Friday, March 4, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

அன்றிரவு யாதவர்களின் மஹாசபை கூடியது. ஷ்வேதகேது ஜராசந்தனின் யுத்த தந்திரத்தை எடுத்துக் காட்டினான். சுயம்வரம் என்பது பெயரளவுக்கு மட்டுமே என்பதையும், அதற்கும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப் படுகிறது என்பதையும், ஒட்டுமொத்தமாய் மதுராவின் யாதவ குலத்தினர் எவருக்கும் அழைப்பு அனுப்பவில்லை எனவும் கூறினான். இதன் மூலம் மதுராவின் உயர்ந்த யாதவகுலத்தினருக்கு இழைக்கப்பட்ட அவமானத்தையும், அநீதியையும் சுட்டிக் காட்டினான். அனைவரும் ஷ்வேதகேது சொல்வதை ஒத்துக்கொண்டனர். யாதவர்களுக்கு சுயம்வரத்திற்கு அழைப்பு அனுப்பாமல் ஜராசந்தனின் கட்டளையின் பேரில் ருக்மி அவமானம் செய்துவிட்டான் என்பதையும் ஒருவருக்கொருவர் வருத்தத்துடன் பேசிக்கொண்டனர். மாபெரும் சாம்ராஜ்யங்களுக்குள்ளே அரியணை ஏறாமலேயே நல்லாட்சி புரிந்து வரும் தங்களுக்கு மற்ற அரச குடும்பங்களின் நடுவே இழைக்கப்பட்ட அவமரியாதை இது என்பதைப் புரிந்து கொண்டனர். யாதவ குலத்துக்கே செய்யப் பட்ட துரோகம் இது என்பதையும் புரிந்து கொண்டார்கள். ஆனால் அந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள இங்கிருந்து யாதவன் எவனாவது சென்றால் அது மாபெரும் கலகத்தில் முடியும் சாத்தியங்களும் உள்ளன.

விகத்ரு என்னும் பழைய மந்திரியும், ஷங்கு என்னும் தளபதியும் மதுராவைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார்கள். தங்கள் வலிமையால் எவ்விதமான ஆபத்து, இடையூறு வந்தாலும் தாக்குதல் வந்தாலும் முறியடிக்கத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராய் இருப்பதாயும் தெரிவித்தனர். யாதவர்களுக்கு நேரிடும் ஒரு சிறிய அவமானத்தையும் சகிக்க இயலாது என்று சூளுரைத்தனர். இளம் வீரர்களான சாத்யகி, ப்ருஹத்பாலன் போன்றோர் குண்டினாபுரத்திற்கு அழைப்பு இல்லாமலேயே சென்று சுயம்வரத்தில் கலந்து கொள்வதை வற்புறுத்தியும் ஆதரித்தும் பேசினார்கள். தேவை எனில் இளவரசி ருக்மிணியைத் தூக்கிக்கொண்டே வந்துவிடுவோம் என்றும் மூன்று மாதம் கொடுத்தால் போதும் அனைத்தும் சரிவர நடத்திக்காட்டுவோம் என்றும் ஆவேசமாய்ப் பேசினார்கள். அக்ரூரர், வசுதேவன், போன்றோருக்கு விகத்ருவின் ஆலோசனை பிடித்திருந்தாலும், கொஞ்சம் யோசித்தே அனைத்தும் செய்யவேண்டும் என்று கருத்துக் கூறினார்கள். அனைவருக்கும் யாதவர்களை சுயம்வரத்திற்கு அழைக்காதது மாபெரும் அநீதியாகத் தோன்றியது.

அவ்வளவு நேரமும் பேசாமல் இருந்த கிருஷ்ணனை நோக்கி உக்ரசேனர், “வாசுதேவா, நீ ஒன்றுமே கூறவில்லையே?” என்று கேட்டார். கிருஷ்ணன் அவரிடம்,”பிரபு, எனக்கு என்னமோ பீஷ்மகன் நமக்கு சுயம்வர அழைப்பு அனுப்பாதது சரி என்றே தோன்றுகிறது.” என்றான். அங்கிருந்த அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்ட்து. அனைவரும் கிருஷ்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ப்ருஹத்பாலனும், அவன் நண்பர்களும் இகழ்ச்சியுடன் நகைத்தார்கள். ப்ருஹத்பாலன், “ஆஹா, நீ சொல்வது ரொம்பவும் சரியே. நாம் அனைவரும் பீஷ்மகன் முன்னால் மண்ணைக் கவ்வுவோம்.” என்று ஏளனமாய்க் கூறினான். கண்ணனோ நிதானத்தைக் கைவிடாமல், “ இதிலே நமக்கெல்லாம் எந்தவிதமான அவமானமும் நேரிடவில்லை. ஒரு சுயம்வரத்தில் அரசர்கள், இளவரசர்கள், சக்கரவர்த்திகள், மன்னாதி மன்னர்கள் தான் கலந்து கொள்ள முடியும். நாமோ அரியணை ஏறும் அரசகுலம் அல்ல. அதோடு நம் தலைவரும் மன்னன் என்னும் பட்டத்தைப் பெயரளவுக்குப் பூண்டவருமான உக்ரசேன ராஜாவோ, யுவராஜா எவரையும் இன்னமும் தேர்ந்தெடுக்கவும் இல்லை. தனக்குப் பின் தலைவனாக வேறொருவரை அவர் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும் அல்லவா?” என்றான் கண்ணன்.

