேட்கப் போகிறாயா இல்லையா?” என்று பதில் கேள்வி கேட்டாள் ருக்மிணி. அவள் மீண்டும் ருக்மியைப் போல் பேச ஆரம்பித்தாள். ருக்மி பல்லைக் கடித்தான்.

Friday, July 15, 2011

ருக்மிணியின் தர்மம்! கண்ணன் வருவான் தொடர்

நினைவுகள் ஏற்படுத்திய துன்பத்தைத் தாங்க முடியாமல் கண்ணீர் பெருக்கினாள் ருக்மிணி. தன்னிரக்கம் அவளைச் சுட்டது. ஒரு நாட்டின் இளவரசி, கண்ணின் கருமணி போல் வளர்க்கப்பட்டவள் இப்படி ஒரு இளைஞனின் அன்பைப் பெற வேண்டிக் கண்ணீர் விட வேண்டி இருக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் கடைக்கண் பார்வைக்கும், சிரிப்புக்கும் கண்ணன் கட்டுப்படுவான் என்றே நினைத்திருந்தாள். அவமானமும், தோல்வியின் துக்கமும் தாங்க முடியவில்லை. அதே சமயம் சிசுபாலனை மணக்கவேண்டும் என்ற நினைப்பும் அவளைக் கொன்றெடுத்தது. போயும், போயும் அவனையா மணப்பது? ஒருகாலும் இல்லை. வேறு யாரையேனும் மணக்கலாம்…… என்ன? வேறு யாரையேனுமா??? நம்மால் முடியுமா?? நம் மனம் அந்த இடைச் சிறுவனை நீலமேக வண்ணத்தில், தலையில் மயில் பீலியைச் சூடிக்கொண்டு சிரிக்கும் கண்களால் பார்ப்பவனை, அந்த மஞ்சள் பட்டாடை அவன் நிறத்தை எடுப்பாய்க் காட்டுகிறதா? அல்லது அவன் நிறத்தால் அந்த மஞ்சள் பட்டாடைக்குத் தனி அழகா? அவனை மறந்து இன்னொருவனை மணப்பதா? ஆனால் அவன்?? அப்படியே நான் அவனை மணந்து கொண்டாலும் இடைச்சிறுமிகளோடும், இந்தக் காட்டு மலரின் அழகை ஒத்த ஷாயிபாவுடனும் அல்லவோ பகிர்ந்து கொள்ள வேண்டும்? எனக்கென அவன் சொந்தமாக இருப்பானா? ஆஹா, எப்படி கம்பீரமாக நினைத்ததைச் சாதித்துக்கொண்டிருந்த நான் இன்று எப்படி ஆகிவிட்டேன். எவ்வளவு மோசமான நிலைமை ஏற்பட்டு விட்டது! எல்லாம் அந்தக் கோவிந்தனால். கோவிந்தனாம், கோவிந்தன்!

ஆனால், ஆனால், அந்த நீலநிறக் கண்ணன் தன் மாமனான கம்சனைக் கொன்ற போதும் சரி, அப்புறம் அவன் தாயின் விரிந்த கைகளில் அடைக்கலமான போதும் சரி, எவ்வளவு கம்பீரமாய் இருந்தான்! திரிவக்கரையைக் கூன் நிமிர்த்தினான். என் அண்ணன் ருக்மியை ஒரே முறை சக்கரத்தை ஏவி வீழ்த்தினான். நடக்கவே இயலாத கருடனை வேகமாய் நடக்க வைத்திருக்கிறான். அதோடு மட்டுமா? நாகலோகம் சென்று நாக கன்னிகைகளோடு பழகி குரு சாந்தீபனியின் மகனை அவருக்கென மீட்டும் வந்துவிட்டான். ஷாயிபாவே சொன்னாற்போல் அவள் மனதின் வெறுப்பையும், அகந்தையையும் அகற்றி அவளைக் கண்ணனின் அடிமையாக்கிவிட்டான். ஒவ்வொன்றாக ருக்மிணியின் கண்ணெதிரே வந்து போயின. அதோடு கூடவே இதெல்லாம் சாதாரணமான மனிதர்களால் இயலக்கூடிய ஒன்றல்ல என்பதும், கிருஷ்ணனிடம் ஏதோ தனிச் சிறப்பு இருக்கிறதும் அவளுக்குப் புலனானது. அவனுக்கு மனைவியாக இருப்பதும் சிறப்பானதும், விசேஷமானதுமாகவே இருக்கும். அதனால் என்ன? அவன் இளவரசனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; எந்த இளவரசன் கண்ணன் செய்த இத்தனை சாகசங்களையும் தன்னந்தனியே செய்திருக்கிறான்? மாட்டிடையனாக இருந்தால் இருந்துவிட்டுப்போகட்டுமே. அவனைக் கல்யாணம் செய்து கொண்டால் நானும் இடைச்சியாகிவிடுவேனே! அது போதாதா!