“அதனால் என்ன? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குலக் கொள்கைகள், விதிகள், சம்பிரதாயங்கள், அதை ஒட்டிய முடிவுகள்.: என்றான் ஷங்கு.

“அங்கே தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள் தளபதி, மஹாராஜாவான பீஷ்மகன் தன் ஒரே மகளும் ஒரு இளவரசியுமான ருக்மிணி மற்றொரு மன்னனையோ அல்லது பட்டத்து இளவரசனையோதான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்புவார். அதுதான் நியாயமும் கூட. நம்மைப் போன்ற அரசுக்கட்டில் ஏறமுடியாத தலைவர்களை அல்ல. “ என்றான் கண்ணன். அனைவரும் மெளனமானார்கள். உண்மைதான். மதுராவின் சார்பில் எந்தப் பட்டத்து இளவரசனும் இல்லை. அதனால் அழைப்பு வரவில்லை என்பதில் நியாயம் உண்டு. அப்போது உக்ரசேனர் கண்ணனைப் பார்த்து, “கண்ணா, உன்னை விடவா பட்டத்து இளவரசர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள்? நீயன்றோ அனைவரையும் விட உயர்ந்தவன்? எனக்குப் பின்னர் நீ இந்த மதுராவின் தலைவனாகச் சம்மதித்தாயெனில் நான் உடனடியாக என் பாரத்தை இறக்கி விட்டுவிடுவேன்.” இதைக் கேட்டுக்கொண்டிருந்த ப்ருஹத்பாலன் இந்தக் கண்ணன் சாதுர்யமாகத் தனக்கே முடிசூட்டிக்கொள்ள விரும்புகிறான் என்று தோன்றியது. கண்ணனைக் கோபமாகப் பார்த்தான்.

கண்ணன் சிரித்துக்கொண்டே பேசினான்:” நான் இன்னமும் என்னுடைய பழைய கருத்திலிருந்து சற்றும் மாறவில்லை, மஹா பிரபு. தாங்கள் என் மீது காட்டும் அன்பும், பாசமும் அளவிடற்கரியது. ஆனால் இந்த மதுராவின் தலைவனாக நான் ஒரு போதும் எண்ணவில்லை. நான் மாடுகளை மேய்க்கும் ஒரு மாட்டிடையன் என்பதிலேயே திருப்தி அடைகிறேன். நான் என்றென்றும் ஒரு “கோ”பாலன் தான். ஆனால் என்னுடைய யோசனை உங்களுக்குத் தேவை எனில், உங்கள் மனதுக்குகந்த ஒருவனை யுவராஜாவாக அடையாளம் காட்ட என்னால் முடியும்.” என்றான் கண்ணன். அனைவரும் கண்ணன் மேற்கொண்டு சொல்லக் காத்திருக்கையில், “பிரபு, நாங்கள் கோமந்தக மலையிலிருந்து திரும்பவே மாட்டோம் என அனைவரும் நினைத்திருந்த ஒரு காலத்தில் தாங்கள் ப்ருஹத்பாலனை யுவராஜாவாக ஆக்குவது தான் ஒரே வழி என நினைத்துக்கொண்டிருந்தீர்கள் அல்லவோ? இப்போதும் அவரையே உத்தராயனம் ஆரம்பித்த உடனே யுவராஜாவாக அறிவியுங்கள்.” என்றான்.

2 comments:

priya.r said...

49 வது அத்தியாயத்தையும் படித்து முடித்து விட்டேன்

//இந்த மதுராவின் தலைவனாக நான் ஒரு போதும் எண்ணவில்லை. நான் மாடுகளை மேய்க்கும் ஒரு மாட்டிடையன் என்பதிலேயே திருப்தி அடைகிறேன். நான் என்றென்றும் ஒரு “கோ”பாலன் தான்.//

கண்ணன் எவ்வளோ எளிமையாக தனது நிலையை சொல்கிறான் பாருங்கள்
உலகையை மேய்ப்பவன் அவனே ;ஆனால் அவன் சொற்களில் எவ்வளோ பணிவு
கண்ணன் என்னும் மன்னன் தான் இந்த உலகை ஆள்பவன் ;அவனை வணங்கி போற்றி துதிப்போம்

sambasivam6geetha said...

ஆமாம், , அவன் தன்னை ஒரு பணியாளாகவே கருதுகின்றான்.