ருக்மிணி தீவிர யோசனையில் ஆழ்ந்தாள். ஷ்வேதகேதுவும், ஷாயிபாவும் பேசியதில் இருந்து கண்ணனுக்கு மதுராவில் எதிரிகள் அதிகம் இருக்கின்றனர் என்பதும், எந்நேரமும் அவனை அழிக்கக் காத்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. அது மட்டுமா! இந்த மகத நாட்டு அரசன் ஜராசந்தன்; கண்ணனைக் கொல்லவேண்டியே இத்தனைத் திட்டங்களையும் போட்டு வருகிறான். அவன் அதற்கென ஆடும் அரசியல் சதுரங்கத்தில் அவளும் ஒரு பகடைக்காய். அவளை வைத்தும் தனக்குச் சாதகமாக விளையாட நினைக்கிறான் ஜராசந்தன். இத்தனை எதிரிகளுக்கு நடுவே கண்ணன் தனியே இருக்கிறான். தன்னந்தனியே. அவனைக் காக்க ஒருவரும் இல்லை. அவனே அவனைக் காத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய சொந்த மண்ணிலும் அவனுக்கு எதிரிகள், வெளியேயும் எதிரிகள். மஹாதேவா, கெளரி மாதா! நீங்கள் இருவருமே துணை இருக்க வேண்டும். ருக்மிணிக்குப் படபடவென வந்தது. இதயம் வேகமாய்த் துடித்தது. அவள் வாய் மூலம் இதயமே வெளிவந்துவிடுமோ எனப் பயந்தவள் போல வாயைத் தன்னிரு கரங்களால் அழுத்தி மூடிக்கொண்டாள். அவள் தான் கண்ணனைக் காப்பாற்ற வேண்டும்.

பளீரென மின்னல் மின்னியது போல் உண்மை பளிச்சிட்டது அவளுக்கு. இந்த மாபெரும் யுத்த தந்திரம் என்னும் சக்கரவியூகம் அவளை மையமாக வைத்தே சுற்றுகிறது. ஆஹா, இதை மறந்தே போனேனே!~ நான் செய்ய வேண்டியது என்ன என்பது இப்போது புரிகிறது. ருக்மிணிக்கு சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது. வெற்றிச் சிரிப்புச் சிரித்தாள், தனக்குள் பேசிக்கொண்டாள். அவளுக்குக் கண்ணன் எதிரே இருப்பதாய் நினைப்போ?” கோபாலா, கோபாலா, நீ அவ்வளவு பொல்லாதவனா? இரு, இரு, நீ எத்தனை பொல்லாதவனாக இருந்தாலும் அவ்வளவையும் நான் கிரகித்துக் கொள்கிறேன். சந்திரன் சூரியனின் கிரணங்களைக் கிரஹித்துக் கொண்டு பிரதிபலிப்பது போல் உன்னுடைய கிரணங்களான அத்தனை வலிமையையும், உன்னுடைய அன்பையும், காதலையும், பாசத்தையும், நீ கடைப்பிடிக்கப் போராடும் தர்மத்தையும் நான் கிரஹித்துக் கொண்டு பிரதிபலிக்கிறேன். ஆம், இது தான் என் தர்மம். ஆஹா, தர்மம் என்பது என்ன என்றும் எப்படி எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் புரிந்து விட்டது. கண்ணன் புரிய வைத்துவிட்டான். என் தர்மம் எப்பாடு பட்டேனும் கண்ணனைக் காப்பாற்றி அவனோடு இணைவதே.

ஆனால் இந்த முயற்சியில் நான் இறந்துவிட்டால்?

Wednesday, July 13, 2011

கண்ணன் வருவானா? ருக்மிணியின் சந்தேகம்!

"பரவாயில்லை ருக்மிணி, நீ கண்ணனோடு சேர்ந்து அதர்மத்தை ஒழிக்க அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வரலாம்.”

“ஆ, நான் என்ன மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பரசுராமரைப் போன்றவளா? கையில் கோடலியை எடுத்துக்கொண்டு மூர்க்கமும் கெடுதலும் செய்யும் அரசர்களின் தலைகளைச் சீவுவதற்கு?”

“ஓஹோ, ருக்மிணி, உனக்குப் புரியவே இல்லை; நீ அதர்மத்தை எதிர்த்துப் போராட முடியும். உன்னிடம் அதற்குத் தக்க ஆயுதம் இருக்கிறது. நன்கு யோசிப்பாய். யார் தர்மத்தின் மிக மிக மோசமான எதிரி?”

“அதில் சந்தேகமே இல்லை; என்னுடைய அண்ணன் தான்.”

“ருக்மிணி, இந்த அடிக்கும் அதர்மப் புயல் காற்றில் பறக்கும் ஒரு சின்ன வைக்கோல் துண்டு போன்றவன் உன் அண்ணன்; முக்கியமான எதிரி ஜராசந்தன் ஒருவனே. அவன் தான் தர்மத்தைச் சற்றும் மதிக்காமல், தர்மத்திற்கு எதிராக மன்னர்களையும், அரசர்களையும் தன்னிஷ்டத்துக்கு வளைத்துக்கொண்டு, அப்படி வளையாதவர்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தில் தன் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறான். மக்களைக் கொடூரமான முறையில் நடத்தி அவர்களின் வியர்வையில் இவன் உன்னதமான வாழ்க்கையை நடத்தி வருகிறான். பல ராஜ்யங்களையும், பல அரசர்களையும் ஈவிரக்கமின்றி அழிக்கிறான்; கொடுமைக்கும், சட்டத்துக்குப் புறம்பாகவும், தர்மத்திற்கு விரோதமாகவும் செய்கின்றவர்களை அரவணைத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறான்; இவை எல்லாவற்றையும் விட தவம் மூலம் தங்களையும் உயர்த்திக்கொண்டு மக்களுக்கும், அரசனுக்கும் நன்மைகளைப் போதிக்கும் தபஸ்விகளையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வருகிறான்.”

“ஆம், ஆம், நீ சொல்வது சரியே; ஜராசந்தன் எனக்கும் எதிரிதான்.” என்றாள் ருக்மிணி. “அவனைக் கொல்லத் தான் விரும்புகிறேன். எனக்கு முதலில் என்ன தோன்றியது எனில் என்னுடைய சுயம்வரத்தில் நான் அவனை மணமகனாய்த் தேர்ந்தெடுத்துவிட்டு, பின்னர் எங்களின் தனியான சந்திப்பின்போது அவனை என்னுடைய இந்தக் கரங்களால் கொன்று கிழித்துவிட விரும்பினேன். அப்படியும் ஓர் எண்ணம் இருந்தது எனக்கு.” என்றாள் ருக்மிணி.

“ஆஹா, ருக்மிணி, இப்படிப்பட்ட கடுமையும், கொடுமையுமான வேலைகளை எல்லாம் உன்னைப் போன்ற மென்மையான உடலும், உள்ளமும் படைத்த இளவரசிகள் செய்யலாமா? அப்படி நினைக்கலாமா? இப்படி எல்லாம் நினைப்பதை விட்டு விடு இளவரசி ருக்மிணி. நான் சொல்வதைக் கேள். உனக்குக்கண்ணன் தான் கணவனாக வரவேண்டுமென்று நீ விரும்பினாயானால் என்ன நடந்தாலும், எது நேர்ந்தாலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் சிசுபாலனுக்கு மனைவியாக ஒத்துக்கொள்ளாதே. அதில் நீ உறுதியுடன் இரு.”

“அக்கா, அக்கா, அந்த முட்டாள் இளவரசனை நான் திருமணம் செய்துகொள்வேன் என நீ நினைக்கிறாயா? இல்லை; இல்லை; ஒரு போதும் இல்லை. நான் அவனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை.”

“எல்லாம் சரிதான் ருக்மிணி. ஆனால் உன்னுடைய இந்த முடிவு, ஒரு நல்ல கணவனுக்காக முட்டாளும், மூர்க்கனும் ஆன ஒருவனை வேண்டாம் என ஒதுக்குவது தானே ஒழியக் கண்ணனுக்கு எவ்வகையிலும் இதில் பிரயோசனம் இல்லை. கண்ணன் இதை உன்னிடம் எதிர்ப்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் மாட்டான்.”

“என்ன? அப்படி என்றால் நான் என்னதான் செய்வதாம்?”
“இந்தப் பொய்யான சுயம்வரத்தை வெளிப்படுத்தி அனைவருக்கும் தெரியப் படுத்து.”
“அதனால் கிருஷ்ணன் என்னிடம் வந்துவிடுவானா என்ன?” ருக்மிணியின் சந்தேகம்.

“ஓஹோ, ருக்மிணி, நீ கண்ணனைச் சரியாகப் புரிந்து கொள்ளவே இல்லை; நீ அந்தச் சுயம்வர ஏற்பாடுகளை நிறுத்தாதே. அதில் பங்கு கொள்பவளைப் போல் பாவனைகள் செய்து வா. நான் கண்ணனைச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறேன். நான் நினைப்பது சரியாக இருந்தால், கண்ணன் உன்னை வென்று அடைவதற்கு என இல்லாமல் தர்மத்தை நிலைநாட்டவேண்டிக் கட்டாயம் வருவான். அதர்ம வழியில் ஒரு பெண்ணை இன்னொருவன் அடையப்போவதைப்பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். சுயம்வரம் என்ற பெயரால் ஒரு அப்பாவிப்பெண்ணின் இல்வாழ்க்கைப் பணயம் வைக்கப் படுவதை விரும்ப மாட்டான் கண்ணன். அதை உடைக்க வேண்டிக் கட்டாயம் கண்ணன் வருவான்.”

“அப்படி என்றால் கண்ணன் என்னை எப்படி மணப்பான்? நீ சொல்வது ஒன்றும் சரியான உத்தியாகவே இல்லை அக்கா.”

“ஒருவேளை அவன் உன்னை மணந்து கொள்ளலாம், கேள் ருக்மிணி, இது ஒரு சூதாட்டம் போலத் தான். நீ மட்டும் உன்னுடைய அனைத்தையும் இழந்தாலும் சரி; கண்ணன் தான் என் கணவன் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்தையும் துறந்து அவனுடன் செல்லத் தயாராக இருக்க வேண்டும். அவனுடன் அவன் வழியில் அவன் வாழ்க்கையைப் பங்கு போட்டுக்கொள்ளத் தயாராக வேண்டும்.”

தலை சுற்றியது ருக்மிணிக்கு. ஆனாலும் கண்ணன் மேல் இருந்த காதல் அவளை இதில் ஈடுபட வைத்தது. “அக்கா, அக்கா, அது எங்கனம் என்று எனக்குச் சொல்லிக் கொடு. ஆஹா, இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது மட்டும் எனக்குப் புரிந்தால்……” ருக்மிணி நீண்ட பெருமூச்சு விட்டாள்.

“தர்மத்திற்கா உன் உயிரையும் கொடுக்கத் தயங்காதே ருக்மிணி! அவ்வளவு தான் நான் சொல்வேன். ஜாக்கிரதையாக நடந்து கொள். கண்ணன் உத்தவனிடம் தர்மத்தை நிலைநாட்டுவது குறித்துப் பேசியதை நான் தற்செயலாய்க் கேட்க நேர்ந்தது. ஆகவே உன் கவனம் எல்லாம் இந்தப் போலி சுயம்வரத்தில் இருக்கட்டும்.” ஷாயிபா அங்கிருந்து தன் இருப்பிடம் சென்றாள். சில நாட்களில் கரவீரபுரத்தை நோக்கிப் பயணமானாள்.

ருக்மிணி தன்னை மறந்து, தன் நிலையை மறந்து தான் ஒரு இளவரசி என்பதையும் மறந்து முழுதும் கண்ணன் நினைவிலேயே மூழ்கிப்போய் இருந்தாள். ஷாயிபாவுடன் ஏற்பட்ட சந்திப்பு அவள் மனப்பாரத்தை அதிகப்படுத்தி அவளைக் கிட்டத்தட்ட நடமாடும் சிலை போல் ஆக்கிவிட்டது. தன்னைப் பற்றி அவள் மிகவும் உயர்வாகவே நினைத்து வந்தாள். தன் தாத்தாவோ, தன் தகப்பனோ, தன் அண்ணாவோ தன்னிஷ்டத்துக்கு மாறாக நடக்க மாட்டார்கள் எனவும், தான் இஷ்டப்பட்டவனை மணக்க முடியும் எனவும் நினைத்தாள். அதோடு தன்னை மணக்க இவ்வுலகில் பிறந்த அரசகுமாரர்கள், சக்கரவர்த்திகள் என அனைவரும் தயாராக இருந்ததாகவும், தன் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு தன்னை மணக்க வரிசையில் வருவார்கள் எனவும் நினைத்திருந்தாள். ஆனால் பதினாறு வயது வரையிலும் அரண்மனை வாசமே கண்டிராத ஒரு மாடுகளை மேய்க்கும் இடைச் சிறுவன் இவ்வாறு அவளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தர்மத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது அவள் உள்ளத்தில் ஓர் மரண அடியாக விழுந்தது.

என்னவெல்லாம் நினைத்தாள்? அவள் ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியின் ஒரே மகள்; இளவரசி, கிருஷ்ணனோ யாதவகுலத் தலைவர்களில் ஒருவனான வசுதேவனின் எட்டாவது மகன். அவனுக்கு மூத்தவன் ஒருவன் இருக்கிறான். இவ்வளவு நாட்கள் கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் மாடுகளை மேய்த்தவன், இன்று கம்சனைக் கொன்றதாலும், அதன் பின்னர் நடந்த சில சாகச நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றிருக்கிறான். நாம் நம் விருப்பத்தைச் சொன்ன மாத்திரத்தில் அவன் ஓடோடி வந்து என் கரம் பற்றுவான்; நீ கிடைத்தது என் பாக்கியம்; நான் கொடுத்து வைத்தவன்; உன்னைப்போன்ற ஓர் இளவரசியால் காதலிக்கப் பட நான் அதிர்ஷ்டம் செய்தவன். என்றெல்லாம் கூறுவான் என்றோ எதிர்பார்த்தேன். திருமணத்திற்கு அவசரப் படுத்துவான் என நினைத்திருந்தேன். ஆனால் நடந்தது என்ன? நான் என்னை முழுமையாக அந்தக் கோபாலன் ஆன மாட்டிடையன் கண்ணனின் கால்களில் ஒப்படைத்துக்கொண்டாலும் அவன் அந்தக் கால்களால் என்னை உதைத்துத் தள்ளிவிட்டானே! என்னுடைய இந்த அரச வாழ்க்கையில் இது வரை நான் சந்தித்திராத அவமானம் இது. என்னை அவமானப் படுத்திவிட்டானே அந்தக் கண்ணன். ருக்மிணியின் மனதில் ஒரு கணம் தான் தன் உயர்ந்த நிலையை மறந்து அதற்கும் கீழே இறங்கி வந்து ஓரு மாட்டிடையனைக் காதலித்தது தவறு என்று தோன்றியது.

என்ன செய்யப் போகிறாள்?

Sunday, July 10, 2011

தர்மமும், அதர்மமும்! ருக்மிணியின் திகைப்பு

“ஆமாம், ருக்மிணி, எந்த இளம்பெண்ணும் கண்ணனை மணக்கவே விரும்புவாள். அவ்வளவு ஏன்? திரிவக்கரை கூட ஒரு இளம்பெண்ணாகவும் திருமணம் ஆகாதவளாகவும் இருந்தால் கண்ணனையே மணக்க விரும்புவாள். ஆனால் கண்ணன் இப்போது யாரையும் திருமணம் செய்து கொள்வான் என எனக்குத்தோன்றவில்லை. ஒரு வேளை………..” இழுத்தாள் ஷாயிபா.

“என்ன?? ஒரு வேளை??” ருக்மிணியின் ஆவல் மேலிட்டது.

“அவனுடைய வேலை; அதாவது அவன் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறானோ, தர்மத்திற்கு உட்பட்டு அந்த வேலைகளைச் செய்து முடிக்கத் துணையாக, அரணாக, அவனுக்கு உள்ளார்ந்த உதவியும், வலிமையும், கவனிப்பும் தருபவளாக ஒரு பெண் அமைந்தால்…. ஒரு வேளை கண்ணன் தன் திருமணம் பற்றி நினைக்கக் கூடும்.”

“ஆஹா, அவன் செய்ய நினைக்கும் அந்த வேலைகள்; அந்த தர்மம் பற்றி மட்டும் எனக்குத் தெரிய வந்தால்?? ம்ம்ம்ம்…. அன்றொருநாள் நான் எங்கள் அரண்மனையின் மாட்டுக்கொட்டிலுக்குச் சென்றேன். அங்கிருந்த பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும் எனது நண்பர்கள் ஆக்கிக் கொள்ள முயன்றேன்; ஏன்?? கண்ணனுக்காக! ஆனால்…..ஆனால்……. நான் போய் அவற்றில் ஒன்றைத் தொட்டேனோ இல்லையோ; எல்லாம் என்னைக் கோபமாகப் பார்த்தன எனத் தோன்றியது எனக்கு. அதோடு மட்டுமில்லை; பெருத்த ஹூங்காரம் செய்து கொண்டு ஒரு காளை என்னை முட்டக் கூட வந்தது; நல்லவேளையாக நான் ஓட்டமாய் ஓடி வந்துவிட்டேன். இல்லை எனில் என் கதி அதோகதிதான்!” என்றாள் ருக்மிணி.

“உனக்குத் தெரியுமா? பசுக்களோ, காளைகளோ, கன்றுகளோ, குதிரைகளோ அவ்வளவு ஏன்? யானைகள் கூடக்கண்ணன் கைகளில் இருந்து தம் உணவைப்பெற்று உண்பதை மிகவும் விரும்பும். கண்ணனும் ஒரு தாயைப் போன்ற அன்போடும், பாசத்தோடும் அவற்றுக்கு உணவளிப்பான். அதே போல் தான் சாமானிய மனிதர்களும், ஆணோ, பெண்ணோ கண்ணனுக்காகத் தங்கள் உயிரையும் தரத் தயாராக இருக்கின்றனர். அவன் வார்த்தைகளைச் சிரமேல் தாங்கி நடக்கின்றனர்.” ஷாயிபா உள்ளார்ந்த லயிப்புடன் மெதுவான குரலில் கூறினாள்.

“அக்கா, அக்கா, உன்னைப்பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. கண்ணனைப்பற்றி இவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய். எனக்கு எதுவுமே தெரியவில்லை.” என்றாள் ருக்மிணி.

“ருக்மிணி, உண்மையிலேயே நீ கண்ணனைத் திருமணம் செய்து கொள்ள எண்ணுகிறாயா? அப்படி எனில், நீ எங்களைப் போலவே கண்ணனுக்கு அடிமையாக இருக்க வேண்டும்; நான், திரிவக்கரை, உத்தவன், ஷ்வேதகேது, தேவகி அம்மா, குட்டிப் பெண் சுபத்ரா, பட்டியல் நீண்டு கொண்டே போகும் ருக்மிணி. கண்ணன் எங்கள் அனைவருக்கும் மிகவும் அருமையானவன்; பிரியமானவன்; பாசத்துக்கு உரியவன். விண்ணில் தினம் தினம் உதயமாகும் சூரியனைக் கண்டிருக்கிறாய் அல்லவா? அதன் கிரணங்கள் மாளிகைகளாய் இருந்தாலும் ஒரே மாதிரித் தான் விழுகின்றன; வெட்ட வெளியானாலும் ஒரே மாதிரித் தான் விழுகின்றன. இந்த சூரியன் உதயம் ஆகி அனைவருக்கும் எப்படி உயிரோட்டத்தைக் கொடுக்கிறானோ அப்படித் தான் கண்ணனும். இருளிலேயே தவித்துக்கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பல ஜீவன்களுக்கு ஒளியைக் கொடுக்கும் சூரியனே கண்ணன். “

“எனில், கண்ணனை நான் திருமணம் செய்து கொண்டால் உலகத்தவர்க்கு ஒளியூட்டும் சூரியனைத் திருமணம் செய்து கொள்வது போலவா? அனைவரின் அன்புக்கும் பாத்திரமான ஒருவனை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையா?” ருக்மிணி கேட்டாள்.
“ஆம், நீ அதற்குத் தயாரா? அனைவருக்கும் அவரவர் விருப்பம் போல் கண்ணனின் அன்பு கிடைக்கும். ஆனால் நீ அதற்கு உன்னைப் பக்குவப் படுத்திக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் கண்ணன் அடுத்து மேற்கொள்ளப் போகும் திட்டத்திற்காக அவனோடு ஒத்துழைக்க நீ தயாரா? “

“ஆஹா, அக்கா, நான் கண்ணனை மணக்க எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கிறேன்.”

“உன் உயிரையும் தியாகம் செய்வாயா?” ஷாயிபா கேட்டாள்.
“ஆம், ஆம், நான் தயாராய் இருக்கிறேன். ஆனால் கண்ணனின் திட்டம் தான் என்ன?? எவ்வகையில் அவன் தர்மத்தைக் காக்கப் போகிறான்? அவனுடைய தர்மம் தான் என்ன? அதைக் காக்க அவன் போராடுவதும், அந்தப் போராட்டமும் ஏன்?”

“நான் ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன் ருக்மிணி. இந்தக் கொந்தளிக்கும் பூமியில் அதர்மத்தை அடியோடு வேரறுத்து தர்மத்தை நிலைநாட்டவே கண்ணன் பிறந்துள்ளான். அவன் பிறப்பின் காரணமே அதுதான். அவன் இப்போது போராடுவதும் அதற்குத் தான்.”
“என்றால் நான் கண்ணனுக்குச் சற்றும் தகுதியானவளே அல்ல. எனக்கு தர்மமும், தெரியாது; அதர்மமும் தெரியாது. “ சோர்வோடு கூறினாள் ருக்மிணி.

Tuesday, July 5, 2011

ருக்மிணியின் ஏக்கம்! கண்ணன் வருவான்

ருக்மிணியின் கோபத்தையும் பொறாமையையும் புரிந்து கொண்ட ஷாயிபா அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே மேலே பேசினாள்:” இதோ பார் ருக்மிணி! கண்ணன் என்னிடம் சொன்னது அவன் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டப் பிறந்திருப்பதாய்க் கூறினான். அதர்மம் அவனைத் தலை தூக்க விடாமல் ஒரேயடியாக விழுங்கிவிட முயற்சி செய்வதாயும், அதிலிருந்து தான் தப்ப வேண்டும் எனவும் கூறினான். அதோடு நீ ஒரு இளவரசி! அவனோ இடையர்களிடையே வளர்ந்த ஒரு இடைச்சிறுவன்! உன்னைப் போல் ஒரு இளவரசியின் வாழ்க்கையை வீணடிக்கவும் அவன் விரும்பவில்லை!”

“ஓஓஓ, அவன் தைரியமானவன் பயமே இல்லாதவன் என்றெல்லாம் எண்ணினேனே! யாரைக் கண்டு அவன் இவ்வளவு பயப்படுகிறான்?? ஆஹா! நானும் ஒரு இடைச்சிறுமியாகப்பால் கறக்கும் பால்காரியாகப் பிறந்திருக்கக் கூடாதா? எத்தனை இன்பமான வாழ்க்கை வாழலாம்! கண்ணனோடு அவன் மாடுகளை மேய்க்கையில் கூடவே சென்று மேய்த்துவரலாம். காடுகளுக்குச் சென்று மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் புல் அறுத்துவரலாம். நான் புற்களை அறுத்தால் கண்ணன் அவற்றைக் கட்டித் தலையில் தூக்கி வருவான்; வீட்டில் வந்து நான் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பேன்; அந்த வெண்ணையைத் தின்னக் கண்ணன் என் வீட்டிற்கு வருவான்; அப்படித்தானே விருந்தாவனத்து கோபியர்களும், கோபர்களும் செய்தனர்?? ஆம், ஆம், அப்படித்தான் நான் கேள்விப் பட்டேன். அவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆனால் நான் ஒரு துரதிர்ஷ்டக் காரி. ஒரு அரசனின் மகளாய்ப் பிறந்து தொலைத்துவிட்டேன். இங்கே அந்தப்புரத்தில் சிறைக்கைதியைப் போல் வாழ்க்கை வாழ்கிறேன்; அதோடு இல்லாமல் ஜராசந்தனின் சதுரங்க விளையாட்டின் ஒரு முக்கிய அங்கமாக, அவன் ஈடுகட்டி அடமானம் வைக்கும் பொருளாக மாறிவிட்டேன். “ ஒரு சின்னப் பெண்ணுக்கே உரிய வெகுளித்தன்மை மாறாமல் தன் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகக் கொட்டி விட்டாள் ருக்மிணி. அவள் உணர்ச்சிகளின் வேகம் ஷாயிபாவை அசர அடித்தது.

“ரொம்பவே உணர்ச்சிவசப் படாதே இளவரசி! நீ பொறுமையாகவும், நிதானமாகவும் இருந்து தான் கண்ணனை வெல்ல வேண்டும். உன் பதட்டமோ, அவசரமோ அவனை வெல்ல உதவாது.” என்றாள் ஷாயிபா.

“ஆனால் இவ்வுலகிலேயே என்னைக் காப்பான் என நான் நம்பிய ஒரே மனிதன் என்னைக் காக்க முன்வரவே இல்லையே!” ருக்மிணியின் ஏமாற்றம் அவள் குரலில் தெரிந்தது. தன் பலத்தை எல்லாம் இழந்துவிட்டவள் போல் பேசினாள். ஷாயிபா புன்னகை மாறாமல், புதிர் போடுவதைப் போன்ற குரலில், “இளவரசி, கண்ணனை வெல்ல வேண்டி நீ என்ன செய்தாய்? அவனை அடையத் தக்க தகுதியான காரியங்கள் எதையேனும் நீ செய்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.

“என்ன?? கண்ணனை அடைய எனக்குத் தகுதி வேண்டுமா? அது சரி! அந்தச் சேதிநாட்டு இளவரசன் மட்டும் என்ன தகுதி………..”அவளை முடிக்க விடவில்லை ஷாயிபா. “அவன் ஒரு இடையன்” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் ஷாயிபா. “ஓ, ஓ, மன்னித்துக்கொள் ஷாயிபா அக்கா. நான் ஒரு இளவரசியாக இருப்பதற்கு என்னை நானே வெறுக்கிறேன். ஆனால் நான் ஒரு இளவரசி என்பதே உண்மை. நான் ஒரு முட்டாள்; மூடப்பெண்.” தன்னைத் தானே வெறுத்துக்கொண்ட ருக்மிணியின் குரலின் கவர்ச்சி ஷாயிபாவைக் கவர்ந்திழுத்தது. மீண்டும் சிரித்த அவள், “ருக்மிணி, உனக்கு நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்று கேட்டாள். “நீ கண்ணன் உனக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறாயா? உன் முழு மனதும் கண்ணனின் உதவியை எதிர்பார்க்கிறதா? உன் வாழ்நாள் முழுதும் கண்ணனின் பாதுகாப்பில் இருக்க விரும்புகிறாயா? எனில் நீ அதை உன் ஒவ்வொரு நாடியிலும் உணரவேண்டும்; உன் வாழ்நாளின் ஒவ்வொரு விநாடியிலும் அதை நீ எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அப்படி எனில் நீ அழைக்காமலேயே கண்ணன் உன் உதவிக்கு வருவான். இது நிச்சயம்.” என்றாள்.

“இது என்ன அக்கா? கண்ணன் எனக்கு உதவவேண்டும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேனே!” என்றாள் ஷாயிபா. “இல்லை, இளவரசி. நீ அவ்வாறு நினைக்கவே இல்லை. இதோ பார், கரவீரபுரத்தில் நான் ஒரு தீண்டத் தகாதவளாக அனைவராலும் நினைக்கப் பட்டேன். ஒரு பொல்லாத, பிடிவாதக்கார, தன்னலமும், அகம்பாவமும் கொண்ட இளவரசியாகவே அனைவரும் என்னை அறிந்திருந்தார்கள். கண்ணன் என் உதவிக்கும் என்னைக் காக்கவும் வந்தான்.” ஷாயிபாவின் குரலின் தொனியைக் கேட்ட ருக்மிணியால் மீண்டும் அவளுக்கு ஏற்பட்ட பொறாமையை மறைக்க இயலவில்லை.

“நான் எனக்கென அந்தரங்கமான நண்பர்கள் யாருமே இல்லாமல் தனியே இருந்து வந்தேன்.” தொடர்ந்தாள் ஷாயிபா. தன்னுள்ளே மலர்ந்த பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனாள் ஷாயிபா. தனக்குத் தானே பேசிக்கொள்பவள் போல, “கோவிந்தன் வந்தான்; ஆம், என்னைக் காக்கத் தான் வந்திருக்கிறான்; ஆனால் எனக்குத் தான் அது முதலில் புரியவே இல்லை; என்ன செய்யவில்லை அவன் எனக்காக! வசுதேவரின் உருவில் ஒரு தகப்பனைக் கொடுத்தான்; தேவகி என்னும் அன்பின் வடிவில் ஒரு அன்னையைக் கொடுத்தான். இத்தனைக்கும் நான் பதிலுக்கு என்ன செய்ய இருந்தேன், தெரியுமா? கண்ணனைக் கொல்ல நினைத்தேன்; பழிக்குப் பழி வாங்கத் துடித்தேன். என் பெரியப்பனை அவன் கொன்றுவிட்டான் எனப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தேன். என் பெரியப்பா தன்னைத் தானே கடவுள் எனச் சொல்லிக் கொண்டிருந்தார்; நானும் அப்படியே நினைத்தேன். அந்தச் சமயம் தான் நான் அழையாமலேயே கண்ணன் வந்தான் என்னைக் காக்கவேண்டியே. என்னைக் காக்க மட்டுமில்லாமல் என்னுள்ளே இருந்த துர் எண்ணங்களை நீக்கி என்னை முழுமையாகப் புதுமையாக்கினான். புதியவளாக்கினான்.”

“ஆஹா, ஆஹா, இத்தனை நடந்திருக்கிறதா? அக்கா, நான் உன்னைக் கண்டு எவ்வளவு பொறாமைப் படுகிறேன், என்று உனக்குப் புரியுமா?? இளவரசி ஷாயிபா, அவன் என்னையும் புத்தம்புதியவளாக மாற்றி என்னையும் புனிதப் படுத்த வேண்டுமென நானும் விரும்புகிறேன். “

“ருக்மிணி, நீ உன் முழு மனதோடு விரும்பினாலொழிய இது நடவாத ஒன்று.” என்று திட்டவட்டமாகக் கூறினாள் ஷாயிபா.
“ஓ, அப்படியா? எனில் அக்கா, நீ அவ்வாறு தான் எண்ணினாயா? உன் முழு மனதோடு உன் உடல், பொருள்,ஆவி அனைத்தும் கண்ணன் வரவை எண்ணி ஏங்கித் தவித்தனவா?”
“ஆம், ருக்மிணி, என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும், என் இமைகளின் ஒவ்வொரு இமைப்பிலும், என் மூச்சு உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்போதும், நான் கண்ணன் வரவேண்டும் என விரும்பினேன். ஆனால் அவனைக் கொல்ல வேண்டும் என்றே அவன் வரவை எதிர்நோக்கினேன். கண்ணனும் வந்தான்; இந்த ஏழையின் கண்ணீரையும் துடைத்தான்; என் வெறுப்புகளில் இருந்து என்னை முழுமையாக விடுவித்து, என்னைப் புனிதப் படுத்திப் புதியவளாக மாற்றினான்.”

ருக்மிணிக்கு மேலும் நடந்தவற்றை அறியும் ஆவல் மேலிட்டது. எனினும் அவள் வெளிப்படையாகத் தன் இனிய குரலில், “ஓ அவன் உன்னை மணந்து கொள்கிறேன் எனச் சொன்னானோ என நினைத்துவிட்டேனே!” என்று சொல்லிவிட்டு ஒன்றுமே தெரியாதவள் போலக் கலகலவென நகைத்தாள்.

Monday, July 4, 2011

ருக்மிணியின் பொறாமை! கண்ணன் வருவான்.

ஆழ்மனதில் தோன்றிய பொறாமையைக்கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்ட ருக்மிணி, “அக்கா, கண்ணனை நாங்கள் மதுராவில் நுழைந்த அன்றே கண்டோம். அன்றே அவனுடைய வீரத்தையும், சாகசத்தையும் பார்த்து வியந்தேன். அன்றிலிருந்தே நான் என்னை ஒரு வித்தியாசமான பெண்ணாக உணர ஆரம்பித்துவிட்டேன். அதன் பின்னர் தன் மாமனான கம்சனையும், அவனது வீரர்களில் ஒருவனான சாணூரனையும் கண்ணன் கொன்றதை என் கண்களால் பார்த்து வியந்தேன். அதே கண்ணன் தேவகியின் நீட்டிய கரங்களுக்குள் ஒரு குழந்தை போல் ஒடுங்கியதையும் கண்டேன். அந்தக் கணம் கண்ணன் என் மனதில் புகுந்து விட்டான். அதோடு இல்லை; என்னில் ஒருவனாக மாறிவிட்டான். சகோதரி, அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை நான் நினைப்பது கண்ணனைத் தான். உண்பதும், உறங்குவதும் அவனுக்காகவே. அவ்வளவு ஏன்? என் மூச்சுக் காற்றுக் கூட கோவிந்தா, கோவிந்தா என அவனைத் தான் அழைக்கும். நான் தூங்கிப்பல இரவுகளாகி விட்டன. தூங்கக் கண்களை மூடினால் தலையில் மயில்பீலியைச் சொருகிய வண்ணம் கிரீடம் அணிந்து, மஞ்சள் பட்டாடை உடுத்திய குறும்புச் சிரிப்பு ததும்பும் கண்களோடு கண்ணன் வந்து விடுகிறான். அதன் பின்னர் தூங்குவது எங்கே?? அக்கா, அக்கா, நான் கண்ணனை நினைந்து நினைந்து ஒரு பைத்தியக்காரியாகி விட்டேன். நீ புத்திசாலி;விவேகமுள்ளவள்; என்னைப் புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன். உன்னைப் போல் நான் புத்திசாலி இல்லை.”

நீண்ட பெருமூச்சு விட்ட ருக்மிணியின் பேச்சைக் கேட்ட ஷாயிபா பதிலேதும் கூறாமல் அவளை சோகத்தோடு பார்த்துவிட்டு அவள் பெருமூச்சின் எதிரொலி போல் தானும் நீண்டதொரு பெருமூச்சை விட்டாள். “ஆஹா, அக்கா, அக்கா, நான் கோவிந்தனைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவனைத் தவிர வேறு எத்தனை உயர்ந்த மனிதன் வந்தாலும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். “ தீர்மானமாகப் பேசிய ருக்மிணியின் கண்களிலும் அந்தத் திட உறுதி தெரிந்தது. கொஞ்சம் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு ஷாயிபா, “கண்ணன் இப்போது யாரையும் திருமணம் செய்து கொள்வதாயில்லை.” என்றாள். ருக்மிணிக்குத் தூக்கிவாரிப் போட்டது. “ஏன்?? என்னைக் கண்டால் பிடிக்கவில்லையா கண்ணனுக்கு?? என்னிடம் என்ன குறையைக் கண்டானாம்?? “ ருக்மிணியின் குரலில் துக்கம் ததும்பியது. கண்கள் நீரை வர்ஷிக்கத் தயாராக இருந்தன.

“உன்னிடம் எந்தக் குறையையும் காணவில்லை; தன்னிடமே தன் நிலைமையிலேயே அவனுக்குக் குறை. அவனிடமே அவன் குறை காண்கிறான். என்னிடமும் அப்படித் தான் கூறினான்.” ஷாயிபா கூறினாள். ருக்மிணிக்குச் சந்தேகம் அதிகமானது. அவளுடைய சிவந்த முகம் மட்டுமல்லாது மொத்த உடலுமே சிவந்து உதயகால சூரியனைப் போல் ஜ்வலித்தது. அவள் தன் பொறாமையை மறைக்க இயலாமல், “ஆம், ஆம் அறிவேன்; அவனுக்குப் பெண்கள் என்றால் தனிப் பாசம் எனவும் அறிந்திருக்கிறேன்.” என்றாள். கோபமும், துக்கமும் குமுறியது அந்தக் குரலில். ஷாயிபா சிரித்தாள்;”பொறாமைப் படாதே இளவரசி ருக்மிணி!” தன் முழு மனதோடு பேச ஆரம்பித்த ஷாயிபா மேலும், “நான் அவனுடைய அடிமை. அவ்வளவே. மற்றபடி நான் அவனுக்கு யாரும் இல்லை.” இதைச் சொல்லிவிட்டுத் தன் உள்ளார்ந்த சோகத்தில் ஆழ்ந்து போனாள் ஷாயிபா.

“ஓஹோ, அதுவும் அப்படியா?? எனில் நீ ஏற்கெனவே அவனை உனக்காக வென்றுவிட்டாயோ?” தன் குரலின் கசப்பை மறைக்க விரும்பவில்லை ருக்மிணி. “இளவரசி, அப்படி எல்லாம் தப்பாய்ப் பேசாதே! நீ கண்ணனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் நீ எவ்வளவோ செய்ய வேண்டும்; அதன் பின்னரே கண்ணன் உனக்குக் கிடைப்பான். அவன் உனக்குக் கிடைக்க வேண்டுமானால் முதலில் அவனைச் சரியாகப் புரிந்து கொள்ள ஆரம்பி.”

“அதெல்லாம் சரி, கண்ணன் ஏன் உன்னிடம் கூறினானாம்? தனக்கு இப்போது மணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என?? அது எப்படி உனக்குத் தெரிந்தது? உனக்கும் அவனுக்கும் நடுவில் என்ன நடந்தது? அவை என்ன ரகசியமா?? எனக்குத் தெரியக் கூடாத ஒன்றா? “ ஆத்திரம் மீதூரக் கேட்டாள் ருக்மிணி. கண்ணனுக்கு இவள் அவ்வளவு நெருங்கியவளா? தன் விருப்பம், அந்தரங்க ஆசை அனைத்தையும் கண்ணன் இவளிடம் பகிர்ந்து கொள்கிறானே?